Pages

Tuesday, March 17, 2015

இயக்குநர் அமீர்ஜான் மறைவில்


எண்பதுகளில் வெற்றிகரமாக இயங்கிய இயக்குநர்களில் பத்திரிகை ஊடகங்களின் கமரா கண்ணில் அகப்படாதவர்களில் ஆபாவாணன், கே.ரங்கராஜ் வரிசையில் மூன்றாவதாக அமீர்ஜானையும் சேர்க்கலாம்.
அமீர்ஜானின் குருநாதர் இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் இறந்தபோது தொலைக்காட்சிகளின் அஞ்சலிப் பகிர்வுகளில் கூட அவரின் பகிர்வு இடம்பெறவில்லை. 

அதிக ஆர்ப்பாட்டமில்லாது பல வெற்றிப்படங்களை அளித்த படைப்பாளி என்ற வகையில் அமீர்ஜான் முக்கியத்துவம் பெறுகிறார். கே.பாலசந்தர் கவிதாலயா என்ற தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த போது முழு நீள மசாலாப் படத்தை எடுக்கவேண்டும் என்ற எண்ணத்தில் இயக்குநர் எஸ்.பி.முத்துராமனிடமே முதல் தயாரிப்பாக "நெற்றிக்கண்" படத்தை ரஜினியை நாயகனாக வைத்து இயக்கும் பொறுப்பை அளித்தார். தொடர்ந்து கமலை வைத்து "எனக்குள் ஒருவன்" படத்தைத் தயாரித்த போது அதற்கும் எஸ்.பி.முத்துராமன் தான் இயக்குநர்.

எஸ்.பி.முத்துராமன் தவிர கவிதாலயா தயாரிப்பில் ஏராளமான படங்களை இயக்கியவர் என்ற பெருமையைப் பெறுபவர் அமீர்ஜான். பூவிலங்கு படத்தில் ஆரம்பித்த இயக்கம், கவிதாலயா நிறுவனம் இளையராஜாவோடு இணைந்த இறுதிப் படமான "உன்னைச் சொல்லிக் குற்றமில்லை" படம் கூட அமீர்ஜான் இயக்கத்திலேயே வெளிவந்த பெருமை உண்டு.

கே.பாலசந்தர் முழு நீள மசாலாப்படம் இயக்குவதில்லை என்ற கொள்கைக்கு மாற்றீடாக அமீர்ஜானைப் பயன்படுத்தினாரோ என்று எண்ணுவேன். 
கே.பாலசந்தர் போன்றே அமீர்ஜானும் இசையமைப்பாளர் நரசிம்மனுக்குச் சிறப்பான வாய்ப்புகள் கொடுத்தவர். "புதியவன்" படத்தின் அனைத்துப் பாடல்களுமே வி.எஸ்.நரசிம்மனின் சாகித்தியத்தில் உச்சமாக அமைந்தவை. வண்ணக் கனவுகள் படத்துக்கும் அவரே இசை.

"அதிகாலை சுபவேளை உன் ஓலை வந்தது"என்று  நட்பு படத்திலும், தர்மபத்தினி படத்துக்காக " நான் தேடும் செவ்வந்திப் பூ இது", "போட்டேனே பூவிலங்கு" பாடலோடு பூவிலங்கு படத்திலும், "சொர்க்கத்தின் வாசல்படி" என்று உன்னைச் சொல்லிக் குற்றமில்லை படத்துக்காகவும் இணைந்த இசையமைப்பாளர் இளையராஜா, இயக்குநர் அமீர்ஜான் கூட்டணியில் 
"இரு வழியின் வழியே நீயா வந்து போனது" பாடல் உச்ச விளைச்சல். அந்தப் பாடலோடு படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியதோடு அமீர்ஜானுக்கு முத்திரைப் படமாக அமைந்தது அவரின் இயக்கத்தில் கவிதாலயா தயாரிப்பில் வந்த "சிவா". இந்தப் படம் டைகர் சிவா என்ற தலைப்பில் வெளிவரவும் பரிசீலனையில் இருந்தது.

தனது எழுபதாவது வயதில் அமீர்ஜான் இன்று காலமாகிவிட்டார். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.


அமீர்ஜானின் கலையுலக வாழ்வு குறித்த முழுமையான பகிர்வு இங்கே கிடைக்கிறது
http://www.tamilcinetalk.com/film-director-ameerjohn-was-dead/

0 comments: