Pages

Monday, July 24, 2017

மலையாள மனோரமாவில் இளையராஜா பேட்டி

ஒரு மணி நேரத்தில் ஐந்து பாடல்கள் அல்ல ஆறு படங்களுக்கு இசையமைத்திருக்கிறேன் - இசைஞானி இளையராஜா

கேரளத்தவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டியதில் முன்னிற்கும் ஒரு விடயம் ஊடகப் பண்பு. தான் பேட்டி காண்பவர் தன்மை உணர்ந்து அந்தப் பேட்டியை நெறிப்படுத்தும் பண்பை கேரள ஊடகர்களிடம் கண்டிருக்கிறேன். தமிழ் ஊடகப் பரப்பில் தொழில் நுட்பம் வளர்ந்த அளவுக்கு ஊடகத்தைக் கையாளும் நுட்பம் அதிகம் வாய்க்கவில்லை என்பேன். இன்று நான் பார்த்த மலையாள மனோரமா தொலைகாட்சி இசைஞானி இளையராஜாவுடன் நேர் கண்ட பேட்டி இன்னொரு சிறு உதாரணம். இந்தப் பேட்டி ஆரம்பிக்கும் போது வழங்கப்படும் அறிமுகத்தைப் பாருங்கள் கச்சிதமாக நச்சென்று முடிந்து விடும். 

பேட்டியில் இசைஞானி இளையராஜா குறித்த கருத்துகளில் முக்கியமானவையை ஆவணப்படுத்தத் தோன்றியது அதனால் பேட்டியை உள்வாங்கித் தமிழில் தருகிறேன். இது வரிக்கு வரியான மொழி பெயர்ப்பு அல்ல, அவரின் மன உணர்வைப் புரிந்து கொள்ள முயற்சி செய்ததன் ஒரு காற்பங்கு.

ஒரு படத்தில் தேவைப்படும் பாடலை உடனேயே மெட்டமைத்து இசை கட்டி விடுகிறீர்களே காட்சியின் சந்தர்ப்ப சூழலைப் பற்றிக் கலந்து பேசுவது அவசியமில்லையா?

ஆலோசிக்கவே தேவையில்லை. 
பாடுற பாட்டுக்கு எதுக்கு ஆலோசனை?
காட்சிச் சூழலை எனக்குச் சொன்னதுமே 
அதுக்குப் பாடணும் எந்த மெட்டும் அது சார்ந்த இசையும் வருகிறதோ அதுதான் பாட்டு. அது தானாக வரணும் நாமாக உருவாக்கக் கூடாது. நாமாக உருவாக்கினால் நம்முடைய அந்த நேரத்து மன வெளிப்பாடு அந்த இசைக் கோப்பில் பிரதிபலித்து விடும். 

ஒரு மணி நேரத்தில் அஞ்சு பாட்டெல்லாம் உருவாக்கியிருக்கிறீர்களே?
ஒரு மணி நேரத்தில் ஐந்து பாட்டு இல்லை ஆறு படம் ஆறு படத்துக்குத் தலா ஆறு பாட்டு ஆக மொத்தம் முப்பத்தாறு பாட்டு கொடுத்திருக்கிறேன்.

இசையமைப்பாளர்கள் பலர் இந்தக் காட்சிச் சூழலுக்கு இந்த மெட்டுப் பொருந்துமா இந்த இசைக் கோப்பு சரிப்படுமா என்றெல்லாம் பல்வேறு தெரிவுகளை வைத்து அலசி ஆராய்ந்து தான் ஒரு தீர்மானத்துக்கு வருவார்களே?

எனக்கே தெரியாது எப்படி இது சாத்தியப்படுகிறதென்று. இதை விளக்குவது மிகவும் கடினம். எனக்கு எவ்வளவு தூரம் இசை ஞானம் இருக்கிறது என்பது பிரச்சனையல்ல. இசைக்கு தெரியும் என்னைப் பற்றி. அதைக் கொண்டே இத்தனையும் நடக்கிறது.

ஆயிரம் படங்கள் ஐயாயிரம் பாடல்கள் கொடுத்திருக்கிறீர்கள் ஒரு பாட்டின் சாயல் இல்லாமல் இன்னொரு பாடலை உருவாக்கும் போது எழும் அனுபவம்?

ஒரு பாட்டை மெட்டுக் கட்டும் போதே அது தோன்றி விடும் உடனேயே அந்தச் சமயத்தில் புது மெட்டைக் கட்டி விடுவேன்.

அப்படியானால் கம்ப்யூட்டர் போல அத்தனை பாடல்களும் மூளையில் தேங்கி இருக்கணும் இல்லையா?

கம்ப்யூட்டருக்கு இத்தனை வேகத்தோடு செயற்படச் சாத்தியப்படாது. கம்ப்யூட்டர் எங்கள் மூளையின் வேகத்தோடு வராது. 
எனக்கோ உங்களுக்கோ அல்லது இன்றைய மாணவருக்கோ கம்ப்யூட்டரின் வேகத்தை விட மூளையின் வினைத்திறன் அதிகம்.கம்ப்யூட்டரை நம்ம கையில் எடுக்க வேண்டும்.

நீங்கள் உருவாக்கும் பாடலை எதிர்பார்த்த அளவுக்கு பாடியிருக்கிறார்களா?

ஆக்கக்காரன் எதிர்பார்க்கும் அளவுக்கு முழுமையாக யாருமே பாடிவிட முடியாது ஆனால் உச்ச பட்சமான திருப்தியைக் கொடுக்கும் வகை வரை சென்று பாடியிருக்கிறார்கள். தான் எதிர்பார்த்த அளவுக்கு முழு அளவிலான திருப்தியைப் பாடகர் கொடுத்திருக்கிறாரா என்பது பாடலை ஆக்குபவனுக்கே தெரிந்த விடயம்

தேவராஜன் மாஸ்டர் போல நீங்களும் பாடலைத் திருப்திகரமாகப் பாடாதவரையில் விடாப் பிடியாகப் பாடகரை அந்த இலக்கு எட்டும் வரை பாட வைக்கும் முயற்சி எடுப்பீர்கள் ஆனால் இன்றைய தலைமுறை இசையமைப்பாளர்கள் இந்த விஷயத்தில் நெகிழ்வுப் போக்குடன் இருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

அப்படி ஏன் அவர்கள் இருக்கிறார்கள் என்பதை அவர்களிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். அதைப் பற்றி எந்த அபிப்பிராயமும் இல்லை
ஒரு துளி கூட இல்லை 😀

கேரள தேசத்தில் இருந்து கே.ஜே.ஜேசுதாஸ் இலிருந்து ஜெயச்சந்திரன், ஜென்சி, சுஜாதா, மதுபாலகிருஷ்ணன் உள்ளிட்ட பாடகர்களுக்குப் திருப்புமுனையாக அமைந்த பாடல்களைக் கொடுத்திருக்கிறிர்கள் அது பற்றி?

இந்தப் பாடல் இன்னார் பாடினால் தான் சிறப்பாக வரும் என்று மனதளவில் செய்யும் தீர்மானத்தை வைத்துத் தான் இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறேன். ஒவ்வொரு குரலும் தனித்துவம் வாய்ந்தவை.


இளையராஜா உருவமைத்த பாட்டு என்றால் அதில் இளையராஜாவின் முத்திரை மட்டுமே இருக்க வேண்டும் ஒரு பாடகனோ பாடகியோ தன்னுடைய மனோ தர்மங்களில் எழும் சாதகங்களை, ஆலாபனைகாலஒ பாட்டில் கூடுதலாகச் சேர்க்க அனுமதிப்பதில்லையே நீங்கள்?

மனசு போகிற போக்கில் எல்லாம் பாடி விட்டு அதை  மனோ தர்மம்னு சொல்லலாமா அது மனோ தர்மமா 😀
அதை நான் பாட விடுவதில்லை காரணம் பாடலின் ஜீவன் என் இசையில் இருக்கிறது. அதன் தூய்மையும், வலுவும் அதற்குள் இருக்கிறது. 
எப்படி அவர்களால் அதற்குள் போய் கற்பிதம் செய்து மாற்றக் கூடிய வல்லமை இருக்கும்?
அவர்களால் கற்பனை செய்தும் பார்க்க முடியாத காரியம் அது.
அவர்கள் இசையைப் பிரதிபலிப்பவர்கள் அவர்கள் ஆக்க கர்த்தாக்கள் அல்லர் அவர்கள் நான் என்ன கொடுத்தேனோ அதை நிகழ்த்திக் காட்ட வேண்டும். இது சரி பிழை பார்த்துத் திருத்தும் காரியமல்ல இதுவொரு கலை வடிவம். நான் ஒரு படைப்பாளி, என்னால் ஆக்கப்பட்ட படைப்பு அது.
அவர்கள் செய்ய வேண்டியது என்னவெனில் அவர்களின் சுயமான குரலில் எனக்கு வேண்டியதை மெய்ப்பிக்க வேண்டும். நான் கேட்டதைத் தன்னுடைய குரலில் எப்படிக் கொடுக்க வேண்டுமென்பதிலேயே அந்த உழைப்பு இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அதன் ஜீவன் போய் விடும்.

ஒரு படைப்பாளிக்கான ஒத்தாசையாக ஏன் இந்த இடைச் செருகல்களை எடுத்துக் கொள்ளக் கூடாது?

இது ஒத்துழைப்பு அல்ல கூட்டு முயற்சி என்பது

நீங்கள் உங்கள் படைப்புகளை கடவுளின் செயலாகக் குறிப்பிடுவீர்கள் ஆனால் அது தவிர உங்களின் திறமையை முன் வைக்காதது ஏன்?

இன்று நீங்கள் உலகின் இசை மேதைகளை எடுத்துக் கொண்டால் அவர்கள் இசையைத் துறை போகக் கற்றவர்கள் ஆனால் நான் யார்?
சாதாரணமாக கிராமத்தில் இருந்து வந்தவன் இவ்வளவு தூரம் சாதிக்க முடிந்ததென்றால் அது முன் ஜென்மத்தில் இசையை முழுமையாகக் கற்றுத் தேர்ந்திருக்கணும் அதுதான் இப்போது விளைகிறது அதுவே கடவுளின் கிருபை.

சிறுமியாக இருந்த சுஜாதாவுக்கு இனிப்பு வாங்கிக் கொடுத்துப் பாட வைத்தது, அப்போது அறிமுகப் பாடகியாக இருந்த சித்ராவுக்கு தியாகராஜ கீர்த்தனையைக் கொடுத்துப் பாட வைத்தது இதெல்லாம்?
தீர்மானம் எடுத்து வருவதல்ல இவை எனக்கு அந்தச் சமயத்தில் எது தோன்றியதோ அதைச் செய்தேன்.

நன்றி : மலையாள மனோரமா மற்றும் இந்தக் காணொளியைப் பகிர்ந்த Promod 



கானா பிரபா
24.07.17

0 comments: