Pages

Wednesday, September 23, 2009

நடிப்புக் குயில் எஸ்.வரலட்சுமி நினைவாக

என் சின்ன வயதில் வானொலியில் "இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப்பூ தொட்டிலைக் கட்டிவைத்தேன்' பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் அம்மாவே வந்து பாடுவது போல ஒரு பிரமையை உண்டாக்கியிருக்கும் எஸ்.வரலட்சுமியின் அந்தக் குரல்.

நீதிக்குத் தலைவணங்கு திரைப்படத்தில் ஆண் குரலில் ஜேசுதாஸ் பாடிய பாடலை விட என் மனதுக்கு நெருக்கமாக வந்து உட்கார்ந்து இன்று வரை இடம்பிடித்தது அந்தப் பாடல். இன்று வரை அந்தப் படத்தை நான் பார்க்காவிட்டாலும் கற்பனையில் இன்றும் என் அம்மாவே பாடுமாற்போல ஒரு தாய்மை உணர்வை அந்தப் பாடல் உண்டு பண்ணும். அந்தப் பாட்டுக்குச் சொந்தக்காரக் குயில் எஸ்.வரலட்சுமி நேற்று தனது 84 வயதில் இவ்வுலகை விட்டு மறைந்திருக்கிறார்.

கந்தன் கருணை, வீரபாண்டிய கட்ட பொம்மன், ராஜராஜ சோழன், , பூவா தலையா, குணா போன்ற படங்களில் எல்லாம் எஸ்.வரலட்சுமியின் நடிப்புக்குத் தனியிடம் உண்டு. இன்னொரு நடிகையை அந்தப் பாத்திரங்களிலும் பொருத்திப் பார்க்க முடியாத சிறப்பைக் குறித்த படங்களில் தந்திருப்பார் இவர்.

கந்தன் கருணை படத்தில் வரும் "வெள்ளிமலை மன்னவா" பாடலைப் பக்தி ரசம் கனியக் கொடுத்திருக்கும் அதே வரலட்சுமி பின்னாளில் "குணா" படத்தில் நடித்ததோடு "உன்னை நானறிவேன்" என்ற வெறும் 36 செக்கன் மட்டுமே ஒலிக்கும் பாடலிலும் தன் தனித்துவக் குரலினிமையைக் காட்டிச் சென்றவர்.

எஸ்.வரலட்சுமி பாடிய பாடல்களில் சிலவற்றை இங்கே தருகின்றேன்

வரலட்சுமி என்ற குயில் பறந்தாலும் அவரின் ஓசை ஒலித்துக் கொண்டேயிருக்கும்

நீதிக்கு தலை வணங்கு திரைப்படத்தில் வரும் "இந்தப் பச்சைக்கிளிக்கொரு"



கந்தன் கருணை திரைப்படத்தில் வரும் "வெள்ளிமலை மன்னவா"



கவரிமான் திரைப்படத்தில் வரும் பாரதியார் பாடலான "சொல்ல வல்லாயோ கிளியே"



குணா திரைப்படத்தில் வரும் 'உன்னை நானறிவேன்"

Get this widget | Track details | eSnips Social DNA



எஸ்.வரலட்சுமி மறைவு குறித்து தற்ஸ் தமிழ் இணையத்தில் வந்த செய்தி

சென்னை: பழம்பெரும் நடிகை எஸ். வரலட்சுமி சென்னையில் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார். அவருக்கு வயது 84. கடந்த ஆறுமாதங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார் அவர்.

சென்னை மகாலிங்கபுரத்தில் வசித்து வந்த அவருக்கு, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு நடக்க முடியாத நிலை ஏற்பட்டது.

நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு, சிகிச்சை பலனின்றி இரவு 8.20 மணிக்கு இறந்தார்.

1938-ம் ஆண்டு முன்னோடி இயக்குநர் [^] கே. சுப்பிரமணியம் (நடன கலைஞர் [^] பத்மா சுப்பிரமணியத்தின் தந்தை) தயாரித்த "சேவாசதனம்' படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எஸ். வரலட்சுமி. இவர் மிகச் சிறந்த பாடகியும் கூட.

சக்கரவர்த்தி திருமகள், வீரபாண்டிய கட்ட பொம்மன், ராஜராஜ சோழன், கந்தன் கருணை, நீதிக்குத் தலைவணங்கு, பூவா தலையா, குணா உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் நிறைய படங்களில் நடித்தவர் எஸ் வரலட்சுமி.

இவர் பாடிய 'இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில் தொட்டிலைக் கட்டிவைத்தேன்....' என்ற பாடல் மிகப் புகழ்பெற்றது, கேட்போரை உருக வைப்பது.

அதேபோல குணா படத்தில் கமல்ஹாசனின் தாயார் வேடத்திலும் நடித்து ஒரு பாடலையும் பாடியிருந்தார் வரலட்சுமி.

திருடாதே, கந்தன் கருணை, சினிமா பைத்தியம் உள்ளிட்ட ஏராளமான படங்களின் தயாரிப்பாளரும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முன்னாள் தலைவருமான ஏ.எல். சீனிவாசனின் மனைவி வரலட்சுமி என்பது குறிப்பிடத்தக்கது.

கலைமாமணி, கலைவித்தகர், கண்ணதாசன் விருது [^] உள்ளிட்ட விருதுகளை பெற்ற இவர், தான் நடித்த அனைத்து படங்களிலும் சொந்தக் குரலிலேயே பேசி, பாடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மறைந்த எஸ். வரலட்சுமிக்கு முருகன் என்ற மகனும், நளினி என்ற மகள், ஒரு பேரன், ஒரு பேத்தி உள்ளனர்.

இவரது மறைவுக்கு தென்னிந்திய நடிகர் [^] சங்கம் தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளது.

15 comments:

  1. //குணா திரைப்படத்தில் வரும் 'உன்னை நானறிவேன்"//

    முதன் முதலாய் கேட்கிறேன்!

    வெள்ளி மலை மன்னவா மார்கழி மாத அதிகாலை நேரத்து ஆன்மீக இன்பமாய் அமைந்த அமைந்திருக்கும் பாடல்!

    ReplyDelete
  2. வருத்தம். நல்ல பாடகி.”வெள்ளி மலை மன்னவா”பாடல் சூப்பர்.அவர்களின் ‘தாய்மை” தவழும் முகம் மறக்க முடியாதது.

    ReplyDelete
  3. Sir,

    I think the guna song you have posted has a different voice than her...Might be because of the technical problem...Please correct it. According to me that was her masterpiece...Missing her...

    ReplyDelete
  4. Anonymous said...
    Sir,

    I think the guna song you have posted has a different voice than her...Might be because of the technical problem...Please correct it.//


    வணக்கம் நண்பரே,

    இப்போது வேறு வடிவில், தரமான இணைப்பில் எஸ்.வரலட்சுமி பாடிய பாடலைக் கொடுத்திருக்கின்றேன்

    ReplyDelete
  5. //நடிப்புக் குயில்// இனிய குரல் கொண்டது குயில் என்பதில் இரு கருத்து இல்லை. ஆனால் அது நடிக்க வந்தால் எப்படி இருக்கும் என்று யாருக்கும் தெரியாது. நன்றாகவும் இருக்கலாம் இல்லாமலும் இருக்கலாம். ஆக, இந்தப் பட்டம் கொஞ்சம் இடிக்கிறது.

    ReplyDelete
  6. தலைவரே, அந்தப் பாடல்களை எப்படி தரவிறக்கம் செய்து கொள்வது?

    ReplyDelete
  7. Sir,

    Thankyou very much, I was looking for this for a long time......She is such a gem. I liked her role in rajarajachozhan a lot (kunthavai piratiyar)and she sung eadu thanthanadi thillayile and thanjai periya koil pallandu vazhgave in that film.

    ReplyDelete
  8. வணக்கம் நண்பரே

    ஏடு தந்தானடி தில்லையிலே விடுபட்டு விட்டது, அருமையானதொரு பாடல் அதையும் பின்னர் இணைக்கிறேன்

    வணக்கம் செயபால்

    குயில் என்றாலே கூவத்தானே செய்யும், பாடுமா என்றும் கேட்கலாம் தானே, இங்கே குயில் என்பதை அவரின் குரல் இனிமைக்காக போட்ட அதேவேளை, நடிப்போடு பாட்டும் கலந்ததால் நடிப்புக் குயில் என்றேன்.

    SUREஷ் ;)

    தரவிறக்க வசதி இல்லை, என்ன பாட்டு வேணும் சொல்லுங்க‌

    ReplyDelete
  9. வெள்ளி மலை மன்னவா பாடலை நீண்ட நாட்களுக்கு பின்பு இப்போது தான் கேட்க்கிறேன்.

    தாய்மை கலந்த குரல் அவர்களுக்கு.

    ReplyDelete
  10. எனக்கு எஸ் வரலட்சுமி அவர்கள் பாடிய திரைப்பாடல்கள் எல்லாமே வேண்டும்.

    ReplyDelete
  11. யூ ட்யூப் கிடைத்தால் கூட போது..,

    ReplyDelete
  12. கரவெட்டியான்September 29, 2009 at 11:38 PM

    'குணா'வில் எஸ்.ஜானகியில் குரலில் முழுமையான பாடல் இருந்தாலும் இந்த 36 செக்கன் பாடல்தான் எனக்கும் பிடித்தது.

    பிரபா, ஒரு குழப்பம்.
    02.05.1938இல் வெளியானது 'சேவாசதனம்'. ஆனால், அதற்கு முன்பே 05.02.1937இல் கே.சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளியான 'பாலயோகினி'யில் இள்ந்துறவியாக எஸ்.வரலக்ஷ்மி அறிமுகமானதாகவும் ஒரு தகவல். உறுதிப்படுத்தமுடியுமா?

    ReplyDelete
  13. பல விடயங்களை அறிந்துகொள்ள முடிந்தது... நல்ல இடுகை அண்ணா...

    ReplyDelete
  14. கரவெட்டியான் said...
    பிரபா, ஒரு குழப்பம்.
    02.05.1938இல் வெளியானது 'சேவாசதனம்'. ஆனால், அதற்கு முன்பே 05.02.1937இல் கே.சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளியான 'பாலயோகினி'யில் இள்ந்துறவியாக எஸ்.வரலக்ஷ்மி அறிமுகமானதாகவும் ஒரு தகவல். உறுதிப்படுத்தமுடியுமா?//

    வணக்கம் கரவெட்டியான்

    பாலயோகினியில் வரலட்சுமி நடித்த தகவல் கிட்டவில்லை. உறுதிப்படுத்திய பின் சொல்கின்றேன்.

    ReplyDelete