மலையோரம் வீசும் காத்து
மனசோடு படும் பாட்டு
கேக்குதா….கேக்குதா….❤️
சோகப் பாடல் என்றாலும் தலைமுறை தாண்டி சாகாவரம் பெற்ற பாட்டு. அதனால் தான் ஈராயிர யுக இசை மேடைகளிலும் தவிர்க்க முடியாமல் வீற்றிருக்கின்றது.
இந்தப் பாடல் படமானதே சுவாரஸ்யமான விடயம் தான். அடுத்த நாள் பாடல் காட்சியைப் படமாக்க வேண்டும். ஆனால் இன்னும் கைவசம் பாடல் இல்லையே என்று “பாடு நிலாவே” இயக்குநர் கே.ரங்கராஜ் வேண்டியழைக்க, பாடல் காட்சி படமாக்கும் இடத்துக்கே இரவோடிரவாக இந்தப் பாடல் வந்து சேர்ந்ததாம்.
இசைஞானியின் அசுர வேகம் சொல்லத் தேவை இல்லை. கூடவே சூழலை உணர்ந்து ஒரே டேக்கில் பாடிக் கொடுத்து விடும் சூப்பர் சொனிக் வேகம் பாடும் நிலாவிடம்.
கூடவே வாலியும் இருக்கிறாரே. இப்படியாக ஆச்சரியப் பட எதுவும் இல்லாத அசுரர்களின் விளைச்சல் இது என்றாலும் ஆச்சரியப்பட்டுப் போனது தான் கதை.
அதாவது பாடல் வந்து சேர்ந்து ஐந்து மணி நேரத்திலேயே ஒரே மூச்சில் படமாக்கி விட்டாராம் இயக்குநர்.
இப்போது போய் பாடல் காட்சியைப் பாருங்கள். ஏதோ வருஷக் கணக்காகப் புழங்கிய பாடல் போல மோகனின் வாயசைப்பு அச்சொட்டாக அந்த எஸ்பிபியே தான்.
https://youtu.be/BgbafEuP8RE?si=nBh7N_G0EuByzCwL
தொழில் நுட்பம் இன்று போல் வளராத காலத்தில் இப்பேர்ப்பட்ட ஆச்சரியங்கள் எல்லாம் விளைந்து விட்டது.
இந்தப் பாடலை முதலில் மனோ பாட இருந்தாராம்.
மலையோரம் வீசும் காத்து என்று விட்டு கடலோரம் ஏன் படமாக்கி இருக்கிறார்கள் என்று படம் வந்த போது யாரும் கேட்கவில்லை. ஆனால் அப்படியொரு உரையாடல் பாடல் காட்சியைப் பார்த்த போது எழுந்ததாம்.
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா... கேக்குதா...❤️
✍️ கானா பிரபா
No comments:
Post a Comment