Pages

Sunday, May 9, 2010

பாடகி சுஜாதாவின் ஆரம்ப காலம்















தமிழ் சினிமாவில் பெண் குரல்களில் தனித்துவமாக மிளிரும் சுஜாதாவின் ஆரம்பகாலப் பாடல்கள் இரண்டு. இந்தப் பதிவை நான் போடுவதற்குக் காரணமாக அமைந்ததே நான் இங்கே தரும் முதல் பாடல் இன்று பல நாட்களின் பின் அடிக்கடி முணுமுணுத்து ரசிக்க வைக்கிறது.

எழுத்தாளர் சுஜாதாவின் நாவல்களைப் படமாக்கும் சீசனாக எழுபதுகளின் இறுதிப்பகுதி இருந்தது. அதில் முதல் முயற்சியாக அமைந்தது "காயத்ரி" என்ற திரைப்படம். ரஜினிகாந்த் ஆரம்பகாலத்தில் வில்லனாகவும், எதிர் மறை நாயகனாகவும் நடித்து வந்த காலத்தில் அவருக்குக் கச்சிதமாகப் பொருந்திய படங்களில் காயத்ரியும் ஒன்று. காயத்ரி நாவலின் முடிவில் சொல்லப்பட்ட விடயங்களைச் சினிமாவுக்குப் பொருந்தாது என்று திரைக்கதை அமைத்த பஞ்சு அருணாசலம் மாற்றி விட்டார் என்று எழுத்தாளர் சுஜாதா தன் குறிப்புக்களில் சொல்லியிருக்கின்றார். 1977 ஆம் ஆண்டு வெளிவந்த அந்தப் படத்தில் வந்த ஒரு இனிய பாடல் "காலைப்பனியில் ஆடும் மலர்கள் காதல் நினைவில் வாடும் இதழ்கள்" அந்தக் காலகட்டத்தில் வெற்றிகரமான மசாலாத் திரைக்கதைகளை மட்டுமல்ல, இனிய பாடல்கள் பலவற்றுக்கும் திரையிசைக்கவிஞராக இருந்து சிறப்புச் சேர்த்திருக்கின்றார் பஞ்சு அருணாசலம். கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக இருந்த அனுபவம் இந்தத் திரையிசைக் கவிதைக்கு உதவி புரிந்திருக்கின்றது. இசைஞானி இளையராஜாவின் அறிமுகத்துக்குத் துணை போன பெருமையோடு அவரின் ஆரம்பகாலப் படங்களுக்குப் பெருவாரியாகப் பாடல்கள் எழுதிச் சிறப்புச் சேர்த்திருக்கின்றார் பஞ்சு அருணாசலம்.

அந்தவகையில் அமைந்தது தான் "காலைப்பனியில் ஆடும் மலர்கள்" என்ற இந்தப் பாடல். மணமாகிப் புகுந்த வீடு போன அந்தப் பெண் அந்த மலர்ச்சியில் பாடும் சூழ்நிலைக்குப் பொருந்தும் வரிகளுக்குத் துணையாக மெல்லிசையாக இழைத்திருக்கின்றார் ராஜா. ஒரு காலைச் சூழ்நிலைக்குப் பொருந்தும் இதமான இசையாக கையாண்டிருக்கும் கருவிகளும் துணை போயிருக்கின்றன. ஆரம்பத்தில் மெல்லிய ஹம் கொடுத்து ஆரம்பிக்கும் சுஜாதாவின் குரல் கூட கள்ளங்கபடமில்லாத் தொனியோடு இருக்கின்றது. பாடலின் இடையிலும் லலலலா, இம்ஹிம் இம்ஹிம் என்று சங்கதிகளைக் குரலிசையாக ஹம் ஐ லாவகமாகச் செருகியிருப்பது சிறப்பு. ஒரு திகில்ப்படத்துக்கு இப்படியான பாடலை லாவகமாகப் பொருத்தமான இடத்தில் சேர்ப்பது ஒரு சவால். அதில் வெற்றி கண்டிருக்கின்றார்கள் பாடலாசிரியர் பஞ்சு அருணாசலம், பாடகி சுஜாதா கூடவே இசைஞானி இளையராஜா



மேற்குறித்த பாடலை Airtel Top Singer ஸ்ரீவித்யா பாடும் கனிவு கூடக் கிறங்க வைக்கின்றது.



ஒரே ஆண்டில் ராஜா இசையில் இரண்டு ஹிட் பாடல்களைக் கொடுத்து விட்டு இடையில் காணாமல் போய் பின்னர் ஒரு தசாப்தம் கழித்து (இடையில் தமிழில் ஒரு சில வாய்ப்புக்கள் கிட்டினாலும் பிரபலமாகவில்லை) இன்னொரு புதிய பாணி இசையமைப்பாளராக அறிமுகமான ரஹ்மான் இசையில் தமிழில் மறு அறிமுகமாகும் வாய்ப்பு அல்லது பெருமை சுஜாதாவைச் சேரும். பாடகி சுஜாதா 1977 இல் இளையராஜா இசையில் முன்னர் பார்த்த காயத்ரி பாடத்தில் பாடுவதற்கு முன்னதாக அவருக்கு வாய்த்தது "கவிக்குயில்" வாய்ப்பு. பாலமுரளி கிருஷ்ணா, எஸ்.ஜானகி போன்ற ஜாம்பவான்களோடு சுஜாதாவின் குரலைத் தனித்துவமாக்கியது "காதல் ஓவியம் கண்டேன் கனவோ நினைவோ" இங்கேயும் பஞ்சு அருணாசலம் தான் துணை போயிருக்கின்றார். பதின்மவயதுப் பாடகியாக ஜேசுதாசின் வழிகாட்டலில் இளையராஜாவிடம் அறிமுகம் கிட்டிய சுஜாதா பாடிய "காதல் ஓவியம் கண்டேன்" பாடல் ஒரு காலகட்டத்தில் இலங்கை வானொலியில் மகா மெகா ஹிட் பாடலாகப் பலகாலம் ஒலித்தது இன்னும் ஓயவில்லை. அந்தப் பெருமையில் 1980 ஆம் ஆண்டு கே.ஜே.ஜேசுதாஸ் யாழ்ப்பாணம் வந்தபோது வீரசிங்கம் மண்டபத்தில் இரட்டைச் சடை போட்ட சுஜாதா என்ற இந்தச் சிறுமியும் கூடவே வந்து பாடிய இந்தப் பாடலின் அந்தப் பசுமை நினைவுகளை இன்றும் அந்த வீடியோ கசட்டில் போட்டு இரை மீட்கின்றேன். "காதல் ஓவியம் கண்டேன் கனவோ" 33 வருஷங்கள் கழிந்த நிலையில் இன்றைய இளம் நாயகிக்குக் கூடப் பொருந்திப் பார்க்கக் கூடிய அதே புத்துணர்வைத் தன் இசையாலும் குரலினிமையாலும் நிரப்பிய பாடல். இந்தப் பாடலிலும் சுஜாதாவுக்குச் சுதந்திரமான துள்ளல்களை வெகு இலாவகமாக்கி அடக்கி விட்டிருக்கின்றது.

மேற்குறித்த இரண்டு பாடல்களுமே சுஜாதா ஒரே ஆண்டில் பாடிய வண்ணம் "கா" என்ற அடியில் வருவது இன்னொரு சிறப்பு.

சில பாடல்கள் பெண்களுக்கே உரித்தான, பெண்ணின் உணர்வுகளின் அடி நாதமாக விளங்கினாலும் அந்தப் பாடல்களை பொதுவானதொரு உணர்ச்சிப் பிரவாகமாக எல்லோராலும் ரசிக்கத்தக்கதாக மாறிக் கேட்டு ரசிக்க வைக்கும், எவ்வளவு தரம் கேட்டாலும் அவை திகட்டாது என்பதற்கு இந்த இரண்டு பாடல்களுமே சாட்சி.



பி.கு: சுஜாதாவின் குரலில் வந்த "ஒரு இனிய மனது" பாடல் "ஜானி" திரைப்படப் பின்னணி இசைத்தொகுப்போடு வரவிருக்கின்றது.

15 comments:

நாகு (Nagu) said...

மீ த ஃபர்ஸ்ட்?

இரண்டுமே அருமையான பாடல்கள்... நன்றி...

ராஜ் டிவி சுட்டியில் பாடகியை ஒருமையில் பேசுவது முரணாக இருக்கிறது. வாழ்க டிவி தமிழ் கலாசாரம்!

S Maharajan said...

அருமையான பாடல்கள் தல
வெகு நாட்களா தேடியும் கிடைக்கவில்லை
ஜானி படத்தில் "ஒரு இனிய மனது" சுஜாதாவா?
ஜென்சி அல்ல!
மை டியர் குட்டி சாத்தன்
படத்தில் "சின்ன குழந்தைகளே" இது சுஜாதாதானே தல!

கானா பிரபா said...

நாகு

வாங்க வாங்க, நீங்க தான் முதலாவது ;)

ராஜ் டிவியில் நடுவர் கிரீஷ் இப்படி ஒருமையில் பேசும்போது போய் அந்தாளை நாலு சாத்து சாத்தலாம் போல இருக்கு. சபை இங்கிதம் தெரியாத மனுஷன். இந்தாள் எல்லாம் பாடகரா வரணும்னு யார் வேண்டினாங்க. அந்த இளம் பாடகி எவ்வளவு அட்சரசுத்தமாகப் பாடியிருக்கிறார்.

Thamiz Priyan said...

பகிர்வு நல்லா இருக்கு பாஸ்! சுஜாதாவின் புதுப் பாட்டு ஒன்னும் கொடுத்து இருக்கலாம்.

ஸ்ரீவித்யாவுக்கான பாடலுக்கான விமர்சனத்தைப் பார்த்த போது பாவமா இருந்தது... நடுவர்களுக்கு என்ன தகுதி இருக்கனும்னு குழப்பமா இருக்கு... அப்படியே ஏஷியாநெட் ஸ்டார் சிங்கரில் வரும் விமர்சனத்தை நினைத்துக் கொண்டேன்.

தாருகாசினி said...

இரண்டு பாடலுமே அருமை..."காலைப்பனியில்.."பாடல் குரல் சுஜாதாவினுடையது என்று இன்று தான் தெரியும்.சுஜாதாவின் சின்ன வயது குரலில் உள்ள மழலைத்தனம் வித்தியாசமான ஒரு இனிமையைத்தருகிறது...ஸ்ரீவித்யாவின் பாடலும் அருமை.

கானா பிரபா said...

S Maharajan said...

அருமையான பாடல்கள் தல
வெகு நாட்களா தேடியும் கிடைக்கவில்லை
ஜானி படத்தில் "ஒரு இனிய மனது" சுஜாதாவா? //

வாங்க மகராஜரே

ஒரு இனிய மனது ஜென்சி, சுஜாதா குரல்களில் இரண்டு பாடல்களாக இருக்கு.

செல்லக்குழந்தைகளே கூட சுஜாதா வாணி ஜெயராமோடு பாடி இருந்தார். ஆனால் அதிகம் அவர் பெயர் அதில் எடுபடவில்லை. அந்தப் பாட்டுச் சுட்டி இங்கே

http://radiospathy.blogspot.com/2009/01/blog-post_11.html

வடுவூர் குமார் said...

ஆஹா!ஸ்ரீவித்யாவின் அந்த‌ பாட‌ல் அப்ப‌டியே கிற‌ங்க‌வைக்கிற‌து.ஸ்டூடியோ எஃப‌க்டை மேடையில் கொடுப்ப‌து என்ப‌து அசாதார‌ண‌ம்.

ரவி said...

super !!!!!!!

சுப்பராமன் said...

சொன்னால் நம்ப மாட்டீர்கள்.இந்த பதிவைப் படிக்க ஆரம்பிக்கும் போது எனக்கு "ஒரு இனிய மனது" பாடல் நினைவுக்கு வந்து அதை கேட்க ஆரம்பித்து விட்டேன். பின் அதை உங்களின் பி.கு வில் பார்த்தது !

கானா பிரபா said...

தமிழ்ப்பிரியன்

அதான் சுஜாதாவின் ஆரம்பகாலம்னு தலைப்பு வச்சிட்டோமே, ரஹ்மான் எப்படி வருவார் ;)

தாருகாசினி

வருகைக்கு நன்றி

S Maharajan said...

//செல்லக்குழந்தைகளே கூட சுஜாதா வாணி ஜெயராமோடு பாடி இருந்தார்.//

//http://radiospathy.blogspot.com/2009/01/blog-post_11.html//

படத்தை மீண்டும் பார்த்த உணர்வு
வந்தது தல!
நன்றிகள் கோடி உமக்கு!

கானா பிரபா said...

வடுவூர் குமார், ரவி

மிக்க நன்றி

சுப்பராமன்

கேட்டு ரசியுங்கள் ;)

geethappriyan said...

தல அருமையான பதிவுக்கு நன்றி
யார் அந்த அரைக்கிறுக்கு நடுவன்,இவன் என்ன கிழித்திருக்கிறான் ?இதுவரை?அந்த பெண்னை ஏன் அப்படி டீஸ் செய்கிறான்?இதை யாரும் ஆட்சேபிக்க வில்லையா?அந்த பெண் நன்றாய் பாடியிருந்தார்.விஜய் டிவிக்கு ந்டுவனாக வர தகுதியே வேண்டாம் போல.

காத்தவராயன் said...

///பி.கு: சுஜாதாவின் குரலில் வந்த "ஒரு இனிய மனது" பாடல் "ஜானி" திரைப்படப் பின்னணி இசைத்தொகுப்போடு வரவிருக்கின்றது. இந்தப் பாடல் ஜென்சி, சுஜாதா குரல்களில் தனித்தனியே வந்தது.///

கானா,

சில‌ ச‌ந்தேக‌ம்க‌ள் தீர்த்து வையுங்க‌ளேன்

1. ஜானி ப‌ட‌த்தில் இட‌ம் பெற்ற‌து சுஜாதா பாடிய‌தா? ஜென்சி பாடிய‌தா?

2. இருவ‌ர் பாடிய‌ பாட‌ல்க‌ளும் உங்க‌ளிட‌ம் உள்ள‌தா?

3. நீங்க‌ள் இங்கே கொடுக்கும் அரிய‌க‌ளை பாட‌ல்க‌ளை எங்க‌ளால் ட‌வுன்லோடு செய்ய‌ முடியுமா? எப்ப‌டி?

கானா பிரபா said...

வணக்கம் காத்தவராயன்

படத்தில் வருவது ஜென்சி பாடியது

பாடல்களைத் தரவிறக்கும் வசதியை சில காரணக்களால் எனது தளத்தில் ஏற்படுத்தவில்லை, சிரமத்துக்கு மன்னிக்க