Pages

Monday, March 12, 2012

ஷ்ரேயா கொஷல் எனும் இளங்காத்து வீசுதே...!

கடந்த வாரம் Zee TV இன் பாலிவூட் படங்களின் விருது நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இடையிடையே தங்களின் பிரபல்யமான நிகழ்ச்சிகளின் படத்துண்டுகளைக் காட்டிக் கொண்டு வந்தார்கள், அப்படி வந்தது தான் "சரிகமப" என்ற இசை நிகழ்ச்சி குறித்த ஒரு சில நிமிடத்துளிகள் கொண்ட காட்சித்துண்டு. அதில் சின்னஞ்சிறுமியாக கலந்து கொண்ட ஷ்ரேயா கொசலைக் காட்டியபோது இந்தப் பத்துவருஷ காலத்தில் அவரின் நதிமூலம் எப்படித் தொடங்கியது என்பதைக் கண்டுகொள்ளக் கூடியதாக இருந்தது. இன்றைக்குப் பாட்டுப் போட்டி நடத்தாத தொலைக்காட்சிகளே இல்லை எனலாம், எல்லோருக்கும் பாடி நம்மைப் படுத்த ஆசை இருக்கின்றது. அதற்கான களம் கூடக் கட்டற்று ஏன் கட்டுக்கடங்காமல் இருக்கின்றது. ஆனால் கடந்த இருபதாண்டுகளுக்கு உட்பட்ட திரையிசையில் பாடகிகள் என்று எடுத்துக் கொண்டால், தமிழில் கூட சுவர்ணலதாவுக்குப் பின் சின்மயியை ஓரளவு சொல்லி வைப்பதோடு சரி. மற்றோர் எல்லாம் கூட்டத்தில் கும்மாளம் என்ற நிலை தான். இந்த நிலையில் ஒரு தொலைக்காட்சி இசை நிகழ்ச்சியில் கலந்து தன்னை நிலை நாட்டிப் பின்னர் ஹிந்தி தவிர்ந்து தென்னிந்திய மொழிகளிலும் சொல்வாக்குக் கொண்டிருக்கும் பாடகி என்ற பெருமையை ஷ்ரேயா கொசல் பெற்றிருக்கின்றார். இது இன்றைய கூட்டத்தில் கோவிந்தா என்ற சூழலில் அவ்வளவு சுலபமான விஷயமல்ல. தனித்துவமான திறமை ஒன்றே அவரின் மூலதனம், அதிலும் எந்த மொழியில் பாடினாலும் அந்நியம் இல்லாதது ஷ்ரேயாவினுடைய குரல். இந்த அந்நியமற்ற மொழி கடந்த குரல் மொழியை வடநாட்டுச் சகோதரிகள் லதா மங்கேஷ்கர், ஆஷா போன்லே கூடப் பெற்றிருக்கவில்லை.

சஞ்சய் லீலா பான்சாலியின் "தேவதாஸ்" என்ற ஹிந்திப் படம் பத்தாண்டுகளுக்கு முன்னர் ஒரு சிட்னித் திரையரங்கில் காண்பிக்கப்பட்டபோது அந்தப் படம் தரப்போகும் பிரமாண்ட்டத்துக்காக மட்டுமே தியேட்டருக்குச் சென்றேன். ஆனால் கட்டிப்போட்டது இஸ்மாயில் தர்பாரின் இசை. அதில் தான் தொடங்கியது ஷ்ரேயா கொசலின் இசைப்பயணம். எடுத்த எடுப்பிலேயே அந்த முதற்படத்தில் தேசிய விருது வேறு.



ஆனால் அவ்வளவு சீக்கிரம் தமிழுக்கு இந்தப் பாடகி வருகின்றார் என்று நினைக்கவேயில்லை, வந்தார் இங்கும் முத்திரை பதித்தார். "எனக்குப் பிடித்த பாடல் அது உனக்குப் பிடிக்குமே" ஜீலி கணபதி படப் பாடலில் உருகிய ஷ்ரேயா கொஷலின் குரல் உருக்கியது எம்மை. ஆனால் அந்தப் பாடலை ஒரு சொதப்பல் காட்சியமைப்பில் பயன்படுத்திய பாலுமகேந்திரா மேல் இன்றளவும் கோபமுண்டு. இசைஞானி இளையராஜா, ஷ்ரேயா கொஷலுக்கு வள்ளலாக மாறிப் பாடல்களை அள்ளிக்கொடுக்க முன்னோடியாக அமைந்து விட்டது இந்தப்பாட்டு.



"இளங்காற்று வீசுதே" பாடல் ஶ்ரீராம் பார்த்தசாரதியின் தனிப்பாடலாகவும் இருக்கிறது, ஷ்ரேயா கொஷலோடு ஜோடி கட்டிய பாடலாகவும் இருக்கிறது. இரண்டையும் ஒருதடவை சுழல விட்டுப் பின் எடை போட்டுப்பாருங்கள் ஷ்ரேயா கொஷலின் அந்தக் கொஞ்சும் குரல் பாடலுக்குக் கொடுத்திருக்கும் வலிமையை. ஊனினை உருக்கிப் பார்க்கின்றது பாடல்.





"ஒன்ன விட இந்த உலகத்தில் ஒசந்தது ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை" சரணாகதி கொண்டு பாடும் அந்தத் தமிழ்நாட்டின் எங்கோ ஒரு கிராமத்தின் வெள்ளாந்திக்குரலுக்குப் பின் பல்லாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருந்து வந்த வடநாட்டுக் குரல் உருக்கொண்டிருப்பதை யாரும் நம்ம முடியுமா?



தங்கர்ப்பச்சனின் சொல்ல மறந்த கதையிலும் அதே கதை தான் "குண்டுமல்லி குண்டுமல்லி தென்றல் காத்து அடிச்சதும் கண்ணத்தெறக்குது" புதுமனைவியின் வெட்கத்தையும் கூட அழைத்துக் கொடுக்கும் குரலில். பாடலை முழுவதுமாக ஓட்டிப்பாருங்கள்.குங்குமம் கிட்டிய கையோடு பாடும் ஒரு பெண்ணின் கிறங்கடிக்கும் குரல், அப்படியே அள்ளித் தெளித்தது போல என்ன ஒரு அனாயாசமாகப் பாடியிருக்கிறார்.



வந்தாரை வாழவைக்கும் தமிழகம் என்று சமாதானம் சொல்லிக்கொள்ளலாம் ஆனால் மலையாளிகள் இந்த விஷயத்தில் அவ்வளவு சுலபமாக ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். ஆனானப்பட்ட இசையமைப்பாளர் ரவீந்திரனின் மகன் நவீன் பாடிய மலையாளப்பாடலில் ஒலிச்சுத்தம் தேடிக் கிழித்துக் காயப்போட்டவர்கள். அப்படியிருக்க அங்கும் ஷ்ரேயா கொஷல் சென்று மயக்கினார் தன் குரலால்.
மலையாள சினிமாவின் இன்றைய இசையரசர் ஜெயச்சந்திரன் இசையில் பனாரஸ் படத்தில் பாடும் "சாந்து தொட்டில்லே"
பாடலில் அவர் கொடுக்கும் குரலின் ஜாலத்தில் கிறங்கி விருதுகள் கொடுக்குமளவுக்குப் போய்விட்டார்கள். "பிரியனொராள் இன்னு வன்னுவோ" என்று தொடங்கும் அந்த ஏக்கம் தொனிக்கும் குரல் எப்படியெல்லாம் போகிறது என்று கேளுங்களேன்.



ஷ்ரேயா கொஷல் இந்த ஆண்டோடு தன் கலைத்துறையில் பத்தாண்டுகளைத் தொடுகின்றார். இந்தப் பத்தாண்டுகளில் இஸ்மாயில் தர்பார் கொண்டு, இசைஞானி இளையராஜா, இசைப்புயல் ரஹ்மான் என்று எல்லா இசையமைப்பாளர்களிடம் இருந்தும் இவருக்குக் கிடைத்த பாடல்கள் மணிமுத்துக்கள். தொடரட்டும் அவரின் கலைப்பயணம்.
ஷ்ரேயா கொஷலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

28 comments:

maithriim said...

I am also a big fan of Shreya Goshal. The selection of her songs in your post are excellent. Thanks for an excellent read :)
amas32

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் ;-))

\\ஆனால் அந்தப் பாடலை ஒரு சொதப்பல் காட்சியமைப்பில் பயன்படுத்திய பாலுமகேந்திரா மேல் இன்றளவும் கோபமுண்டு.
\\

ரைட்டு ;-)

மலையாள பாடலுக்கு நன்றி ;-)

ஆயில்யன் said...

இன்னும் வீசிக்கிட்டே இருக்கு பாஸ் :))

முன்பே வா என் அன்பே வா
உன்னை விட உலகத்தில் உசந்தது
எனக்கு பிடித்த பாடல்
- அனைத்து இசை ரசிக மக்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர உதவிய பாடல்கள் :)

தலைவிக்கு இனிய பிறந்த நாள்நல்வாழ்த்துகள் :))))

ஸ்ரேயா கோஷல் பேரவை
தோஹா-கத்தார்

முரளிகண்ணன் said...

Many more happy returns of the day

sulthanonline said...

அருமையான பதிவு நண்பா. என்னை வசியப்படுத்திய பாடல்களில் ஸ்வர்ணலதா பாடல்களுக்குப்பிறகு ஷ்ரேயா கோஷால் பாடல்கள் தான் அதிகம். என்ன.... ஒரு கிறங்கடிக்கும் குரல்.

கானா பிரபா said...

Blogger amas said...

I am also a big fan of Shreya Goshal. The selection of her songs in your post are excellent.//

மிக்க நன்றி

கானா பிரபா said...

தல கோபி

;)

Rekha raghavan said...

ஆஹா அருமை! தொகுத்தளித்த உங்களுக்கு என் நன்றி.

கானா பிரபா said...

இந்தச் சந்தர்ப்பத்தில் ஸ்ரேஷா நற்பணிமன்ற தோஹா கிளைத்தலைவர் ஆயில்யன் முன்னர் தொடர்ச்சியாகத் தங்கத்தலைவியின் புகழ்பரப்பியதும் நினைவுகூரத்தக்கது

கானா பிரபா said...

முரளிக்கண்ணன்

வருகைக்கு மிக்க நன்றிகள்

sulthanonline said...

அருமையான பதிவு நண்பா. என்னை வசியப்படுத்திய பாடல்களில் ஸ்வர்ணலதா பாடல்களுக்குப்பிறகு ஷ்ரேயா கோஷால் பாடல்கள் தான் அதிகம். என்ன.... ஒரு கிறங்கடிக்கும் குரல்.//

வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா

Anonymous said...

அழகிய சரீரமும் சாரீரமும் கொண்ட ,எனக்குத் தெரிந்த முதல் தமிழ் பாடகி நல்ல பதிவு நண்பா
கலைசெல்வன்

வடுவூர் குமார் said...

நானும் அவர்களின் விசிறி. குரலில் என்ன குழைவு!

தனிமரம் said...

நல்ல பாடகி அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

jegans said...

வாழ்த்துக்கள்!
மலையடப்பாடல் மயக்கி விட்டது.
நன்றி பிரபா.

jegans said...

வாழ்த்துக்கள்!
மலையாள பாடல் மயக்கி விட்டது.
ந்ன்றி பிரபா.

கீதமஞ்சரி said...

தவறுக்கு வருந்துகிறேன். சரியான வலைச்சர முகவரி கீழே.
http://blogintamil.blogspot.com.au/2012/03/blog-post_13.html

கானா பிரபா said...

வருகைக்கு நன்றி ராகவன் சார்

கலைச்செல்வன் :)

வடுவூர்குமார்

வருகைக்கு நன்றி


ஜெகன்ஸ்

மிக்க நன்றி :0

கீதமஞ்சரி

வலைச்சரத்தில் றேடியோஸ்பதி கண்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன் மிக்க நன்றி

முத்தரசன் said...

my favourites from shreya's malayalam songs

1. Anuraga vilochanayi.. film "neelatharama"

2. Manju Mazha kaatil... film "Aagathan"

ஜேகே said...

கானா என்ன இது இவ்வளவு சின்ன பதிவா போச்சு!! நம்ம ஸ்ரேயா இல்லையா?

தலைவரோட "சந்திரரே", சீனிகம், கஜுனாரோ, அண்மையில் வந்த பூவ கேளு .. என்று கொஞ்ச பாட்டு போட்டிருந்தா இன்னும் குளிர்ந்திருக்கும்!!!

முன்பே வா, நினைத்து நினைத்து பார்த்தேன் எல்லாம் விட முடியுமா பாஸ்!

7&11 adlinks said...

நன்றி பிரபா. இந்த நேரத்தில் நேரத்தில் இசை இளவரசி ஸ்வர்ணலதா வை பற்றி கூறியதற்கு நன்றிகள்..அது எப்படி நான் மனதில் நினைத்ததை அப்படியே கொண்டு வந்தீர்கள் என்பது அதனை ஆச்சர்யம் ... எனக்கும் ஸ்வர்ணலதா விற்கு முன்பு ஜானகி அம்மாவையும் ஜென்சி, உமா ரமணனையும் இப்போது shreya மற்றும் சின்மயி மட்டுமே பிடித்திருந்தது., இவர்கள் மட்டுமே குரலில் தனி பாணியை கடைபிடிப்பவர்கள்.. என்னமோ உருகுதே மருகுதே, பருத்தி வீரனில் அய்யயோ. காற்றில் வரும் கீதமே. நினைத்து நினைத்து பார்த்தேன் இதெல்லாம் விட்டு விட்டீர்கள்.. என்னதான் இருந்தாலும் முன்பே வா வை விட்டிருக்க கூடாது ... மீண்டும் நன்றி..
விஜய். ஸ்வர்ணலதா இசை மன்றம்..

கோமதி அரசு said...

இவருக்குக் கிடைத்த பாடல்கள் மணிமுத்துக்கள். தொடரட்டும் அவரின் கலைப்பயணம்.
ஷ்ரேயா கொஷலுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.//

பாடல்கள் எல்லாம் நீங்கள் சொன்னது போல் மணிமுத்துக்கள் தாம் பிரபா.
உங்கள் பகிர்வுக்கு நன்றி.

பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Swami said...

உருகுதே மருகுதே , உன்னை விட இந்த ரெண்டு பாட்டுக்கும் உலகத்துலேய எந்த விருது பெரிசோ அதை கொடுக்கலாம்.
இந்த பெண்ணின் குரல் மற்றவர்களை போல அல்ல. ஆன்மாவை தொடும் தேனினும் இனிய குரல். உங்க பதிவு எங்கள் மனதை
பிரதிபலிக்கிறது. நன்றி.

சேக்காளி said...

.ஒரு கச்சேரியில்(மலையாளம்)
http://www.youtube.com/watch?v=A7Zcjyn01Rw
ஞானியின் கண்ணே கலைமானே வினை இந்தியில் தாஸண்ணன் அடியெடுத்துக் கொடுக்க தொடர்ந்து இந்தி மற்றும் தமிழில் ஷ்ரேயா பாடுவதை கேளுங்கள்.பாடலின் இடையில்(03:05) தலையை ஒரு வெட்டு வெட்டுகிறார் பாருங்கள் அந்த காட்சியே ஷ்ரேயா கோஷல் பெயரை கேட்டவுடன்(பார்த்தவுடன்)மனதில் தோன்றி மறைகிறது.
http://www.sekkaali.blogspot.com/2012/04/blog-post.html
வந்து விளையாட்டா படகோட்டி பாடலை ஸ்ரேயா கோஷல்-ஹரிஹரன் குரலில் கேட்டு மகிழுங்கள்

Jeyapalan said...

//அதிலும் எந்த மொழியில் பாடினாலும் அந்நியம் இல்லாதது ஷ்ரேயாவினுடைய குரல்.//
மிகச் சரி

சுடரகன்: சிவா முருகையா said...

நான் இந்தப் பக்ககத்திற்கு 8 மாதங்களின் பின் திரும்பவும் பழைய ஞாபகத்தில் வந்'தேன்' அனுபவித்'தேன்' விடைபெறுகிறேன். வந்திட்டு சொல்லாமல் போன திருட்டுத்தனம். நன்றி.

சுடரகன்: சிவா முருகையா said...

8 மாதங்களின் பின் மீண்டும் பழைய ஞாபகத்தில் மீண்டும் கஸ்டப்பட்டு தேடிப்பிடித்து வந்'தேன்' அனுபவித்'தேன்' விடைபெறுகிறேன். வந்திட்டு சொல்லாமல் போன திருட்டுத்தனம். நன்றி. இவர் கிடைத்ததால் தான் நான் சாதனா சரக்கத்தை விவாகரத்துது சேய்ய நேரந்தது. சுவர்னலதாவின் பதிவிற்கும் நேரம் இருந்தால் வரவேண்டும் பார்போம்.

Prabhakar ranganathan said...

Shreya ghoshal was introduced in tamil by Karthik raja in film ALBUM directed by Vasantha balan his first film..


Song called Chellame Chellam...

Anonymous said...

சாதனா சர்க்கத்தின் குரலை விட ஸ்ரேய கோஷல் குரல் சூப்பர் குரல். அது மட்டுமா? பேஸ்புக்கில் அவரின் அழகழகான படங்களும் சூப்பரப்பு.. அவருக்கு இந்த பதிவின் மூலம் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். பகிரிவிற்க்கு மிக்க நன்றி ப்ரபா சார்.