Pages

Sunday, May 25, 2025

அஞ்சு வண்ணப் பூவே ❤️🩷💛💚🧡

ஒரு பாடலுக்கு அதன் ஆரம்ப அடி எவ்வளவு எளிமையாகவும் அழகாகவும் ஈர்க்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக அமைந்ததாலோ என்னமோ பாடலைக் கேட்கும் முன்பே இன்னென்ன மாதிரி இருக்கும் என்று மனசு மெட்டுக் கட்ட ஆரம்பித்து விட்டது.

பாடலின் தொனியும், பின்னணியில் ஒரு சூனிய வெளியே ஊடுருவும் இசையும் அக்மார்க் 90களின் ரஹ்மானிய பின்னணி இசை . அதனால் நினைப்புக்கும் மேல் தீனி போட்டு விட்டார் ரஹ்மான் ❤️

சாருலதாமணியின் வழக்கமான துள்ளிசை அடையாளத்தில் இருந்து மாறுபட்டதும் அவரது சாஸ்திரியத்தனம் தூக்கலான கண்ணுக்குள் பொத்தி வைப்பேனில் இருந்து விலகியதுமாக ஈர்க்கிறார். கார்த்திக் நேஹா வரிகள், இன்னும் இவரோடு ரஹ்மான் பயணப்படலாம் அல்லது இந்தப் படப் பாடல்கள் அனைத்தையும் தூக்கிக் கொடுத்திருந்தால் பொன்னியின் செல்வன் காலத்துக்கு முந்திய மணிரத்னம் - ரஹ்மான் நிறம் வாய்த்திருக்கும்

Thug Life பாடல்களை ஒழுங்கு முறையில் தான் கேட்டேன். ல் ஜிங்குச்சா, Sugar Baby ஆகிய மாமூல்களைக் கடந்து முத்த மழை தொடங்கும் போதே இதோ ரஹ்மான் வந்துட்டார் என மனசு கூவியது. ஆனால் அது தபேலா உருளலில் கொஞ்சம் நெருடல் கொஞ்சம் “குரு” தனமாக எட்டிப் பார்த்து உறுத்தியது. ஆனால் கண்டிப்பாக இந்தப் பாடல் மெல்ல மெல்லக் கவரும் என்றே தோன்றுகிறது.

விண்வெளி நாயகா தொடங்கிய பின் லோகேஷ் கனராஜ் படம் போல எங்கெல்லாம் சுழன்றடிப்பதால் கடந்து விட்டேன். ஸ்ருதி ஹாசனும் உன்னைப் போல் ஒருவன் ஸ்ருதியை மாற்றுகிறார் இல்லை.

மணிரத்னத்தோடு இணையும் போது பால் டப்பா, பவுடர் டப்பாவோடு சேராமல் அஞ்சு வண்ணப் பூவே போல நுகர்ந்திருக்கலாமே எனத் தோன்றியது. ஆனால் தற்போது பால் டப்பாவோடு இருக்கும் இந்த Gen Z குழவிகளை நோக்கிய தாக்குதலாக இருக்கை கூடும்.

அஞ்சு வண்ணப் பூவே மேல் அடங்காத ஆசை கொண்டு ரஹ்மான் அதை மீளப் பாடியது போல நானும் அதிலேயே தங்கி விட்டேன்.

கானா பிரபா


#thuglife  #arrahmanmusic

பரமசிவன் கழுத்தில் இருந்து

 



இன்று தமிழ்த் திரை அரசர் T.M.செளந்தரராஜன் நினைவு தினம் என்பதை நினைப்பூட்டியது மனசு.

காலை வேளை காரைக் கிளப்பும் போது கணக்காக சிங்கப்பூர் ஒலி கொண்டு வந்தது


“பரம சிவன் கழுத்தில் இருந்து

 பாம்பு கேட்டது,

கருடா செளக்யமா!”


இன்பம், துன்பம், வெறுப்புணர்வு, விரக்தி நிலை இல்லாத ஒரு நேர்கோட்டிலே டியெம்எஸ் பாடிக் கொண்டிருந்தார்.


பாடல் வெளிவந்து 52 ஆண்டுகளாகிறது,

இன்றைக்கும் நிலை தாழ்ந்து பேசுவோரைக் கண்டால்


“பரமசிவன் கழுத்தில் இருந்து

  பாம்பு கேட்டது கருடா செளக்யமா?”


என்று கேட்போர் அப்படியே இருக்கிறார்கள் இல்லையில்லை தொகை வளர்ந்து விட்டது.

அவ்வளவுக்குக் காலத்தால் அழிக்க முடியாத பாட்டு அது.


கணவன், மனைவிக்கு இடையிலான ஊடாடலின் முன்னே பிறக்கும் பாட்டு.

தானும் திரையில் தோன்றி விட வேண்டும் என்ற சிற்றின்பம் கவியரசு கண்ணதாசனுக்கு இருந்ததுண்டு.

“ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு” என்று சுயவிலாசம் எழுதிய பாடலுக்கு நிழலாய்த் தோன்றியவர் இங்கே “பரமசிவன் கழுத்தில் இருந்து” பாட்டுக்கு இன்னொருவர் மனச்சாட்சியைத் தட்டியெழுப்பும் முகம்.

விபத்திலே கண்ணதாசன் கை அடிபடவும், சூரியகாந்தி படக் கதாசிரியர்

கதாசிரியர் ஏ.எஸ்.பிரகாசத்தை அரிதாரம் பூசச் சொல்லி படமாக்க முடிவெடுத்தாராம் இயக்குநர் முக்தா சீனிவாசன்.

கையில் அடிபட்ட சூழலில் ஒரு சால்வையைப் போர்த்துக் கொண்டே படக் காட்சியில் ஒத்துழைத்தாராம்.

கண்ணதாசனுக்கு ஒரு பெரிய கட் அவுட் வைக்கப்பட்டதாம்.


தன்மானம் என்று படத் தலைப்பு வைத்தாராம் கதாசிரியர் ஏ.எஸ்.பிரகாசம்.

சூரியகாந்தி என்று மாற்றி வைத்து அதை நியாயப்படுத்தினாராம் இயக்கு நரும் தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன்.


சூரியகாந்தி படத்தில் 

“பரமசிவன் கழுத்தில் இருந்து”

பாடல் மட்டும் தான் கண்ணதாசன்.

மீதி மூன்றும் வாலியார். அதில் இரண்டு நடிகைகளே பாடும் பாட்டு ஒன்று மனோரமா (தெரியாதோ நோக்கு)


இரண்டு ஜெயலலிதா.

இரண்டென்றால் இரண்டு பாட்டும் தான்.

“நான் என்றால் அது அவளும் நானும்”


https://youtu.be/3HWVnShMYRY?si=hcPMn6DQW9VFqvz-


எஸ்பிபியோடு ஜோடி கட்டும் குரல்,

“ஓ மேரே தில்ரூபா”


https://youtu.be/fsHYqbO5UWM?feature=shared


பாடலில் T.MS உடன் பாட்டுக் கட்டும்.


“பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது”

பாட்டுக்கு உருவான மெட்டு.

இந்தப் பாடலின் வரிகள் எவ்வளவு மெய்யுணர்வு மிக்கதாக இருக்குமோ அவ்வளவுக்கு, வரிகளை முக்கியத்துவப்படுத்தி இசை பின்னால் இயைந்து போகும், கூடவே அந்தத் தமிழை உரப்பாகக் கொடுக்கும் TMS எனும் மகத்துவம்.


இன்னொருவர் குரலாக இருந்த வகையில் தமிழ்த் திரையுலகில் இரு சகாப்தங்கள். ஒருவர் T.M.S இன்னொருவர் S.P.B

இருவருமே காதல், வீரம், தத்துவம், விரக்தி, நகைச்சுவை என்று எல்லாவித பரிமாணங்களிலும் எல்லாருக்குமான பொதுச் சொத்துகள். இவர்களுக்குப் பின்னால் பெரு வெற்றிடம்.


https://youtu.be/ph7c86OjTO8?si=TnlMIrD1Un3YA3nH


கானா பிரபா

25.05.2025