Pages

Wednesday, August 28, 2013

பாடல் தந்த சுகம் - கோகுலத்து கண்ணா கண்ணா

இசையமைப்பாளர் தேவா ஒருமுறை மனதோடு மனோ நிகழ்ச்சிக்கு வந்தபோது தான் சினிமாவுக்கு இசையமைப்பாளராக வருவதற்கு நிகழ்த்திய வாழ்க்கைப் போராட்டங்களைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லியிருந்தார். வாழ்க்கையின் ஒரு நல்ல நிலைக்கு வந்தபின் அந்த எல்லையை அடைவதற்கு முன் நேர்ந்த அவமானங்களையும் வலிகளையும் திரும்பிப் பார்க்கும் போது அதை அனுபவித்தவருக்கே வேடிக்கையாக இருக்கும். அதுபோலத்தான் இருந்தது அவர் சொல்லச் சொல்ல. அதுவரை இசையமைத்த படமொன்றும் பொட்டியில் சிறைப்பட்டிருக்க, புதிய வாய்ப்பு நம்ம "மனசுக்கேத்த மகராசா" படத்தின் வழியாக வருகிறது. அந்தப் படத்தின் இயக்குனர் தீனதயாள் வழியாக, படத்தின் வடநாட்டுத் தயாரிப்பாளர் தன்னுடைய இசைத்திறமையைக் காட்டும் அந்த நாளில் தன் வாத்தியக்காரர்களோடு ஆட்டோ வாகனத்தில் பயணிக்கிறார். நடுவழியில் வண்டி கோளாறு பண்ணவே, ஆர்மோனியம் தபேலா இத்தியாதியை ஒவ்வொருவரும் கையில் பிடித்தவாறே தயாரிப்பாளர் இருக்கும் ஒலிப்பதிவுக்கூடம் நோக்கி ஓடிச்சென்று குறித்த நேரத்தை எட்டிப்பிடித்து மெட்டுப் போட்டுத் தயாரிப்பாளரைக் கவர்கிறார் தேவா.

இசையமைப்பாளர் தேவா குறித்து ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும் இன்றும் கிராமப்புறத் தேநீர்ச்சாலைகளில் இருந்து பஸ் பயணம் வரை ராஜாவுக்கு அடுத்துப் பந்தி விரித்து வெகுஜன அபிமானம் பெற்றிருக்கிறார். இவர் இசையமைத்த பத்தாண்டுக்கு முந்திய பாடல்களை இன்றும் அலுக்காமல் சுருதி பிடிக்கின்றன மினி பஸ்களின் ஒலி நாடாக்கள். தேவாவின் ஆரம்பகாலம் பெரும் இயக்குனர்களது அரவணைப்பின்றியும், ஒரு பட்ஜெட் இசையமைப்பாளர் என்ற ரீதியிலும் இருந்ததாலோ என்னமோ பாடல்களின் ஒலித்தரத்தில் பெருங்குறை இருக்கும். செம்பருத்தி செம்பருத்தி பூவப்போல பெண்ணொருத்தி பாடலில் எல்லாம் தபேலா சத்தமே ஏதோ தகரடப்பா ஒலியில் வருமாற்போல இருக்கும். இந்தக் குறை அண்ணாமலை போன்ற படங்களில் வந்த பாடல்களை உன்னிப்பாகக் கேட்கும் போது அவதானிக்கலாம். ஆண்குரல், பெண்குரல், இடையிசை எல்லாம் வெவ்வேறு திசை நோக்கி இருக்குமாற்போலவும் சில பாடல்கள். நாளாக தேவாவின் மீது ஒளி பரவலாக வீசியதாலோ என்னமோ ஆசை,காதல் கோட்டை என்று தொடங்கி முகவரி, குஷி போன்ற படங்களின் பாடல்களில் உச்சமான ஒலியமைப்பு சீராக இருக்கும். அப்படி ஒன்று தான் கோகுலத்தில் சீதை படத்தில் வரும் இந்தப் பாட்டு.

தயாரிப்பாளர் அன்பாலயா பிரபாகரனின் மாங்கல்யம் தந்துனானே என்ற ஒரு நாள் ஷோ ஓடிய படத்தின் வைகைக்கரைப் பூங்காற்றே பாட்டு எனக்கு இன்றும் பிடித்தமானது. எத்தனை பேருக்கு இப்பிடி ஒரு பாட்டு இருப்பதே தெரியுமோ தெரியவில்லை தொடர்ந்து வான்மதி, காதல்கோட்டை, கோகுலத்தில் சீதை என்று நீளும் பட்டியலில் பாடல்களுக்குத் தனியிடம் கொடுக்கலாம்.

நண்பர் கலைச்செல்வன் தன்னுடைய காரில் உச்ச ஒலியில் பாடலை ஒலிக்கவிட்டு அந்த ஷெனாய் இசையில் இருந்து ஆரம்பித்து இடையில் மீட்கும் புல்லாங்குழலின் ஜாலம், தபேலா என வரிசையாகச் சுவைப்பார். இயக்குனர் அகத்தியன் தேவா கூட்டணி சோடை போனதில்லை. கோகுலத்தில் சீதை படத்தில் வரும் இந்தப் பாட்டு காட்சியோடு கச்சிதமாகப் பொருந்தும் பாடல்களில் ஒன்றாக இடம் பிடிக்கின்றது. பேபி தீபிகா, சித்ரா, எஸ்.பி.பாலசுப்ரமணியம் இவர்களோடு தேவா பாடும்போது அச்சொட்டாக மணிவண்ணனே பாடுமாற் போல. துல்லிய ஒலிப்பதிவோடு, சீரான வாத்தியங்களின் ஆவர்த்தனம், பொருத்தமான நேரத்தில் தோன்றும் பாடகர் பங்கு என்று எல்லாமே நிறைவாக இருக்கின்றது. குறிப்பாக கோரஸ் பாடகிகளின் ஆலாபனையோடு இழைத்த புல்லாங்குழல் இசை, பாட்டு முழுக்கத் தாளம் போடும் அடக்கமான தபேலா இசை என்று கனகச்சிதமாக அமைந்துவிட்டதாலோ என்னமோ கிருஷ்ண ஜெயந்தி என்றாலே விசேஷமாக முணுமுணுக்கிறது "கோகுலத்து கண்ணா கண்ணா" என்று

3 comments:

  1. கடைசியா வருவது மனிவண்ணன் குரல்னு தான் நினைச்சுட்டு இருந்தேன் :) அருமையான பாடல் கானா !

    ReplyDelete
  2. தேவா இசையும் அவர் குரலும் இந்தப்பாட்டுக்கு இன்னும் சுருதி சேர்த்தது என்றாள் மிகையில்லை பிரபா அண்ணாச்சி!

    ReplyDelete
  3. அருமையான பாடல் பகிர்வு.

    ReplyDelete