Pages

Thursday, September 20, 2018

நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம் ❤❤❤

ரஹ்மான் இசை மெது மெதுவாகத் தான் கொல்லும் என்பார்கள். ஆனால் அதை நான் மறுதலிக்கிறேன், நேற்று “மழைக்குருவி” பாட்டைக் கேட்ட உடனேயே அந்த மாற்றம் என்னுள் சயனைட் ஆக இறங்கி விட்டது.
சிட்டுக் குருவியின் பின்னால் தான் மனம் ஓடிக் கொண்டிருக்கிறது மழைக் குருவி பாட்டைக் கேட்டுக் கொண்டே.
ஏ.ஆர்.ரஹ்மான் தன் பாடல்களில் ஜாலம் தரும் இசைக் கோவைக்குக் கொடுக்கும் முக்கியத்துவம் அளவுக்கு மெட்டுகளில் பொதிந்த வரிகளுக்குக் கொடுப்பதில்லை என்பது என் அனுமானம். அதாவது பாடல் ஒன்றின் ஆரம்பத்திலோ அல்லது இடை வரிகளிலோ காணும் கவியாழம் மிகுந்த சொற்களை நளினப்படுத்துவது அரிது. அந்த மாதிரியான காரியத்தை குறித்த பாடகரின் பொறுப்பிலேயே விட்டு விடுவார்.
ஹரிஹரனோ, நித்யஶ்ரீயோ அல்லது வழக்கம் போல் எஸ்.பி.பியோ தமக்கான பாணியில் அவற்றை அழகுபடுத்துவதைக் காணலாம். ரஹ்மானின் தனித்துவம் என்பதே அதுதான் ஒரு குறித்த இசைக்கலைஞரோ அல்லது பாடகரோ அவரவளவில் எந்த அளவுக்குச் சிறப்பாகக் கொடுப்பாரோ அதை வாங்கி வைத்து அழகானதொரு பிரமாண்டமான கேக் ஒன்றை அமைத்து விடுவார். அதுதான் ரஹ்மான். விக்கு விநாயக் ராம் இல் இருந்து பாடகி ஹரிணி உள்ளிட்ட பல்வேறு இசைக் கலைஞர்கள் இதை முன் மொழிந்து பேட்டியில் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் இந்தக் கட்டுடைப்பை ரஹ்மான் தானே பாடிய ஒரு பாடலில் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார். அதுதான் “மழைக் குருவி” என்ற “செக்கச் சிவந்த வானம்” என்ற பாடல்.
நீல மலைச் சாரல்……
இந்த ஆரம்ப வரிகளைக் கவனியுங்கள் இதில் “நீல” என்ற அந்தத் தொடக்கத்தை எவ்வளவு நளினமாகக் கீழிறக்குவார். ஒவ்வொரு சொற்களையும் பேசும் போதும் பாடும் போதும் வித்தியாசப்படுகிறது. எப்படியென்றால் இங்கே ரஹ்மான் பாடுவதைப் போலத் தான்
நீல…..
மலைச்
சாரல்
என்று கீழிறக்குவாரே அங்கே தான் ஒரு பாடகன் தன் குரலுணர்ச்சி வழியாகக் கேட்பவனுக்கு அந்த உலகத்தைக் காட்டுவது.
வீதிக்குப் பழக்கப்பட்ட காரோட்டி ஒருவன் தன் ஒரு கையை சன்னல் கரையோரம் கிடத்தி விட்டு கையால் காரின் வழி திருப்பும் சக்கரத்தை நகர்த்தி ஓடுமாற் போல வானில் எட்டப் போய்த் தன் சிறகிரண்டையும் தள்ளி விட்டுக் காற்றில் அலைந்தும், மிதந்தும், இறங்கியும், ஏறுமாற் போல இருக்கிறது
நீல மலைச்சாரல் தென்றல் நெசவு நடத்துமிடம்
என்ற ஆரம்ப வரிகள் மலைச் சாரலை அளவெடுத்துப் பாடும் பாங்கில் இருக்கும்.
வழக்கத்துக்கு மாறாக ரஹ்மான் குரலில் வரிகளை நோக்கி ஒரு அந்நியோன்யம் மிகுந்த தொனி இருப்பதைப் பார்க்கிறேன்.
ந ந ந ந நனனன…
என்று ராஜாத்தனம் காட்டுகிறார்.
“தெரியவில்லை…..”
என்னும் போது ஒரு ஏக்கம் கவ்விக் கொள்கிறது.
“விட்டுப் பிரிந்தேன்….”எனும் போது குரல் கம்மிக் கொள்கிறது. இப்பேர்ப்பட்ட வித்தியாசமான ரஹ்மானை நான் கேட்டதில்லை.
காட்டில் அந்நேரம்
கதையே வேறு கதை
கூட்டை மறந்துவிட்டுக்
குருவி கும்மியடித்ததுகாண்
என்று ஆரம்பிக்கும் வரிகளில் இருந்து இன்னொரு குரலைச் சேர்த்திருக்கலாம் என்பது என் உணர்வு.
ஒரு சிட்டுக் குருவிக்கும் மனிதனுக்குமான இயற்கையின் பந்தம் காதலோடு பொருத்திப் பார்க்கப்படுகிறது.
வைரமுத்து அவர்கள் ஏற்கனவே எழுதிய “மழைக்குருவி” என்ற கவிதை சில மாற்றங்களோடு கவிதையின் சில பகுதிகள் மட்டும் எடுத்துக் கையாளப்பட்டிருக்கின்றன.
இந்தப் பாடல் என்னை ஆக்கிரத்ததும் பாடல் வரிகளை மூலப் பாடலோடு ஒப்பிட்டுப் பாடலைக் கேட்டபடியே எழுதினேன். இதோ
நீல மலைச்சாரல்
தென்றல் நெசவு நடத்துமிடம்
நீல மலைச்சாரல்……
வானம் குனிவதிலும்
மண்ணைத் தொடுவதிலும்
காதல் அறிந்திருந்தேன்
கானம் உறைந்து படும்
ஞானப் பெருவெளியில் ஒரு
ஞானம் வளர்த்திருந்தேன்
இதயம் விரித்திருந்தேன் நான்
இயற்கையில் திளைத்திருந்தேன்
சிட்டுக் குருவியன்று
சிநேகப் பார்வை கொண்டு
வட்டப் பாறையின்மேல்
என்னை வா வா என்றது
கிச்சுக் கீச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு எதுவுமின்றிப்
பிரியமா என்றது
கிச்சுக் கீச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு எதுவுமின்றிப்
பிரியமா என்றது
ஒற்றைச் சிறுகுருவி நடத்தும்
ஓரங்க நாடகத்தில்
சற்றே திளைத்திருந்தேன்
கிச்சுக் கீச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு எதுவுமின்றிப்
பிரியமா என்றது
ஒரு நாள் கனவு
இது பேரற்ற பேருறவோ….
யார் வரவோ…….
நீ கண் தொட்டுக்
கடந்தேகும் காற்றோ
இல்லைக் கனவினில் நான்
கேட்கும் பாட்டோ
இது உறவோ…..
இல்லைப் பரிவோ…
நீல மலைச்சாரல்
தென்றல் நெசவு நடத்துமிடம்
ந ந ந ந நனனன…
அலகை அசைத்தபடி பறந்து
ஆகாயம் கொத்தியதே
உலகை உதறிவிட்டுச் சற்றே
உயரப் பறந்ததுவே…
கிச்சுக் கீச் என்றது
கிட்ட வா என்றது
பேச்சு எதுவுமின்றிப்
பிரியமா என்றது
முகிலினம்
சர சர சரவென்று கூட
இடி வந்து
பட பட படவென்று வீழ
மழை வந்து
சட சட சடவென்று சேர
அடை மழைக் காற்றுக்குக்
குடையில்லை மூட
வான வெளி…
மண்ணில் நழுவி
விழுந்ததென்ன
திசையெல்லாம்
மழையில் கரைந்து
தொலைந்ததென்ன
சிட்டுக் குருவி பறந்த
திசையும் தெரியவில்லை
விட்டுப் பிரிந்து விட்டேன்
பிரிந்த வேதனை
சுமந்திருந்தேன்…..
விட்டுப் பிரிந்தேன் பிரிந்தேன்
உயிர் நனைந்தேன்
அந்தச் சிறுகுருவி
இப்போது அலைந்து
துயர் படுமோ…துயர் படுமோ
இந்த மழை சுமந்து
அதன் றெக்கை
வலித்திடுமோ….வலித்திடுமோ
காட்டில் அந்நேரம்
கதையே வேறு கதை
கூட்டை மறந்துவிட்டுக்
குருவி கும்மியடித்ததுகாண்
சொட்டும் மழை சிந்தும்
அந்தச் சுகத்தில் நனையாமல்
என்னை எட்டிப் போனவனை
எண்ணி எண்ணி அழுதது காண்
எனக்கு ஏ.ஆர்.ரஹ்மான் – மணி ரத்னம் – வைரமுத்து கூட்டணி வந்தால் உள்ளூர எழும் ஆனந்தத்துக்கு முக்கிய காரணம் “தமிழ்”.
தமிழ்ப் படமென்றாலும் தமிழுக்கு அந்நியமான காட்சிக் களத்தையும், சடங்குகளையும் போட்டுக் குழப்பி இந்திய வர்த்தகச் சந்தையை இலக்கு வைத்தாலும் தன்னுடைய படங்களில் “தமிழ்” தான் தலைப்பாக இருக்கும் கறார் பேர்வழி மணிரத்னம். அது போலவே ரஹ்மான் மற்றைய படங்களில் யாருடனாவது கூட்டுச் சேரட்டும் ஆனால் என் படம் என்றால் வைரமுத்து தான் என்று விடாக்கண்டனாக இருப்பார்.
இங்கே இந்த இடத்தில் வைத்து வைரமுத்துவின் தேவை ஏன் முக்கியமாகப்படுகிறது என்று நோக்குவதற்கு இந்த மூவர் கூட்டணியில் ஏராளம் பாடல்களைக் காட்டினாலும் இந்த “மழைக்குருவி” பாடல் இன்னும் வெகு நெருக்கமான உதாரணமாக அமையும். இன்று யாரும் பாட்டெழுதலாம், எதையும் போட்டு எழுதலாம் என்ற சூழலில் வைரமுத்துவின் பங்களிப்பு முக்கியமாகப்படுகிறது.
பாடல் வழியே அந்தக் காட்சியின் பின் புலத்தைத் தொடுவதோடு அழகிய தமிழ்ச் சொற்களையும் ரம்மியமான வரிகளோடு பொருத்தி விட்டு அழகு பார்ப்பார் வைரமுத்து.
இன்றைய சூழலில் ஒரு ரஹ்மானையோ, வைரமுத்துவையோ அவர்களின் திறமையைப் பறை சாற்ற, காமராஜர் அரங்கத்தைக் கூட்டிக் கொள்ளை கொள்ளாக் கூட்டத்தோடு ஒரு விழா எடுக்கும் பாங்கில் மணிரத்னத்தின் ஒற்றைப் பாடலே செய்து முடித்து விடுகிறது.
எப்படித் தாய்த் தயாரிப்பாளர் தன் பஞ்சு அருணாசலம் படங்களில் இசைஞானி இளையராஜா கொடுத்ததெல்லாம் தனியானதொரு விசேஷம் பெறுமோ அப்படியே இந்த ரஹ்மான் மணிரத்னத்தோடு சேரும் போதெல்லாம் உணர்கிறேன்.
ஊருக்கு எவ்வளவு தான் ஆக்கிப் போட்டாலும் தன் தாய்க்குச் செய்து காட்டிப் பெருமை வாங்கும் சிட்டுக் குருவியாய் இந்தப் பாட்டு.

0 comments: