Pages

Friday, November 10, 2017

இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎼 🐞 கனம் கோட்டார் அவர்களே 🔨

பெங்களூருச் சிறையில் இருக்கும் சசிகலா அடிக்கடி வெளியே வந்து நடமாட்டம் என்றெல்லாம் பரபரப்புக் கூட்டியிருக்கும் இந்த வேளை, இதே மாதிரித் தான் ஜெயில் கைதி ஒருவன் அடிக்கடி வெளியே வந்து தன் காரியத்தைச் செய்து விட்டுப் போவதை 29 வருஷங்களுக்கு முன்னமே படமாக எடுத்து விட்டார் இயக்குநர் மணிவண்ணன். தன்னுடைய கூட்டாளி சத்யராஜ் ஐ எடுத்த அந்தப் படம் தான் இந்த “கனம் கோட்டார் அவர்களே”.
சத்யராஜ் இன் நகைச்சுவை ஜோடியாக ஜனகராஜ் அண்ணா நகர் முதல் தெரு போன்ற படங்களில் கலக்கியிருக்கிறார். அது போலவே இந்தப் படமும் அவருக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. தன்னுடைய சட்டப் படிப்பு மாணவன் சத்யராஜ் உடன் சேர்ந்து கலகலக்க வைக்கிறார். எண்பதுகளின் இறுதியில் நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் நகைச்சுவையே பண்ணாமல் முழு நீள சிடு மூஞ்சிப் பாத்திரங்களில் நடித்திருக்கிறார், அதில் இதுவுமொன்று. தவிர அம்பிகா, ஶ்ரீவித்யா, சந்திரசேகர், சில்க் ஸ்மிதா, பிரதாப் போத்தன், கேப்டன் ராஜ் என்று நடிகர் பட்டாளமே இருக்கிறது.
அண்மைக் காலத்தில் வெளிவந்த Jolly LLB என்ற ஹிந்திப் படம் (உதய நிதி நடித்த ஒரேயொரு உருப்படியான படமாகத் தமிழில் மீளத் தயாரித்த மனிதன் படம் தான்) சட்டம் படித்தவொரு அப்பாவி மாணவன் பின் தன் சாதுர்யத்தால் மூத்த வழக்கறிஞரையே மண்டியிட வைப்பதாக எவ்வளவு அழகாக் காட்டியிருக்கும். கிட்டத்தட்ட அதே பாங்கில் படம் நெடுக சோடாப் புட்டிக் கண்ணாடியுடன் சத்யராஜ் நடித்த அந்தத் தெனாவெட்டுக்கு வேணுமென்றால் சபாஷ் போடலாம். ஆனால் தமிழ் சினிமா மசாலா மாயையில் மூழ்குகிறது பாதிப் படம். இயந்திரத் துப்பாக்கி, காற்றாடி விமானச் சண்டை என்று படம் முடியும் போது படம் பார்த்தவன் ஏதோ வேலூர் ஜெயிலில் இருந்து விடுதலையாகி வெளிக் கதவைத் திறக்கும் திருப்தி தான் மேலிடுகிறது.
வேதம் புதிது படத்தின் பாடல்களுக்குக் கிடைத்த வரவேற்பும், அறிமுகமும் சத்யராஜ் மற்றும் மணிவண்ணன் இருவரும் இசையமைப்பாளர் தேவேந்திரனை ஒப்பந்தம் செய்யக் காரணமாக இருந்திருக்கும். தேவேந்திரனைப் பொறுத்தவரை மண்ணுக்குள் வைரம், வேதம் புதிது ஆகிய மண் வாசனை சார்ந்த படங்களைப் பண்ணி விட்டு இப்படியொரு பிரமாண்ட மசாலாப் படத்தில் இணைந்தது புது அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.
இயக்குநர் மணிவண்ணன் தன் படங்களில் இளையராஜா தொட்டு கங்கை அமரன், சங்கர் கணேஷ், தேவா ஈறாக இசையமைப்பாளர்களோடு பணி புரிந்தாலும் பாடல்கள் விஷயத்தில் அவ்வளவு தூரம் அலட்டிக் கொள்ள மாட்டார் என்றே தெரிகிறது. அவருடைய படங்களில் நல்ல பாடல்கள் இருந்தது வேறு விடயம். கனம் கோட்டார் அவர்களே படம் கூடப் பாடல்கள் இல்லாமேயே வந்திருந்தாலும் பாதகமில்லை எனுமளவுக்கு அமைந்த படம் வேறு.
படம் நெடுக சோடாப் புட்டிக் கண்ணாடியோடு வரும் சத்யராஜ் ஐ வித விதமான உருவத் தோற்றங்களில் அழகு பார்த்தது
“பட்டப் படிப்பு தேவை இல்லை கனம் கோட்டார் அவர்களே” என்ற எஸ்.பி.பி பாடும் பாட்டு
https://youtu.be/K7Z2T8b75HM
நீதிபதியில் இருந்து வழக்காடு மன்றத்தில் இருக்கும் ஒவ்வொரு பாத்திரங்களாகத் தோன்றுவார்.
இதே மாதிரி மலேசியா வாசுதேவன் பாடும் “யார் இட்ட சட்டம்”
https://youtu.be/ZmuDC-QKl2o
பாடலில் கடற்படை, விமானப்படை, காவல்துறை அதிகாரியாகவெல்லாம் வருவார். இந்தப் படத்தின் விளம்பரத்துக்கு அவர் இம்மாதிரி வரும் தோற்றங்கள் கை கொடுத்திருக்கும். பின்னாளில் சத்யராஜ் நடித்த படங்களின் முழுப் பாத்திரங்களாக இவற்றில் சில இடம் பிடித்தன. சத்யராஜ் இயக்கிய வில்லாதி வில்லன் கூட இதே பாதிப்புத் தான்.
“காதல் கவிதை பாட கனவே நல்லது”
https://youtu.be/hqE624-UcL4
கனம் கோட்டார் அவர்களே படத்தின் மொத்தம் ஐந்து பாடல்களில் இன்றுவரை இனிப்பது இந்தப் பாடல் தான்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா மற்றும் குழுவினர் பாடும் இந்தப் பாடல் இடைக்காலப் பாடல்கள் தொகுப்பில் தவிர்க்க முடியாதது. பலர் சந்திரபோஸ் இசையில் வந்ததாகக் கூட நினைக்கிறார்கள்.
காதல் கவிதை பாட பாடலின் இசையில் தேர்ந்த இசையமைப்பாளரின் நுட்பம் மிளிரும். பாடல் இடம் பிடித்த இப்படம் பற்றிய பின்னணி தெரியாதவர்கள் ஏதோவொரு முழு நீளக் காதல் கதை கொண்ட படப் பாடல் என்று நினைக்குமளவுக்கு இனிமை கொண்டது இந்தப் பாடல்.

0 comments: