Pages

Saturday, July 16, 2011

"தெய்வத்திருமகள்" கண்டேன்

வழக்கமாகத் தமிழ்த்திரைப்படங்களுக்கு விமர்சனப்பதிவை சுடச்சட இதுவரை வழங்காமல் இருந்த என் சபதத்தை முறியடித்து விட்டது இன்று தியேட்டர் சென்று பார்த்த "தெய்வத் திருமகள்".
தெய்வ மகன் பின்னர் தெய்வத்திருமகன் ஆகி இப்போது தெய்வத்திருமகள் என்று மூன்று ஆயுளைக் கண்ட இப்படத்தின் போஸ்டர்களை சிட்னியில் இன்னும் தெய்வத் திருமகன் என்றே வைத்திருக்கின்றார்கள். மதராசப்பட்டணம் படம் கொடுத்ததில் இருந்தே இயக்குனர் விஜய் மீது ஒரு தனிமரியாதையை ஏற்படுத்தி விட்டது. ஆனால் அவரது முந்திய படமான கிரீடம் படத்தில் இருந்து மூன்றாவது தடவையாக தெய்வத்திருமகள் படத்திலும் இசைக்கூட்டணியில் இணைந்த ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் வந்த பாடல்களில் "விழிகளில் ஒரு வானவில்" பாடல் கேட்ட மாத்திரத்திலேயே நெஞ்சில் சிம்மாசனம் இட்டுவிட்டதை ஒரு பதிவாகவே போட்டிருந்தேன். படம் பற்றிய ஏகப்பட்ட எதிர்பார்ப்புக்கள் இருந்தாலும் கூடவே விக்ரம் ஆர்வக்கோளாறினால் சொதப்பிவிடுவாரோ என்ற ஐயத்தோடு படத்தைப் பார்க்க ஆரம்பித்தேன்.

படம் ஆரம்பித்ததில் இருந்து முடியும் வரை படத்தில் பணியாற்றிய ஒவ்வொரு கலைஞர்களும், இயக்குனர் உட்பட எவ்வளவு சிரத்தையோடு பணியாற்றியிருக்கின்றார்கள் என்பதைப் படம் முடியும் போது ஏற்பட்ட நிறைவில் உணரமுடிந்தது. இப்படியான ஒரு கதையை ஏற்கனவே ஹொலிவூட்டில் I am Sam ஆகக் கொடுத்திருந்தாலும் இந்தப் படத்தில் தமிழ்ச் சூழலுக்கேற்ற வகையில் பாத்திரங்களும் கதை அமைப்பும் பொருந்திப் போவதே இப்படத்தின் வெற்றிக்கான ஒரு படியாக அமைந்து விட்டது.
மன வளர்ச்சியற்ற பாத்திரத்தில் வரும் விக்ரம், அவரது மைத்துனியாக வரும் அமலா பால், விக்ரமுக்கு உதவும் வக்கீல் அனுஷ்கா, எதிர்த்தரப்பு வக்கீல் நாசர், இவர்களோடு தமிழ் சினிமாவுக்கே உரிய அதிகப்பிரசங்கித்தனமில்லாத குழந்தை என்று அத்தனை பாத்திரங்களும் செதுக்கப்பட்டிருக்கின்றன.

கொஞ்சம் அதிகப்படியாகக் காட்டினாலேயே ஓவர் செண்டிமெண்ட் என்ற எல்லைக்குள் பாயும் கதை அமைப்பில் அடுத்து வரும் காட்சிகளை ரசிகனை ஊகிக்கவிட்டு ஆனால் அதை இன்னொரு திசையில் கொண்டு சேர்க்கும் இயக்குனரின் சாமர்த்தியம் முடிவு வரை இருக்கின்றது. இயக்குனரின் மனக்கண்ணில் இருந்ததை தன் காமிராக் கண்ணில் காட்டிய நீரவ் ஷாவின் ஒளிப்பதிவும் இப்படத்தின் இன்னொரு பலம். படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமாரின் பாடல்கள் ஏற்கனவே ஹிட் அடித்திருப்பது படத்துக்குப் பலம், அதே வேளை ஒவ்வொரு பாடல்களையும் ஏனோதானோவென்று படமாக்காமல் அவற்றுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. குறிப்பாக விழிகளில் ஒரு வானவில் பாடலைப் போல ஒரு அழகான பாடலைத் திரையில் காணும் முன் ரசிகன் விதவிதமாகக் கற்பனை பண்ணி அந்தப் பாடலைக் கேட்டிருப்பான். அந்தக் கற்பனையைக் கடந்து இந்தப் பாடலை எடுத்த விதம் அருமை. கூடவே கதை சொல்லப்போறேன் பாடலில் வந்த குறும்பு கிராபிக்ஸ், ஜகடதோம் பாடல் என்று சொல்லிக்கொண்டே போகலாம். படத்தின் பின்னணி இசையின் மூல இசை இசைஞானியின் "Paa" இசையை நினைவுபடுத்தியும், இறுதிக்காட்சிகளில் வரும் இசையும் அவ்வப்போது ராஜாத்தனமான இசையாக ஒலித்தாலும் ஆர்ப்பாட்டமில்லாமல் அழகாகப் பொருந்திப் போகின்றது.

ஒவ்வொரு பாத்திரங்களுக்குப் பின்னால் உள்ள நியாயத்தை ரசிகனே தீர்மானிக்கும் வகையில் அமைத்திருக்கிறார் இயக்குனர். படத்தின் ஆரம்பக்காட்சிகளில் தந்தை மகள் பாசத்தை ஓவராக இழுத்துவிட்டார்களோ என்று நினைக்கும் போது அந்தக் காட்சிகள் படத்தின் பிற்பாதியில் வரும் காட்சிகளுக்கான நியாயத்தன்மையைக் காட்டி நிற்கின்றன.
"தெய்வத் திருமகள்" கண்டிப்பாகப் பார்த்தே தீரவேண்டியவள்

10 comments:

Rekha raghavan said...

நீங்க சொன்னா சரியாத்தானிருக்கும். பார்த்துடுவோம்!

Unknown said...

நிலா இன்னும் மனத்திரையில்

Kannabiran, Ravi Shankar (KRS) said...

சூப்பர்!

"படம்-ன்னா படிக்க அல்ல! பார்க்க!" என்ற தளத்தில் அமைவது தான் மெய்யான விமர்சனம்! மற்றவை விஷத்தனம்!

நிறையோ, குறையோ...விமர்சனங்கள் விமர்சனங்களாகவே அமைவதும் ஒரு கலை!
மலரினும் மெல்லிது காமம்! சிலர்-அதன்
செவ்வி தலைப் படுவார்!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

தெய்வத் திருமகள் = அழகு!

கோபிநாத் said...

கலக்கல் விமர்சனம் தல ;-)

Anonymous said...

கிருஷ்ணா-நிலா பாத்திரங்களின் பாதிப்பிலிருந்து இன்னமும் வெளிவர முடியவில்லை. அவசியம் திரையில் காணவேண்டிய ஓவியம் :)

Jeevan said...

Thanks Prbha, Nice.......

Jeevan said...

படத்தை பாருங்கள் என எழுதியிருக்கும் , உங்கள் விமர்சன யுத்தியும் அருமை , பிரபா.

நன்றி

Anonymous said...

padathai pondre ungal paarvaiyum amaithiyaaka azhakaaha irunthathu prabha sir ungal radiospathyil en muthal pinnoottam. nandri vaazhthukkal.

தனிமரம் said...

அழகான படத்திற்கு அழகான விமர்சனம் பிரபா!