Pages

Friday, November 10, 2017

இசையமைப்பாளர் தேவேந்திரனின் இசைப் பயணம் 🎻 🌼 வேதம் புதிது


மண்ணுக்குள் வைரம் படத்துக்குப் பின் இப்படியொரு பெரிய வாய்ப்பு தனக்குக் கிட்டுமென இசையமைப்பாளர் தேவேந்திரன் நினைத்திருப்பாரா? இன்று வரை தமிழ்த் திரையிசையில் ஒரு அழுத்தமான பதிவாக அமைந்து விட்டது "வேதம் புதிது" திரைப்படத்தின் பாடல்கள்.
கடலோரக் கவிதைகள் திரைப்படத்திற்குப் பின்
இயக்குநர் பாரதிராஜாவும் பாடலாசிரியர் வைரமுத்துவும் புதிய கூட்டணியை நாடிய போது அப்போது தேவேந்திரன் அறிமுகமும் சேர்ந்து கொள்கிறது. அதுவரை நிழல்கள் படம் நீங்கலாக சமுதாயப் பிரச்சனையை அதிகம் கலக்காது எடுத்து வந்த பாரதிராஜா, நாடகாசிரியர் கண்ணன் அவர்களின் "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்ற மேடை நாடகத்தைக் கையிலெடுத்து "வேதம் புதிது" ஆகத் திரை வடிவம் கொடுத்தார்.
சத்யராஜுக்கு வாழ் நாளில் பேர் சொன்ன பாத்திரங்களில் ஒன்றாக அமையவும், அழகுப் பதுமை அமலாவுக்கு நடிப்பின் பரிமாணத்தை வெளிப்படுத்தவும் இந்தப் படம் வகை செய்தது.
இதில் இடம் பெற்ற
"நான் கரையேறிட்டேன் நீங்க கரையேறிட்டீங்களா"
இன்று வரை புகழ் பூத்த வசனம்.
முதல் மரியாதை படத்தின் பாடல்களை விரும்பிக் கேட்ட போது மேலதிகமாக ரசிக்க வைத்தது பாடலாசிரியர் வைரமுத்து ஒவ்வொரு பாடல்களுக்கும் கொடுக்கும் விளக்கம். அதையொட்டிய பாங்கில் வேதம் புதிது படத்தின் ஒவ்வொரு பாடல்களுக்கும் வைரமுத்துவின் அறிமுகம் கொடுக்கப்பட்டது. மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் "ஜாதிகள் இல்லையடி பாப்பா" பாடலைத் தவிர மீதிப் பாடல்களை வைரமுத்துவே எழுதினார்.
இளையராஜா பாசறையில் இருந்து வெளியே வந்த பாரதிராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் அந்தக் கூட்டணியை மீறிய இசைப் படைப்பைக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம். இசையமைப்பாளர் தேவேந்திரனுக்கோ முதல் படத்தில் கிட்டிய பெயரைத் தாண்டிய கவனமும் தன் இருப்பைத் தக்க வைக்க வேண்டிய நிலை. இவையெல்லாம் சேர்ந்து "வேதம் புதிது" பாடல்கள் ஒவ்வொன்றையும் செதுக்க வேண்டிய தேவை இருந்ததை அவை ஒவ்வொன்றையும் கேட்டுச் சுவைக்கும் போது உணரலாம்.
எடுத்த எடுப்பிலேயே "சந்திக்கத் துடித்தேன் பொன் மானே" பாடலைத் தான் சொல்வேன். எவ்வளவு அமைதியாகக் காதலின் ஆழம் பேசும் பாட்டு இது.
ஆனால் துரதிஷ்டவசமாக இந்தப் படத்தில் இடம் பெறாது போனதால் பரவலாகப் போய்ச் சேராத அரிய சரக்கு இது. எஸ்.பி.பாலசுப்ரமணியம் & எஸ்.ஜானகி ஜோடி கட்டும் இந்தப் பாட்டு "மந்திரம் சொன்னேன் வந்து விடு" பாடலுக்குப் பதிலீடாக முந்திப் பிரசவித்திருக்குமோ?
"கண்ணுக்குள் நூறு நிலவா இதுவொரு கனவா"
https://youtu.be/QqKA8pgY4S4
நூறு இடைக்காலப் பாடல்களைப் பட்டியல் போடச் சொன்னால் எஸ்.பி.பி மற்றும் சித்ரா பாடிய இது முந்திக் கொள்ளும் தரவரிசையில் இருக்குமளவுக்கு ரசிகர் நெஞ்சில் இடம் பிடித்தது. சில பாடல்களுக்குத் தான் அந்தப் பாடல்கள் பிறந்த போது வாழ்ந்த தலைமுறை தாண்டி முந்திய, பிந்திய தலைமுறைகளும் நேசிக்க வைக்கும் கொடுப்பினை இருக்கும். அந்த மாதிரிப் பாடல்களில் இதுவுமொன்று. குருவைப் போற்றும் "ஓம் சஹனா வவது" உப நிஷதமும் "அம்பா சாம்பவி" இராஜராஜேஷ்வரி அட்டகமும்
கலந்து கொடுக்கும் புதுமையை காதல் பாடலுக்குள் உறுத்தல் இல்லாமல் செய்து காட்டினார் தேவேந்திரன்.
"பூவே பெண் பூவே இதிலென்ன ரகசியம்" என்று கூட்டுக் குரல்கள் ஒலிக்கு முன் துள்ளியோடும் இசைப் பிரவாகம் கொடுத்திருப்பார் பாருங்கள் ஆஹா 😍
இந்த மாதிரியான சோதனை முயற்சிகளில் நிரம்பிய இசைஞானமும் ஜனரஞ்சகப் படைப்புக்கான அடிப்படையும் அறிந்திருக்க வேண்டும். தேவேந்திரனின் முத்திரைப் பாட்டு என்னுமளவுக்கு இசையிலும் திறன் காட்டியிருப்பார் இதில்.
அந்தக் காலத்துக் காதலர் கைக்குட்டையைக் காதல் வாகனமாக்க ஏதுவானது.
"என்னென்ன தடை வந்த போதும் காதல் இறப்பதில்லை" என்று வரும் கணத்தில் உடைந்து அழுகை வரும். அவ்வளவு உணர்வு பூர்வமான பாட்டு "புத்தம் புது ஓலை வரும்"
https://youtu.be/gz3N2MlwqTo
காதலனைத் தேடும் அந்த எதிர்பார்ப்பு பாடலின் முகப்பு இசையிலேயே அப்பட்டமாகத் தொனிக்கும்.
இந்தப் பாட்டு வரிகளில் தொனிக்கும், எதிர்பார்ப்புடன் கூடிய அவ நம்பிக்கையை அப்படியே சித்ரா குரல் பிரதிபலிக்கும். உதாரணமாக "கண்ணுக்குள் ஜீவனைத் தேக்கிக் காலம் கழித்திருப்பேன்" என்று வரும் போது வரும் எதிர்பார்ப்பு "தேவனே காத்திருப்பேன் தீயிலே பூத்திருபேன்" எனும் போது தொய்ந்து விடும்.
எண்பதுகளின் இளைஞர் சமுதாயம் வாழ்க்கை வெறுத்துப் போய்க் கேட்ட பாடல்கள் எவை என்று
பழைய ரெக்கோர்டிங் பார் வைத்தவரிடம் கேட்டால் அவர் கொடுக்கும் பட்டியலில்
"மாட்டு வண்டிச் சாலையிலே"
https://youtu.be/bIQ6VayXKBc
பாடலும் இருக்கும். பாரதிராஜாவின் ராசியான பாடகர் மலேசியா வாசுதேவனின் சோக கீதம் இது. கூட்டுக் குரல்களை (chorus) வெகு அழகாகப் பயன்படுத்தும் வித்தை கற்றவர். கண்ணுக்குள் நூறு நிலவா பாடலில் எப்படிக் காதலர் கொண்டாட்டத்துக்கான கூட்டுக் குரல்களாக இயங்கினவோ அவையே இங்கு
"காட்டு மரங்களெல்லாம் கை நீட்டி அழைக்குது
மாட்டுச் சலங்கையெல்லாம் மகளோட அழுகுது"
என்றும்
"சின்னக் கிளியிரண்டும் செய்து விட்ட பாவம் என்ன
அன்பைக் கொன்று விட்டு ஆச்சாரம் வாழ்வதென்ன"
என்றும் உடைந்து போய் நலிந்த குரலாய் ஒலிக்கின்றன.
எல்லோரும் "கண்ணுக்குள் நூறு நிலவா" பாடலில் மையல் கொண்டிருக்க எனக்கோ "மந்திரம் சொன்னேன் வந்து விடு" https://youtu.be/1BcgCp5mAag
பாடல் மேல் மையல் கொண்ட "மனோ"பாவத்தில் இருந்தேன். இன்றும் கூட "கண்மணி உனக்கொன்று தெரியுமா" என்று குழைந்து பாடுவது தான் நெஞ்சில் மனோரஞ்சிதமாக இருக்கும்.
மனோ, எஸ்.ஜானகி குரல்களில் ஒலிக்கும் பாட்டு இது.
தேவேந்திரனுக்கு சுதந்தரமாக ஆசைக்கு ஒரு காதல் பாட்டை இசைக்க விட்டு விட்டுக் காத்திருந்தது போல இருக்கும்.
இந்தப் பாட்டு பாரதிராஜா படங்களுக்கே உரித்தான முத்திரைக் கைதட்டலோடு நிறைவுறும்.
அண்மைய வருடமொன்றில் "இளையராஜாவை விட தேவேந்திரன் திறமைசாலி" என்று சொன்ன பாரதிராஜாவே "வேதம் புதிது" படத்துக்குப் பின் தேவேந்திரனை நாடவில்லை.
ஆனால் இது தோல்விப் படமாக இருக்கும் உணர்ந்த சந்தர்ப்பங்களில் கூட இளையராஜா அதைக் குறிப்பிட்டு விட்டு பாரதிராஜாவுக்குக் குறை வைக்காது உயரிய பாடல்களைக் கொடுத்து வந்தவர்.
வேதம் புதிது படத்தின் பாடல்கள் அந்தப் படைப்பின் மேன்மையை இன்னும் உயர்த்த வழி கோலிய வகையில் கச்சிதமாக அமைந்தன, இன்று வரை இதற்கு இசை இளையராஜா தான் என்று கண் மூடித்தனமாகச் சொல்லும் அளவுக்கு.
வேதம் புதிது படத்தின் பாடல்களைத் துல்லிய ஒலித்தரத்தில் கேட்க
https://youtu.be/rFn9xzCTXY4

No comments:

Post a Comment