
ஜீன் 2 ஆம் திகதி, இசைக்கு இலக்கணம் வகுத்த பண்ணைப்புரத்தில் பிறந்து உலகை ஆளும் எங்கள் இசைஞானி இளையராஜாவுக்குப் பிறந்த நாள். இன்பம், துன்பம், காதல் , பிரிவு, கல்யாணம், துறவு எல்லாவற்றுக்குமே தன் இசை நாதத்தால் இலக்கணம் வகுத்து இன்னும் எம்மை ஆள்பவர். பட பூஜைகளில் பிரமாண்டமான நோட்டீஸ், பதாதைகள் பட வெளியீடுகளில் நாயகனை மிஞ்சும் கட்அவுட் விளம்பரங்கள், இளையராஜா பேரைச் சொன்னாலே முழுதும் விற்றுப்போகும் படப்பெட்டிகள், இவையெல்லாம் இதுவரையும் இனிமேலும் யாருக்கும் கிட்டாத சிம்மாசனம், அதையெல்லாம் கடந்து பலகோடி ரசிகப்பெருமக்களின் நெஞ்சமெனும் சிம்மாசனத்தில் நீக்கமற நிறைந்திருக்கும் இளையராஜா என்னும் ராகதேவனைப் போற்றிப் புகழக் கூட அவர் பாடிய பாடலைத் தவிர வேறு தெரிவுகள் உண்டா என்ன?

அறுபத்தேழு அகவை தொடும் ராகதேவனே வாழிய நூறாண்டு, உன் கடைசித்துளி வியர்வையும் ஒரு மெட்டாக உதிரட்டும்.
பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுபட்டேன் - அந்தப்
பாட்டுக்கள் பலவிதம் தான்
காளையர்கள் காதல் கன்னியரை
கவர்ந்திடப் பாடல் கேட்டார்கள்
ஏழைகளும் ஏவல் அடிமைகளாய்
இருப்பதைப் பாடச் சொன்னார்கள்
கதவோரம் கேட்டிடும் கட்டில் பாடலை
மெட்டுப் போடச் சொன்னார்கள்
தெருவோரம் சேர்ந்திட திருவாசகம்
தேவாரம் கேட்டார்கள்
நான்படும் பாடுகள் அந்த ஏடுகள்
அதில் எழுதினாலும் முடிந்திடாது
பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுபட்டேன் - அந்தப்
பாட்டுக்கள் பலவிதம் தான்
பூஜையில் குத்துவிளக்கை ஏற்றவைத்து
அதுதான் நல்லதென்றார்கள்
படத்தில் முதல் பாடலைப் பாடவைத்து
அதுநல்ல ராசியென்றார்கள்
எத்தனையோ பாடுகளை அதைப்பாடல்களாய்
நான் விற்றேன் இதுவரையில்
அத்தனையும் நல்லவையா அவௌ கெட்டவையா
நான் அறியேன் உண்மையிலே
எனக்குத்தான் தலைவர்கள் என் ரசிகர்கள்
அவர் விரும்பும் வரையில் விருந்து படைப்பேன்
பாட்டாலே புத்தி சொன்னார்
பாட்டாலே பக்தி சொன்னார்
பாட்டுக்கு நான் பாடுபட்டேன் - அந்தப்
பாட்டுக்கள் பலவிதம் தான்

இதுவரை றேடியோஸ்பதி மூலமாக இசைஞானி இளையராஜாவின் 22 படங்கள் வரை பின்னணி இசைத்தொகுப்பாகக் கொண்டு வந்திருக்கின்றேன். என் ஆயுள் முடிவதற்குள் இன்னும் என்னால் முடிந்த அளவுக்கு இந்த இசைப்பிரிப்பை, பல மணி நேரம் பிடிக்கும் வேலை என்றாலும் கொண்டு வர ஆசை. அதை விடப் பேராசை என்னவென்றால் ராஜாவால் உருவாக்கப்பட்ட எத்தனையோ ஆயிரம் பின்னணி இசைத்துண்டங்களை நவீன தொழில்நுட்பம் மூலம் மேம்படுத்தி அவை இசைவட்டுக்களாக வெளிவந்து சந்தையை நிரப்பி உலகெலாம் பரவ வேண்டும் என்பதே.
இதுவரை தொகுத்த பின்னணி இசைத் தொகுப்புக்களில் என்னைக் கவர்ந்த சில முத்துக்கள்
என்னுயிர்த் தோழன் - பின்னணி இசைத்தொகுப்பு
கள்ளமாக மறைந்திருக்கும் பார்க்கும் காதலியை அடியொற்றிய இசை (அட்டகாசமான இசைக்கலவை)
அபூர்வ சகோதரர்கள் பின்னணி இசைத் தொகுப்பு
எழுத்தோட்டத்தின் பின்னணியில் கமல், ஸ்ரீவித்யா வில்லன்களிடமிருந்து தப்பிக்கும் காட்சிக்கு வரும் வேக இசை (ட்ரம்ஸ் மற்றும் பல வாத்தியக் கலவை)
"கடலோரக் கவிதைகள்" - பின்னணி இசைத்தொகுப்பு
இந்தப் படத்தின் இறுதிக் காட்சி இசை என்னை வியக்க வைக்கின்றது. கிட்டத்தட்ட 10 நிமிடங்களுக்கு மேலாக எந்தவிதமான வசனங்களும் இல்லாமல் வெறும் இசைக்கலவையோடு மட்டுமே பின்னப்பட்டு, வாத்தியக் கலவைகளின் நர்த்தனம் அழகிய பிரவாகமாகப் பெருக்கெடுக்கின்றது. அடி ஆத்தாடி பாடலின் இன்னொரு வாத்தியக் கோர்வையும் கலந்து இங்கே வயலின் உட்பட பல வாத்தியங்களில் அந்த மெட்டு இசைக்கப்படுகின்றது.
"ஆண்பாவம்" பின்னணி இசைத்தொகுப்பு
பாண்டியன் கொடுத்த கைக்கடிகாரத்தை சீதா தண்ணீர் குடத்தில் மறைத்து அவஸ்தை
"முதல் மரியாதை" பின்னணி இசைத் தொகுப்பு
பெரியமாப்பிளையும் (சிவாஜி), பரிசல்காரியும் (ராதா) போட்டிக்கு மீன்பிடித்தல், இருவரும் சேர்ந்து முயற்சி செய்யும் போது வரும் மீன் குவியலோடு பின்னணி இசை, கூடவே"என்ன சொல்லுவேன் என்னுள்ளம் தாங்கல"
"நெற்றிக்கண்" பின்னணிஇசைத்தொகுப்பு
தந்தை ரஜினி சில்மிஷ மன்னர் என்பதைக் காட்ட குறும்போடு வரும் இசை முன்னதில் இருந்து வேறுபட்டது. 2.30 நிமிடங்களுக்கு வசனமே இல்லாமல் இவரின் அறிமுகக் காட்சி இசையாலேயே நிரப்பப்பட்டிருக்கின்றது.
"நிறம் மாறாத பூக்கள்" பின்னணிஇசைத்தொகுப்பு
படத்தின் முகப்பு இசை, ஆயிரம் மலர்களே சங்கதியோடு கலக்கும் சிறப்புப் படையல்
"குணா" பின்னணிஇசைத்தொகுப்பு
முதன் முதலில் ஆலயத்தில் அபிராமியைக் காணல்
