Pages

Wednesday, July 11, 2018

மெட்ராஸ் லலிதாங்கி வசந்தகுமாரி M.L.V 90 🏵






“குயிலே உனக்கனந்த
கோடி நமஸ்காரம்
குமரன் வரக் கூவுவாய் நீ
குமரன் வரக் கூவுவாய்”
https://youtu.be/F1yw_3vLUZ4
காற்றலைகளில் இந்தக் குரல் பரவும் போது கந்தவேள் கோட்டத்தில் நிற்குமாற் போலவொரு உணர்வு தெறிக்கும். அதுவும் அந்தப் பாடலை ஆரம்பிக்கும் போது தன்னுடைய சாஸ்திரிய முத்திரையோடே தொடங்குவார் எம்.எல்.வசந்தகுமாரி.
“காற்றினிலே......வரும் கீதம்....” என்று எம்.எஸ்.சுப்புலட்சுமி,
“நித்திரையில் வந்து
நெஞ்சில் இடம் கொண்ட
உத்தமனார் யார் தோழி....”
இது M.C.வசந்தகோகிலம்
இவர்களோடு,
“கொஞ்சும் புறாவே......
நெஞ்சோடு நெஞ்சம்
ஜெகமெங்கிணும் உறவாடிடும்
ஜாலம் இதேதோ....”
என்று M.L.வசந்தகுமாரியையும் சேர்த்தால் தமிழ்த் திரையிசை எவ்வளவு செழுமையோடு இயங்கியது என்பதை உதாரணம் பகிரும்.
திரைப்படங்களுக்கான இசை என்று வரும் போதே நாயகன், நாயகி பாடி நடிக்க வேண்டிய தேவை எழுந்த போது பாட்டுக்காரர்களே அரிதாரம் பூசிக் கொண்டார்கள். பின்னர் பின்னணிக் குரல் என்ற நிலை வந்த போதும் கூட சாஸ்திரிய இசைக்காரர்கள் அன்றும் இன்றும் தம் பங்களிப்பை நல்கி வருகிறார்கள்.
எம்.எஸ்.சுப்புலட்சுமி போன்றே டி.கே.பட்டம்மாள், வசந்தகோகிலம் வரிசையில் எம்.எல்.வசந்தகுமாரியும் கணிசமானதொரு பங்களிப்பை நல்கியிருக்கிறார்.
தன்னுடைய தாய் லலிதாங்கியை முதற் குருவாகக் கொண்டவர் 11 வயதிலிருந்து தாயாரோடு மேடைக் கச்சேரிகளில் பங்கு கொண்டவர் தன் 13 வயதில் முதன்மைப்ப்பாடகியாக அரங்கேறினார். பிரபல பாடகர்
ஜி.என்.பாலசுப்ரமணியனின் வழிகாட்ட அவரின் இசையுலகம் பரந்து விரிந்தது.
இசைத்துறையில் சாதனைச் சரித்திரம் படைத்த வசந்தா என்ற வசந்தகுமாரிக்கு விருதுகளும் அங்கீகாரங்களும் கிட்டின. அதில் மிக முக்கியமாக “சங்கீத கலாநிதி” என்ற உயர் விருதை இளம் வயதில் பெற்ற பெண் பாடகி என்ற கெளவரம் அவரது 49 வது வயதில் வாய்த்தது.
எம்.எல்.வசந்தகுமாரி, விகடம் ஆர்.கிருஷ்ணமூர்த்தியை மணம் செய்து சங்கரராமன் மற்றும் ஶ்ரீவித்யா ஆகியோரைப் பெற்றெடுத்தார். ஶ்ரீவித்யா நடிகையாகவும், பாடகியாகவும் திரைத்துறையில் தன் பங்களிப்பை வழங்கினார். எம்.எல்.வசந்தகுமாரியின் வாரிசுகள் இருவருமே தற்போது உயிருடன் இல்லை.
தினமலர் பத்திரிகையில் கிடைத்த சுவாரஸ்யமான பகிர்வை இங்கே தருகிறேன்.
“மாணவப் பருவத்தினராக எம்.எல்.வசந்தகுமாரி இருந்தபோது மதுரையில் ஒரு சங்கீத விழாவில் ஒரு கச்சேரி மேடையில் அவருடன் ஒரு பெரியவரும் அமர்ந்திருந்தார். அந்நிகழ்ச்சியை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த இளைஞருக்கு இவ்வாறு மேடையில் எம்.எல்.வி.யின் அருகில் அமர்ந்திருந்த பெரியவரைக் கண்டதும் கோபம் வந்தது. கச்சேரி மேடையில் பாடகிக்குப் பக்கத்தில் இந்த மனிதருக்கு என்ன வேலை? இவ்வாறு நினைத்தவராக அவரிடம் சென்று உடனே மேடையை விட்டுக் கீழே இறங்கும்படி உத்தரவிட்டார். அப்போது அந்தப் பெரியவர் சொன்னார்; பாடிக் கொண்டு இருப்பது என் பெண்தான். அவரிடம் யாரும் விஷமம் செய்யாமல் இருக்கவே நான் இங்கே இருக்கிறேன்.
இளைஞர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பும் கேட்டார். பிறகு இந்த இளைஞருக்கும் அவருக்கும் இடையே நல்ல நட்பு மலர்ந்தது. அவர் பெயர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி. இந்த நட்பே பின்னால் அவர் எம்.எல்.வி.யை மணந்துகொள்ளவும் காரணமாயிற்று. நல்ல செல்வந்தராக இருந்த அவர் சினிமாப்படம் எடுக்கும் முயற்சியில் பொருளிழந்து பிறகு விகடக்கலையில் புகழ்பெற்று விகடம் கிருஷ்ணமூர்த்தி என்றழைக்கப்பட்டார். “ என்று தினமலர் செய்தி பகிர்கின்றது.
எம்.எல்.வசந்தகுமாரியின் முக்கியமான இசை வாரிசாக திருமதி சுதா ரகுநாதன் விளங்குகிறார். தன் குருவிடம் இசைக் கல்வியில் தேறி அவருடனேயே ஐந்து ஆண்டுகள் கச்சேரிகளில் பயணப்பட்ட சுதாவுக்குத் திருமண ஏற்பாடுகள் நடப்பதையிட்டுக் கரிசனை கொண்டு தான் மாப்பிள்ளையைப் பார்க்க வேண்டுமென்று கூறி ரகுநாதனைச் சந்தித்து “சுதாவின் இசைப் பயணம் அவரது திருமண வாழ்வால் தடைப்படல் கூடாது” என்று வேண்டினாராம் எம்.எல்.வசந்தகுமாரி.
இதனால் தான் இவர் என் குரு மட்டுமல்ல என் அம்மாவும் கூட என்று நெகிழ்கிறார் சுதா ரகுநாதன்.
திரையிசையில் தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நிறையப் பாடியுள்ளார். அவற்றில் குறிப்பாக
“கோபாலனோடு நான் ஆடுவேனே” (வாழ்க்கை), “ஆகா ஆகா வாழ்விலே” (மந்திரி குமாரி), “கண்ணன் மன நிலையை” (ஏழை படும் பாடு), “அய்யா சாமி ஆவோஜி சாமி” (ஓர் இரவு), “கொஞ்சும் புறாவே” (தாய் உள்ளம்), “குயிலே உனக்கு” (மனிதன்), “கூவாமல் கூவும் கோகிலம்” (வைர மாலை), “ஆடல் காணீரோ” (மதுரை வீரன்) போன்றவை இன்றளவும் உலக வானொலிகளாலும், வானொலி ரசிகர்களாலும் பெரு விருப்போடு மனதில் வைத்திருக்கும் பாடல்கள்.
செவ்வியல் இசையில் எம்.எல்.வசந்தகுமாரி
https://youtu.be/IdHsiwVudlI
திரையிசையில் எம்.எல்.வசந்தகுமாரி
https://www.youtube.com/playlist…
இன்று பிரபல சாஸ்திரிய இசை மற்றும் திரையிசைப் பாடகி எம்.எல்.வசந்த்ந்குமாரியின் 90 வது பிறந்த தினமாகும்.
மேலதிக தகவல் குறிப்புகள் & படங்கள் நன்றி :
திருமதி சுதா ரகுநாதன்
ஹிந்து ஆங்கில நாளேடு
தினமலர்
விக்கிப்பீடியா
கானா பிரபா
03.07.2018

1 comment: