Pages

Tuesday, May 10, 2022

கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலனே ❤️


இசைஞானி இளையராஜாவின் தாளலயம் காலத்துக்குக் காலம் வெவ்வேறு பரிமாணத்தில் விளைந்த போது, அது தொண்ணூறுகளில் கருக்கட்டிய விதத்தை “உடல் தழுவத் தழுவ” (கண்மணி) வழியாக முன்னர் உச்சுக் கொட்டிச் சிலாகித்திருந்ததைப் படித்திருப்பீர்கள். அந்த மாதிரியான பாடல்களில் Tempo அப்படியே தொடக்கம் முதல் முடிவிடம் வரை ஒரே சீராக முடுக்கி விடப்பட்டிருக்க, முன்னால் நின்று பாடுவார்கள். அதிலிருந்து இன்னொரு பரிமாணத்தில் “ஒரு மைனா மைனாக் குருவி”, “வெண்ணிலவு கொதிப்பதென்ன” வந்தது போல அதே அலைவரிசையில் நான் ரசிப்பது இந்த

“கள்ளத்தனமாகக் கன்னம் வைத்த காதலனே” 

https://www.youtube.com/watch?v=P9JlBumqATk

“டுக் டுக் டா டுடுடடுக் டுக் டா” அந்த Tempo தன் பாட்டுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்க, பாடுபவர்கள் மெல்லிசை கூட்டும் புதுமை இங்கிருக்கும்.

இந்தப் பாடலின் அழகியல் என்னவென்றால் போதாக்குறைக்குக் கூட்டுக் குரல்களையும் உள்ளே நுழைத்து விடுவார். அது ஏதோ வண்ண விளக்கு ஒளி பாய்ச்சிய மேடையில் கோரஸ் பாடும் வண்ணச் சிட்டுக்கள் வந்து பாடி விட்டு மீண்டும் மனோ, சித்ரா கையில் ஒப்படைத்து விட்டுப் போகுமாற் போல.

“கள்ளத்தனமாக கன்னம் வைத்த காதலனே” போலீஸ் படத்துப் பாட்டுக்கு கங்கை அமரனின் குறும்புத் தனமான வரிகள்.

“உள்ளே வெளியே” படம் பார்த்திபன் மசாலா சமாச்சாரங்களை அள்ளி வீசி எடுத்த “நீங்கள் கேட்டவை” ரகம். முந்திய வருடம் குரு நாதரோடு “ராசுக்குட்டி", அடுத்த வருடம் சீடரோடு “உள்ளே வெளியே” என்று ஐஸ்வர்யா நடித்த, அவரின் தாராளமயமாக்கல் கொள்கையும் சேர்ந்து கொள்ள படம் பார்த்திபன் நினைத்தது போலவே “உங்கள் விருப்பம்" ஆனது.

“பொண்டாட்டி தேவை” படத்துக்குப் பின் இயக்குநர் பார்த்திபனோடு கை கோர்த்த இளையராஜா, இடையில் தாலாட்டு பாடவா, உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் என்று வெவ்வேறு இயக்குநர்களோடு பார்த்திபனை நாயகனாக்கி வந்த படங்களில் இருந்து வித்தியாசப்பட்டதை அந்த நேரம் என்ன மனநிலையில் பார்த்திபனைப் பார்த்துச் சொல்லியிருப்பாரோ என்று நினைப்பதுண்டு. 

ஆனாலும் “கண்டு பிடி நீதான்” , “சக்கரக்கட்டி சக்கரக்கட்டி” பாடல்களோடு தன் கருமமே இசையாகக் கொட்டி விட்டார்.

இளையராஜாவின் காதலன் பார்த்திபன் இயக்கிய படங்களில் பிடித்த பாடல் என்றால் முந்திக் கொண்டு இந்தப் பாடலைத் தான் கையைக் காட்டுவேன்.

ஒருமுறை இந்தப் பாடலில் மூழ்கினால் அப்படியே நீர்ச்சுழி போல இழுத்துக் கொண்டு போய் அளவு கணக்கில்லாமல் கேட்க வைத்து விட்டுத் தான் அனுப்பி விடும். அப்போதும் மனம் வராமல் கரையேறுவேன்.

நேற்றும் அப்படித்தான்.

என்னை மறந்தேன்

இன்ப மருந்தே

உள்ளத்தில் எண்ணத்தில்

தித்தித்தை போடுதே

கள்ளத்தனமாக

கன்னம் வைத்த காதலியே

https://www.youtube.com/watch?v=P9JlBumqATk

கானா பிரபா


No comments:

Post a Comment