Pages

Sunday, May 25, 2025

பரமசிவன் கழுத்தில் இருந்து

 



இன்று தமிழ்த் திரை அரசர் T.M.செளந்தரராஜன் நினைவு தினம் என்பதை நினைப்பூட்டியது மனசு.

காலை வேளை காரைக் கிளப்பும் போது கணக்காக சிங்கப்பூர் ஒலி கொண்டு வந்தது


“பரம சிவன் கழுத்தில் இருந்து

 பாம்பு கேட்டது,

கருடா செளக்யமா!”


இன்பம், துன்பம், வெறுப்புணர்வு, விரக்தி நிலை இல்லாத ஒரு நேர்கோட்டிலே டியெம்எஸ் பாடிக் கொண்டிருந்தார்.


பாடல் வெளிவந்து 52 ஆண்டுகளாகிறது,

இன்றைக்கும் நிலை தாழ்ந்து பேசுவோரைக் கண்டால்


“பரமசிவன் கழுத்தில் இருந்து

  பாம்பு கேட்டது கருடா செளக்யமா?”


என்று கேட்போர் அப்படியே இருக்கிறார்கள் இல்லையில்லை தொகை வளர்ந்து விட்டது.

அவ்வளவுக்குக் காலத்தால் அழிக்க முடியாத பாட்டு அது.


கணவன், மனைவிக்கு இடையிலான ஊடாடலின் முன்னே பிறக்கும் பாட்டு.

தானும் திரையில் தோன்றி விட வேண்டும் என்ற சிற்றின்பம் கவியரசு கண்ணதாசனுக்கு இருந்ததுண்டு.

“ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு” என்று சுயவிலாசம் எழுதிய பாடலுக்கு நிழலாய்த் தோன்றியவர் இங்கே “பரமசிவன் கழுத்தில் இருந்து” பாட்டுக்கு இன்னொருவர் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பும் முகம்.

விபத்திலே கண்ணதாசன் கை அடிபடவும், சூரியகாந்தி படக் கதாசிரியர்

கதாசிரியர் ஏ.எஸ்.பிரகாசத்தை அரிதாரம் பூசச் சொல்லி படமாக்க முடிவெடுத்தாராம் இயக்குநர் முக்தா சீனிவாசன்.

கையில் அடிபட்ட சூழலில் ஒரு சால்வையைப் போர்த்துக் கொண்டே படக் காட்சியில் ஒத்துழைத்தாராம்.

கண்ணதாசனுக்கு ஒரு பெரிய கட் அவுட் வைக்கப்பட்டதாம்.


தன்மானம் என்று படத் தலைப்பு வைத்தாராம் கதாசிரியர் ஏ.எஸ்.பிரகாசம்.

சூரியகாந்தி என்று மாற்றி வைத்து அதை நியாயப்படுத்தினாராம் இயக்கு நரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன்.


சூரியகாந்தி படத்தில் 

“பரமசிவன் கழுத்தில் இருந்து”

பாடல் மட்டும் தான் கண்ணதாசன்.

மீதி மூன்றும் வாலியார். அதில் இரண்டு நடிகைகளே பாடும் பாட்டு ஒன்று மனோரமா (தெரியாதோ நோக்கு)


இரண்டு ஜெயலலிதா.

இரண்டென்றால் இரண்டு பாட்டும் தான்.

“நான் என்றால் அது அவளும் நானும்”


https://youtu.be/3HWVnShMYRY?si=hcPMn6DQW9VFqvz-


எஸ்பிபியோடு ஜோடி கட்டும் குரல்,

“ஓ மேரே தில்ரூபா”


https://youtu.be/fsHYqbO5UWM?feature=shared


பாடலில் T.MS உடன் பாட்டுக் கட்டும்.


“பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது”

பாட்டுக்கு உருவான மெட்டு.

இந்தப் பாடலின் வரிகள் எவ்வளவு மெய்யுணர்வு மிக்கதாக இருக்குமோ அவ்வளவுக்கு, வரிகளை முக்கியத்துவப்படுத்தி இசை பின்னால் இயைந்து போகும், கூடவே அந்தத் தமிழை உரப்பாகக் கொடுக்கும் TMS எனும் மகத்துவம்.


இன்னொருவர் குரலாக இருந்த வகையில் தமிழ்த் திரையுலகில் இரு சகாப்தங்கள். ஒருவர் T.M.S இன்னொருவர் S.P.B

இருவருமே காதல், வீரம், தத்துவம், விரக்தி, நகைச்சுவை என்று எல்லாவித பரிமாணங்களிலும் எல்லாருக்குமான பொதுச் சொத்துகள். இவர்களுக்குப் பின்னால் பெரு வெற்றிடம்.


https://youtu.be/ph7c86OjTO8?si=TnlMIrD1Un3YA3nH


கானா பிரபா

25.05.2025

0 comments: