Pages

Monday, June 6, 2022

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே 🌷 ✍🏻பாடலாசிரியர் ஆலங்குடி சோமு நினைவில் ❤️


பின்னணிப் பாடகி B.S.சசிரேகாவின் பாட்டுப் பயணத்தின் தொடக்க காலத்திலேயே ஒரு மகுடமாக அமைந்து விட்ட பாட்டு. அவரின் பாடல்களில் உச்சபட்சமாகக் கொண்டாட வேண்டியதும் கூட.

அப்பேர்ப்பட்ட பாடலின் மயக்குறு வரிகளைப் பாருங்கள்,

“ஆல வட்டம் போடுதடி

நெல்லுப்பயிரு

ஆள வட்டம் போடுதடி

கள்ளப் பருந்து

ஆல வட்டம் போடுதடி

நெல்லுப்பயிரு

ஆள வட்டம் போடுதடி

கள்ளப் பருந்து”

அந்த உவமைகளுக்குள் ஒரு சொல் விளையாட்டை நிகழ்த்தியிருப்பவர் அடுத்த சரணத்திலும், 

“ஊருக்கெல்லாம் பாக்கு வச்சு

காத்திருப்பேன்

ஊரையெல்லாம் பாக்க வச்சு

மணம் முடிப்பேன்”

அந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் எம்.ஜி.ஆர் காலத்திலேயே கொடிகட்டிப் பறந்த ஆலங்குடி சோமு அவர்கள். இன்று அவர் நம்மை விட்டு மறைந்து 25 வது நினைவு தினம் (06.06.1997) ஆகும்.

“இளையராஜா தான் நேசித்த முன்னோர்கள் பாடகர்கள், பாடலாசிரியர்கள் இசை வல்லுநர்களோடு இணைந்து இயங்கியது அவருக்குக் கிட்டிய பெரு வரம். 

எழுபதுகள் காலகட்டங்களில் இந்தப் பிணைப்பின் தாக்கம் அதிகமாக இருக்கும்.” என்று சமீபத்தில் ஃபேஸ்புக் நிலைத்தகவலை நான் பகிர்ந்து கொண்டது இவரையும் மனதில் நிறுத்தித்தான்.

தமிழ்த்திரை இசை இயக்கத்தில் ஆலங்குடி சோமு அவர்களின் பாடல்களின் கவிச்சிறப்பைத் தேடித் தேடி ரசிக்க வேண்டும்.

“ஆண்டவன் உலகத்தின் முதலாளி”, “கத்தியைத் தீட்டாதே உன் புத்தியைத் தீட்டு” “தாயில்லாமல் நானில்லை” போன்ற தத்துவார்த்தம் மிகுந்த பாடல்களில் மட்டுமன்றி “பொன்மகள் வந்தாள் பொருள் கோடி தந்தாள்”, “ஆடலுடன் பாடலைக் கேட்டு” என்று துள்ளிசை உலகிலும் தன் முத்திரையைக் காட்டியவர். 

காரைக்குடியை அடுத்த ஆலங்குடி கிராமத்தைச்சேர்ந்தவர் தன் ஊரையே அடையாளமாகப்பெயரோடு பொருத்திக் கொண்டார்.

ஆலங்குடி சோமுவின் மகள் ஆல் இந்தியா ரேடியோவில் தன் தந்தை குறித்தநினைவுப் பகிர்வில் சில சுவையான பகிர்வுகளைப் பகிர்ந்திருக்கிறார். அதில்தந்தை எழுதியவற்றுள் “வெள்ளை மனம் கொண்ட” (பத்தாம் பசலி) பாடல்தனக்குப் பிடித்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்

“ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் மறைவதில்லை” என்ற பாடலின்மூல வரிகளை எழுதியவரும் இவரே.

எம்.ஜி.ஆரின் நேசத்துக்குரிய பாடலாசிரியர்களில் இவரும் ஒருவர். காஞ்சித்தலைவன் 6 பாடல்களை எழுதியிருக்கிறார்.

“மலருக்குத் தென்றல் பகையானால்” (எங்க வீட்டுப் பிள்ளை) பாடல் ஆலங்குடிசோமு என்றே தெரியாமல் இன்றைய த்லைமுறையும் ரசிப்பதுண்டு.

“மலர்ந்தும் மலராத” தங்கைப் பாசம் போலவே ஆலங்குடி சோமுவிடம் கேட்டுவாங்கிய பாட்டு

“ஒரு கொடியில் இரு மலர்கள் பிறந்ததம்மா”.

அது போலவே 

“எண்ணப் பறவை சிறகடித்து விண்ணில் பறக்கின்றதா” என்றதொரு காவியப்பாடலும் இவர் கை வண்ணமே.

தன் மனைவியின் இளவயது மரணத்தோடு அந்த வேதனையோடு திரையில் எழுதியசூழ்நிலைப் பாடல் தான்

“மலை சாய்ந்து போனால் சிலையாகலாம்”.

“இறந்தவன சொமந்தவனும் இறந்திட்டான்

அதை இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்” பாடல் கூட அவரின் அனுபவவெளிப்பாடே. தனது தம்பியின் நண்பர் சவக்காலை ஊழியர் எதிர்பாராத விதமாகஇறந்த துயரில் “இரவும் பகலும்” படத்தில் அந்த வரிகளைப் பொருத்திக்கொண்டார்.  அந்த வரிகளை முணுமுணுத்து ரசித்தவரைப் பார்த்து நீங்களேபாடுங்கள் என்று இயக்குநர் வேண்டினாராம்.

அவர் தான் பாடலைப் பாடிய நடிகன் அசோகன் அவர்கள்.

“அருள்வாயே அருள்வாயே”

https://youtu.be/JBUrMIc0pQE

“சாது மிரண்டால்” படத்துக்காக T.K.ராமமூர்த்தி இசையில் டாக்டர்எம்.பாலமுரளிகிருஷ்ணா பாடியது பின்னர் தன் இசை மேடைகளில் கூடப் பாடிச்சிறப்பித்த ஆலங்குடி சோமு அணி சேர்த்த வரிகள் அவை.

தயாரிப்பாளராக “பத்தாம் பசலி” மற்றும் ஜெய்சங்கர் நடித்த “வரவேற்பு” இரண்டுமே இவரின் பணப் பையை நிறைக்கவில்லை.

“கத்தியைத் தீட்டாதே உன் புத்தியைத் தீட்டு” தமிழக அரசால் எட்டாம் வகுப்புபாடப் புத்தகத்தில் சேர்த்துப் பெருமை கொள்ள வைத்தது.

அப்படியே எழுபதுகளில் கொஞ்சம் இறங்கிப் பார்த்தால் “ஒரு கோடி இன்பங்கள்”  https://www.youtube.com/watch?v=VuShIlGyGMQ என்று சங்கர் – கணேஷ் கூட்டணிக்கும் விருந்து வைத்த பாடலாசிரியர் நம் ஆலங்குடி சோமு.

ஆலங்குடி சோமு அவர்களே தயாரித்து கே.பாலசந்தர் இயக்கிய “பத்தாம் பசலி” படத்தில் அனைத்துப் பாடல்களையும் வி.குமார் இசையில் எழுதியவர். “வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒன்று” https://www.youtube.com/watch?v=qlwGXhGdtFw பாடலை மறந்து விட முடியுமா என்ன?

பின்னாளில் வி.குமாரின் இசையில் எண்பதுகளில் வெளியான “சங்கரி” படத்திலும் பி.சுசீலா பாட “வாய் பேச" என்றொரு பாடலை எழுதியளித்தார்.

“மேளம் கொட்ட நேரம் வரும்” பாடல் மட்டுமன்றி லட்சுமி படத்தில் சுளையாக மூன்று பாடல்களை ஆலங்குடி சோமு அவர்கள் கைவண்ணத்தில் எழுத வைத்து இசையமைத்தார் இளையராஜா. 

“வேலாயி வீராயி” எஸ்.ஜானகி குழுவோடும், “பந்தயத்திலே” என்று வாணி ஜெயராமுக்காகவும் அமைந்தவை ஏனையவை.

அப்படியே “வேலாயி வீராயி” https://www.youtube.com/watch?v=39FCas-CuLw பாடலைக் கேட்கும் போது இன்னொரு பாடலை ஞாபகமூட்டும். 

அதுதான் “மஞ்சக்குளிச்சு அள்ளி முடிச்சு” https://www.youtube.com/watch?v=eNL69g00z_U

இந்தப் பிரபல பாடல் லட்சுமிக்கு முற்பட்ட “16 வயதினிலே” படத்துக்காக ஆலங்குடி சோமுவால் எழுதிப் பிரபலமாக அமைந்தது.

“எஞ்சோட்டுப் பெண்டுகளே

 இளவாழைத் தண்டுகளே”

அந்த அப்பட்டமான கிராமியத்தனத்தையும் தன்னால் சித்தரிக்கவும் முடியும் என்று எழுதிக் காட்டிவர். அந்தப் பாடலில் ஒரு கதைப்பாடல் உத்தியில் உரையாடல் சார்ந்தது போல வடிவமைத்திருப்பார் ஆலங்குடி சோமு.

உமா ரமணக்குக்காக குலுங்கக் குலுங்க இளமை (கண்ணே ராதா), எஸ்.பி.சைலகாவுக்காக கண்டாங்கி சேலை (கெட்டி மேளம்) என்று மேலும் பாடகிகளுக்கான தனிப்பாடலும் இளையராஜா இசையில் எழுதியவர் விஜய்யின் அம்மா ஷோபா சந்திரசேகர் பாடிய “அவள் ஒரு பச்சைக் குழந்தை” படத்தில் “பொண்ணு பார்க்க வந்தாரு மாப்பிள்ளை”

https://mio.to/album/Aval+Oru+Pachai+Kuzhantai+%281978%29

பாடலில்

‘இளையராசாவ நினைச்சு 

இளைச்சுப் போனீங்க தனிச்சு” 

என்று குறும்பு வரிகளையும் அதில் இட்டிருப்பார்.

எண்பதுகளில் புறப்பட்டவர்களுக்கும் தான் சளைத்தவர் இல்லை என்று காட்டுமாற்போல ஆலங்குடி சோமு அவர்கள் இசைஞானி இளையராஜா இசையில் கொடுத்த “நியாயம்” படப் பாடல் “கங்கை நதி மீனோ”

https://www.youtube.com/watch?v=VuxkDtnhqTk

என் பெருவிருப்புகளில் ஒன்று.

மாலையிடப் போறவன

கண்ணில் கலந்து

மங்கை மனம் அலையுதடி

மெல்லப் பறந்து

தங்கமே வைரமே இளங்கிளியே

குயிலே மயிலே இது உண்மையடி

மேளம் கொட்ட நேரம் வரும்

பூங்கொடியே

இந்தப் பாடலின் சந்தோஷ வடிவமும், சோக வடிவமும் ஒரு சேர அமைந்த ஒலிப் பகிர்வு

https://www.youtube.com/watch?v=gSYBDYzfwxo

கானா பிரபா

06.06.2022


No comments:

Post a Comment