Pages

Friday, July 5, 2019

மரகதமணி என்ற கீரவாணி 🎸


கே.பாலசந்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார் அப்படியொரு இசைப் புரட்சியைத் தன் கவிதாலயா நிறுவனம் ஏற்படுத்தும் என்று. அது நிகழ்ந்தது 1992 ஆண்டில்.
ஒரு பக்கம் கே.பாலசந்தர் இயக்க "வானமே எல்லை" திரைப்படத்திற்கு ஒப்பந்தமாகிறார் இசையமைப்பாளர் மரகதமணி. இன்னொரு பக்கம் தன்னுடைய சிஷ்யர் சுரேஷ்கிருஷ்ணா இயக்கத்தில் “அண்ணாமலை” அதற்கு இசை தேவா, இவற்றௌத் தாண்டி புது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் மணிரத்னம் இயக்கிய ரோஜா என்று மூன்றும் கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனம் சார்பில் தயாரித்து வெளியாகி, மூன்றுமே அதிரி புதிரி வெற்றியை அவருக்குப் பெற்றுக் கொடுக்கின்றன.
இதுவே கே.பாலசந்தரின் திரைப்பயணத்தில் கிடைத்த இறுதி வெற்றி கூட. அதற்குப் பின் அப்படியொரு வெற்றியை அவரால் ஈட்ட முடியாவிட்டாலும் இந்த மூன்று படங்களில் இயங்கிய இசையமைப்பாளர்கள் தொடர்ந்து தமித் திரையிசையின் போக்கைத் தீர்மானிக்க முக்கிய காரணிகளாக அமைந்தார்கள். இவர்களில் எம்.எம்.கீரவாணி என்று தெலுங்கிலும், மரகதமணி என்று தமிழிலும், எம்.எம்.கரீம் என்று ஹிந்தியிலுமாக இன்றுவரை வெற்றிகரமான இசையமைப்பாளராக விளங்கி வருபவரின் அடையாளம் தனித்துவமாகக் கவனிக்கப்பட வேண்டியது.
கவிதாலயா நிறுவனத்தின் சார்பில் புதுப்புது அர்த்தங்கள் படத் தயாரிப்பு மற்றும் இயக்கத்தைக் கவனித்த கே.பாலசந்தர், படத்தின் இசையமைப்பாளர் இளையராஜாவை விடுத்துத் தன்னிச்சையாக மரகதமணியை வைத்தே படத்தின் பின்னணி இசையை அப்படத்தின் பாடல்களின் இசைத் துணுக்குகளை வைத்தே ஒப்பேற்றி விடுகிறார். அதில் எழுந்த விரிசலால் தொடர்ந்து இருவரும் இயங்க முடியாத சூழலில் கவிதாலயா தயாரிப்பில் இதுவரை வெளியான இறுதிப்படமாக அமீர்ஜான் இயக்கிய “உன்னைச் சொல்லிக் குற்றமில்லை” விளங்குகிறது.
தொடர்ந்து கே.பாலசந்தர் “அழகன்” படத்தை இயக்கிய போது மம்முட்டியும் மூன்று நாயகிகளுமாக அமைந்த அழகிய காதல் சித்திரம் “அழகன்" படத்தின் பாடல்கள் அனைத்துமே தேன் சுவை. அதுவும் "தத்தித்தோம்" என்ற சித்ரா பாடும் பாட்டு தமிழ்த்திரையிசைப் பாடல்களில் மேற்கத்தேய வாத்தியம் ஒன்றோடு போட்டி போட்டுப் பாடும் மிகச் சில பாடல்களில் இதுவும் ஒன்று. இன்றுவரை காதலர் கீதமாக விழங்கும் “சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா” வைத் தனியே சொல்லவும் வேண்டுமா?
அதே சம காலத்தில் கேளடி கண்மணி பட வெற்றியைத் தொடர்ந்து பாலசந்தரின் சிஷ்யர் வஸந்த் கவிதாலயாவுக்காக இயக்கிய படம் "நீ பாதி நான் பாதி" இங்கும் மரகதமணி தான் இசை. இந்தத் திரைப்படத்தில் இருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "நிவேதா" என்ற பாடல் வெறும் ஸ்வரங்களோடு மட்டும் இசைக்கப்பட்ட பாடலாகப் புதுமை படைத்தது.
தொடர்ந்து "வானமே எல்லை" தமிழ்த்திரையுலகப் பிரபலங்களின் வாரிசுக்களை நாயகர்களாக்கி வந்த அந்தத் திரைப்படத்தில் நாகேஷ் மகன் ஆனந்த்பாபு, கண்ணதாசன் மகள் விசாலி, மேஜர் சுந்தரராஜன் மகன் கெளதம் போன்றோர் நடித்திருந்தனர். அண்ணாமலை படப் பாடல்கள் ஒரு பக்கம், மறு பக்கம் வானமே எல்லை பாடல்கள் என்று அப்போது ஒலிநாடாக்கள் விற்ற போது அண்ணாமலை வழியாகப் பரந்து பட்ட விளம்பரம் வானமே எல்லை இசையமைப்பாளர் மரகதமணிக்கும் கிட்டுகிறது.
‪நீ ஆண்டவனா, சிறகில்லை, நாடோடி மன்னர்களே என்று எதை எடுக்க எதை விட?‬
கம்பங்காடு பாட்டு வழியாக மரகதமணியின் குரலும் சேர, தமிழில் கம்பியூட்டரைக் காட்சிப்படுத்தி எடுத்த முதல் காதல் பாட்டு என்ற பெருமை வேறு. இந்தக் காட்சி தான் இன்றைய யுகத்தின் Video chat இன் முன்னோடி.
இந்து முஸ்லீம் கலவரப் பின்னணியில் இம்முறை பாலசந்தர் மலையாள நடிகர் முகேஷ் மற்றும் குஷ்புவை வைத்து ஜாதி மல்லி படத்தை இயக்கும் தருணம் அங்கேயும் மரகதமணியின் இசையில் குறை வைக்காத பாடல்களாக இனிக்கின்றன. கம்பன் எங்கு போனான் ஹிட்டடித்தது.
அப்போது ஏவிஎம் ‪நிறுவனமும் தன் பங்குக்கு பாட்டொன்று கேட்டேன் படத்தில் மரகதமணியை ஒப்பந்தம் செய்து தம் ஆஸ்தான இயக்குநர் வி.சி.குக நாதனைக் கொண்டு இயக்கினார்கள். ரகுமான் - சித்தாரா என்ற அப்போதைய புகழ்பூத்த ஜோடி இருந்தும் எடுபடாமல் போன அந்தப் படத்தில் பாட்டொன்று கேட்டேன் பாட்டு அப்போதைய சென்னை வானொலியின் உங்கள் விருப்பம் ஆனது.‬
‪இன்னொரு பக்கம் மரகதமணியின் தெகுங்குப் படங்கள் வரிசை கட்டி வந்தன. ஓட்ட வீராங்கனை அஸ்வினி நாச்சப்பாவின் நடிப்பில் “அஸ்வினி” மெளலி இயக்கி ஹிட் அடித்த படம், ஶ்ரீதேவியின் மொழி மாற்றுப் படமான ராம்கோபால்வர்மா இயக்கிய “என்னமோ நடக்குது” என்று வரிசையாகத் தமிழுக்கு வந்தன.‬
தொடர்ந்து தெலுங்கில் வெற்றிப்படமாக அமைந்த டாக்டர் ராஜசேகரின் நடிப்பில் வந்த திரைப்படமான "அல்லாரி பிரியுடு" , தமிழில் "யாருக்கு மாப்பிள்ளை யாரோ" என்று மொழிமாற்றப்பட்டபோது அருமையான பாடல்களை இவர் தமிழில் மொழிமாற்றித் தந்திருந்தார்.
இலங்கையில் பண்பலை வானொலிகளின் ஆரம்ப காலத்தில் அவற்றுக்குத் தீனி கொடுத்த பாடல்கள் இந்தப் படத்தில் இருந்து தான். பின்னாளில் என் வானொலி நிகழ்ச்சிகளிலும் அடிக்கடி நான் ஒலிபரப்பினேன். அந்த வகையில்
"அன்னமா உன் பேர் என்பது அன்னமா"
https://youtu.be/92Ry6OZkaT8
அட்டகாஷ் காதல் பாட்டு எஸ்.பி.பி அதைச் சந்தோஷத்திலும் சோகத்திலுமாகத் தனித்தனி வடிவத்தில் கொடுத்திருப்பார்.
"ரோஸ் ரோஸ் ரோஸ் ரோஜாப்பூவே"
https://youtu.be/edyDaJtnaO8
தமிழிலும் தெலுங்கிலும் காதலர்கள் நெஞ்சில் ஹிட் அடிச்ச எஸ்.பி.பி & சித்ரா ஜோடிப் பாட்டு.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் "அன்னமா! உன் பேர் என்பது அன்னமா?" மரகதமணி/M.M. கீரவாணி இசையமைத்த பாடல்களிலேயே எனக்குப் பிடித்தமான பாடல்களில் முதல் இடத்தில் இருப்பது இதுவே.
நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகை ஸ்ரீதேவி , அரவிந்த் சாமியுடன் இணைந்து மலையாள இயக்குனர் பரதனின் இயக்கத்தில் "தேவராகம்" திரைப்படத்தில் நடித்திருந்தார். படத்தில் இடம்பெற்ற அத்தனை பாடல்களுமே காதில் தேன் வந்து பாயும் இனிமை கொண்டவை. அந்தத் திரைப்படத்தில் இருந்து " சின்ன சின்ன மேகம் என்ன கவிதை பாடுமோ", “யா யா யா யாதவா உன்னை அறிவேன்”ஆகிய ஜோடிப் பாடல்கள் இன்றும் இனிக்கும்.
எம்.எம்.கீரவாணிக்குச் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதைக் கொடுத்தது "அன்னமய்யா" என்ற தெலுங்குப்படம். நாகர்ஜீனா நடிப்பில் 1997 ஆம் ஆண்டில் வெளிவந்தது இத்திரைப்படம்.
நடிகர் அர்ஜூன் ஐ ஆக்‌ஷன் கிங் என்ற எல்லைக்குள் மட்டும் அடக்கி விட முடியாது. அவர் காலத்துக்குக் காலம் பல இசையமைப்பாளர்களைக் கை தூக்கி விட்டிருக்கிறார். அந்தப் பாரம்பரியம் மரகதமணி, வித்யாசாகர், டி.இமான் என்று தொடரும்.
நடிகர் அர்ஜூனுக்கு வாழ்வு கொடுத்த படம் அவரே ரிஸ்க் எடுத்து இயக்கிய சேவகன். இதற்கு மரகதமணி தான் இசை. “நன்றி சொல்லிப் பாடுவேன்” பாடல் வெகு ஜன அந்தஸ்த்தைப் பெற்றதோடு சேவகன் வெற்றியிலும் பங்கு போட்டது.
தொடர்ந்து அர்ஜூன் இயக்கிய பிரதாப் படத்திலும் ஜோடி கட்டினார் மரகதமணி. “மாங்கா மாங்கா ரெண்டு மாங்கா” அப்போது A ரகப் பாட்டு ரசிகர்களுக்குத் தீனி போட்டது. ஆனாலும் “என் கண்ணனுக்கு காதல் வந்தனம்” பாடலில் தன் இசையில் மரகதம் பொருந்தியிருப்பதை நிரூபித்தார்.
அர்ஜூன் இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில்
கொண்டாட்டம் படத்தில் நடித்த போதும் மரகதமணி இசை ஜோடி சேர்ந்தார். கொண்டாட்டத்தில் “உன்னோடு தான் கனாவிலே” மரகதமணியின் பேர் சொல்லும் பாட்டு.
இன்று பாகுபலி வரை உச்சம் கண்ட மரகதமணியின் பாடல்கள் குறித்து ஆழ அகலமாக நீண்ட தொடர் எழுத வேண்டும். இன்று அவரின் பிறந்த நாளில் ஒரு பொழிப்புரை போல அந்த இனிய தொண்ணூறுகளில் இசை வசந்தம் படைத்த அவர் பாடல்களோடு வாழ்த்துகிறேன்.

1 comments:

கிரி said...

மரகதமணி பாடல்கள் அனைத்துமே அருமை. வானமே எல்லை பாடல்கள் ஒவ்வொன்றும் அசத்தல்.

இன்றும் நான் ரசிக்கும் பாடல்கள் இவை.. என்னை சலிப்பாக்கவில்லை.

அழகன் பாடல்களும் அட்டகாசம். ஜாதிமல்லி பூச்சரமே மற்றும் சங்கீதஸ்வரங்கள் எத்தனை முறை கேட்டாலும் அலுப்பதில்லை.

"இதுவே கே.பாலசந்தரின் திரைப்பயணத்தில் கிடைத்த இறுதி வெற்றி கூட. அதற்குப் பின் அப்படியொரு வெற்றியை அவரால் ஈட்ட முடியாவிட்டாலும்"

முத்து, சாமி படங்கள் கவிதாலயா தயாரிப்பில் மிகப்பெரிய வெற்றி.