Pages

Sunday, August 30, 2009

ஒட்டுப் போட்ட சினிமாப் பாட்டுக்கள்


சில திரைப்படங்களின் பாடல் ஒலி நாடாக்களிலோ அல்லது இசைத்தட்டுக்களிலோ வந்த குறித்த திரைப்படப் பாடல்களைக் கேட்டு விட்டு அந்தப் படங்களைப் பார்க்கும் போது படத்தின் காட்சியமைப்பில் மேலதிகமாகப் பாடல் வரிகள் சேர்க்கப்பட்டிருக்கும் அல்லது மாற்றப்பட்டிருக்கும். தவிர படத்தின் ரீ ரெக்கார்டிங்கின் போது மேலதிகமாகப் பாடலைப் போட்டும் கொடுப்பதுண்டு.

சில சமயங்களில் தணிக்கை உத்தரவில் பாடல் வரிகள் அமுங்கிப் போவதுமுண்டு. உதாரணமாக இந்து படத்தில் வந்த வாலி எழுதிய "சக்கரவள்ளிக் கிழங்கு சமஞ்சது எப்படி" என்ற இலக்கியத்தரமான பாடல் (!) படத்தின் காட்சியில் "சமஞ்சது" என்ற வரிகள் ஒலியற்று (mute)இருக்கும். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தில் பாடல்களைப் போடும் போது வீரம் செறிந்த பாடல்களை இனங்கண்டு அமுக்குவதோடு, டைகர், புலி என்று சொற்கள் வரும் பாடல்களில் குறித்தசொற்கள் வரும் இடங்களை அழித்து விட்டுத்தான் போடுவார்கள். உதாரணமாக சிங்கார வேலன் திரைப்படத்தில் வரும் புதுச்சேரி கச்சேரி பாடலில் வரும் "டைகராச்சாரி வரதாச்சாரி போலப்படிச்சேன்" என்ற பாட்டுப் பகுதியில் டைகராச்சாரியை அடித்து விடுவார்கள்.

இங்கே நான் தரும் தொகுப்பு, சில திரைப்படங்களின் ஒலி நாடாக்கள்/இசைத்தட்டுக்கள் முதலில் வந்தபோது காணாமல் போன வரிகளோ அல்லது இசைப்பகுதியோ பின்னர் திரைப்படத்தில் வந்த போது சேர்க்கப்பட்டு வந்த பாடல்களாக ஐந்து பாடல்களைத் தருகின்றேன்.

அந்த வகையில் முதலில் வருவது "பத்ரகாளி" திரைப்படத்தில் வரும் பாடல். மகரிஷி எழுதிய நாவலே பத்ரகாளி என்று திரைப்படமானது பலருக்குத் தெரிந்திருக்கும். இதப் படத்திலே "கண்ணன் ஒரு கைக்குழந்தை" என்ற பி.சுசீலா, கே.ஜே.ஜேசுதாஸ் பாடும் பாடல். இந்தப் பாடல் வெளிவந்த போது இரண்டு சரணத்தோடு முடிவதாக இருக்கும். ஆனால் படத்திலே

மூன்றாவதாக இன்னொரு பகுதியும் எழுதப்பட்டது.

"மஞ்சள் கொண்டு நீராடி மொய் குழலில் பூச்சூடி
வஞ்சி மகள் வரும் போது ஆசை வரும் ஒரு கோடி
கட்டழகன் கண்களுக்கு மையெடுத்து எழுதட்டுமா
கண்கள் படக்கூடும் என்று பொட்டு ஒன்று வைக்கட்டுமா"

இப்படி அமையும் வண்ணம் எழுதப்பட்டு இசையமைக்கப்பட்டு வந்தது. இதோ அந்தப்பாடல்



அடுத்ததாக வரும் பாடல் "சொல்லத்தான் நினைக்கிறேன்" திரைப்படத்தில் இருந்து வருகின்றது. மணியன் எழுதிய இலவு காத்த கிளி என்ற நாவலே பின்னர் கே.பாலசந்தரின் கைவண்ணத்தில் "சொல்லத்தான் நினைக்கிறேன்" ஆனது. இந்தப் படத்திலே இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், ஜானகியோடு இணைந்து ஒரு பாடலைப் பாடியிருப்பார். எம்.எஸ்.வி பாடிய பாடல்களில் அவர் ஜோடியாகப் பாடிய பாடல்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த வகையில் "சொல்லத்தான் நினைக்கிறேன்" என்று இவர் ஜானகியோடு இணைந்து பாடும் பாடல் வெகு சிறப்பானதொரு மெட்டு. பின்னணியில் வளைய வரும் கிட்டார் , வயலின் இசை உறுத்தாமல் காதல் வயப்பட்ட நாயகன், நாயகி இருவரின் மன நிலையை இருவேறு கோணத்தில் இந்தப் பாடல் தந்திருக்கும். குறித்த பாடலிலும் புதிதாக ஒரு சரணம் சேர்க்கப்பட்டு வந்ததை வெறுமனே இசைத்தட்டுக்கள் மூலம் கேட்டவர்கள் பலருக்குத் தெரியாது. மேலதிகமாக அமைந்த வரிகள்

"நேரில் நின்றாள் ஓவியமாய்
என் நெஞ்சில் நின்றாள் காவியமாய்
நான் பாதி அவள தான் பாதி
நெஞ்சில் கலந்தாளோ கண்ணில் மலர்ந்தாளோ"

இப்படி இருக்கும், ஆனால் புதிதாக சேர்க்கப்பட்ட அந்த வரிகளைக் கேட்கும் போதே மூலப்பாடலில் இருந்த எம்.எஸ்.வி குரலுக்கும் இதற்கு சிறிய வித்தியாசம் இருப்பதைக் காணலாம். தொழில்நுட்பம் அதிகம் வளராத காலமல்லவா அது. இதோ அந்தப் பாடல்.



அடுத்ததாக "சுவரில்லாத சித்திரங்கள்" திரையில் வரும் பாடல். கங்கை அமரன் இசையமைத்து அவருக்கு வாழ் நாள் முழுவதும் பெருமை தேடித்தரும் பாடல்களில் "காதல் வைபோகமே" பாடல் தனித்துவமானது. (சமீபத்தில் ரீமிக்ஸ் பண்ணி கலைஞர் பேரன் அறிவுநிதி ஒரு வழி பண்ணிய பாட்டல்லவா இது )மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி பாடும் பாடலிது. ஒரு தலைக்காதல் கொண்ட பாக்யராஜின் காதல் கனவும், மனமொத்த சுதாகர், சுமதி ஜோடியின் கனவுலகப்பாடலாகவும் அமையும் இந்தப் பாடலை இசைத்தட்டில் கேட்டால் திடீரென்று காதல் வைபோகமே என்று ஆரம்பித்து திடுதிப்பில் முடிவதாக இருக்கும். ஆனால் படத்தில் காட்சியமைப்புக்கு ஏற்றவாறு இதனை எடுத்தபோது மலேசியாவாசுதேவன் "காதல் வைபோகமே காணும் நன்னாளிதே வானில் ஊர்கோலமாய் என்று முதல் அடிகளை மெதுவாகப் பாடி முடித்து நிதானிக்க பஸ் கிளம்பும் ஓசையுடன் பாடல் ஆரம்பிக்கும். கூடவே இரண்டாவது சரணத்தில் இடைச்செருகலாக மேலதிக இசையும் போடப்பட்டிருக்கும். கேட்டுப் பாருங்கள் புரியும்.



திரையுலகில் கலைஞானி கமல்ஹாசனுக்கு ஐம்பதாவது ஆண்டு அதோடு சூப்பர் ஸ்டார் ரஜினி காந்திற்கு 35 ஆண்டு நிறைவாகும் இவ்வேளை இருவரும் சேர்ந்த ஆரம்ப காலப்படங்களில் ஒன்றான "மூன்று முடிச்சு" திரைப்படப்பாடல் வருகின்றது. பாடல் ஜோடிகளிலே செளந்தரராஜன் - சுசீலா, எஸ்.பி.பி - ஜானகி என்ற தனித்துவம் இருப்பது போல ஜெயச்சந்திரன் - வாணி ஜெயராம் குரல்களும் தனித்துவமான ஜோடிக்குரல்கள். இந்தப் படத்தில் அந்தாதி வடிவிலே ஒரு பாடல் அடிகள் முடிக்கும் போது அந்தத்தில் வருவது அடுத்த அடியின் முதல் அடிகளாக இருக்குமாறு இரண்டு பாடல்கள் இருக்கும். ஒன்று, ஆடி வெள்ளி தேடியுன்னை நானடைந்த நேரம், இன்னொரு பாடல் , வசந்த கால நதிகளே வைரமணி நீரலைகள். ஒரே படத்தில் இரண்டு அந்தாதிப்பாடல்களைப் பாடிய பெருமை ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம் ஜோடிக்குரல்களைத் தான் சாரும். "வசந்த கால நதிகளிலே" பாடலினை பெரும்பாலான இசைத்தட்டில் கேட்கும் போது இந்த ஜோடிக்குரல்கள் மட்டுமே இருக்கும். ஆனால் வில்லன் ரஜினி, கமலை ஆற்றில் தள்ளி விட்டுப் பாடும் வரிகளான
"மணவினைகள் யாருடனோ மாயவனின் விதிவதைகள்
விதிவகையில் முடிவு செய்யும் வசந்தகால நீரலைகள்"
என்று எம்.எஸ்.விஸ்வநாதன் பாடும் வரிகள் படத்தில் மேலதிகமாக அமைந்திருக்கும். சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு முதலில் பின்னணி குரல் கொடுத்த பெருமை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கே சாரும். இதோ அந்த முழுப்பாடல்



நிறைவாக ஒரு பழைய இனிய பாடல். பீம்சிங் இயக்கத்தில் வெளியான பாவமன்னிப்பு திரையிலிருந்து வரும் "பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது" என்ற பி.சுசீலா பாடும் பாடல். இந்தப் பாடல் எத்தனையோ ஆண்டுகள் கழித்தும் மெட்டிலும் வரிகளிலும் கண்ணியமான தொனியைக் கொண்டு வந்து மனசில் சட்டென்று ஒட்டிக் கொள்ளும். கே.பாலசந்தர் இயக்கிய "காதல் பகடை" தொலைக்காட்சி தொடரில் பேபி தீபிகா இந்தப் பாடலைப் பாடிய காட்சியும் மறக்க முடியாத இனிமை. பாவமன்னிப்பு திரைப்படத்தில் வரும் "பாலிருக்கும் பழமிருக்கும்" பாடலில் பி.சுசீலா பாட, பின்னணியில் ம்...ம்...ம் என்று ஹம்மிங்காக மட்டும் எம்.எஸ்.வியின் குரல் இருக்கும். ஆனால் படத்திலே காட்சியமைப்பில் வரும் போது இந்தப் பாடல் முடியும் போது பி.சுசீலா எம்.எஸ்.வி இருவருமே பாடலின் முதல் அடிகளைப் பாடி முடிப்பதாக அமையும். கேட்டு அனுபவியுங்கள் ;)



Thursday, August 20, 2009

ராஜா அடியெடுத்துக் கொடுக்க....

விதவிதமான நிறத்தைக் கொண்ட கோல மாவினை எடுத்துத் தன் எண்ணம் போல அழகு மிகு கோலம் போட்டு நிறைத்திருக்கும் நிலம் போல ஒரு பாடலை மெட்டமைத்துப் பாடல் வரிகளுக்குள் கட்டமைத்து பொருத்தமான பாடகர்களைக் கொண்டு பாடவைத்து ரசிகனின் காதுகளுக்குள் பாய்ச்சும் வித்தைக்கார இசையமைப்பாளன் ரசிகன் மனதில் நீக்கமற நிறைந்து விடுகின்றான். ஒரு பாடல் எப்படி உருவாக்கப்படுகின்றது என்பதை இப்போதெல்லாம் திடீர் இசையமைப்பாளர்கள் பலர் ஒரு புதுப்படம் ஓடுவதற்கு விளம்பர உத்தியாக சின்னத்திரை விருந்தாகத் தருவதெல்லாம் எனக்குச் செயற்கையாகத் தான் படுகின்றது. முதல் மரியாதை போன்ற படங்களின் ஒலி நாடாக்களில் வைரமுத்து முகவுரை கொடுத்து வழங்கிய பாடல்களின் தொகுப்பு ஒரு விதம் என்றால், குணா படத்தின் ஒலிநாடாவிலே ஒவ்வொரு மெட்டும் எப்படிப் பிரசவிக்கப்படுகின்றது என்பதை கமல்-ராஜா-வாலி உரையாடல்களினூடே காட்டியதும் வெகு இயல்பு. யோசித்துப் பாருங்கள் ஒவ்வொரு பாடல் பிறக்கும் போது எத்தனை விதவிதமான மெட்டுக்கள், வித்தியாசமான வாத்தியக் கலவைகள், சொற் சேர்க்கைகள் என்று.

இங்கே நான் தரும் தொகுப்பு ஒரு இசையமைப்பாளனாய் இளையராஜா மெட்டமைத்துப் பாடிக் காட்டி தொடர்ந்து பாடுக என்பது போல அமைந்த பாடல்கள், ராஜாவின் குரலை ஒரு சில வரிகளுக்குள் மட்டும் கெளரவக் குரலாக அடக்கி வந்த பாடல்கள் என்று ஆறு முத்தான பாடல்கள்.

முதலில் வருவது நாடோடித் தென்றல் படத்தில் இருந்து வருகின்றது.
"மணியே மணிக்குயிலே மாலை இளங்கதிரழகே" என்று சொல்லி விட்டு சிரிப்போடு ராஜா நிறுத்த விட்ட இடத்தில் இருந்து தொடங்குகின்றது மனோ, ஜானகியின் கூட்டு. பாடல் வரிகளை எடுத்துக் கொண்டால் படத்தின் கதைக்களன் நடக்கும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தின் மொழி நடையில் செந்தமிழ் கலக்கின்றது. கூடவே மணியொலி காதல் ஜோடிக்கு சம்மதித்துத் தலையாட்டும் சத்தமாகப் பரவ,
பூமாரப் பாவை நீயடி இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி



000000000000000000000000000000000000000000000000000000000000

வி.எம்.சி.ஹனீபா மலையாளத்திலிருந்து கரையொதுங்கிய இயக்குனர். பாசப்பறவைகள், பாடாத தேனீக்கள் என்று "பா" வரிசைப் படங்கள் எடுத்து இன்னொரு பீம்சிங் செண்டிமெண்ட்டில் சில வெற்றிப் படங்கள் குவித்தாலும் அவரின் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த படங்களில் ஒன்று "பகலில் பெளர்ணமி". இந்தப் படம் வெளி வர இருந்த காலத்தில் நான் தாயகத்தில் மேல் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். என்னோடு கூடப் படித்த நண்பனின் சொந்தக்காரர் (ஈழத்தவர் தான்) தயாரித்த படம், கட்டாயம் பார்க்க வேண்டும் என்று அப்போது சொல்வான் அவன். இந்தப் படம் வெளி வந்த ஆண்டு 1990. அதற்குப் பின் உள்நாட்டுப் பிரச்சனைகளால் அவனை நான் தொலைத்து விட்டேன். இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்று இன்றுவரை தெரியாது, ஆனால் பகலில் பெளர்ணமி மட்டும் பசுமரத்தாணி போல.இன்னொரு காரணம் சென்னை வானொலியை நான் நேசித்த காலங்களில் கேட்ட பாடல்களில் இதுவுமொன்று அது,

"கரையோரக் காற்று கல்யாண வாழ்த்து காதோடுதான் கூறுதோ லலலாலலால லாலா லலலாலலால லாலா" என்று ராஜா ஆரம்பிக்க ஹோரஸ் பரவ விட்ட இடத்தில் இருந்து தொடங்கிப் பாடி முடிப்பார் எஸ்.பி.பாலசுப்ரமணியம், கூடவே சித்ரா. பாட்டின் இசை ஒரு பக்கம் நகர பாடகர்களின் குரல் இன்னொரு நகரும் வகையில் வித்யாசமான மெட்டும் இசையும் உள்ள பாடல்களில் இதுவும் ஒன்று.



00000000000000000000000000000000000000000000000000000000000000000

"காதலுக்கு பாட்டெதற்கு பாட்டெதற்கு" என்று ஒரு எள்ளல் குரல் கொடுத்து விட்டு ஆர்மோனியத்தில் சில அடிகளை வாசித்துக் காட்டுவார் ராஜா. மனோவும் ஜானகியும் தொடர்ந்து காதல் ராகம் இசைப்பார்கள். அந்தப் பாடல் ஒலிக்கும் படம் இளையராஜாவின் உழைப்பு வீணாய் போன மொக்கைப் படங்களில் ஒன்றான "சிறையில் சில ராகங்கள்". அறிமுக இயக்குனர்களின் தெய்வமாக இருக்கும் நடிகர் முரளியே கருணை காட்டாத படம் இது. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் புதுவிதமான இசைக்கலவையை வாத்தியங்களினூடு காட்ட முனைந்த ராஜாவின் படைப்புக்களில் இந்தப் பாடலும் தவிர்க்க முடியாத ஒரு பொக்கிஷம். குறிப்பாக பாடலின் இடையிசையைக் கேட்டுப்பாருங்கள், ஒலிப்பதிவுக் கூடத்தில் கண்ணை மூடிக்கொண்டே வாத்தியங்களின் ஆலாபனையைக் கேட்பது போன்ற சுகத்தைத் தரும். என்னிடம் ஒலிநாடாவில் ராஜா ஆரம்பிக்கும் வரிகளோடு இருந்தப் பாடல் கைவசம் இல்லை. ராஜா இல்லாத எடிட் பண்ணப்பட்ட மனோ, ஜானகி பாட்டுத் தான் கை வசம் இருக்கிறது. கையில் அந்த முழுப்பாடலும் வரும் போது நிச்சயம் சேர்த்து விடுகின்றேன்.



0000000000000000000000000000000000000000000000000000000

"ராஜா கைய வச்சா" , சுரேஷ் கிருஷ்ணாவின் சத்யா, அண்ணாமலைக்கு பிறகு எனக்குப் பிடித்த படங்களில் ஒன்று. கலக்கலான நகைச்சுவையுடன் வந்த இந்தப் படத்தினை இப்போது பார்த்தாலும் ஒளிப்பதிவு உட்பட தொழில்நுட்பத்திலும் சிறப்பாக இருக்கும். இந்தப் படத்தில் கூட ஒரு பாடலை ராஜா ஆரம்பித்து வைத்து இடையிடையே அதே அடிகளைப் பாடுவார். மூலப்பாடலை மனோவும், ஜானகியும் பாடுவார்கள். ஆனால் ராஜா பாடும் வரிகளை இருவருமே பாடாமல் புதுமை படைத்திருப்பார்கள். அந்தப் பாடல்,
"மருதாணி அரைச்சேனே உனக்காக பதமா"



00000000000000000000000000000000000000000000000000000000

ராஜா ஆரம்பித்து வைக்கும் பாடலில் விட்டுப் போன பாடல் ஒன்றை இங்கே சேர்க்கிறேன். இந்தப் பாடல் அறுவடை நாள் படத்தில் வரும் பாடல்.
ப்ரேம ப்ரேமாதி ப்ரேமப் ப்ரியம் ப்ரேம வஸ்யப் ப்ரேமம் , ப்ரேமம் ப்ரேமம் ப்ரேமம் ப்ரியம் ப்ரியமாதி ப்ரீதிதம் என்று ராஜா கீர்த்தனை ஒன்றை எடுத்து ஆன்மீக இசையாய் ஆரம்பிக்க "தேவனின் கோயில் மூடிய நேரம் நான் என்ன கேட்பேன் தெய்வமே " என்று ஆரம்பிப்பாள் உலகத்தை விலக்கி இறைபணியில் அது நாள் வரை இருந்த அந்தப் பெண்ணில் காதல் என்னும் பூ பூக்கும் போது. தொடர்ந்து அந்தப் பாடல் முழுவதுமே முடிவெடுக்க முடியாத குழப்பத்தோடு பாடும் பெண்ணின் பரிதவிப்பாய் சித்ராவின் குரல் ஒலிக்கும். அந்தக் குரலிலேயே ஒரு சோகம் மெல்ல இழையோடும். பாடலைப் படமாக்கிய விதம் கூட சபாஷ் போட வைக்கும்.
சப்தஸ்வரங்கள், ராக மாலிகா போன்ற பல இசைமேடைகளில் இளம்பாடகர்கள் இன்றும் தமக்கான அறிமுகத்தைத் தேடப் பயன்படுத்தும் அடையாள அட்டையாய் இன்றும் இருக்கிறது இந்தத் தேனான பாடல்.



00000000000000000000000000000000000000000000000000000000

நிறைவாக முன் சொன்ன பாடல்களில் இருந்து முழுதும் மாறுபட்ட பாடல். அதாவது இந்தப் பாடலில் ராஜா ஆரம்ப வரிகளைப் பாடாமல் சுரேந்தர் அடியெடுத்துக் கொடுக்க, ராஜாவின் குரல் ஆக்கிரமிப்பில் பாடல் முழுதும் இருக்கும். சுரேந்தர் பாடும் ஆரம்ப அடிகள் ஒருவிதமாகவும்
"கை வீசிப் போகின்ற வைகாசி மேகம்
தை சேர்த்துப் பாடாதோ தன்யாசி ராகம்" என்றும்
"பொட்டோடு பூவைத்த பொன்மானைப் போற்றி
பல்லாண்டு சொன்னேனே பாமாலை சூட்டி" என்றும்

ராஜா பாடுவது ஒரு இந்துஸ்தானி பாணி போல இன்னொரு விதமாகவும் காட்டியிருப்பார். அதிகம் ஆர்ப்பரிக்காத இசைக்கு இந்த இரண்டு குரல்களுமே போதுமெனக் காட்டும் பாடல் இது. பாடகராக இளையராஜா நிரூபித்த பாடல்களில் ஒன்று அதிகம் பேசப்படாதது பெருங்குறை. "மங்கை நீ மாங்கனி" பாடல் இசைஞானி இளையராஜாவின் "இன்னிசை மழை" ஆக என்றும் ஓயாது இருக்கும்.



Monday, August 17, 2009

றேடியோஸ்புதிர் 44 - யார் அந்த "பஞ்ச்" நாயகர்கள்


80களில் வலம் வந்த முன்னணி ஏழு நாயகர்களும் மெல்ல வழிவிட அடுத்த தலைமுறை நாயகர்கள் கோலோச்சும் யுகம் இது. அந்த வகையில் 90 களில் தமது திரையுலக ஆரம்பப் படிகளில் விழுந்து எழும்பி என்று ஆரம்பித்து இன்று தமக்கென்று ரசிகர் படையை வைத்திருக்கும் இந்த இரண்டு நாயகர்களுமே முன்னணியில் இப்போது இருப்பவர்கள். இவர்கள் இருவரும் இணைந்து படம் ஒன்றில் நடித்தார்கள் என்றால் எத்தனை பேர் நம்புவார்கள். ஏனென்றால் அந்தப் படம் தான் பெரிதாக ஓடாமல் பெட்டிக்குள் போய் விட்ட படமாச்சே. ராஜாவின் இசையில் வெளிவந்த இந்தப் படத்தின் தலைப்பு கூட ராஜாவை கூல் பண்ணி வைத்ததாகும். மேலே இருக்கும் பெண் தான் நாயகி ;)

எங்கே கண்டு பிடியுங்களேன் அந்த இரண்டு நாயகர்களும் யார் என்று, படம் பேர் சொன்னால் போனஸ் புள்ளிகள். பாட்டைக் கேளுங்கள் புதிரைக் கண்டுபிடியுங்கள்.

Get this widget | Track details | eSnips Social DNA


போட்டி முடிவு வெளியாகி விட்டது, கலந்து கொண்ட அனைவருமே சரியாத் தான் சொல்லியிருக்கிறீர்கள்.
படம்: ராஜாவின் பார்வையிலே
நடிகர்கள்: விஜய் மற்றும் அஜித்குமார்

Wednesday, August 12, 2009

சிறப்பு நேயர் "ரவிசங்கர் ஆனந்த்"

றேடியோஸ்பதியின் சிறப்பு நேயராக சக வலைப்பதிவர்கள் மட்டுமன்றி ஒரு சில வாசகர்களும் இடம் பிடித்திருக்கின்றார்கள். அந்த வகையில் இந்த வாரம் வரும் ரவிசங்கர் ஆனந்தும் இடம்பிடிக்கின்றார். இவர் தனக்கென ஒரு வலைப்பதிவை வைத்திருக்காவிடினும் இளையராஜாவின் பாடல்களில் தீவிர ரசிகனாக பல சந்தர்ப்பங்களில் றேடியோஸ்புதிர், பதிவுகளில் தன் கருத்தை வெளிப்படுத்தி வந்திருக்கின்றார்.

தன் ரசனையில் முத்தான ஐந்து பாடல்களைத் தெரிவு செய்திருக்கும் இவரின் இந்தத் தெரிவுகளை வைத்தே எப்படியெல்லாம் இளையராஜாவின் பாடல்களில் மொழி கடந்தும் ஈர்க்கப்பட்டிருக்கின்றார் என்பதற்கு எடுத்துக்காட்டு. இளையராஜாவின் குடும்பத்தோடு ஒரு வகையில் சொந்தமாகிவிட்ட இவரை சிறப்பு நேயராக இணைத்திருப்பது எமக்கும் பெருமை. சரி, இனி ரவிசங்கர் பேசட்டும்.


நான் பயங்கர இளையராஜா ரசிகன் என்பது , கானா உங்களுக்கே தெரியும் ஆகவே அவர் போட்ட 5500+ பாடல்களும் எனக்கு பிடிச்ச ஒன்று தான். இருந்தாலும் அதுக்குள்ள ஒன்ன நண்பர் கலைகோவன் சொல்லிட்டார் ( செவ்வரளி தோட்டத்திலே )


1. வாட வாட்டுதே ஒரு போர்வ கேக்குதே – சக்களத்தி

ராஜாவின் குரலில் ஒரு கிராமத்து இளைஞனுக்குரிய “innocence” இருக்கும். இரண்டாவது “interlude” அம்சமா இருக்கும்.



2. ஒரு சிரி கண்டால் – பொன்முடிப்புழையோரத்து (மலையாளம்)

மாயாமாளவ கௌளை ராகத்தில் அமைந்த ஒரு தேன் கிண்ணம் இந்த பாடல்.
ஹி ஹி ஹி இந்த பாட்ட நான் சொதப்பலா பாடி ஒரு கேரள பெண்ண மிஸ் பண்ணிட்டேன் :(



3. சிஹி காலி சிஹி காலி – ஆ தினகலு – கன்னடம்

கடந்த ஓராண்டாக நான் அடிக்கடி முனுமுனுக்கும் கன்னட பாடல் இது. இசைஞானியின் குரலில் ஒரு சிறிய duet பாடல். ( கொஞ்சம் தமிழ் “ accent” கலந்திருக்கும்).
ரொம்ப நாள் கழிச்சு ராஜா கன்னடத்துல வேல செய்த படம். ரொம்ப நாள் கழிச்சு ராஜா இசைல ராஜா வாய்ஸ்ல வந்த டூயட் பாடல் ( பட்டியல்- நம்ம காட்டுல பாடல் exception, அது யுவன் இசை )




4. தலையை குனியும் தாமரையே – ஒரு ஓடை நதியாகிறது

ரீதிகௌள ராகத்தில் அமைய பெற்ற பாடல். பாலு “just like that” பாடி இருப்பாரு. என் அத்தையின் திருமண நலுங்கில் அவர் இந்த பாடலை தான் பாடினார்... சட்டென்று மாமாவும் சேர்ந்து பாடி அந்த இடமே கலகலப்பாக இருந்தது, ஆக அவர்களுக்கு மட்டும் அல்ல, எங்களுக்கும் its a sweet memory



5. பூமேல வீசும் பூங்காற்றே – எச்சில் இரவுகள்

பொதுவா எல்லா A.S பிரகாசம் படங்கள் எல்லாமே கொஞ்சம் அறுவையாதான் இருக்கும் (உம் – ஆள பிறந்தவன், பகவதிபுரம் ரயில்வே கேட் ) ஆனாலும் அவர் படத்துக்கு பாடல்களா இருக்கட்டும் இல்லே re-recording ஆ இருக்கட்டும் ஒரு மகேந்த்ரனுக்கு போடறா மாதிரியோ இல்ல பாலு மகேந்திராவுக்கு போட்றமாதிரியோ தான் வஞ்சனையில்லாமல் வழங்குவார் ராஜா. பிச்சைகார கதாநாயகனுக்கு கம்பீரமான யேசுதாஸ் குரல் :-)






சிறப்பு நேயர் தொடருக்கு இதுவரை தங்கள் ஆக்கங்களை அனுப்பி வைக்காதோர் முத்தான ஐந்து பாடல்களைத் தெரிவு செய்து அதற்கான விளக்கங்கள், ஏன் பிடிக்கும் போன்ற விபரங்களோடு அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி kanapraba@gmail.com

Wednesday, August 5, 2009

சிறப்பு நேயர் "G3 புகழ் காயத்ரி"

மற்றவர்களை மனம் விட்டுப் பாராட்டுங்கள் அவர்களுக்கு உங்கள் மேல் மரியாதை இன்னும் அதிகமாகும் என்பதோடு கூடவே உங்களிலும் நல்ல பண்பை விதைப்பீர்கள் என்பார்கள். இந்த வாரம் முத்தான ஐந்து பாட்டுக்களோடு வந்திருக்கும் பயமறியாப் பாவை G3 இதற்கு நல்ல எடுத்துகாட்டு போல மற்றவர்களை மனம் விட்டு பதிவுகள் மூலம் பாராட்டுவதில் நல்லதொரு முன்னுதாரணமாக இருக்கின்றார். தமிழ்மணத்தின் உறுப்பினர் பட்டியலில் அனேகமாக எல்லோரின் பிறந்ததினங்களையும் மனதில் வைத்து அவரவர் குணாதிசியங்களைப் பகிர்ந்து வாழ்த்துத் தெரிவிப்பது என்பது எவ்வளவு பெரிய விஷயம். அதைச் சலிக்காமல் அலுக்காமல் செய்வதில் G3 ஓர் எடுத்துக்காட்டு. சன் டிவியில் சனி காலை 6.40 க்கு ஒளிபரப்பாகும் "பிறந்த நாள் வாழ்த்து" நிகழ்ச்சியின் இன்னொரு வடிவம் இவர்.
இவரின் எழுத்துப் பாணி, இன்னொரு பதிவுலக சிங்கி, சமீபத்தில் காணாமல் போன "மைபிரண்டை" ஏனோ எனக்கு நினைவு படுத்தும். செப்டெம்பர் 2006 இல் இருந்து பதிவுலகை அமைதியாக இருந்து கலக்கி வரும் G3 அவ்வப்போது கவிதைகளை எழுதி விட்டு "கவிதை முயற்சி" என்று லேபல் வைப்பது இவரின் தன்னடக்கத்துக்கு ஓர் எடுத்துக்காட்டு. பதிவுலகுக்கு வந்து எழுத ஆரம்பித்த போது தமிழ் தட்டச்சு வராமலோ என்னவோ தமிங்கிலிஷில் தன் முயற்சியை ஆரம்பித்து பின்னர் நாளாக தமிழ் தட்டச்சிலே தேர்ச்சி பெற்று தன் "பிரவாகம்" வலைபதிவோடு, கூட்டு வலைபதிவுகளான தேன் கிண்ணம், பயமறியா பாவையர் சங்கம், கானக்கந்தர்வன், சுவரொட்டி போன்றவற்றிலும் இணைந்து செயற்படுபவர். அவ்வப்போது ஆங்கிலத்தில் அரிய தன்னம்பிக்கை தரும் விஷயங்களைப் பகிர்ந்து வாசகர்களின் எதிர்ப்பைச் சம்பாதித்தாலும் G3 இடம் பன்முகப்பட்ட ரசனை இருக்கிறது என்பதற்கு அவர் தெரிவு செய்த முத்தான ஐந்து கலவையான பழைய, புதிய பாடல்களே சான்று, சரி இனி G3 பேசட்டும்.

1. தெய்வம் படத்திலிருந்து - திருச்செந்தூரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம்.

முதல்ல பக்திப்பாடல்ல இருந்து ஆரம்பிப்போம். உனக்கு பிடித்த கடவுள் யாருனு கேட்டா கொஞ்சம் கூட யோசிக்காம சொல்ற பதில் பிள்ளையார் / சிவன் னு தான். ஆனா திரைப்படங்கள்ல வந்த பக்திப்பாடல்கள்லனு பாத்தீங்கனா மனசுல பளிச்சுனு நிக்கறது முருகர் / அம்மன் பாடல்கள் தான். அதுலயும் தெய்வம் படத்துல முருகரோட அறுபடை வீட்டுக்கும் ஒவ்வொரு பாட்டு இருக்கும். அதுல 2-3 பாடல்கள் ரொம்பவும் பிடிக்கும்னாலும் எங்கப்பாவுக்கும் பிடிச்ச திருச்செந்தூரின் கடலோரத்தில் பாட்டு தான் இப்ப கேட்கபோறது.

"கோவிலின் அருகினில் கூடிய கூட்டங்கள், தலையா கடல் அலையா?
குழந்தைகள் பெரியவர் அனைவரை இழுக்கும், குமரனவன் கலையா?

"நம்பியவர் வந்தால்... நெஞ்சுருகி நின்றால்...
கந்தா.... முருகா.... "

டி.எம்.எஸ் & சீர்காழி குரல்ல இந்த வரிகளை கேட்கும்போது ஏற்படும் பரவசம் இருக்கே.. சான்ஸே இல்லங்க :-))))))



2. பசங்க படத்திலிருந்து ஒரு வெட்கம் வருதே வருதே

சமீபத்தில் வந்த பாடல்கள்ல பாடல் வரிகள் + காட்சியமைப்பு ரெண்டுமே அற்புதமா இருந்த பாடல்கள்ல இதுவும் ஒன்று. ஆரம்பத்துல டீ.வி.ல பாக்கறப்போ எல்லாம் பாடல் வரிகள் என்னனு கவனிக்கனும்னு நினைச்சாலும் காட்சிகள்ல கவனம் சிதறிடும். காதலி கேட்டதும் அவளுக்காக போய் அல்லி பூவ பறிச்சிட்டு வந்து குடுக்க நம்ம ஹீரோயின் அதை முகர்ந்து பாத்துட்டு கேவலமா இருக்குனு திரும்ப தூக்கி போட ஹீரோ முகம் தொங்க போட்டுக்குவாரு. அதே மாதிரி கோவில்ல சாமி கும்பிட மறந்து வெறும் கைல போட்டோ பிடிக்கற மாதிரி முயற்சி செஞ்சிட்டு நெத்தியில அடிச்சிக்கறதும், புளியம்பழம் சாப்டுட்டு சூப்பரா ஒரு ரியாக்ஷன் குடுக்கறதும்னு காட்சிகள் எல்லாமே சிறுகவிதை மாதிரி இருக்கும் :-)))))

"மேலும் சில முறை
உன் குறும்பிலே நானே தோற்கிறேன்"

"கேட்டு வாங்கிக் கொள்ளும் துன்பம்
கூறுப்போட்டுக் கொள்ளும் இன்பம்
பட பட படவெனவே துடித்துடித்திடும் மனமே
வர வர வரக்கரைத்தாண்டிடுமே"

"வழிகளில் ஊர்கோலம் இதுவரை நான் போனோம்
நிகழ்கிறதே கார்க்காலமே நனைந்திடுவோம் நாள்தோறுமே"



3. சுமைதாங்கி படத்திலிருந்து மனிதன் என்பவன் தெய்வமாகலாம்

பழைய பாடல்கள்ல நிறைய விரும்பி கேட்கறதுனு சொன்னா அது நிறைய கண்ணதாசன் பாடல்களா தான் இருக்கும். பெரிய பெரிய விஷயங்கள ரொம்ப அசால்ட்டா சொல்லியிருப்பாரு. அப்படிப்பட்ட ஒரு பாட்டு தான் இது.

”மனம் இருந்தால் பறவை கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையைக் காணலாம்”

”துணிந்துவிட்டால் தலையில் எந்த சுமையும் தாங்கலாம்
குணம்! குணம்! அது கோவிலாகலாம்...”



4. வெள்ளித்திரை படத்திலிருந்து விழியிலே எனது விழியிலே

இந்த பாடல் படத்துல வரலைனு நினைக்கறேன். இதோட இன்னொரு வெர்ஷனான உயிரிலே பாட்டு தான் படத்துல இருக்கு. சித்ராவோட குரல்ல அப்படியே கேக்கறவங்களுக்கு சோகத்தை அள்ளித்தரும் பாடல் இது.

"இங்கு வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்
உன் கையோடு கைசேரத்தான்
உன் உருவம் இல்லை என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலைதூரம் தான்"

"ஏன் இந்த சாபங்கள் நான் பாவம் இல்லையா"



5. பாண்டவர் பூமி படத்திலிருந்து விரும்புதே மனசு விரும்புதே

இந்த காலத்துல தனியா ஒரு வீடு வாங்கனும்ங்கறது பலரோட கனவு. அதுல அவங்க விரும்பற மாதிரி பல விஷயங்கள் பண்ணனும்னு ஆசைப்படுவாங்க. அந்த மாதிரி பாண்டவர் பூமி படத்துல அவங்க கட்டப்போற வீடு எப்படியெல்லாம் இருக்கனும்னு கற்பனை செஞ்சு பாடற மாதிரி ஒரு பாடல். ஏனோ இந்த பாடல் படத்துல வரலை. ஆனா பாடல் வரிகள் நமக்கும் இப்படி ஒரு வீடு இருந்தா சூப்பரா இருக்குமேனு ஏங்க வைக்கும் பாடல் :)

”இந்த வாசல் வந்தால் கோபம் தீரும்படி
வீசும் காற்றில் ஆயுள் கூடும்படி
பேசும் வார்த்தை கவிதையாகும்படி
விரும்புதே...”

”நல்லோர் கண்கள் கண்டு போற்றும்படி
பொல்லார் மனசும் நின்று வாழ்த்தும்படி
எல்லா உறவும் வந்து வாழும்படி
விரும்புதே..”



*******************

இத்துடன் எனக்கு குடுத்த ஐந்து பாடல்களுக்கான இட ஒதுக்கீடு முடிவடைவதால் நான் அனைவருக்கும் (முக்கியமாக கானா பிரபாவிற்கு) நன்றி கூறி விடைபெற்றுக்கொள்கிறேன் :-))))))

Sunday, August 2, 2009

"முள்ளும் மலரும்" இசைத்தொகுப்பு

"ஒரு நல்ல வாகான, சிற்பவேலைப்பாட்டுக்கேற்ற பாறை ஒரு சிற்பிக்குக் கிடைக்கிறது. பிறகு அவர் அந்தப் பாறையைக் கொண்டு அழகிய ஒரு சிலையை வடிப்பதற்காக அந்தப் பாறையின் தேவையற்ற பகுதிகளைக் களைந்து விட்டு, தனது கற்பனையால் கைவண்ணத்தால் அந்தப் பாறையை உருமாற்றி எல்லோரும் பாராட்டும் அழகிய சிலையாக எப்படி வடிவமைக்கிறார். அப்படிதான் ஒரு நாவலைத் திரைப்படம் ஆக்கும் கலையும்" இப்படிச் சொல்கிறார் சினிமாவும் நானும் என்னும் தனது நூலில் இயக்குனர் மகேந்திரன்.

முள்ளும் மலரும் திரைப்படம் 1978 ஆம் ஆண்டு ரஜினிகாந்த், சரத்பாபு, ஷோபா, படாபட் ஜெயலஷ்மி போன்றோரின் நடிப்பில் வெளிவந்தது. ஒளிப்பதிவு பாலுமகேந்திரா. தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவரான மகேந்திரனின் முதல் திரைப்படம்.


"முள்ளும் மலரும்" நாவலை நான் படித்த போது கதாபுருஷன் "காளி" வேலை செய்யும் Winch operator உத்தியோகமும் அவனுடைய வித்தியாச சுயகெளரவமும் என்னைக் கவர்ந்தன. நாவலில் காளியை புலி ஒன்று தாக்கி அவனது ஒரு கை போய் விடும். அந்த அத்தியாயத்தோடு நாவலை மூடி வைத்து விட்டேன். பிறகு காளி அவனது தங்கை வள்ளி இருவரின் குழந்தைப் பருவம் என்று ஒவ்வொன்றாகப் புதிது புதிகாகச் சேர்த்துக் கொண்டே போய் திரைக்கதையின் கடைசிக் காட்சி வரை என் விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி திரைக்கதை எழுதி முடித்து விட்டேன். அப்போது நான் இயக்குனராகும் எண்ணத்திலேயே இல்லை" இப்படியாக இருந்த மகேந்திரனுக்கு அவரின் குடும்ப நண்பர் ஆனந்தி பிலிம்ஸ் வேணு செட்டியாரின் அறிமுகம் மூலம் இந்தக் கதையையே தன் முதல் திரைப்படமாக உருவாக்க ஆரம்பித்தார்.

கமல்ஹாசனின் பரிந்துரையில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவாளராக நியமிக்கப்பட்டதாகச் சொல்லும் மகேந்திரன் படத்தின் பின்னணி இசையின் முக்கியத்துவம் கருதி இளையராஜாவை ஒப்பந்தம் செய்ததாக சொல்கிறார்.

படத்தின் இறுதிக் காட்சியில் அண்ணன் காளி (ரஜினி) பெருமை பிடிபடாது தன் தங்கையை (ஷோபா) வை அழைத்துக் கொண்டு வந்து மணமகன் (சரத்பாபு) முன்னே வந்து" இப்ப என் தங்கச்சியை உங்களுக்கு மனைவியாக்க சம்மதிக்கிறேன். ஆனா இப்பவும் உங்களை எனக்கு பிடிக்கலை" என்று சொல்வார். இந்தக் காட்சி படமாக்கும் போது சரத்பாபுவை காணவில்லையாம். தேடிப்பிடித்துக் கூட்டி வந்தால் "அதெப்படி இப்பவும் இந்த ஆள் இப்பவும் எனக்குப் பிடிக்கலை என்று சொல்லலாம்" என்று சொன்னாராம். பின்னர் மகேந்திரன் அவருக்கு புரிய வைத்துப் படத்தை எடுத்தாராம்.

படத்தை ரீரிக்கார்டிங் செய்வதற்கு முன்னர் பார்த்த தயாரிப்பாளர் வேணுச்செட்டியார் "அடப்பாவி என் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுட்டியே, படத்துல வசனமே இல்ல" என்று திட்டித் தீர்த்தாராம். ஓடாத படத்துக்கு விளம்பரம் தேவை இல்லை என்றும் ஒதுங்கிவிட்டாராம். படம் நூறு நாள் கண்டபோது blank chequeகை எடுத்து வந்து "மகேந்திரா,என்னை மன்னிச்சுக்கோ" என்றபோது அன்பாக மறுத்துவிட்டாராம் மகேந்திரன்.

இளையராஜா தன் முதன்முறையாக தன் பின்னணி இசையின் ஆழமான ஞானத்தை வெளிப்படுத்திய படம் "முள்ளும் மலரும்" என்கிறார் மகேந்திரன்.

இந்தப் படத்தின் பின்னணி இசைக் கோர்ப்புக்காகப் பார்த்த போது உண்மையிலேயே ஒரு கோடு போல உள்ள கதையை சுவாரஸ்யமான காட்சி அமைப்புக்களோடும் ரஜினி, ஷோபா, படாபட் போன்றோரின் இயல்பான நடிப்பிலும் கவரவைக்கிறார் இயக்குனர். ஒளிப்பதிவும் உறுத்தல் இல்லாத பாலுமகேந்திரமாக இருக்கிறது. இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான காளி, வள்ளி போன்றவை பின்னாளில் ரஜினியின் படங்களின் தலைப்பாக வந்தமை குறிப்பிடத்தக்கது. படாபட், ஷோபா இருவருமே சில வருஷங்களின் பின் தற்கொலை செய்ததும் நடிப்புலகின் துரதிஷ்டம்.

படத்தின் ஆரம்பத்தில் இளையராஜா படும் "மானினமே" பாடலின் இசையே படத்தில் பெரும்பாலும் பின்னணி இசையாகத் தூவ விடப்பட்டிருக்கிறது. இனி "முள்ளும் மலரும்" இசைத் தொகுப்பை அனுபவியுங்கள்

ஆரம்ப பாடலாக காளி, சகோதரி வள்ளி ஆகியோரின் பாசத்தை காட்டும் "மானினமே" பாடல்



படத்தில் அதிகம் இடம்பிடித்திருக்கும் நெகிழ்வான பின்னணி இசை, இந்த இசை மகேந்திரனின் அடுத்த படைப்பான "உதிரிப்பூக்கள்" படத்தில் வரும் "அழகிய கண்ணே உறவுகள் நீயே" பாடலை நினைவு படுத்துகின்றது.



ஊரில் அடைக்கலமாகும் மங்கா(படாபட்) இற்கு காளியின் தங்கை வள்ளி அடைக்கலம் கொடுத்து விட்டு அண்ணனை சமாளித்தல் மானினமே பாடலின் இசை பயன்படுத்தபட்டிருக்கிறது.




காளி (ரஜினி) கோயிற்குளத்தில் மீன்களுக்கு பொரி போடுதல், பாகுபாடின்றி எல்லோரும் உதவும் காளி என்ற பாத்திரம் என்பதை உவமை பொருந்தக் காட்டும் காட்சி. கிட்டார் மட்டும் உபயோகப்படுத்தப்பட்டிருக்கிறது.



காளியை (ரஜினி) சீண்டும் இன்ஜினியருக்கு (சரத்பாபு) பாடம் படிப்பிக்க, இழுவை இயந்திரத்தை பாதியில் நிறுத்துக் காட்சி



இன்ஜினியர் பாத்திரம் பாடும் "செந்தாழம் பூவில்"


வேலையில் இருந்து பத்து நாள் இடைமறிப்பு செய்த ஆத்திரத்தில் குடித்து விட்டு காளி பாடும் "ராமன் ஆண்டாலும்"



மங்காவுக்கும் காளிக்கும் திருமணம் நடந்து முடிந்த இரவில் "நித்தம் நித்தம் நெல்லுச் சோறு"



வள்ளிக்கு என்ஜினியர் மேல் வரும் காதல் "அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை"



காளியின் முரட்டுப் பிடிவாதம், ஆத்திரம், பாசப்போராட்டம், இயலாமை எல்லாம் கலக்க இசை ஆர்ப்பரிப்பில் படத்தின் இறுதிக் காட்சி