Pages

Thursday, May 31, 2007

நீங்கள் கேட்டவை 7



வணக்கம் நண்பர்களே

நீங்கள் கேட்டவை 7 பகுதியில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைய நிகழ்ச்சியிலும் ஏற்கனவே பாடற் தெரிவைக் கேட்ட அன்பர்களின் விருப்பப்பாடல்கள் இடம்பெறவிருக்கின்றன.முதலில் வழமை போல் என்விருப்பப் பாடல் ஒன்று. இன்றைய என் விருப்பப் பாடலாக வருவது "புவனா ஒரு கேள்விக்குறி" திரைப்படத்தில் இருந்து எஸ்.பி பாலசுப்ரமணியம் பாடும் "விழியிலே மலர்ந்தது" என்ற பாடல். பாடலுக்கான இசை இசைஞானி இளையராஜா. இளையராஜாவின் ஆரம்பகால இசையில் வந்த இந்தப் பாடலில் வித்தியாசமான நெளிவு சுழிவு மெட்டோடு பாலசுப்ரமணியம் பாடியிருப்பார். கடந்த வாரம் வீணைக் கலைஞர் ராஜேஷ் வைத்யாவின் இசைக்கச்சேரி பார்த்துவிட்டு வரும் போது அவர் வீணையில் இசைத்த இந்தப் பாடல் கொண்ட இசைத் தட்டையும் வாங்கினேன். நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்தப் பாடலைக் கேட்க வேண்டும் என்று தூண்டிவிட்டது அவர் மீள் இசையாகக் கொடுத்திருந்த விதம். இதோ என்னோடு சேர்ந்து நீங்களும் கேட்டு இன்புறுங்கள்.


இன்றைய நீங்கள் கேட்டவை பகுதியிலே இடம்பெறும் பாடல்கள் இதோ:
வல்லி சிம்ஹனின் விருப்பத் தேர்வில் நாடோடி மன்னன் திரைக்காக பி.பானுமதி பாடிய "சம்மதமா" என்ற பாடல். பாடல் இசை எஸ்.எம்.சுப்பையா நாயுடு

இந்துமகேஷ், விப்ரநாராயணா திரைப்படத்திற்காக ஏ.எம்.ராஜா பாடிய "மலரின் மதுவெல்லாம்" என்ற பாடலை விரும்பிக் கேட்டிருக்கின்றார். இந்தப் படத்தின் இசை எஸ்.ராஜேஷ்வர ராவ்

சிவாவின் விருப்பமாக நிழல் நிஜமாகிறது படத்திலிருந்து எஸ்.பி.பாலசுப்ரமணியம், எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் "கம்பன் ஏமாந்தான்" பாடலைப் பாடுகின்றார்.

ஜெய்சங்கரின் விருப்பப் பாடலாக ஆவாரம் பூ திரைப்படத்திற்காக "ஆலோலம் பாடி" என்ற பாடலை இசையமைத்துப் பாடுகின்றார் இளையராஜா.

நண்பர்களே!
அடுத்த சுற்றுக்கான உங்கள் பாடல் தெரிவுகளை அனுப்பிவையுங்கள் அவை தொடர்ந்த வாரங்களில் இடம்பெற இருக்கின்றன.
என் விருப்பப் பாடல்


நீங்கள் கேட்டவை 7 பாடல்கள்
Powered by eSnips.com

சிவாஜி பட முழுமையான பாடற் காட்சி ஒன்று

இனிமையான இசையும், குரலும் இணைந்து பயணிக்கும் பாடல்

Wednesday, May 30, 2007

யாழ் சீலனின் கிற்றார் இசை - பாகம் 2



இசைக்கோலம் பகுதியில் யாழ் சீலனின் கிற்றார் இசை 2 ஆம் பாகம் இடம்பெறுகின்றது. 80 களின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணத்தில் வைத்து ஒலிப்பதிவு செய்யப்பட்ட இவ்விசையின் இன்றைய படையலாக பயணம் திரைப்படத்திலிருந்து "என் தேவனே உன்னிடம்", பகலில் ஓர் இரவு திரைப்படத்தில் இருந்து "இளமை எனும் பூங்காற்று", புதிய பறவை திரைப்படத்திலிருந்து "எங்கே நிம்மதி" ஆகிய பாடல்களின் மீள் இசை சீலனின் கிற்றாரில் இருந்து ஒலிக்கின்றது. கேட்டு மகிழுங்கள்

Friday, May 25, 2007

Cheeni Kum - ராஜாவுக்காகப் பார்த்த படம்




பொதுவாகவே தமிழ், மலையாளம் தவிர்த்து எனக்கு மற்றைய இந்திய மொழிப்படங்களைப் பார்க்கத் தூண்டுவதற்கு முதற்காரணம் இளையராஜாவின் இசை. ராஜா எப்படி இசையமைத்திருக்கின்றார் (பின்னணி இசை உட்பட) பாடல்கள் எப்படிப் படமாக்கப்பட்டிருக்கின்றன போன்ற அம்சங்களைத் தீரா ஆவலோடு பார்க்கத்தூண்டும். அப்படித்தான் இன்று நான் பார்க்க வேண்டும் என்று நினைத்துத் தியேட்டர் போய் முதல் ஷோவே பார்த்துவிட்டு வந்திருக்கும் படம் Cheeni Kum. இந்தத் தலைப்புக்கு சீனி கம்மி என்று அர்த்தமாம். இளையராஜாவின் இசை, பி.சி.சிறீராம் முதற்தடவையாக ஒளிப்பதிவு செய்த படம், கூடவே தமிழரான பால்கி என்ற பாலகிருஷ்ணன் இயக்கிய படம் போன்றவையும் இந்தப் படத்தைப் பார்க்கத் தூண்டிய ஒட்டுமொத்த அம்சங்கள்.



சிட்னியில் ஒரு வருஷத்துக்கு முன்பு வரை இந்தியர்களால் ஒன்றிரண்டு தியேட்டர்களை வாடகைக்கு எடுத்து இரண்டு மூன்று நாட்கள் மட்டுமே ஒட்டிய ஹிந்திப்படங்கள் இப்போது ஆங்கிலப்படம் ஓடும் பெரும்பாலான தியேட்டர்களில் தினசரிக்காட்சியாக ஒரு மாதமளவிற்கு ஓடும் நிலை வந்திருப்பது பாலிவூட்காரர்களின் சந்தைப்படுத்தல் எவ்வளவு விசாலமாகியிருக்கின்றது என்பதற்கு உதாரணம். இணையத்திலும் தியேட்டர்காரர்கள் ஹாலிவூட், பாலிவூட் என்று பிரித்துக் காட்சி விபரங்கள் போடுமளவுக்கு முன்னேற்றம். நான் போன தியேட்டரில் ஒரு நூறு இருக்கைகள் இருக்கும் முக்கால்வாசி இருக்கைகள் நிரம்பியிருந்தன. அதில் பாதிக்கு மேல் Student Visa க்கள் தான். அதில் பாதிப்பேர் படம் தொடங்குவதற்கு முன்பே "துள்ளுவதோ இளமை" ஸ்பெஷல் காட்சி ஆரம்பித்திருந்தார்கள். கொட்டாவி விட்டுக்கொண்டே படம் தொடங்கும் வரை காத்திருந்தேன்.



Cheeni Kum தொடங்கியது. ஒரு சில நிமிடங்கள் இசையற்ற காட்சியமைப்பில் லண்டனில் உள்ள உயர்தர இந்திய உணவகமான Spice 6 இன் சமையலறைக்காட்சி, கண்டிப்பான Chef மற்றும் உரிமையாளரான அமிதாப் பச்சனின் குணாதியசம் காட்டப்படுகின்றது. வேலையாட்களிடம் சுரீரென்று எரிந்து விழும் பாத்திரமாக அவரை அறிமுகப்படுத்திய கணத்தில் ராஜாவின் பின்னணி இசைக் கைவரிசை ஆரம்பிக்கின்றது.

64 வயதான லண்டன் வாழ் இந்திய உணவக Chef மற்றும் உரிமையாளரான அமிதாப் பச்சனின், லண்டனுக்கு சுற்றுலா வந்திருக்கும் 34 வயதான தபு மேல் காதல் கொள்கிறார். தபுவும் தொபுகடீர் என்று காதல் கிணற்றில் விழுகின்றார். இருவரும் கல்யாணம் செய்யமுடிவெடுத்து இந்தியாவில் இருக்கும் தபுவின் தந்தை பரேஷ் ராவலிடம் சம்மதம் வேண்ட நினைக்கும் போது எதிர்நோக்கும் சிக்கல் தான் படத்தின் கதை. தபுவின் தந்தைக்கோ வயது 58, மாப்பிளையாக வர நினைப்பவருக்கு வயது 64, ஏற்கவே கஷ்டமாக இருக்கிறதல்லவா?



முதிர் வயசுக்காதலை ஒன்றில் முதல் மரியாதை பாணியில் சீரியசாகக் கொடுக்கலாம், அல்லது அடிதடி (சத்தியராஜின்) பாணியில் நகைச்சுவை கிண்டிக்கொடுக்கலாம். Cheeni Kum இரண்டாவது வகையறாவான நகைச்சுவை கலந்த படையல். கண்டிப்பான ஒரு மனிதன் காதலில் விழுந்ததும் என்னமாய்க் கரைகிறார் என்பதை அழகான காட்சியமைப்புக்களோடு அமிதாப்பின் நடிப்பும் சேர நிறைவாக இருக்கின்றது. ஹைதரபாத் பிரியாணி சர்ச்சையில் ஆரம்பித்து மெல்ல நட்பாகிக் காதலாகிக் கனியும் அமிதாப், தபுவின் காதலும் பார்க்க நன்றாக இருக்கின்றது. ஆனால் மேலோட்டமாகத் தூவியது போல ஆழமில்லை. ராஜாவின் பாட்டுக்கள் தான் காதலைக் காட்டக் கைகொடுத்து உதவுகின்றன. "விழியிலே மணி விழியிலே" என்ற தமிழ்ப்பாடல் ஹிந்தி மொழி பேசி "ஜானே டோனா" என்ற பாடலாக்கப்பட்டு ஷ்ரேயா கொசலின் குரலில் இனிக்கின்றது. இந்தப்பாடலின் இசையை கனத்த காட்சிகளில் அழுத்தமான சோக இசையில் சிம்பனியாகக் காதில் பின்னணி இசை ஜாலத்தை தேனாக ஓடவிட்டிருக்கின்றார் ராஜா.

அதே போல் "மன்றம் வந்த தென்றலுக்கு" என்ற மெளன ராகம் படப்பாடல் "சீனி கம்" என்றும், மெல்லத்திறந்தது கதவு திரைப்பாடலான "குழலூதும் கண்ணனுக்கு" பாடல் சோனி சோனி என்ற ஆண், பெண் குரல் பாடல்களாக மீளவும் பழைய மெட்டில் புதிய இசைக்கலவையோடு பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்தப்படத்திற்காக "வைஷ்ணவ ஜனதே" என்ற துண்டுப்பாடல் தவிர புதிதாக எதையும் ராஜா கொடுக்கவில்லை, ஆனாலும் பயன்படுத்தப்பட்ட இந்தப் பழைய பாடல்கள் வரும் காட்சியமைப்பும் மீள் இசைக்கலவையும் அருமை. ஆனால் இடைவேளைக்கு முன்பே நான்கு பாடல்களை வெட்டிக் கொத்திப் பாதியாகத்தான் படத்தில் தந்திருக்கின்றார்கள் என்ன கொடுமை இது சார்). இடைவேளைக்குப் பின் "வைஷ்ணவ ஜனதே" யும் "ஜானே ஜானே" என்ற துண்டுப்பாடலும் மட்டும் தான்.
இடைவேளை வரை, தவிர இடைவேளைக்குப் பின் சில காட்சிகளில் ராஜாவின் பின்னணி இசை அருமை, ஏன் சார் மலையாளத்திலும் ஹிந்தியிலும் கலக்கும் நீங்கள் தமிழையும் கடைக்கண் பார்க்கக்கூடாதோ?



இந்தப்படத்தில் சதா ஜிம்முக்குப் போகச்சொல்லும் அமிதாப்பின் தாய், பக்கத்து வீட்டு Blood Cancer நோயாளியான குறும்புக்க்காரச் சிறுமி, அமிதாப்பின் உணவகத்தில் வேலைசெய்பவர்களின் நகைச்சுவை போன்றவை படத்தின் இடைவேளை வரை தூக்கி நிறுத்துகின்றன. இடைவேளைக்குப் பின் ஏனோ தானோவென்ற காட்சிகள், இருக்காதா பின்னே, இடைவேளைக்குப் பின்னான காட்சிகள் வெறும் அமிதாப்பின் இந்தியப்பயணத்தில் எதிர்கால மாமனாரை எப்படி வழிக்குக்கொண்டுவரலாம் என்பதாக மட்டுமே இருக்கின்றன.
மாமனார் உண்ணாவிரதம் இருப்பதும்,அந்த ஏரியாவே அல்லோலகல்லோலப்படுவதும், அமிதாப் உண்ணாவிரதத்தைத் தடுக்கமுயல்வதுமான காட்சிகள் வெறும் கேலிக்கூத்து.
பால்கி! தமிழனோட பெருமையைக் காப்பாத்துங்கப்பா.

ஆனாலும் இடைக்கிடை, தன் மாமனாரிடம் பெண் கேட்க முயற்சிப்பதும், அவரோ வயசு போனவர்கள் எப்படி நடக்கவேண்டும் என்று எதேச்சையாகப் பேசித்தொலைப்பதுமான காட்சிகள் ஓரளவு இதம்.



வெள்ளைக்குறுந்தாடி ஒன்றை வைத்துக்கொண்டு அமிதாப் என்னமாய் ஒவ்வொரு படத்திலும் புதுமையான பாத்திரங்களைத் தருகின்றார். தன்னை இளமையாகக் காட்ட இவர் எத்தனிக்கும் ஓவ்வொரு செயலும் யதார்த்தம். இவருக்கு இந்தப்படம் ஒரு முதல் மரியாதை போல என்று ஓரளவுக்குச் சொல்லலாம்.

34 வயசுப் பெண் பாத்திரத்துக்கு தபு தேறுகிறார், கடைசியாய்க் "காதல் தேசம்" படத்தில் பார்த்தது, இன்னும் இளமை மிச்சம் இருக்கிறது இவரிடம். கண்களே அதிகம் பேசுகின்றன.

படம் நகைச்சுவையிலேயே முழுதுமாகப் பயணிப்பதால் குறும்புக்காரச் சிறுமி கான்சரால் இறப்பதும் அமிதாப் குமுறுவதும் பாதிப்பை ஏற்படுத்தத காட்சியமைப்புக்கள். ராஜாவும் இடைவேளைக்குப் பின் மாயக்கண்ணாடி வேலைகளுக்குப் போய்விட்டார் போல, பின்னணி இசைமுற்பாதியில் செய்த ஜாலம் பிற்பாதியில் இல்லை. பி.சி.சிறீராமின் ஒளிப்பதிவில் லண்டன் காட்சிகள் ஹாலிவூட் தரத்தில் இருக்கின்றன. இடைவேளைக்குப் பின் அவரும் அவுட்.

முதல் மரியாதை படத்தில் இளவட்டக்கல்லைத் தூக்குவதை நினைவுபடுத்துவது போல குதுப்மினாரில் உள்ள தூணைப் பின்பக்கமாகக் கட்டிக் கைகோர்த்தால் நினைத்தகாரியம் நடக்கும் என்ற காட்சி வருகின்றது.
மொத்ததில் இந்தப் படம் முதற்பாதியில் சீனி அளவு, மறு பாதியில் சீனி கம்(மி)

இப்படத்தின் பாடல்களைக் கேட்க

Powered by eSnips.com


பாடல் ஒன்றைப் பார்க்க



இப்படத்தின முன்னோட்டத்துண்டு

Thursday, May 24, 2007

நீங்கள் கேட்டவை 6



நீங்கள் கேட்டவை 6 பதிவிலே உங்களை வழமைபோல் சந்திப்பதில் மகிழ்ச்சி. இன்றைய நிகழ்ச்சியிலும் என் விருப்பப்பாடல் ஒன்றோடு உங்கள் தெரிவுப்பாடல்களும் இடம்பெற இருக்கின்றன. இன்றைய பதிவின் பாடல்களைக் கேட்பதோடு மட்டும் நின்று விடாது உங்கள் விருப்பப் பாடல்களையும் பின்னூட்டம் அல்லது மின்னஞ்சல் மூலமாக அறியத் தாருங்கள்.

என் விருப்பமாக அமையும் இன்றைய பாடல் "மலையோரம் மயிலே " என்ற பாடல் "ஒருவர் வாழும் ஆலயம்" திரைப்படத்திற்காக மலேசியா வாசுதேவன், சித்ரா குரல்களில், இசைஞானி இளையராஜாவின் இசையில் மலர்கின்றது. "ஒருவர் வாழும் ஆலயம்" திரைப்படத்தின் அனைத்துப்பாடல்களுமே இனிமையானவை. சிவக்குமார், பிரபு, ரகுமான் என்ற அன்றைய முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படம். சிவக்குமார் ஒரு பாடகனாக நடித்ததாலோ என்னவோ பாடல்களுக்கு ராஜா மனம் வைத்து இசையமைத்திருக்கின்றார். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் மாபெரும் சங்கீத வித்துவானான தன் எஜமானானின் மகளையே மணமுடிக்கும் வேலையாளாக பிரபு நடித்திருப்பார். பாமரனான அவர் , சங்கீதப் பாரம்பரியமிக்க குடும்பத்துப் பெண்ணான தன் மனைவியின் ஆசைக்கிணங்கத் தனக்குத் தெரிந்த வரிகளை இட்டுப் பாடலாக இப்பாடல் அமைந்திருக்கின்றது. இனிய இசையும் குரலினிமையும் இணைந்த அந்தப்பாடல் முதலாவதாக இடம்பெறுகின்றது.


இன்றைய நீங்கள் கேட்டவை நிகழ்ச்சியில் இடம்பெறும் பாடல்கள் இதோ

1. ஹரனின் விருப்பமாக சுமைதாங்கி திரைப்படத்தில் P.B.சிறீனிவாஸின் குரலில் " மனிதன் என்பவன் தெய்வமாகலாம்" என்ற பாடல். கண்ணதாசன் வரிகளுக்கு பாடல் இசை விஸ்வநாதன் ராமமூர்த்தி

2. கதிரவனின் விருப்பமாக " சிப்பி இருக்குது" என்ற பாடல் "வறுமையின் நிறம் சிகப்பு" திரைப்படத்திற்காக கண்ணதாசன் வரிகளில் எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் மலர்கின்றது

3. மாசிலா விரும்பிக் கேட்டிருக்கும் பாடல் இளையராஜாவின் இசையில் மெட்டி திரைப்படத்திற்காக " மெட்டி ஒலி காற்றோடு " என்ற பாடல், பாடலைப் பாடுகின்றார்கள் இளையராஜா மற்றும் எஸ்.ஜானகி.

4. வி.ஜெ.சந்திரனின் விருப்பமாக " கீதாஞ்சலி" திரைப்படத்திற்காக " ஒரு ஜீவன் அழைத்தது" என்ற பாடலை இசையமைத்துப் பாடுகின்றார் இளையராஜா, இணைந்த குரல் சித்ரா.

5. நிறைவாக ஷ்ரேயாவின் விருப்பமாக "சந்திர வெளிச்சத்தில்" என்ற பாடலை கோபால் சர்மா குழுவினர் பாடுகின்றார்கள். பாடல் இசை, ஆகோஷ் என்ற மூன்று இசையமைப்பாளர்கள்.

நீங்கள் கேட்டவை 6 அறிமுகம்



இதோ பாடல்கள்

Powered by eSnips.com

Tuesday, May 22, 2007

மெல்லிசை மன்னரும் சில இயக்குனர்களும் பாகம் 2



பிரபல பத்திரிகையாளர் ராணி மைந்தன் தொகுத்த "மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்" என்ற நூலை இரண்டு வருஷம் முன் சென்னை போனபோது வாங்கியிருந்தேன். அப்புத்தகத்தில் இடம்பெற்ற அம்சங்களில் தேர்ந்தெடுத்து எம்.எஸ்.விஸ்வநாதனோடு பணியாற்றிய இயக்குனர்களும், அவர்களின் படங்களில் பாடல்கள் பிறந்தபோது இடம்பெற்ற சுவையான தகவல்களையும் கோர்த்து பாடல்களோடு இணைத்து வானொலி வடிவமாக்கியிருந்தேன். அதில் முதற்பாகத்தை இங்கு தந்திருந்தேன்.
இதோ இரண்டாம் பாகம்.

இன்றைய பகுதியில் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனோடு மெல்லிசை மன்னர் பணியாற்றிய படமான "கை கொடுத்த தெய்வம்" படத்தில் இடம் பெற்ற "சிந்து நதியின் மிசை" என்ற பாடல் பிறந்த கதை நகைச்சுவையான ஒரு சேதியோடு இடம்பெறுகின்றது. என்னவென்பதை அறிய ஒலிப்பதிவைக் கேளுங்கள்.

அதனைத் தொடர்ந்து பி.மாதவனின் இயக்கத்தில் வெளிவந்த "ராஜபார்ட் ரங்கதுரை" திரைப்படத்தில் இடம்பெற்ற "மதன மாளிகையில்" என்ற பாடல் உருவான போது எம்.எஸ்.விஸ்வநாதன் போட்ட பல்வேறு ரியூன்களில் ஒன்று எப்படித் தேர்வானது என்ற விசித்திரமான சம்பவத்தையும் தொட்டுச் செல்கின்றது.
இவ்விரண்டு படப்பாடல்களும் அந்தச் சுவையான சேதிகளோடு வருகின்றன.



சம்பவக் குறிப்புக்கள் நன்றி: ராணி மைந்தன்

Friday, May 18, 2007

"அழகு" ராணிகள் Rated MA 18+



வலைப்பதிவுலகில் காலத்துக்குக் காலம் பரவும் வைரஸ் காச்சல்களாக, சங்கிலிப் பதிவு, நன்றியுள்ள நாலு பேர், சங்கிலிப் பதிவு, வியேட் பதிவு வரிசையில் அழகுப் பதிவுகளும் வந்து ஓய்ந்துவிட்ட வேளை நானும் என் பங்கிற்கு அழகு குறித்த என் பார்வையைத் தரலாம் என்றிருக்கின்றேன். ஆளாளுக்கு வானத்தை வெறிச்சுப் பார்த்தும், கடல் அலையைக் கால்கள் தொட்டுப் பார்த்தும் அழகுக் கவிதைகள் எழுதிவிட்டார்கள். நமக்கெல்லாம் கவிதைகள் சரிப்பட்டு வராது. "செய்யும் தொழிலே தெய்வம்" ( பாட்டுப் போடுறது) என்று மனசைத் திடப்படுத்திக் கொண்டு எனக்குப் பிடித்த அழகு ராணிகளைப் பற்றிச் சொல்லப் போகிறேன். முதலில் இந்த அழகுப் பதிவுக்கு என்னை இழுத்து வந்த பாலைவனத்துச் சிங்கம் கோபிநாத்துக்கு ஒரு சலாம்.

தமிழ் சினிமா நாயகிகளைக் கவர்ச்சியின் உருவமாகப் பார்த்து ஏங்கும் பதிவல்ல இது. என்னுடைய காலத்தில் கடந்து போகும் சினிமா ரசனைகளில் வழித்துணையாக வந்து போன நாயகிகளுக்கான கெளரவமாக வேண்டுமென்றால் சொல்லலாம். இந்த ராணிகள் நடித்துப் போன படங்களில், என்னைக் கவர்ந்த பாடல் ஒன்றும், றேடியோஸ்பதியின் விதிமுறைகளைச் சற்றே விலக்கி வைத்து ஓளிக்காட்சியையும் இப்பதிவில் தருகின்றேன்.


அந்த வரிசையில் எனக்குப் பிடித்த ஆறு அழகு ராணிகள் இதோ.
அழகு ராணி ஒன்று: அர்ச்சனா


நடராஜா மாமா வீட்டு திண்ணையில் ஒரு கூட்டம் அயற் சனம் கூடி இருக்க, சின்னப்பிள்ளைகளோடு ஒருவனாக, ஆவென்று புதினமாகப் பார்த்த படம் "நீங்கள் கேட்டவை". அந்த வயசிலும் அர்ச்சனா என்ற அந்த நாயகியை ஏதோ பக்கத்துவிட்டு அக்காவின் நடையுடை போல ஒரு உணர்வு தோன்றிய காலம் அது. கண்களும் சிரிக்க ஒரு மிரளல் பார்வையோடு நடித்த அர்ச்சனாவின் பிள்ளையார் சுழி அது. இந்தியா கிராமங்களில் வாழ்கிறது என்று காந்தி சொன்னது போல, தமிழ் சினிமா நாயகியின் பொருத்தமான அடையாளமாக அர்ச்சனாவைச் சொல்லலாம்.

நல்ல சினிமாவைத் தேடி ரசித்துப் பார்த்த காலத்தில் அர்ச்சனாவின் இயல்பான நடிப்பை அவர் நடித்த "வீடு" படத்தின் மூலம் உள்வாங்கிக்கொண்டேன்.

அழகி படத்தில் நடிக்கவைக்க இயக்குனர் தங்கர்பச்சன் நந்திதா தாசைத் தேடி வட நாட்டுக்கு போயிருக்கத் தேவையேயில்லை. உள்ளூரில் அகப்படும் அர்ச்சனாவே மிகப்பொருத்தமாக இருந்திருப்பார்.
தேசிய விருதுக் குழுவிற்கு மட்டுமே தெரிந்த அர்ச்சனாவின் நடிப்பின் பெருமையை சினிமா உலகம் பயன்படுத்தத் தவறிவிட்டது. இப்போது பரட்டைக்கு அம்மாவாக நடிக்க வேண்டிய தரத்தில் அர்ச்சனாவின் நிலை.

அர்ச்சனாவின் நடிப்பைக் காட்ட முடியவில்லை. அவர் நடித்த நீங்கள் கேட்டவை படத்தின் அருமையான பாடலைக் கேளுங்கள். காட்சியையும் பார்த்து அனுபவியுங்கள். இந்த "ஓ வசந்த ராஜா" பாடலைப் பார்க்கும் போது ஒரு புதுமையையும் காண்பீர்கள். அது, பாடலின் முன் பாதி இந்திய சங்கீதப் பாணியிலும் பாடலின் மறு பாதி மேற்கத்தேயப் பாணியிலும் இருக்கும். அதை அப்படியே உள்வாங்கிப் பாடல்காட்சியும் இரண்டு கலப்பிலும் இருக்கும்.


பாடலைப் பார்க்க



அழகு ராணி இரண்டு: ரேவதி





பாரதிராஜாவின் "மண்வாசனை"யில் தோன்றிய "ரா" வரிசை நாயகி இவர், புதிதாக நடிக்க வரும் நடிகைகள் பயன்படுத்தும் கெளரவமான நடிப்பின் அடையாள அட்டை இவர் எனலாம். "நான் நடிச்சா ரேவதி மாதிரி பாத்திரங்களில் நடிக்கணும்" என்று போனவாரம் திரையுலகிற்கு வரும் நாயகி கூட சொல்லும் அளவிற்குக் கெளரவமான நடிப்பின் சொந்தக்காரி.


என் ரசனையில் ரேவதியின் நடிப்பின் பரிமாணத்தை மண்வாசனை தொடங்கி மெளன ராகம் , மறுபடியும், தேவர்மகன் என்று முக்கியமான அவர் நடிப்பின் மைல்கள் பிடிக்கும். மெளன ராகத்தில் என்னமாய் நடித்திருப்பார். தேவர் மகனில் என்னமாய் வாழ்ந்திருப்பார்.
மறுபடியும் படத்தில் மாற்று வீடு தேடும் கணவனிடம் அடங்கி அடங்கி வாழ்ந்து, மனதுக்குள் குமுறிக்குமுறி ஒலமிட்டு இறுதியில் வெடிப்பாரே அதைச் சொல்லாமல் விடமுடியுமா?


ஆஷா கேளுண்ணிக்குக் ( அதாங்க ரேவதி) கிடைத்த இன்னொரு வரம் அவரின் குரல். நடுத்தரக்குடும்பத்தில் இருக்கக்கூடிய பெண் போன்ற தோற்றத்திற்கு அவரின் குரல் அளவெடுத்த சட்டை. மெளன ராகம் படத்தில் வந்த, நான் அடிக்கடி பார்த்து ரசிக்கும் "சின்னச் சின்ன வண்ணக்குயில் இதோ".

பாடலைப் பார்க்க



அழகு ராணி மூன்று: நதியா



"நதியா நதியா நைல் நதியா" என்று சினிமாக்கவிஞனைப் பாட்டு எழுதத் தூண்டிய நடிப்புக்குச் சொந்தக்காரி. இவரும் அடுத்த வீட்டுப் பெண் போல இனம் புரியாத நேசத்தைத் தன் நடிப்பின் மூலம் தந்தவர். "பூவே பூச்சூடவா" இவருக்கு நல்லதொரு ஆரம்பத்தை கொடுத்தது. எத்தனை பெரிய நாயகர்களோடு நடித்தாலும் கவர்ச்சி முலாம் பூசாமல் நடித்துக் காட்டியவர். கிராமியப் படங்களை விட நகரத்தில் வாழும் பெண்ணுக்குப் பொருந்தக் கூடிய தோற்றமும், குறும்புத்தனமான நடிப்பும் இவரின் பலங்கள். நதியா போல பெண் வேண்டும் என்று ஒரு காலகட்டத்து ஆண்கள் மட்டுமா ஆசைப்பட்டார்கள்? நதியா ஸ்டைல் தோடு, காப்பு, அட்டிகை என்று எண்பதுகளில் பெண்களின் நவநாகரீகத்தின் அடையாளம் இந்த நதியா.

சுரேஷ் நதியா ஜோடி தமிழ் சினிமாவின் சிறந்த ஜோடிகளில் ஒன்று, இதோ அவர்கள் ஆடிப்பாடும் " நதியா நதியா நைல் நதியா", பூ மழை பொழியுது திரைப்படத்தில் இருந்து.


அழகு ராணி நாலு: அமலா

டி.ராஜேந்தர் கண்டுபிடித்த (மைதிலி என்னைக் காதலி) உருப்படியான கண்டு பிடிப்புக்களில் தலையாயது அமலா என்னும் அழகு பொம்மை. இந்திய சீன பார்டலில் இருந்து வந்து தென்னக சினிமாவையே ஒரு காலகட்டத்தில் கைக்குள் வைத்திருந்தவர். நவநாகரீகத்தின் அடையாளம் அமலா. இன்றைய ஐஸ்வர்யா ராயை விட அமலா தான் சிறந்த இந்திய அழகி என்பேன். ஒரெலி, ரெண்டெலி, மூணெலி என்று ஆரம்பித்து அஞ்சலி என்று தன் பெயரைச் சொல்வதாகட்டும் சிகரட் புகைத்துப் பார்த்து ரசிப்பதாகட்டும் அமலாவின் குறும்புத்தனமான நடிப்புக்கு அக்னி நட்சத்திரமே நல்ல உதாரணம்.

ஆனால் இவரால் நடிக்கவும் முடியும் என்று காட்டி இன்றளவும் நான் நேசிக்கும் படம் பாசிலின் இயக்கத்தில் வந்த " கற்பூர முல்லை" மலையாளத்தில் " எண்டே சூர்ய புத்ரிக்கு " என்று வந்திருந்தது.
கே.பாலசந்தரின் "புதுப்புது அர்த்தங்கள்' திரைப்படத்தில் ஒனிடா டீ.வி விளம்பர பேனரில் அமலாவின் போஸைப் பார்த்து கிழவர் பூர்ணம் விஸ்வநாதன் ஜொள்ளு விடுவாரே, அதுவே அன்றைய காலகட்டத்தில் அமலா என்ற மாய பிம்பம் ஏற்படுத்திய தாக்கத்துக்கு ஒரு உதாரணம்.
இதோ அக்னி நட்சத்திரத்தில் இருந்து அமலா நடித்த "நின்னுக்கோரி" என்ற அட்டகாசமான பாடல்.

பாடலைப் பார்க்க




அழகு ராணி ஐந்து: குஷ்பு



கோயில் கட்டுமளவுக்கு இவர் நடிப்பை நான் தொடர்ந்து ரசிக்கவில்லை (மற்றைய நாயகிகளோடு ஒப்பிடும் போது) . ஆனால் இவர் நடித்த ஒரேயொரு படமே போதும். அதுவே நான் திரும்பத் திரும்பப் பார்த்து ரசிக்கும் வருஷம் 16. கண்ணத்தானைக் காதலிக்கும் சைனீஸ் பட்லர் முறைப்பெண்ணாக வருஷம் 16 படத்தில் இவர் நடித்த காட்சிகளைத் திரும்பத் திரும்பப் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். அதுவே போதும்.
இதோ வருஷம் 16 இல் இருந்து வரும் இனிமையான பாடல் "பூப்பூக்கும் மாசம்"


அழகு ராணி ஆறு: மீரா ஜாஸ்மின்
கேரளத்துப் பைங்கிளி மீரா ஜாஸ்மினின் அடக்கமான நடிப்பை தமிழ்ப்படமான "ரன்"னில் தான் முதலில் பார்த்தேன். பின்னர் அவர் நடித்த படங்களைத் தேடித் தேடி மலையாளப்படவுலகத்தையும் என்னை நாடிச்செல்ல வைத்தது அவர் நடிப்பு. பெருமழாக்காலம், அச்சுவிண்டே அம்மா, ரசதந்திரம், கஸ்தூரிமான் என்று ஒவ்வொரு மலையாளப் படங்களுமே மீரா ஜாஸ்மினுக்கு முத்திரைகள். தமிழில் தான் ஏதாவது லூசுப் பாத்திரம் இருந்தால் கூப்பிடுங்கள் மீரா ஜாஸ்மினை என்று சொல்லி அவர் நடிப்பைச் சீரழிக்கின்றார்கள்.

ரச தந்திரத்தில் அவர் தோன்றும் அனுதாபத்துக்குரிய தமிழ்ப்பெண் பாத்திரத்தையும், அச்சுவிண்டே அம்மாவில் வரும் அங்கலாய்ப்பான மகளாக அவர் நடிக்கும் பாத்திரத்தையும் தேடியெடுத்துப் பாருங்கள், அவரின் நடிப்பின் பரிமாணம் விளங்கும்.
இதோ அச்சுவிண்ட அம்மா திரையிலிருந்து இசைஞானியின் இசையில் " எந்து பறஞ்சாலும்".

பாடலைப் பார்க்க



சரி கோபிநாத் இவ்ளோ தான் என் அழகுப் பதிவு சமாச்சாரங்கள்,
ஸாரி நிறைய ஜொள்ளீட்டேன் ;-)

Wednesday, May 16, 2007

நீங்கள் கேட்டவை 5


வணக்கம் நண்பர்களே

ஒரு வார கால ஓய்விற்குப் பின் மீண்டும் நீங்கள் கேட்டவை தொடர்கின்றது. இன்றைய நிகழ்ச்சியில் இருந்து என் விருப்பப் பாடலோடு இந்தத் தொகுப்பை வழங்கவிருக்கின்றேன்.

அந்த வகையில் என் விருப்பப்பாடலாக முதலில், பகல் நிலவு திரைப்படத்திற்காக ஜெயச்சந்திரன், பி.சுசீலா குரல்களில் "பூவிலே மேடை நான் போடவா" என்ற பாடல் வருகின்றது. இந்தப்பாடல் என் மனதைக் கவர்வதற்கான காரணம், மனதை வருடிச்செல்லும் மென்மையான கிற்றார் இசை, புல்லாங்குழல் ஆலாபனையோடு சேர்ந்து பயணிக்க, வாத்தியம் விழுங்காத அந்த இசையோடு கலக்கின்றது ஜெயச்சந்திரன் குரல். இவருக்குக் கிடைத்த முத்தான பாடல்களில் இந்தப் பாடலும் விலக்கமுடியாதது. இரண்டே இரண்டு அடிகளை மட்டும் பாடி வசீகரிக்கின்றார் பி.சுசிலா. 2.35 நிமிடமே ஒலிக்கும் இந்தப் பாடல் படத்தில் இன்னும் வெட்டுப்பட்டு வந்ததாக ஞாபகம். பாடல் இசை இளையராஜா என்று சொல்லவும் வேண்டுமா?

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் சன் டி.வி சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சியை பாடகர் உன்னிமேனன் தொகுத்து வழங்கியபோது நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் ஒரு பாடலைப் பாடிச் செல்வார். அந்தப் பாடல்களில் ஒன்றாக இந்தப் பாடலும் வந்து உன்னிமேனனின் குரலில் இன்னும் நேசம் கொள்ள வைத்தது. இப்போது சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சி தொலைந்து போய் புதிய ராகங்கள் என்ற உப்புமா நிகழ்ச்சி வருவது வேறு கதை.

சரி நண்பர்களே என் விருப்பத்தைப் பற்றிச் சொல்லிவிட்டேன். இதோ இன்றைய நிகழ்ச்சியில் நீங்கள் கேட்ட பாடல்கள்.

உங்கள் தேர்வுப் பாடல் வரிசை:
1. சந்திரவதனா அக்காவின் விருப்பத் தேர்வில் "என்னைத் தாலாட்ட வருவாளா" திரைப்படத்தில் ஹரிஹரன், சுஜாதா பாடிய " என் நெஞ்சில் தூங்கவா"

2. வாசனின் விருப்பப் பாடலாக "கார்த்திகை தீபம்" திரைப்படத்தில் ரி.எம்.செளந்தரராஜன் பாடும் "எண்ணப்பறவை சிறகடித்து", பாடல் இசை ஆர்.சுதர்சனம்

3. சர்வேசன் "மச்சானைப் பார்த்தீங்களா" திரைப்படத்தில் இருந்து சந்திரபோஸ் இசையில் "மாம்பூவே சிறு மைனாவே" என்ற பாடலை கே.ஜே.ஜேசுதாஸ், பி.சுசீலா குரலில் கேட்டிருக்கின்றார்

4. பொன்ஸ், "சொல்லத்தான் நினைக்கிறேன்" திரைப்படத்தில் இருந்து அதே ஆரம்ப வரிகளில் பாடலைக் கேட்டிருக்கின்றார். பாடலை இசையமைத்துப் பாடுகின்றார் எம்.எஸ்.விஸ்வநாதன். இணைந்து பாடுகின்றார் எஸ்.ஜானகி

5. ஜி.ராகவன் "நிலவே மலரே" திரைப்படத்தில் பி.சுசீலா பாடும் "மண்ணில் வந்த நிலவே" என்ற இனிமையான பாடலை நிறைவாகக் கேட்டிருக்கின்றார்.

பாடல்களைக் கேளுங்கள், கேட்பதோடு மட்டும் நின்றுவிடாது உங்கள் விருப்பப் பாடல்களையும் அறியத் தாருங்கள்.

Friday, May 4, 2007

நீங்கள் கேட்டவை 4


வணக்கம் நண்பர்களே

இன்றைய நீங்கள் கேட்டவை பகுதியில்

1. சினேகிதி விரும்பிக்கேட்ட "சங்கர் குரு" திரைப்படப்பாடலான "சின்னச் சின்னப்பூவே" கே.ஜே.ஜேசுதாஸ், ஜானகி குரல்களில் ஒலிக்கின்றது. சினேகிதி கேட்ட பெண்குரல் பாடல் பின்னர் வரும். இப்பாடலின் இசை சந்திரபோஸ்

2.வெங்கடேஷ் வரதராஜன் விரும்பிக்கேட்ட "கல்யாண ராமன்" திரைப்பாடலான "மலர்களில் ஆடும்" பாடல் இளையராஜா இசையில் எஸ்.பி.சைலஜா பாடுகின்றார்.

3. ராதா சிறீராம் விரும்பிக்கேட்ட "பிராப்தம்" திரைப்பாடலான " சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து" பாடல் ரி.எம்.செளந்தரராஜன், பி,.சுசீலா குரல்களில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசை வழங்கியிருக்கிறார்

4. சிந்தாநதியின் விருப்பமாக ஜி.கே.வெங்கடேஷ் இசையில் "மல்லிகை மோகினி" திரைப்படத்திலிருந்து "மேகங்களே பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரலில் ஒலிக்கின்றது.

5. வல்லி சிம்ஹனின் விருப்பமாக சீர்காழி கோவிந்தராஜன் பாடிய
"இன்பம் எங்கே" பாடல் "மணமுள்ள மறுதாரம்" திரைப்படத்திற்காக கே.வி மகாதேவன் இசையில் மலர்கின்றது.

பணி நிமித்தம் காரணமாக நீங்கள் கேட்டவை பகுதி 4 குரற்பதிவாக வழங்கமுடியவில்லை. அடுத்த வாரம் சிறிது ஓய்வோடு மீண்டும் மறுவாரம் நீங்கள் கேட்டவை 5 இடம்பெறும்.
Powered by eSnips.com

Wednesday, May 2, 2007

காதலர் கீதங்கள் - ஓ நெஞ்சே நீதான்


காதலர் கீதங்கள் சென்ற பதிவின் தொடராக மு.மேத்தாவின் கவிதைகளோடு பல்வேறு கவிஞர்களின் பாடல்கள் இந்தப் பதிவிலும் அணி செய்கின்றன. அந்தவகையில்
"டார்லிங் டார்லிங் டார்லிங்' திரைப்படத்திலிருந்து சங்கர் கணேஷ் இசையில், குருவிக்கரை சண்முகம் இயற்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடும் ஓ நெஞ்சே நீதான்

"அச்சமில்லை அச்சமில்லை" திரைப்படத்திலிருந்து வி.எஸ்.நரசிம்மன் இசையில், வைரமுத்து இயற்றி எஸ்.பி.பாலசுப்ரமணியம், பி.சுசீலா இணைந்து பாடும் "ஆவாரம் பூவு"

"ஜானி" திரைப்படத்திலிருந்து இளையராஜா இசையில், கங்கை அமரன் இயற்றி எஸ்.ஜானகி பாடும் "காற்றில் எந்தன் கீதம்"
ஆகிய பாடல்கள் இடம்பெறுகின்றன.





காதலர்களுக்கு ஏதோ என்னால முடிஞ்ச பங்களிப்பு;-)