Pages

Monday, December 30, 2019

இசையமைப்பாளர் ஜிப்ரான் 🎸 கடந்த தசாப்தத்தின் ஆகச் சிறந்த நல் வரவு 🎹

தமிழ்த் திரையிசையின் போக்கை எடுத்துக் கொண்டால் காலத்துக்குக் காலம் புதிய புதிய இசையமைப்பாளர் வருவதும், ஒரு சிலர் மட்டுமே சீராகத் தம் இடத்தைத் தக்க வைப்பதுமாகத் தொடர்கிறது. அவ்வப்போது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், இசைஞானி இளையராஜா, இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் என்று யுகப் புரட்சி நிகழ்த்துபவர்களைத் தவிர்த்து மற்றையோரைப் பார்க்கும் போது திறமையில் சற்றும் குறையாத சாகித்தியம் கொண்டவர்களாக தம் சக இசையமைப்பாளர் மத்தியில் திகழ்வர். 

இவர்களில் எந்த மாதிரியான கதைக் களனுக்கும் ஈடு கொடுத்து, அதே சமயம் தம்முடைய தனித்துவத்தையும் தக்க வைத்துக் கொண்டு புதுமை படைத்த இசையமைப்பாளர்கள் தனியே நோக்கப்பட வேண்டியவர்கள். உதாரணத்துக்கு வித்யாசாகர் கொண்டிருந்த திறனைக் குறைத்து மதிப்பிடலாகாது.

2010 - 2019 என்று கடந்த தசாப்தத்தின் புதுவரவு இசையமைப்பாளர்களை எடுத்துக் கொண்டால்,
“புதிய தலைமுறை இசையமைப்பாளர்களில் சந்தோஷ் நாராயணன்  பின்னணி இசை தனித்துவமானது, மகத்துவம் நிறைந்தது #அட்டக்கத்தி, பீட்சா, சூது கவ்வும்”
என்று சந்தோஷ் நாராயணன் வரவின் போது குறிப்பிட்டேன்.

“ ஒரு திரைப் படைப்பாக்கத்துக்கு வெறும் நாலு பாடல்களை இசையமைத்துப் பிரபலப்படுத்தி விட்டுப் போய் விட்டால் சரி என்ற நிலையில் தான் சமீபகாலப் போக்கு நிலவுகிறது. ஆனால் குறித்த திரைப்படத்தின் பின்னணி இசையும் உயிர் நாடி என்பதையும் உணர்ந்து சிரத்தையோடு இசை பண்ணிக் கொடுப்பவர்கள் மிகக் குறைவு. அந்த மிகச் சிலரில் ஜஸ்டின் பிரபாகரன் ஒரு முழுமையான இளைய தலைமுறை இசையமைப்பாளர். அதனால் தான் அவருக்கு "இசை இளவல்" என்ற பட்டம்  இட்டேன்.
"பண்ணையாரும் பத்மினி" படத்தில் தொடங்கி இன்று வரை இவர் இசையமைத்த படங்களைத் தேடி நுகர்வோர் இதை உணர்வர்.”

இப்படியாக 2016 இல் தொடர் இசைப் புரட்சி நிகழ்த்திய ஜஸ்டின் பிரபாகரனை மெச்சினேன்.

சந்தோஷ் நாராயணன் என்ன தான் நட்சத்திர இசையமைப்பாளராக இப்போது திகழ்ந்தாலும் ஆரம்பத்தில் இருந்த தேடல் சற்றே ஒரு குறுகிய வட்டத்துக்குள் போய் விட்டாற் போல மெட்ராஸ் படத்துக்குப் பின்னால் எழுந்த படைப்புகளின் வழி அனுமானிக்க முடிகிறது.

ஜஸ்டின் பிரபாகரனுக்கு இன்னும் பன்முகப்படுத்தப்பட்ட வாய்ப்புகள் அமைய வேண்டும்.

இன்னும் சொல்லப் போனால் இந்தத் தசாப்தத்தின் வரவுகளில் அனிருத், ஹிப் ஹாப் தமிழா, ஷான் ரால்டன்,  சாம் C.S, கோவிந்த் வசந்தா, என்.ஆர்.ரகுநந்தன், தாஜ் நூர், விவேக் மெர்லின், நிவாஸ் கே பிரசன்னா, இவர்களோடு  பீனிக்ஸ் பறவை போல மீளவும் எழுந்த D.இம்மான் என்று நீளும் பட்டியலைத் தொடர்ந்தால் சொல்ல வந்ததின் திசை வேறிடம் போய் விடும் என்பதால் இத்தோடு நிறுத்.

இந்தத் தசாப்தத்தில் ஒரு முழுமையான, எல்லா விதமான கதைக்களனுக்கும் ஈடு கொடுக்கக் கூடிய, ஒரே குட்டைக்குள் ஓடிக் கொண்டிருக்காத, பரந்த தேடலும் பதித்தலும் கொண்ட, இன்னும் வற்றாத இசை ஞானம் கொண்டவராக இசையமைப்பாளர் ஜிப்ரானையே அடையாளப்படுத்துவேன். சொல்லப் போனால் அவரை ஒரு “ஜூனியர் வித்யாசாகர்” என்று குறிப்பிட்டாலும் பாதகமில்லை.

“வாகை சூடவா” ஜிப்ரானுக்கு முகவரி கொடுத்த படம். எடுத்த எடுப்பிலேயே ஒரு கிராமியப் பின்புலம் கொண்ட படத்துக்கு இசையமைப்பது என்பதே பாதி வெற்றியை உறுதி செய்து விடும். நகரம் தாண்டி வயல் காட்டில் நிற்பவரை முணு முணுக்க வைத்து விட்டால் அடுத்தடுத்து வரும் வாய்ப்புகளை மெல்ல மெல்லச் சுவீகரிக்கிறார் என்று அர்த்தம். இதுதான் இதற்கு முந்திய தொண்ணூறுகளில் தேவா விஷயத்திலும் நடந்தது. ஆனாலும் அங்கேயும் தன்னைத் தனித்துவமாக நிலை நிறுத்திக் கொள்வதும் இலேசுப்பட்ட காரியமல்ல. ஜிப்ரான் இந்த விஷயத்தில் பயங்கரக் கெட்டிக்காரர். தன் முதல் படமான “வாகை சூடவா” படத்தில்
முழுமையான கிராமியத் தெம்மாங்கை மட்டுமே படர விடாது தன் முன்னோர் ஏ.ஆர்.ரஹ்மான் வழியில் கொஞ்சம் மேற்கத்தேய இசையாடலையும் ஊடுருவ வைத்தார்.

“களவாணி” படத்தின் வழியாக கவனிக்கத் தக்க ஒரு இயக்குநராக அடையாளப்பட்ட தஞ்சாவூர்க்காரர் எஸ்.சற்குணம், தன் அறிமுகப்படத்திலேயே அப்போது “பூ” படம் வழியாக அறியப்பட்ட எஸ்.எஸ்.குமரனோடு கை கோர்த்து அந்தப் படத்தின் கிராமிய மணம் மாறாமல் இசை வாசம் கொடுத்தவர். ஆனால் எஸ்.எஸ்.குமரனோ அவசர கதியில் தானும் இயக்குநராக ஆசைப்பட்டு “தேநீர் விடுதி” என்ற படத்தை ஆரம்பிக்கிறார். 
இந்தச் சூழலில் சற்குணம் தன்னுடைய அடுத்த படம் “வாகை சூடவா” என்ற முற்காலக் (period film) கதைப் பின்னணியில் படத்தை ஆரம்பிக்கிறார். சிங்கப்பூரில் ஏற்கனவே தன்னை ஒரு இசைக்கலைஞராக வளர்த்தெடுத்துக் கொண்ட ஜிப்ரானுக்கு நல்லதொரு வாய்ப்பு இதன் வழி பிறக்கிறது.

“டிங் டங் டிங் டடிங் 
சர சர சாரக் காத்து வீசும் போது 
சாரைப் பாத்துப் பேசும் போது 
சாரைப் பாம்பு போல 
நெஞ்சு சத்தம் போடுதே”

போறானே போறானே 
காத்தோட தூத்தலப்போல
போறானே போறானே 
போவாமத்தான் போறானே”

வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் ஹிட் அடிக்க, ஜிப்ரானை அள்ளி வாரி எடுத்துக் கொள்கிறது இசை ரசிகர் உலகம். வாகை சூடவா ஜிப்ரானுக்கு வெகு ஜன அந்தஸ்தோடு சிறந்த அறிமுக இசையமைப்பாளர்  விருதுகளையும் அள்ளிக் கொடுக்கிறது.
இந்த இடத்தில் ஜிப்ரான் எவ்வளவு தூரம் தன் சுயத்தின் மீது பெரு நம்பிக்கை கொண்டவர் என்பதற்கு வெறு பாடல்களோடு மட்டும் நில்லாது, தன் முதல் படத்திலேயே Lisbon International Symphony Orchestra கூட்டில் “ஆனா ஆவன்னா ஈனா” பாடலை உருவாக்கியதைக் குறிப்பிட வேண்டியது மிக முக்கியம். எடுத்த எடுப்பிலேயே வாகை சூடவா படப் பாடல்களை ஏ.ஆர்.ரஹ்மான் சிலாகிக்கும் அளவுக்கு மிகப் பெரிய அங்கீகாரமும் கிட்டியது.

“கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்
 என் செல்லக் கண்ணனே வா
 த்தித்தி ததை ஜதிக்குள்
என்னோடு ஆட வா வா !“

“திருமணம் எனும் நிக்காஹ்” பாடல்களை கொஞ்சம் “வாகை சூடவா” பாடல்களோடு ஒப்பிட்டுப் பாருங்களேன். எவ்வளவு தூரம் தனித்தும், வேறுபட்டும் ஜாலம் செய்யும். அதனால் தான் ஜிப்ரான் தன்னை ஒவ்வொரு படங்களிலும் நியாயம் செய்கிறார் என்கிறேன். “கண்ணுக்குள் பொத்தி வைப்பேன்” ஒரு அழகான செவ்வியல் இசை சார்ந்தது,

 “சில்லென்ற சில்லென்ற காற்றிலே
  சிறகை விரித்தேனே”
பார்த்தீர்களா ஒரே படத்துக்குள்ளேயே இன்னொரு தனித்துவம் பொங்கும் இஸ்லாமிய சூபி மரபில் ஒரு இசைக் கீற்று. 
“திருமணம் எனும் நிக்காஹ்” படம் குறித்த தவணைக்குள் வந்திருந்திருந்தால் ஜிப்ரானுக்கு வாய்ப்பு ரீதியாக மிகப் பெரிய பாய்ச்சல் கிட்டியிருக்கும்.

“மௌனம் பேசும் வார்த்தை யாவும்
ஏதேதோ ஆசைகள் தூண்டிடுதே
காலம் செய்யும் மாயம் போதும்
சூடாத பூக்களும் வாடிடுதே”

சித்ரா பாடிய இந்தப் பாடலைக் கேட்டிருக்கிறீர்களா? ஆமென்றால் நீங்களும் ஜிப்ரானை விடாமல் துரத்தி ரசிக்கும் ரசிகரே தான். சித்ராவின் தணிந்த குரலைக் கேட்கும் போது காட்சிச் சூழலையும் தொடர்புபடுத்தினால் இரட்டிப்பு லாபம் கிட்டும்.
இந்தப் பாடல் மட்டுமல்ல இந்தப் பாடலோடு இடம் பிடித்த அமர காவியம் படப் பாடல்கள் எல்லாம் ஜிப்ரானுக்கு இன்னொரு வாசலைக் காட்டியவை.
“ஏதேதோ எண்ணம் வந்து” பாடலில் மையல் கொண்டிருக்கும் போது

தாகம் தீரகானல் நீரை
காதல் இன்றுகாட்டுதே
தேக்கி தேக்கி சேர்த்த கண்ணீர்
ஊரின் தாகம் தீர்க்குதே

கண்கள் ஈரத்தை
காணும் நேரத்தில்
விழி வழி உயிர் போகுதே
அந்தி நேரத்தில்
அன்பின் ஏக்கத்தில்
உயிரேனை மனம் தேடுதே...”

இந்தப் பாடல் மனதின் அடியாழம் வரை ஊடுருவி காதலின் ஊற்றுக்கன்ணைத் திறக்கும். இந்தப் பாட்டையெல்லாம் போகிற போக்கில் அப்படியே கடந்து விடக் கூடாத அளவுக்கு ஜிப்ரானின் மாய இசை நம்மை மயக்கும். 

“வத்திக்குச்சி” வழியாக “அம்மா wake me up”, “ஆத்தா உன் சேல ஆகாயம் போல” - குட்டிப் புலி என்று அவ்வப்போது ஜாலம் செய்தவர் மீண்டும் சற்குணத்தோடு இணைந்த “நய்யாண்டி” பாடல்களிலும் ஜிப்ரான் அவ்வளவு வாகை சூடவில்லை. “அதே கண்கள்” இன்னொரு வரவு என்ற கணக்கிலேயே இருந்தது.

“காதலாம் கடவுள் முன்
கண்களாம் கோவிலில்
தேகத்தின் தாகமே ஆராதனை ஆராதனை“

தொடர்ந்து தமிழ், தெலுங்கு என்று திரைப்படங்களுக்கு இசை கொடுத்து வந்தவர் கமல்ஹாசனின் செல்லப் பிள்ளை போல கமலின் தயாரிப்பில் மிளிர்ந்த படங்கள் வரை தொடர ஏதுவாக இருந்தது “உத்தம வில்லன்”.
வணிக ரிதியில் உத்தம வில்லன் குறைத்து மதிப்பிடப்பட்டாலும், கமலின் சோதனை முயற்சியில் தோளோடு தோளாக இயங்கிய ஜிப்ரனின் இசை உழைப்பே பின்னாளில் அந்த மூத்த கலைஞனின் நம்பிக்கைக்குரிய இசையாளனாகும் அங்கீகாரத்தைச் சமைத்தது. உத்தம வில்லனை காலம் கடந்து இன்று பாடல்களோடும், பின்னணி இசையோடும் அணுக்கமாகப் பார்க்கும் போது ஜிப்ரான் இந்த நன் மதிப்பைப் பெற எவ்வளவு தூரம் உழைத்திருக்கிறார் என்பது புலனாகும். 
பின்னாளில் “தீரன் அதிகாரம் ஒன்று”, “ராட்சசன்” போன்ற படங்களில் பின்னணி இசையை திகில் கொண்டு காட்சிப் புலத்தின் வலிமையைக் கூட்ட ஜிப்ரான் புது இயக்குநர்களின் நாடித் துடிப்பானதும் முக்கியமாகச் சொல்ல வேண்டியவை.

“சின்ன சின்ன கண்ணசைவில் 
உன் அடிமை ஆகவா
செல்ல செல்ல முத்தங்களில் 
உன் உயிரை வாங்கவா
லாலி லாலி நான் உன் தூளி தூளி”
 இந்தப் பாட்டை எல்லாம் repeat mode இல் வைத்துக் கேட்பேன். அந்தப் படத்தில் இன்னொரு நல் முத்து “செவத்தப் புள்ள மனசுக்குள்ள நானும் இருப்பேன் நான்”.
“யெய்யா என் கோட்டிக்காரா” (பாப நாசம்), “போகாதே போகாதே” ( சென்னை 2 சிங்கப்பூர்) பெண் குரல் பாட்டு இவற்றோடு கொஞ்சம் கால தாமதமாகக் கண்டுணர்ந்து ரசித்த “தோரணம் ஆயிரம் பார்வையில் காட்டிடும் காட்சியில் என்ன இருக்கு? (அறம்) பாடல்கள் ஜிப்ரானை புதுப்பித்துக் கொண்டிருக்கின்றன.

வேறதுவும் தேவை இல்லை
நீ மட்டும் போதும்
கண்ணில் வைத்து காத்திருப்பேன்
என்னவானாலும்....

தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே தாரமே தாரமே வா
எந்தன் சுவாசமே சுவாசமே
நீ உயிரே வா..,,

2019 ஆம் ஆண்டின் ஆகச் சிறந்த பாடல்களில் 
முதல் வரிசையில் இந்தப் பாடலை வைத்து நோக்குவேன். கடாரம் கொண்டான் படத்துக்காக ஜிப்ரான் கொடுத்த பாட்டு, இந்த ஆண்டு ஆக அதிகம் ஹிட் பாடல்களைக் கொடுத்த சித் ஶ்ரீராமோடு பொருந்திப் போவது இன்பகரமானதொரு அதிர்வலையைக் கொடுக்கும். இந்தத் தசாப்தத்தை தன் பங்குக்கு ஜிப்ரான் வெகு அழகாக “தாரமே தாரமே” கொண்டு நிறைத்து வைக்கிறார்.

இந்தப் பத்தாண்டுகள் இசையமைப்பாளர் ஜிப்ரானைப் பொறுத்தவரை அவரின் இசைத் திறனை முழு அளவில் உள் வாங்கக் கூடிய  தீனியைக் கொடுத்து உயர்த்தி விட்டவை. கிராமியம், நகரம், திகில், காதல் என்று எல்லா விதத் தளங்களிலும் தன் இசையைத் தனித்துவம் கொண்டு நிரூபித்தவர். ஆனால் அவ்வப்போது தேர்ந்தெடுக்கும் படங்களில் சோடை போகிறாரோ என்ற எண்ணமும் எடடிப் பார்க்கும். அந்த மாதிரியானதொரு எண்ணப்பாட்டை மாற்றித் தன் பாணியைத் தொடர்ந்தால் 2020 இலிருந்து அடுத்த பத்தாண்டுகள் கூட ஜிப்ரான் வசப்படும்.

உன் எதிரில் நான் இருக்கும்
ஒவ்வொரு நாளும்
உச்சி முதல் பாதம் வரை
வீசுது வாசம்

தினமும் ஆயிரம் முறை
பார்த்து முடித்தாலும்
இன்னும் பார்த்திட சொல்லி
பாழும் மனம் ஏங்கும்

தாரமே தாரமே வா
வாழ்வின் வாசமே வாசமே
நீ தானே தாரமே தாரமே வா

கானா பிரபா
30.12.2019



0 comments: