Pages

Friday, April 28, 2017

வினுச்சக்ரவர்த்தி



தமிழ் சினிமாவின் முகங்களில் ஒன்றை இழந்து விட்டோம் என்று நடிகை காந்திமதி இறந்த போது குறிப்பிட்டேன். அதையே நடிகர் வினுச்சக்ரவர்த்தி இழப்பிலும் சொல்ல வேண்டியிருக்கிறது. அந்த அளவுக்கு நமது கிராமியச் சூழலில் வாழ்ந்து பழகியவர் போன்ற முக வெட்டும் குணாதிசியமும் கொண்டவர். பட்டைத் திருநீறும், குங்குமமும் முகத்தில் மிளிர, வேட்டி சட்டையும் கொண்ட அவரின் உருவ அமைப்பு மேலும் அதைப் பலமாக்கும்.
"டேய் சின்னவனே" "ஆங்" , "களுத" இப்படியான சின்னச் சின்ன வசன வெளிப்பாட்டிலும் தன் முத்திரைச் சிரிப்பிலும் கெத்தாகத் தனக்கான ஆளுமையை உருவாக்கியவர்.
வினுச்சக்ரவர்த்தி என்றால் "ரோஜாப்பூ ரவிக்கைக்காரி" பட சர்ச்சையும் வந்து விடும்.
இந்தப் படத்தின் கதை தன்னுடையது என்று அவர் உரிமை கோர இன்னொரு பக்கம் நடிகர் விஜய் கிருஷ்ணராஜ் தானே உரிமையாளர் எனவும் பேட்டிகள் வந்ததுண்டு. இருவருக்குமே ரோஜாப்பூ ரவிக்கைக்காரி தான் முதல் படம். படத்தின் எழுத்தோட்டத்தில் மூலக்கதை ஆவனஹள்ளி ஶ்ரீகிருஷ்ணா எனவும், திரைக்கதை, வசனம் கிருஷ்ணா (விஜய்கிருஷ்ணராஜ்) என்றே வந்திருக்கும். நடிகர் குழுவில் அறிமுகத்தில் வினு என்ற வினுச்சக்ரவர்த்தி காணப்படுகிறார்.
இந்தக் கதையின் நதிமூலத்தைத் தேடினால் ஒரு சுவாரஸ்யமான கதை கிடைக்கிறது. நடிகர் சிவகுமாரின் நூறாவது படமாக முதலில் வினுச்சக்ரவர்த்தி கதை எழுதிய வண்டிச்சக்கரம் படமே அமைய இருந்ததாம். இந்தப் படத்துக்காக மைசூருக்குப் படப்பிடிப்பு வேலைகளுக்குப் போன போது "பரசங்கத கெண்டே திம்மா" என்ற கன்னடப்படத்தைப் பார்த்து தமிழுக்கு ஏற்றாற் போல ரோசாப்பூ ரவிக்கைக்காரி ஆக்கினார்களாம்.
தகவல் உதவி http://andhimazhai.com/news/view/sivakumar-29-04-2015.html
கன்னடப்பட இயக்குநர் புட்டன்ன கனகல் இன் உதவியாளராக இருந்தவர் வினுச்சக்ரவர்த்தி.
வண்டிச்சக்கரம் மூலம் கதாசிரியராகவும், சில்க் ஸ்மிதாவையும் அறிமுகப்படுத்தியவராகவும் இருந்தார்.
ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்தாலும் வினுச்சக்ரவர்த்தியின் உண்மையான நடிப்புப் பரிமாணத்துக்குத் தீனி கொடுத்தவை ஒரு சிலவே. ஆரம்ப காலத்தில் அவர் நடித்த "கோபுரங்கள் சாய்வதில்லை" அப்பன் பாத்திரம் இன்றும் மறக்க முடியாது. பெரும்பாலும் வில்லன் பாத்திரங்களிலேயே அமுக்கப்பட்டார். ஜனரஞ்சகப் படைப்புகளில் அண்ணாமலை படத்தில் நல்ல குணம் கொண்ட எம்.எல்.ஏ ஆக வந்து ரசிகர் மனதில் இடம் பிடித்தார்.
சின்னத்தாயி படத்திலும் ஒரு சிறப்பு வேடம் கிட்டியது இவருக்கு https://youtu.be/U--iPe2s6vI
தான் இயக்குநர் ஆக வேண்டிய கனவில் இருப்பதாகச் சொன்னவர் அந்த வாய்ப்பே இல்லாமல் போய்ச் சேர்ந்து விட்டார்.

No comments:

Post a Comment