Pages

Wednesday, December 18, 2019

தேனிசைத் தென்றல் தேவா இசையில் 🌴மரிக்கொழுந்து 🎋 ❤️ நம்ம ஊரு பூவாத்தா 🌿


“கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு
 உன் காதல் கவிதைகளின் வரிகளைக்
  கொஞ்சம் திருப்பிக் கொடு”

இந்தப் பாடல் வந்த நாள் தொட்டு இந்த ஆரம்ப வரிகளில் கண்டிப்பாக இசையமைப்பாளரின் பங்கு இருக்க வேண்டுமென்றே எண்ணிக் கொண்டேன்.
அதையே சமீபத்தில் Chai with Chithra பேட்டியில் உறுதி செய்தார் தேனிசைத் தென்றல் தேவா. இயக்குநருக்குத் தான் கொடுத்த மெட்டு ஒன்றும் திருப்திப்படாமல் போகவே, தானே டம்மி வரிகளை இட்டுப் போட்ட பாட்டு இது என்றார். பாடலின் சரணத்தை பாடலாசிரியர் காமகோடியன் எழுதி முடித்தார். “கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு” சமீபத்தில் கூட பாடல் இசை இசைஞானி இளையராஜா என்று ஒரு பண்பலை வானொலி உச்சரிக்கக் கேட்டேன். 😀

“கண்ணதாசனே கண்ணதாசனே வந்து விடு” போலவே தேவாவின் 50 வது படமான சோலையம்மா வில் “ராசா இளையராசா பாட்டுப் படிக்க்கிறேன் கேளு நா மதுரைப் பக்கத்து ஆளு” https://youtu.be/wYRsv2HEun8
 என்று கங்கை அமரன் & எஸ்.ஜானகியை வைத்து ஒரு அழகிய பாடலைக் கொடுத்தையும் இங்கே நினைவுபடுத்த வேண்டும்.

“மரிக்கொழுந்து” படம் வருவதற்கு முன்பே பெரிய எதிர்பார்ப்பைக் கிளப்பி விட்ட படம். அந்தக் காலத்தின் அழகு தேவதை ஐஸ்வர்யாவுக்கு முகமெல்லாம் கரி பூசி வித்தியாசப் “படுத்தி” பொம்மை, பேசும் படம் சினிமா இதழ்களில் காட்சிப்படுத்தி எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தார்கள்.
இந்தப் படத்தில் தாய், மகள் என்று இரட்டை வேடம் போட்ட ஐஸ்வர்யாவுக்கு இதுவே அவரின் வாழ்நாளில் பேர் சொல்லும் படமாகவும் இருக்கக் கூடும்.

இயக்குநர் புதியவன் தன் குரு நாதராக பாரதிராஜாவையும், பார்த்திபனையும் வணங்கி முதல் மரியாதை படத்தின் புல்லாங்குழல் இசையோடே படத்தை ஆரம்பிக்கும் போதே தடுமாற்றம் தட்டுகிறது. இந்தப் படத்தில் ஐஸ்வர்யா, ரமேஷ் அர்விந்த், கவுண்டமணி உட்பட நட்சத்திரப் பட்டாளம் இருந்தாலும் படத்தின் திரைக்கதையோட்டமும், காட்சி வடிவமைப்பும் கை கொடுக்கவில்லை. இன்று வரை படத்தை நினைவில் வைத்திருக்க ஒரே காரணம் தேனிசைத் தென்றல் தேவா கொடுத்த தேனான பாடல்கள் தான்.

மரிக்கொழுந்து படத்தில் மொத்தம் ஒன்பது பாடல்கள். கவிஞர் வாலி மற்றும் காமகோடியன் பங்கிட்டுக் கொண்டார்கள்.
இயக்குநர் புதியவன் பாடல் விஷயத்தில் மகா ரசனைக்காரர் போல.
கண்ணதாசனே பாடலோடு, எஸ்.ஜானகியின் “என் பாட்டு தான்”, சித்ரா பாடிய “பூங்குயில் நித்தம்”ஆகியவை சம காலத்தில் ஹிட்டடித்தன. தேவா இசையில் அதிசயமாக எஸ்.பி.சைலஜா “எனக்கென்ன குறைச்சல்” என்ற விரகதாபம் சொட்டும் பாடலைப் பாடியிருக்கிறார். அந்தக் காலத்தில் பெரும் புள்ளி படத்தில் “பொன்மகள் வந்தாள்” பாடலை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியது போல இங்கே “துள்ளுவதோ இளமை” பாடலை எஸ்.ஜானகி பாடி ரீமிக்ஸியிருக்கிறார். “தொடத் தொடத் தொடங்கும் பூஜை தான்” அமைதியாக வந்து ஆக்கிரமிக்கும் கிராமியத் தெம்மாங்கு.
இன்று வரை தேவா இப்படியொரு குரல் தொனியில் பாடவில்லை என்று அதிசயப்படுமளவுக்கு ஒரு பாட்டு இருக்கிறது. அது “ஆலமரமாம் ஆலமரமாம் ஊருக்குள்ள, ஆசைக் குயிலாம் ஆசைக்குயிலாம் சோகத்துல” என்று அமையும் பாட்டு. ஏனோ பலர் கவனத்தை ஈர்க்கவில்லை இது.

மரிக்கொழுந்து பாடல்களைக் கேட்க

https://youtu.be/z4lMU2eeqmM

வெற்றிகரமான இசையமைப்பாளர் & இயக்குநர் கூட்டு எனும் போது தொண்ணூறுகளில் தேனிசைத் தென்றல் தேவா & இயக்கு நர் மணிவாசகம் கூட்டணியை மறவாமல் குறிப்பிட வேண்டும். அந்த வகையில் இந்த இருவர் கூட்டணிக்கும் பிள்ளையார் சுழி போட்ட படம் “நம்ம ஊரு பூவாத்தா”. தேவாவுக்கு ஆரம்ப காலத்தில் தொடர்ந்து கிராமியப் படங்களே கிடைத்ததால் அவரின் நிலையைத் தக்க வைத்துக் கொள்ள இது பெரும் பலமாக அமைந்தது. அந்த வகையில் “நம்ம ஊரு பூவாத்தா” வாய்ப்பும் தேவாவை கிராமங்கள் வரை எடுத்துச் செல்லப் பேருதவி புரிந்தது.
இந்தப் படத்தின் வழியாக நடிகை கெளதமிக்கும் அவரின் திரையுல வாழ்வின் மறக்க முடியாத பாத்திரப் படைப்பும் கிடைத்தது.

90களில் கிராமங்களின் எல்லை வரை அறியப்பட்டிருந்தார் இயக்குநர் மணிவாசகம். நடிகர் சரத்குமாருக்கு ஆரம்ப காலத்தில் நல்லதொரு அடித்தளமிட இவரின் பங்களிப்பும் முக்கியமானது. மணிவாசகம் - சரத்குமார் - தேவா கூட்டைப் பற்றிப் பின்னர் பார்ப்போம்.

 வழக்கமாக தேவாவுடன் வெற்றிகரமான கூட்டு வைக்கும் இயக்குநர்கள் இளையராஜாவுடன் இணையும் போது பெரிய வெற்றியைக் கொடுத்ததில்லை என்பதற்கு மணிவாசகமும் விதிவிலக்கல்ல. ராஜாவுடன் இணைந்த “ராக்காயி கோயில்” சுமாராகவே போனது.
மணிவாசகத்தின் முதல் படமான “நம்ம ஊரு பூவாத்தா” அவரின் சொந்தப் படமாகவே அமைந்தது. இதிலும் ராக்காயி கோயில் கதையின் முக்கிய அங்கமாக வருகிறது.
முரளி, கெளதமி ஜோடியுடன், மணிவாசகம் படங்களில் கலக்கும் கவுண்டமணி & செந்தில் கூட்டோடு பக்கா கிராமிய மணம் கொண்ட படம். முதல் படமே இயக்குநர் மணிவாசகத்துக்கு தேனிசைத் தென்றல் தேவா இசையோடு ஒரு அடையாளம் கொடுத்தது.

“நம்ம ஊரு பூவாத்தா” படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள், அனைத்தையும் எழுதியவர் கவிஞர் காளிதாசன். அவற்றில் சித்ரா பாடிய
“மஞ்சனத்திப் பூவே இளம் சிட்டுக்குருவிகளே”
பட்டி தொட்டி எங்கும் வாசம் வீச
“மாராப்பு போட்ட புள்ள” எஸ்.பி.பி & சித்ரா,
“சின்னச் சின்னப் பூவே செம்பகப்பூ தேனே”
கே.ஜே.ஜேசுதாஸ் & சித்ரா கூட்டில் வந்த சந்தோஷ மெட்டுகளோடு “ஆவாரம் பூவு ஒண்ணு நாரோடு வாடுதுன்னு” சோக ராகமும் இனித்தது.

நம்ம ஊரு பூவாத்தா பாடல்களைக் கேட்க
https://youtu.be/L-T4ifayzy4

என்னென்ன கோலம் உண்டு ஜாதி உண்டு
உன் கண்ணில்..
ஏழெட்டு நாகம் வந்து தீண்டுதம்மா
என் நெஞ்சில்..

எழுதுகிறோம் பல பாடல்களை
எங்கள் காதலுக்கு
இளம் உள்ளங்களில்
அதன் எண்ணங்களில்
சுகம் சேர்ந்திருக்கு

#தேனிசைத்_தென்றல்_தேவா
#ஆர்ப்பாட்டம் இல்லா ஆரம்பகாலம்
#குறுந்தொடர் 🎹

கானா பிரபா
18.12.2019

No comments:

Post a Comment