Pages

Wednesday, April 23, 2025

இந்திரலோகத்துச் சுந்தரி ராத்திரி கனவில் வந்தாளோ ❤️❤️❤️

திரையிசைப் பாடல் போட்டிகளில் Retro round என்று வரும் போது மிகப் பெரிய ஏமாற்றம் எழுவதுண்டு. காரணம் T.ராஜேந்தர் என்ற மிக உன்னதமான ஆளுமையைக் கணக்கில் எடுக்காமல் பழகிப் போனதை வைத்தே ஆண்டாண்டு காலமாக ஜல்லி அடிக்கிறார்களே என்று.

இந்திரலோகத்துச் சுந்தரி பாடலைப் பொறுத்தவரை திரையிசையின்  எல்லாக் கூறுகளையும் கலந்து அடித்த அற்புதமான படையல்.

அதில் மேற்கத்தேயமும் இருக்கும் அப்படியே கொண்டு போய் சாஸ்திரிய சங்கீதத்திலும் கலந்து விட்டு மீளவும் மேற்கத்தேயத்தில் முக்குளிக்கும்.

டி.ஆர் முத்திரையாக அந்த ட்ரம்ஸ் தாள லயத்தில் பாடல் தொடங்கும் ஆனால் திருப்பமாக பி.எஸ்.சசிரேகா வந்து

ஏலேலம்பர ஏலேலம்பர 

ஏலேலம்பர ஹோய்…

என்று ஒரு தெம்மாங்கு நிரவலைக் கொடுத்து விட்டு எஸ்பிபிக்கு வழிவிடுவார்.

வருபவர் ஆர்ப்பாட்டமாக வருகிறாரா பாருங்கள்?

மிகவும் தணிந்த குரலில் 

இந்திரலோகத்துச் சுந்தரி 

ராத்திரிக் கனவில் வந்தாளோ?...

என்று காதல் ரசம் சொட்டுவார் அந்த ராட்சசன். எந்த இடத்தில் எது தேவை என்றுணர்ந்தவர் அல்லவா?

அவர் குரல் கொடுக்கும் போது பின்னணியில் மின்மினி போல மினி மறையும் இசைக் கீற்றைக் கொடுப்பார் டி.ஆர்.

இங்கே பாருங்கள்

தென்றல் அதன் விலாசத்தை

தம் தோற்றமதில் பெற்று வந்தவள்

மின்னலதன் உற்பத்தியை

அந்த வானத்துக்கே கற்றுத் தந்தவள்

முகத்தைத் தாமரையாய்

நினைத்து மொய்த்த வண்டு

ஏமாந்த கதைதான் கண்கள்

சிந்து பைரவியியை சிந்தும் பைங்கிளியின்

குரலில் ஒலிப்பதெல்லாம் பண்கள்..

பாவை புருவத்தை வளைப்பது புதுவிதம்

அதில் பரதமும் படிக்குது அபிநயம்

அப்படியே இன்னொரு திசையில் பரத  நாட்டியத்துக்குள் கொண்டு போய் விடும் இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் துணைக்கழைப்பது மிக அற்புதமாகக் கவி வல்லமை காட்டவல்ல பாடலாசிரியர் டி.ராஜேந்தரை. அடுத்த சரணத்திலும் இன்னொரு குட்டி பரதநாட்டிய அரங்குக்கு வழி சமைப்பார்.

இந்த மாதிரி fusion அலங்காரத்துக்கு வீணை, புல்லாங்குழல், தபேலா எவ்வளவு அழகாக நயம் செய்கிறது பாருங்கள்.

டி.ராஜேந்தரின் உவமைச் சிறப்பு என்றொரு ஆராய்ச்சி நூல் எழுதினால் இந்தப் பாடல் சிகரமாக நிற்கும்.

லாலால லா லாலால லா

இந்திரலோகத்துச் சுந்தரி ராத்திரிக் கனவினில் வந்தேனோ

கொஞ்சமே வந்தாலும் கொஞ்சும் குரலில் அள்ளிச் செல்வார் சசிரேகா. அங்கேயும் ம்ம்ம் ம்ம் கொட்டி அரவணைப்பார் எஸ்பிபி.

உயிருள்ள வரை உஷா படத்தில் இருந்து தான் ஒரு கச்சிதமான அரங்க அமைப்பை உருவாக்கிப் பாடலைப் பதிவாக்க வேண்டும் என்ற முறைமையை டி.ராஜேந்தர் கொண்டு வந்தார். அதற்கு மிக முக்கிய காரணம் படத்தைத் தயாரித்த பிலிம்கோ நிறுவனத்தில் அப்போது இயங்கிய தயாரிப்பு நிர்வாகி எம்.கபார் இந்த வேண்டுகோளை அவரிடம் வைத்ததாக சாய் வித் சித்ராவில் குறிப்பிட்டிருப்பார். 

ஆனால் அதை வைத்துக் கொண்டு பின்னாளில் அரங்க அமைப்பிலும் ராஜேந்தர் புதுமை காட்டியது அவரின் பன்முகத் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டு.

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அலையிலோ அல்லது இசைஞானி இளையராஜாவின் அலையிலோ சிக்காது தனக்கென ஒரு இசை அலையை உருவாக்கியவர் இசையமைப்பாளர் ராஜேந்தர். 45 வருடங்களுக்கு முன்னர் எழுந்த அந்த அலை இன்றும் கூலி வரை தேவையாக இருக்கிறது. அதுதான் T.ராஜேந்தர் மகத்துவம்.

ரதி என்பேன் மதி என்பேன்

கிளி என்பேன் நீ வா

உடல் என்பேன் உயிர் என்பேன்

உறவென்பேன் நீ வா

இந்திர லோகத்து சுந்தரி ராத்திரி

கனவினில் வந்தாளோ

https://www.youtube.com/watch?v=IKwv5pL0oo4

கானா பிரபா

22.04.2025


1 comment:

  1. அருமையான பதிவு ! படிக்க நிறைவாகவும் , பால்ய கால நினைவுகளைமீட்டெடுக்கவும் வைத்தது . பதிவிற்கு நன்றி !!!

    ReplyDelete