![](http://www.radio.kanapraba.com/praja/p2.jpg)
"1792 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பதினெட்டாம் தேதி ஶ்ரீரங்கப்பட்டணத்தில் கவர்னர் ஜெனரல் கான்வாலிஸ் பிரபுவுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின் படி திப்புசுல்தான் மலபார் பிரதேசத்தின் பலபகுதிகளை பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பனிக்கு விட்டுக் கொடுத்தார். வர்த்தகம் மட்டுமல்லாது கம்பனி ஆட்சியையும் கைப்பற்றியது. கடுமையான வரிச்சட்டங்களை விதித்து மக்களைக் கொடுமைப்படுத்தியது. அங்கிருந்த குறுநில மன்னர்கள் படைபலமோ துணிவோ இல்லாததால் வெள்ளையனுக்கு அடிபணிந்து கிடந்தனர்.
ஒரேயொரு ராஜகுமாரன் மட்டும் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் போராட மக்களைத் திரட்டினார்"
பழசிராஜா என்ற வரலாற்றுக் காவியம் இப்படித் தான் ஆரம்பிக்கின்றது. ஆரம்பம் முதல் பழசிராஜாவின் அந்தத் தீரவரலாற்றின் பக்கங்களின் பங்காளிகளாக எம்மையும் இணைத்துக் கொண்டு பயணிக்கின்றது. ஈற்றில் பழசிராஜா மடியும் போது எம் மனங்களில் கனமாக உட்கார்ந்து கொண்டு விடுகிறார்.
![](http://www.radio.kanapraba.com/praja/p12.jpg)
கோகுலம் நிறுவனத்தின் சார்பில் கோபாலன் தயாரிப்பில் கேரளத்தின் பெரும் எழுத்தாளர்
M. T.வாசுதேவன் நாயர் எழுதிய கேரளவர்மா பழசிராஜா என்ற காவியத்தை இயக்கியவர் மலையாளத்தின் உச்ச இயக்குனர்களில் ஒருவரான ஹரிஹரன். இசையமைப்பை இசைஞானி இளையராஜா கவனித்துக் கொள்ள, ஒலிச்சேர்க்கையை ஆஸ்கார் விருதைக் கவர்ந்த ரசூல் பூக்குட்டி கவனித்துக் கொண்டார். 2009 ஆம் ஆண்டு தேசிய விருதுப்பட்டியலில் சிறந்த பின்னணி இசைக்காக இசைஞானி இளையராஜா, சிறந்த ஒலிச்சேர்க்கைக்காக ரசூல் பூக்குட்டி, சிறந்த துணை நடிகைக்கான தேர்வுக்குழுவின் சிறப்பு விருதாக பத்மப்பிரியா ஆகியோருக்கு இந்தப் படம் உச்ச விருதுகளைக் கொடுத்துக் கெளரவித்தது.
![](http://www.radio.kanapraba.com/praja/p3.jpg)
இந்தப் படத்தைத் தமிழில் மொழிமாற்றிய போது பாடல்கள் முழுவதையும் கவிஞர் வாலி கவனித்தார். படத்தின் இன்னொரு பலமாக நேர்த்தியான, எளிமையான வசன அமைப்புக்களைச் சிறப்பாகச் செய்திருக்கின்றார் பிரபல எழுத்தாளர் ஜெயமோகன். படத்தைப் பார்க்கும் போது பாத்திரங்களின் வாயிலாக அவற்றைக் கேட்கும் போது எவ்வளவுதூரம் இந்த வசனப்பகுதியை ஜெயமோகன் சிறப்பாகக் கொடுத்திருக்கின்றார் என்பதை உணர முடியும்.
![](http://www.radio.kanapraba.com/praja/p7.png)
பழசிராஜாவின் பின்னணி இசைக்கோர்ப்பில் ராஜாவின் இசையை Hungarian National Philharmonic இன் இசைவல்லுனர்கள் இசைய வைத்தார்கள். ஆரம்பத்தில் இந்தப் படத்துக்கு ஏற்கனவே பட்ஜெட்டை மீறிய செலவாகிவிட்டது எனவே ஹங்கேரிய இசைக்குழுவை வைத்துப் பண்ணுவதைத் தவிர்த்து விடலாம் என்று இயக்குனர் வேண்டினாலும் ராஜா, "இந்தப் படத்தை இன்னொரு முறை எடுக்கப் போகிறீர்களா, இதிலேயே சிறப்பாகக் கொடுத்து விடுவோமே" என்று சொல்லிச் சம்மதிக்க வைத்தார். ராஜாவின் தளராத அந்த எண்ணம் தான் இப்படத்தின் பின்னணி இசையில் பெரும் உச்சத்தைக் காட்டியிருக்கிறது.
![](http://www.radio.kanapraba.com/praja/p9.png)
ஆங்கிலேயரின் தேடலுக்கு மறைவாக பழசிராஜா தன் மக்களுடன் காடுகளில் பயணிக்கும் போது வரு பாடல் "ஆதியுஷாசந்யா போததிதுவே" பாடலை கேரளத்தின் புகழ்பெற்ற பாடலாசிரியர் ஓ.என்.வி.குருப் எழுதும் போது கவிஞர் அந்த காட்சியின் காத்திரமான உணர்வைக் கொண்டுவரவில்லை என்று ராஜா சொல்லப் போக அதனால் கேரளத்தில் பெருஞ் சர்ச்சை கிளம்பியது. பின்னர் இயக்குனர் ஹரிஹரன் தலையிட்டு, "ராஜாவுக்கு அது திருப்தி கொடுக்காதது அவரின் சொந்தக் கருத்து, ஆனால் இயக்குனராக என்னை குருப் இன் கவி வரிகள் திருப்திப்படுத்தியது" என்று சொல்லி பிரச்சனையை ஓரளவு தணித்தார். ஆனாலும் ஏஷியா நெட் என்ற கேரள தொலைக்காட்சியின் 2009 ஆம் ஆண்டு சினிமா விருதுகள் வழங்கப்பட்டபோது இசைஞானி இளையராஜா பெயரை அந்த விழா முடியும் வரை மருந்துக்கும் கூடச் சொல்லாமல் அமுக்கிப் பழிவாங்கிவிட்டார்கள். என்றாலும் இந்தப் படத்தில் வந்த "குன்னத்தே" பாடலுக்காக சிறந்த பாடகிக்கான விருதை சித்ரா தட்டிக் கொண்டார்.
ஜேசுதாஸ்,எம்.ஜி.ஶ்ரீகுமார், விது பிரதாபன் குழுவினர் பாடும் ""ஆதியுஷாசந்யா போததிதுவே"
சித்ரா பாடும் "குன்னத்தே கொன்னயும்"
றேடியோஸ்பதியின் 300 வது பதிவு நெருங்க நெருங்க விசேஷமாக ஒரு இசைப்படையலைக் கொடுக்கவேண்டும் என்று பலவிதமான நினைப்புக்களோடு இருந்தேன். ஆனால் திடுதிப்பில் கடந்த வாரம் வந்த 2009 ஆம் ஆண்டுக்கான தேசியவிருதுகள் அறிவிப்போடு 300 வது பதிவுக்குப் பலமான விருந்து கிட்டி விட்டது.
![](http://www.radio.kanapraba.com/karakattakaran/kanapraba5.png)
![](http://www.radio.kanapraba.com/praja/p11.png)
பழசி(இளைய)ராஜாவுக்குக் கிட்டிய விருது கொடுத்த தெம்பில் கடந்த மூன்று நாட்களாக பழசிராஜா இசைப்பிரிப்புப் பணியில் இறங்கினேன். படத்தை ஓடவிட்டுப் பதமாக இசையை மட்டும் பிரிக்கும் காட்சிகளை மீனுக்குக் காத்திருக்கும் கொக்குப் போல அவதானமாக இருந்தாலும் அவ்வளவு சுலபமான வேலையாக அது படவில்லை. காரணம், இசைஞானியின் மற்றைய படங்களில் பின்னணி இசைவரும் காட்சிக்கு மட்டும் தனியானதொரு வசன ஆதிக்கம் குறைவான அல்லது இல்லாத காட்சியமைப்பு இருக்குமாற்போல இந்தப் படத்தில் இல்லை. படம் தொடங்கி முடியும் வரை இண்டு இடுக்கெல்லாம் இசையை நுழைத்து இலாவகமாக சங்கமிக்க வைத்ததால் நாலைந்து தடவைகளுக்கு மேல் மீண்டும் மீண்டும் காட்சிகளை மீள ஒடவிட்டு இசைப்பிரிப்புச் செய்ய வேண்டியதாயிற்று. அப்படியாகப் பிரித்தெடுக்கப்பட்ட ஒலிக்குளிகைகள் மட்டும் 38 , அவற்றை இங்கே தருகின்றேன். இந்த இசையைக் கேட்கும் போது பழசிராஜா என்ற பெருங்காவியத்துக்கு இசைஞானியின் எல்லைகடந்த இசைக்கோர்ப்பு எவ்வளவு தூரம் பெரும் பலமாக இருக்கின்றது என்பதை உணர்வீர்கள். காட்சிகளின் நுட்பத்தை உணர்ந்து ஒரு காட்சியிலேயே வரும் பலவிதமான உணர்வுக் கலவைகளையும், காட்சிகளின் வீரியத்தையும் பார்வையற்றவனின் மனக்கண்ணிலே கூடப் பிரகாசமாய்க் காட்டும் உயரிய சங்கீதமாக இந்த இசைக்கலவை விளங்கி நிற்கின்றது. பின்னணி இசையிலே இசைஞானியின் உச்சத்தைத் தொடுவதற்கு இனிமேல் தான் ஆண்டவன் கருணை கூர்ந்து யாரையாவது பிறப்பெடுக்க வைக்கவேண்டும் என்பது போன்றதான உணர்வலையை உண்டுபண்ணும் இசைஜாலத்தின் சங்கமம் இந்தப் படம். சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தும், வீரத்தில் வெகுண்டெழுந்தும், பலவீனப்பட்டு வீழும் போது முடங்கி முனகியும், பழசிராஜாவின் பெரும்பயணத்தில் அவருக்குத் துணையாக வந்த தளபதி இடைச்சேன குங்கன் போல இசைஞானி இளையராஜாவின் இசை வியாபித்து நிற்கின்றது.
இனி ராஜா பேசட்டும்
கமல்ஹாசனின் அறிமுகத்தோடு ஆரம்பமாகும் முகப்பு இசை
ஆங்கிலேய அதிகாரிகள் அவர்களின் விசுவாசிகளைச் சந்தித்தல்
ஆங்கிலப்படையின் அணிவகுப்பு
பழசிராஜாவின் சுதேசிப்படைகளின் வாட்களும் ஆங்கிலப்படைகளின் துப்பாக்கிகளும் மோதும் காட்சி
பழசிராஜாவின் அறிமுகம், தனது மாமனார் குரும்பிரநாடு ராஜவர்மாவைச் சந்தித்தல்
அமைதி தவழும் அந்தக் கிராமத்தில் பழசிராஜாவைத் தேடி நுழையும் ஆங்கிலேயப்படை
இடைச்சேன குங்கன் (சரத்குமார்) அறிமுகமும் ஆங்கிலச் சிப்பாய்களுடன் அவரின் மோதலும்
பழசிராஜா மரபுமுறை போர்முறையின் அவசியத்தை உணர்த்தித் தன் அணியில் இருக்கும் வீரர்களைப் பயிற்சி எடுக்கச் செய்யும் காட்சி
![](http://www.radio.kanapraba.com/praja/p5.jpg)
இடைச்சேன குங்கனுக்கும் பழசிராஜாவுக்கும் நடக்கும் நட்புரீதியான வாட்போர்
தன் மக்களோடு தான் தொடர்ந்து இருப்பேன் என்று பழசிராஜா தன் மக்களுக்கு உறுதிகூறும் காட்சி
பழசிராஜா படைகளுக்கும் ஆங்கிலச் சிப்பாய்களுக்கும் ஒரு திடீர் மோதல்
![](http://www.radio.kanapraba.com/praja/p10.png)
ஆங்கிலேயர்களுடன் நட்புறவாடும் குரும்பைநாடு தாசில்தாரர் பழயம்வீடான் சந்து ஆங்கிலச் சிப்பாய்களுடன் பழசிராஜாவைப் பிடிக்க வரும் காட்சியும் அதை பழசிராஜா தந்திரமாக எதிர்கொள்ளலும்
காட்டுக்குள் பழசி படைகளை வேட்டையாட வரும் ஆங்கிலேயப்படைகளை சுதேசிப்படைகள் தந்திரமாக மடக்கிப் போர் புரிதல்
பழசிராஜா ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் போட முனையும் வேளை
பழசிராஜாவும் ஆங்கிலேயப் பிரதிநிதிகளும் நேருக்கு நேர்
பழசிராஜாவைக் கொல்லத் தருணம் பார்க்கும் ஆங்கிலேய அதிகாரி மேஜர் ஜேம்ஸ் கோர்டனுக்கு அவரின் மேலதிகாரி , கோட்டையைச் சுற்றி வளைத்து நிற்கும் பழசி படைகளைக் காட்டும் காட்சி, அட்டகாசமான பின்னணி இசையோடு
பழசிராஜா ஆங்கிலேயருடன் ஒப்பந்தம் போடும் முன் தன் கோரிக்கையைச் சொல்லும் வேளை
பழசிராஜா ஆங்கிலேயருடன் போட்ட ஒப்பந்தத்தால் அதிருப்தியடையும் இடைச்சேன குங்கன், கைதேறி அம்பு (மனைவியின் சகோதரன்) ஆகியோருக்குத் தன் நிலைப்பாட்டை விளக்கும் போது
இடைச்சேன குங்கன் (சரத்குமார்) குரும்பைநாடு தாசில்தாரர் பழயம்வீடான் சந்து (சுமன்) நேருக்கு நேர்
பழசிராஜா தன் வாளை எடுத்துப் பரிசோதிக்கும் போது
"உண்மையைச் சொல்லு! யார் நீ, பழசியோட ஆளு தானே?"
"பழசியோட ஆள் இல்லை, பழசியே தான் பழசி கேரள வர்மா"
பழசிராஜாவின் விசுவாசி கண்ணவது நம்பியார் (தேவன்) அவர் மகன் ஆகியோரைத் தந்திரமாகப் பிடித்த ஆங்கிலேயர் பொது இடத்தில் தூக்கிலிடும் போது
ஆங்கிலேய அசிஸ்டெண்ட் கலெக்டர் பேபரின் செயற்பாடுகளால் அதிருப்தியடையும் அவர் வருங்காலத் துணை டோரா
பழசிராஜா படைகளுக்கும் ஆங்கிலேயப் படைகளுக்கும் பெரும் மோதல்
தலைக்கால் சந்துவும் (மனோஜ் கே ஜெயன்) அவரின் மனைவியாகப் போகும் நீலியும் (பத்மப்பிரியா) ஆங்கிலேயப் படைகளை எதிர்கொள்ளும் போது
பழசிராஜாவின் தலைக்கு ஆங்கிலேயர் விலை வைத்தலும் தலைக்கால் சந்து கொட்டும் மழையில் மரணத்தை முத்தமிடுதலும்
அதுவரை அழாமல் இருந்த நீலி பழசிராஜாவைக் கண்டதும் தன் அழுகையைக் கொட்டித் தீர்க்கும் பெருஞ்சோகம்
தன் வலதுகரமாக இருந்த தலைக்கால் சந்துவின் (மனோஜ் கே ஜெயின்) கோரமரணத்தைத் தொடர்ந்து இடைச்சேன குங்கன் (சரத்குமார்) மேஜர் ஜேம்ஸ் கோர்டனை வேட்டையாடல்
ஆங்கிலேயப் படை பழசிராஜாவின் இருப்பிடத்தை அறிந்து வரப்போகும் வேளை ஊரே இடப்பெயரும் நேரம் நிகழும் காட்சிகள், கைதேறி அம்பு காயம்படல்
பழசிராஜா தன் வாளுக்கு வேலைகொடுக்கும் நேரம் வந்து விட்டதை உணர்தல்
கைதேறி அம்பு காலனின் கைகளில் தன் உயிரைக் கொடுக்கும் நேரம் பழசிராஜா அவனுக்கு ஆறுதல் கொடுத்தலும் ஆனால் அவன் உயிர் பிரிந்ததை உணரும் வேளை அவன் கைகளை ஒதுக்கிவிட்டு மனம் உடைந்து போதலும்
இடைச்சேன குங்கன் எட்டப்பன் குரும்பைநாடு தாசில்தாரர் பழயம்வீடான் சந்து (சுமன்)வை வேட்டையாடிக் கொல்லும் வேளை
ஆங்கிலேயப் படைகளை நேரெதிரே சந்திக்கும் போது சரணடையாமல் இடைச்சேன குங்கன் பழசிராஜாவுக்குத் தன் குருதட்சணயாக உயிரைக் கொடுக்கும் வேளை
பழசிராஜா தன் மனைவி கைதேறி மக்கம் (கனிகா) தன்னை விட்டு விலகி கைதேறிக்குப் போகுமாறு சொல்லும் நேரம்
"தம்புரானோட உயிர் எங்களுக்குப் பெருசு" - எம்மன் நாயர் (லாலு அலெக்ஸ்)
பழசிராஜா பெருஞ்சிரிப்புடன் "துருப்பிடிச்ச வாளைப்பார்த்து வயசான காலத்துல இல்லாத வீரகதைகளை உருவாக்கி அதை எல்லாரையும் நம்பவச்சு அதைப்பேசி நாம் வாழணும்,
எம்மன்! பிறந்ததில் இருந்து ஒரு நிழல் கூடவே வந்துகிட்டிருக்கு, என்னைக்காவது ஒருநாள் அது திரும்பி நேருக்கு நேரே வந்து நிற்கும் அதுதான் மரணம், பயமில்லை"
"அழாதீங்க, அழணும்னு தோணிச்சின்னா அழுதுக்குங்க, என்னை நினைச்சில்லை
அதிர்ஷ்டம் கெட்ட இந்த நாட்டை நினைச்சு, நாட்டோட மக்களை நினைச்சு...
வீரசொர்க்கங்கங்களின் வர்ணனைகளைக் கேட்டு ஆசைப்படுற ஒரேயொரு கடமை மட்டும் தான் பாக்கியிருக்கு
இந்த நாட்டை ஆளுற உரிமை யாருக்குன்னு இங்க, என்னோட ரத்தத்தால குறிக்கணும்
அது போதும்...."
பழசிராஜா ஆங்கிலேயப்படைகளோடு நேரடிச் சமரில், வாத்தியங்களின் உச்சபட்ச ஆர்ப்பரிப்போடு
பழசிராஜாவின் வீரமரணமும், ஆங்கிலேய அசிஸ்டெண்ட் கலெக்டர் கொடுக்கும் இராணுவ மரியாதையும்
"He was our enemy, but he was a great man, a great warrior,
we honour him"
![](http://www.radio.kanapraba.com/praja/p6.jpg)
34 comments:
வழக்கம்போல், கலக்கலான வேலை உங்களது.
இந்தப் படத்தை, தியேட்டரில் பார்த்தபோது (inox chennai), ப்டத்தின் sound effects (ரெசூல்?) பின்னணி இசையை பின்னுக்குத் தள்ளி ரசிக்க முடியாதபடி இருந்தது.
படம் முழுக்க ஒரே இரைச்சல்தான் அதிகம்.
கத்திச்சண்டை தியேட்டருக்குள்ளையே நடக்கரமாதிரி, தலைவலி.
பாட்டு வ்ழக்கமான ராஜாப் பாட்டு மாதிரி, அழகு. 'குரு' ஸ்டைலில்.
வருகைக்கு நன்றி சர்வேஷ் ;)
படத்தை டிவிடியில் ஓடவிட்டு ஒலிப்பிரிப்பு செய்தபோது ஒலிக்கலவை சீரான அளவில் ரசிக்கக் கூடியதாக இருந்தது. நீங்க போன தியேட்டர்காரங்க ஆர்வக்கோளாறில் மிதமிஞ்சிய எப்பெக்டை கொடுத்தாங்க போல. பி.கு: ரசூலுக்குக் கூட விருது கிட்டியதே
Hats off once again My dear maestro.
இந்த இடுகைக்கான உங்கள் உழைப்பு பாராட்டக்கூடியது!
தேசிய விருது பெற்ற இசை தெய்வத்துக்கு மனமார்ந்த வணக்கங்கள் ;))
முதல் பதிவு முதல் 300 பதிவு வரை ஒவ்வொரு பதிவும் புதுமையான படைப்பாக..எளிமையாக (பதிவை பார்க்கிறவர்களுக்கு) உழைத்து உழைத்து செதுக்கி செதுக்கி அருமையான அழகான மிக பிரமாண்ட சிற்பாக இருக்கும் எங்கள் தல ரேடியோஸ்பதிக்கு....ரேடியோஸ்பதியின் உயிர் ரசிகளின் ஒருவனாக என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;))
பதிவுக்குள்ள போயிட்டு வரேன் தல ;)
படத்தில் இருந்து இந்த 38 இசைத் துளிகளை கறக்க மிகவும் மெனக்கெட்டிருக்கிறீர்கள்! மிக்க நன்றி.
என்னால் இந்த திரைப்படத்தைபார்க்க இயலவில்லை! இத் துளிகளைக் கேட்கையில் அவர் மிகச்சிறப்பான இசை தந்திருக்கிறார் இளையராஜா என்பதில் துளியும் ஐயமில்லை. 'Attention to detail' -இல் இவரை மிஞ்ச யாருமில்லை. அவ்வளவு நுணுக்கமான compositions!
படத்தில் இருந்து இந்த 38 இசைத் துளிகளை கறக்க மிகவும் மெனக்கெட்டிருக்கிறீர்கள்! மிக்க நன்றி.
என்னால் இந்த திரைப்படத்தைபார்க்க இயலவில்லை! இத் துளிகளைக் கேட்கையில் அவர் மிகச்சிறப்பான இசை தந்திருக்கிறார் இளையராஜா என்பதில் துளியும் ஐயமில்லை. 'Attention to detail' -இல் இவரை மிஞ்ச யாருமில்லை. அவ்வளவு நுணுக்கமான compositions!
பழசிராஜா படத்தை ஷார்ஜாவில் வைத்து பார்த்தேன். அங்கே தொடக்கத்தில் மோகன்லால் பேசியிருப்பாரு. தமிழ்ல கலைஞானி ;)
கேளரத்தின் அதிகபட்ச செலவு செய்த படமுன்னு கூட சொன்னாங்க. ஆனா உண்மையான்னு தெரியல ;)
ரெண்டு பாடல்களையும் இப்போது தான் தமிழில் கேட்கிறேன் தல...நான் எப்போம் கேட்பது நம்மோட மளையாளம் ;))
\\\இந்தியத் திரைவரலாற்றில் பின்னணி இசைக்கான முதல் தேசிய விருது கடந்த ஆண்டு மலையாளத்தில் வெளியான பழசிராஜாவுக்கு இசையமைத்த இசைஞானி இளையராஜாவுக்குக் கிட்டியதும் அவரின் உயிர் ரசிகர்கள் எங்களுக்கெல்லாம் பெரும் மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கின்றது. இந்த விருதை முப்பது ஆண்டுகளுக்கு முன்னரேயே அறிமுகப்படுத்தி இருந்தால் பின்னணி இசைக்கான தேசிய விருதுகளில் குறைந்த பட்சம் 20 ஐ ஆவது அள்ளியிருப்பார் எங்கள் ராகதேவன்\\\
முதல் முறை கொடுப்பது இசை தெய்வத்துக்கே படையல் போட்டு ஆரம்பித்து வைத்த அரசுக்கு நன்றி ;))
எனக்கு தெரிஞ்சி இந்த விருதை இசை தெய்வத்தின் பெயரிலேயே கொடுக்கலாம் ;))
thanks
எங்கள் இசைஞானிக்கு முதன் முறையாக கொடுப்பதன் மூலம் இந்த விருதுக்கு இன்னும் பெருமை சேர்த்திருக்கின்றது இந்திய அரசு,
இதனை ஆரம்பத்தில் இருந்து செய்திருந்தால் ராகதேவனின் வீடு முழுவது விருதுகளால் நிரம்பி வழிந்திருக்கும். பின்னணி இசை அமைக்க இன்னொருவர் பிறப்பது என்பது முடியாத காரியம். ஈரேழு உலகம் உள்ள வரை ஞானி ஞானிதான்.
300 ஆவது பதிவு எங்கள் இசைக் கடவுளின் பதிவாக இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் நண்பா.
What a work.. We need to give you National award for your work
Keep it up Kana
இதுவல்லவோ பதிவு!
நல்ல தனித்துவமான 300 பதிவுகள் - இதைப்போலவே... நன்றி கானாபிரபா..
please give download link we will download and listen for long time
பின்னணி இசையைப் பிரித்து பகிர்ந்தமைக்கு நன்றி, கானா சார். படம் பார்த்து விட்டு மீண்டும் இந்த இசைத் தொகுப்பைக் கேட்கிறேன்.
நல்ல பதிவுக்கு. தொகுப்புக்கு நன்றி. அத்தனையையும் இணைத்து zipஆக தரவிறக்கத் தரலாமே.
கேரளத்தில் பெருஞ் சர்ச்சை கிளம்பியது. பின்னர் இயக்குனர் ஹரிஹரன் தலையிட்டு, "ராஜாவுக்கு அது திருப்தி கொடுக்காதது அவரின் சொந்தக் கருத்து, ஆனால் இயக்குனராக என்னை குருப் இன் கவி வரிகள் திருப்திப்படுத்தியது" என்று சொல்லி பிரச்சனையை ஓரளவு தணித்தார். ஆனாலும் ஏஷியா நெட் என்ற கேரள தொலைக்காட்சியின் 2009 ஆம் ஆண்டு சினிமா விருதுகள் வழங்கப்பட்டபோது இசைஞானி இளையராஜா பெயரை அந்த விழா முடியும் வரை மருந்துக்கும் கூடச் சொல்லாமல் அமுக்கிப் பழிவாங்கிவிட்டார்கள். என்றாலும் இந்தப் படத்தில் வந்த "குன்னத்தே" பாடலுக்காக சிறந்த பாடகிக்கான விருதை சித்ரா தட்டிக் கொண்டார்/////
நண்பர் பிரபா அவர்களக்கு முதலில் நன்றிகள் ........... கேரளா சினிமா கொச்சினை தாண்டி வராத காரணம் இது தான் ..... இன்று தலைவர் தேசிய விருது பெற்றவுடன் பேசும் அவர்கள் நீங்க சொன்து போல பாடலாசிரியர் ஓ.என்.வி.குரு பற்றி என்ன சொல்லிவிட்டார் என்று ஒரு மினிஸ்டர் குதித்தார்கள் !! அம்மா கலைஞானி கமலின் விழாவை புறாகன்னிதர்கள் // ஒவொரு வருடமும் ஒரு மலையாளிகள் மட்டும் விருதுகள் வாங்கவேண்டும் என்று உயர்ந்த எண்ணம் கொண்டவர்கள் ........
இசைஞானியின் இந்த விருது பலர் முகத்தில் கரி
அருமை அருமை அருமை... இசைஞானி...வார்த்தைகள் வரவில்லை..காற்றின் ஓலங்களைக்கிழித்து கீதங்களாகவே கேட்கின்றன.
அந்த விருது இப்போது பெருமைப்பட்டுக்கொள்ளட்டும்.
தங்கள் "ட்றிபிள்" செஞ்சுரிக்கும் வாழ்த்துக்கள்.
கக்கு மாணிக்கம்
வருகைக்கு நன்றி
மிக்க நன்றி வேல்ஜி
தல கோபி
இடுகையில் 2 மலையாளப்பாடல்களைத் தான் போட்டிருக்கேன், பின்னணி இசைதான் தமிழ் வடிவத்தோடு,
எனக்கு தெரிஞ்சி இந்த விருதை இசை தெய்வத்தின் பெயரிலேயே கொடுக்கலாம் ;))//
கன்னாபின்னாவென்று வழிமொழிகின்றேன் ;)
மிக்க நன்றி தல
300 ஆவது இடுகைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே. நீங்கள் குறிப்பிட்டது போல் பின்னணி இசைக்கான விருதுகள் பல வருடங்களுக்கு முன்பே அறிவிக்கப்பட்டிருந்தால் இசைஞானி குறைந்தது 20 க்கு மேற்பட்ட முறை வென்றிருப்பார். பின்னணி இசையைத் தகுந்த குறிப்புகளோடு கொடுத்திருக்கிறீர்கள். இன்னும் கேட்கவில்லை. விரைவில் கேட்டுவிடுவேன். உங்கள் உழைப்புக்கு எனது வணக்கங்கள். இசைஞானியின் ரசிகர்களைக் கர்வப்பட வைத்துவிட்டீர்கள்.
ஸ்ரீ....
Neel said...
'Attention to detail' -இல் இவரை மிஞ்ச யாருமில்லை. அவ்வளவு நுணுக்கமான compositions!//
வணக்கம் நீல்,
ராஜா குறித்த கச்சிதமான கருத்து இது, மிக்க நன்றி
வருகைக்கு நன்றி ஜோதி
வந்தி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
வாங்கோ கதிர்
எனக்கு விருதா ஆகா ;)
மிக்க நன்றி ஜோ
மிக்க நன்றி ராம்சுரேஷ்
வணக்கம் மார்க்கண்டன் மற்றும் தமிழினியன்
டவுண்லோட் லிங் கொடுப்பதில் சில தொழில் நுட்பச் சிக்கல்கள் உண்டு, ஏதாவது வழி செய்கிறேன்
சுப்பராமன்
மிக்க நன்றி
மிக்க நன்றி தல
வாங்க அலெக்ஸ்,
பதிவில் கண்டது மிக்க மகிழ்ச்சி, உங்களின் கருத்துக்களோடு முழுதும் ஒத்துப் போகின்றேன்
மிக்க நன்றி ஜனா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி அன்பின் ஸ்ரீ
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ரவிசங்கர் ஆனந்த்
கலக்கல் கானா...
நல் உழைப்பை வழங்கி நல் உழைப்பை அடையாளம் காட்டி இருக்கிறீர்கள். எல்லாம் கேட்டு விட்டுத்தான் பின்னூட்டம் போட வேண்டுமென்பது என் கொள்கை..அதனால் தாமதம். இன்றுவரை பாதிதான் கேட்டுள்ளேன். விரைவில் மீதி கேட்டுவிடுகிறேன். சிறிது தொழில் நுட்பக் கோளாறு என் பக்கத்தில்...
//எனக்கு தெரிஞ்சி இந்த விருதை இசை தெய்வத்தின் பெயரிலேயே கொடுக்கலாம் ;))////
மாப்பி கலக்கும்மா நீ....
‘குன்றத்தே கொன்னைக்கும்..’ ஹாண்ட்டிங் மெலடி..’ஓடந்தன்னில்’ எனக்குப் பிடித்த இன்னொரு முத்து.
‘ஆதிய்ஷஷ் சந்திய’ ஆரம்ப இசையே அமர்க்களம். பின்னிசையைக் கேட்க வேண்டுமோ என்ன??!!!!
நன்றி கானா...
வருகைக்கும் கருத்தும் மிக்க நன்றி தமிழ்ப்பறவை முழுமையாகக் கேட்டு அனுபவியுங்க
வர வர போட்ட பதிவுகளைப் படிக்கவே 2 நாள் ஆகிருது. வார வேலை நாட்களில் பதிவு போட்டாதான் அலுவலகத்துல படிச்சு பின்னூட்டம் போட முடியுது, வார இறுதின்னா ஹ்ம்ஹ்ம்ஹ்ம்.. நல்லதொரு தொகுப்புன்னு சொல்லி சொல்லி சலிச்சு போயிருச்சு. வேற ஏதாவது சொல்லனும். ஆயில்ஸ் என்ன பண்ணலாம்னு சொல்லேன்
அருமையான தொகுப்பு - ட்ரிபிள் செஞ்சுரிக்கு வாழ்த்துகள் கானா :)
- என். சொக்கன்,
பெங்களூரு.
300 ஆவது பதிவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் பிரபா.
300வது பதிவுக்கு வாழ்த்துக்கள் கானா. பதிவு மிகவும் அருமையாக வந்துள்ளது.
அன்புடன்
பனிமலர்.
தல இளா
டோமேஜர் வரமுன் பார்த்து முடியுங்க ;)
வருகைக்கு நன்றி சொக்கரே
மிக்க நன்றி மங்கை அக்கா
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பனிமலர்
கானா... இப்பதிவுக்காக நீங்கள் இட்ட உழைப்பு பிரமிக்கவைக்கிரது, 300 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்
மிக்க நன்றி யசோ
Post a Comment