Pages

Thursday, January 27, 2022

என்னுயிர்த் தோழியே.... என்னுயிர்த் தோழியே....❤️

இந்தப் பாட்டு நேற்றிலிருந்து என்னைச் சுற்றி வந்து கொண்டே இருக்கிறது. இம்மட்டுக்கும் பாடலை இருந்து கேட்காமலேயே மனசில் இசையெழுப்பிக் கொண்டிருக்கிறது உன்னிமேனனின் அந்த நாசிக் குரலாக.

“நான்கைந்து சூரியன்

ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன”

என்று பாடும் போது அப்படியே போகிற போக்கில் அந்தக் கோள்கள் எல்லாம் எதுவுமில்லை, தன் காதலியின் முன் என்னுமாற்போலவொரு இயல்பானதொரு அலட்சிய நடையில் மிளிர்வார் உன்னிமேனன்.

உன்னிமேனனின் மீள் வருகை ரஹ்மானின் தொடக்கத்தில் இருந்து பரந்து விரிந்தது. அது போலவே பாடகி சுஜாதாவும் கூட. இருவருமே இளையராஜா வழியாகத் தமிழுக்கு வந்தவர்கள், இருவருமே மீளவும் அடுத்த சுற்றில் தமிழுக்கு வரும் போது ஜோடியாகவே ரஹ்மானின் இசையில் “புது வெள்ளை மழை பொழிந்தார்கள்”.

ரஹ்மான் தாண்டி பல்வேறு இசையமைப்பாளர்களிடமும் இவ்விருவரும் பயணப்பட்டாலும், உன்னிமேனனுக்குத் தோதான ஆள் ரஹ்மான் தான் என்று மீள நிறுவியது “என்னுயிர்த் தோழியே” பாடல் தான். இதற்கு முன்னர் கூட “என்ன விலை அழகே” பாடலில் அந்த அற்புதம் நிகழ்ந்திருக்கும்.

அகண்ட வெளியில் தன்னைச் சுற்றி ஒரு நட்சத்திரக் கூட்டம் போல இசை ஆவர்த்தனங்கள் ஒலியெழுப்ப, தன்பாட்டில் ஒரு “தியானி” போல அமைதியாகப் பாடிகொண்டிருப்பார் உன்னிமேனன். இசைமேடைகளில் கூட இம்மாதிரியானதொரு அசைவியக்கம் தான் கொடுப்பார். கண்கள் மூடிய தியான நிலையில் உதடுகள் பிரித்து அந்த மென் நாசிக்குரல் பீறிடும் போது கேட்கும் நாங்கள் கண்ணை மூடிக் கொண்டு அந்தப் பரவச நிலைக்குப் போய் விடுவோம்.

அப்பேர்ப்பட்ட பாடல்களில் ஒன்று தான் இந்த “என்னுயிர்த் தோழியே” கூட.

“இனியவளே.......

அமைதி புரட்சி ஒன்று நடந்ததே

உன் விழிகள் இங்கே 

புதிய உலகம்

ஒன்றைத் திறந்ததே 

ஓ.....”

எனும் கட்டத்தில் அந்த அனுபவத்தை மனவெளியில் நுகரலாம்.

“கண்களால் கைது செய்” படத்தின் நாயகனின் மனவோட்டத்துக்குத் தோதான குரலும், பாடலும் இது.

பா.விஜய் அழகாக வரிகளைப் பொருத்தியிருப்பார். இந்தப் படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றுமே வெவேறு பாடலாசிரியர்களால் மின்னியவை.

“ஒற்றை ஜடையில் உனை கட்டி

எடுத்து வந்து வைப்பேன்

எனது கள்ள சிரிப்பழகில்

காயம் செய்து பார்ப்பேன்.....

தீ பிடித்த தங்க மீனை

பார்த்ததுண்டா

என்னை நீயும் தான்

பார்த்து கொள்வாய்”

உன்னிமேனனின் குரலுக்கு முற்றிலும் மாறுபட்டவொரு திசையில் ஒரு மிதர்ப்பான வெளிப்பாடாய் சின்மயி.

ஆனால் அதற்கெல்லாம் அசராமல் “என்னுயிர்த் தோழியே என்னுயிர்த்தோழியே” என்று மீண்டும் அந்தத் தியானியாகிவிடுவார்.

மூச்சு முட்ட

கவிதைகள் குடித்துவிட்டு

எந்தன் செவியில் சிந்துகிறாய்

என்று பாடலில் வருமாற்போல, மூச்சு முட்ட இசையைக் குடித்து விட்டு எம் நெஞ்சில் கொப்பளிப்பது போலிருக்கும் இந்தப் பாட்டைக் கேட்கையில்.

என்னுயிர் தோழியே

நான்கைந்து சூரியன்

ஆறேழு வெண்ணிலா வந்ததென்ன

என் வானம் புதுமையாய்

ஆனதென்ன

https://www.youtube.com/watch?v=mEe0IQm-cyM

கானா பிரபா

27.01.2022

No comments:

Post a Comment