Pages

Wednesday, August 9, 2023

“பா மணக்கும்” எங்கள் பஞ்சு அருணாசலம் ❤️🧡 இணைந்த பல்வேறு இசையமைப்பாளர்கள்


“மணமகளே மருமகளே வா வா
உன் வலது காலை எடுத்து வைத்து
வா வா”
இப்படியொரு மங்கலகரமான வரிகளோடு பாட்டு உலகில் தன் வலது காலை எடுத்து வைத்தார் பஞ்சு அருணாசலம் அவர்கள்,
1962 ஆம் ஆண்டில் வெளியான “சாரதா” திரைப்படம் வழியாக.
ஒரு திரையிசைக் கவிஞராக 2017 இல் வெளிவந்த
“முத்துராமலிங்கம்" வரை 54 வருடங்கள் பயணித்தவர்.

தன்னுடைய முதற்பாடலின் அடிகளையே எடுத்து “மணமகளே வா” என்று முதற்படத்தை இயக்கவும் செய்தார்.
தன்னுடைய சித்தப்பா கவிஞர் கண்ணதாசனின் உதவியாளராக
இருந்தவர் இன்னொரு மூத்த சித்தப்பா ஏ.எல்.சீனிவாசனின் தயாரிப்பில், இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் இயக்கு நராக அறிமுகமான “சாரதா” படத்தில் அடியெடுத்து வைத்தார். அந்தப் படத்தில் பாடலாசிரியர் என்ற அறிமுக அடையாளம் இருக்காது. எழுத்தோட்டத்தில் கண்ணதாசனின் உதவியாளர் என்றே அடையாளப்பட்டிருப்பார்.
முன்பு நான் எழுதிய “பூப்போல பூப்போல பிறக்கும்"
பாடல் குறித்த பதிவில் பின்னூட்டதில் வந்து மறவாமல் தன் முதற்பாடலையும் நினைப்பூட்டி விட்டுப் போனார். “பூப்போல பாடல் ஆர்.சுதர்சனம் இசையில் மிக அற்புதமான பாடல்.

பஞ்சு அருணாசலம் அவர்கள் தான் அறிமுகப்படுத்திய இளையராஜா வழி ஏராளம் பாடல்களில் இவர் தான் பாடலாசியர் என்று கடைக்கோடி ரசிகர் வரை அடையாளப்பட்டிருக்கிறார். ஆனாலும் தன்னுடைய பாட்டுச் சரித்திரத்தில் அதற்கு முன்னர் ஏராளம் பாடல்களை எழுதிக் குவித்தவர். பதிவை எழுதியவர் கானா பிரபா
இளையராஜா காலத்தில் கூட, சிவாஜிராஜா இசையில் “காற்றுக்கென்ன வேலி” படத்தில்
“ரேகா ரேகா”
என்ற இனிமை சொட்டும் பாடலை எழுதியவர்.

பஞ்சு அருணாசலம் அவர்கள் பல்வேறு இசையமைப்பாளர்களுக்குத் தன் பேனா மையை ஊற்றியிருக்கிறார் என்பதற்கு இலக்கணமாக,
பாட்டுப் பாட வாயெடுத்தேன் – தெய்வத்தின் தெய்வம் (இசை ஜி.ராமநாதன்) https://www.youtube.com/watch?v=YPmf_SiWLK8
எம்ஜி.ஆரின் கன்னித்தாய் படத்தின் அனைத்துப் பாடல்களும்,
“எனுங்க என்னைத் தெரியுமா” பாடலை “அல்லி” படத்துக்காகவும்,
“தாயாக மாறவா” மற்றும் “மனதில் என்ன மயக்கம்” பாடல்களை
கே.வி.மகாதேவன் இசையில் “ஏழைப் பங்காளன் படத்திலும், யாருக்குச் சொந்தம் படத்துக்கும் ஆக்கியளித்தார்.
இப்படியாகத் தன் முதல் இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனின் படங்களுக்கு ஆரம்பகாலத்தில் தொடர்ச்சியாக எழுதினார்.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையிலும்
பொன்னெழில் பூத்தது (கலங்கரை விளக்கம் )
என்னை மறந்ததேன் (கலங்கரை விளக்கம்)
என் மனக் கூட்டுக்குள்ளே ( மனக்கணக்கு)
சின்னச் சின்ன வீடு கட்டி (மனக்கணக்கு )
ஆகிய பாடல்களோடு,
டி.கே ராம மூர்த்தி இசையில் “மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி” படத்துக்காக
எந்த எந்த நெஞ்சுக்குள்ளே
https://www.youtube.com/watch?v=KKe0-ytGL1M பாடலையும் தந்தார்.
“பொன்னென்பதோ பூவென்பதோ”
என்ற அற்புதமான பாடல் டி.ராமானுஜம் இசையில் அன்னப் பறவை படத்துக்காக, அதே படத்தில் சூடான எண்ணங்கள், பச்சைக்கிளி என்ற பாடலும் அவரே.
அழகின் அவதாரமே – காசி யாத்திரை ( இசை சங்கர் கணேஷ்
மேலும் சங்கர் கணேஷ் இசையில் “சக்க போடு போடு போடு ராஜா” , “தெய்வம் பேசுமா” படங்களிலும், அதே இரட்டையர்களுக்காக “ஜான்சி ராணி" படத்துக்கு அனைத்துப் பாடல்களும்,
இசையமைப்பாளர் வி.குமாருக்காக “தெய்வக் குழந்தைகள்” படத்தில் “மணமுள்ள மென் மலர்” பாடலும்,
காதல் படுத்தும் பாடு (அல்லிச் செண்டாடுதே பாடல்) படத்துக்காக டி.ஆர்.பாப்பா இசையிலும் எழுதிக் கொடுத்தவர்.
என்னய்யா முழிக்கிறே, உனக்கும் எனக்கும், வா இளமை அழைக்கிறது ஆகிய மூன்று பாடல்களையும் “எங்கம்மா சபதம்” படத்துக்காக
விஜயபாஸ்கர் இசையில் எழுதியவர்
“மோகனப் புன்னகை ஊர்வலமே” பாடலோடு “பனிமலர் என்ற பாடலும் சேர்த்து “உறவு சொல்ல ஒருவன்” படத்துக்காகவும்,
“முதல் முதல் வரும் சுகம்" https://www.youtube.com/watch?v=EjWSGaW0ceM
பாடலோடு “காலங்களில் அவள் வசந்தம்” படத்துக்காகவும்,
மேலும் பேர் சொல்ல ஒரு பிள்ளை, ஆடு புலி ஆட்டம் படங்களுக்கும் பாடல் எழுதினார்.
வேதா இசையில் வல்லவனுக்கு வல்லவன்,
மேலும் சி.என்.பாண்டுரங்கம் இசையில் “திரு நீலகண்டர்” படங்களுக்கும் எழுதியிருக்கிறார்ர்.
கார்த்திக் ராஜா இசையில்
அலெக்சாண்டர் படத்துக்காக “ராஜராஜன் நானே”
மற்றும் யுவன் ஷங்கர் ராஜா இசையில்
“ஓ மானே மானே” பாடலை ரிஷி படத்துக்காகவும் எழுதியளித்தார்.

தமிழக அரசின் தொட்டில் குழந்தை திட்டத்துக்கு ஆதரவளித்து எடுக்கப்பட்ட “தொட்டில் குழந்தை” படத்திற்கு ஆதித்யன் இசையமைப்பில் அனைத்துப் பாடல்களையும் எழுதிக் கொடுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே பகிர்ந்தவை சில உதாரணப் பாடல்கள் தான். இவற்றைத் தாண்டியும் பல்வேறு இசையமைப்பாளர்களிடம் தன் கை வண்ணம் படைத்தார் பஞ்சு அருணாசலம் அவர்கள்.
சிவகாமி….சிவகாமி….
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என்று கவியழகு நிறைந்த பாடலை அளித்தவர் தான்,

“ஆசை அலைகள்” படத்திலே
நடந்து வந்த பாதையிலே
நாலு வழியும் பார்த்து வந்தேன்
நல்லது கெட்டது புரியவில்லை
நல்லவரெல்லாம் வாழ்வதில்லை..
என்று தத்துவச் சிறப்பு மிக்க பாடலையும் வழங்கினார்.
“பணமிருக்கும் பலமிருக்கும்
உங்கள் வாசலில்
நல்ல குணமிருக்கும் குலமிருக்கும்
எங்கள் வாசலில்
பொன் மணமும் பொருள் மணமும்
உங்கள் வாசலில்
புதுப் பூ மணமும் பா மணமும்
எங்கள் வாசலில்”
எவ்வ்வளவு தன்னம்பிக்கை ததும்பும் வரிகளைத் தன் முதற்பாடலிலேயே வைத்திருக்கிறார் பாருங்கள்.
பஞ்சு அருணாசலம் ஐயா மறைந்து ஏழு ஆண்டுகள் கடந்தும் எம் நெஞ்சில் நிறைந்து நிற்கும் அவரைப் போற்றி வணங்குவோம்.
கானா பிரபா
09.07.3023

1 comment: