Pages

Wednesday, December 6, 2017

இசையமைப்பாளர் ஆதித்யன் 🎸🥁🎹




“தந்தானே தானானானே தந்தாதானேனானே தந்தானேனா தானானே” கே.ஜே.ஜேசுதாஸ் எஃப்.எம் 99 என்ற பண்பலை வழியாகப் பாடிக் கொண்டிருக்கிறார். “சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே” பாடல் வெள்ளவத்தை அடுக்குமாடிக் குடியிருப்பின் சன்னல் கதவைத் திறந்தடிக்கும் காற்று உள் வந்து சில்லிட, உள்ளே படிக்கும் மேசை கூடக் கிடையாது வெறுந்தரையில் ப்ளாஸ்டிக் பாய் விரிப்பில் நானும் நண்பர்களுமாகப் படுத்தெழும்பவும், படிக்கவும் பாவிக்கும் அந்த ஒற்றை அறையின் மூலையில் தானும் உட்கார்ந்து இசையை அந்த அறை முழுக்கப் பரப்பிக் கொண்டிருக்கிறது. அமரன் படப் பாட்டின் துல்லிய இசையை அந்த ஒற்றை ஸ்பீக்கர் துள்ளிக் குதித்து மகிழ்ச்சியின் பிரவாகமாகக் காட்டுகிறது. 
அந்த நேரத்தில் புதுசா என்ன பாட்டு வந்திருக்கிறது என்பது நமக்குப் படிப்பை விட முக்கியம்.
தொண்ணூறுகளில் கொழும்பு வந்து தங்கியிருந்த பொழுதுகளில் இதுதான் நித்தமும் நடக்கும்.
அமரன் படப் பாடல்கள் அறிமுக இசையமைப்பாளர் ஆதித்யன் இசையோடு வந்த போது பரவலான கவனத்தை ஈர்த்தது. இயக்குநர் ராஜேஷ்வர் ஏற்கனவே இதயத் தாமரை, நியாயத் தராசு போன்ற படங்களில் சங்கர் - கணேஷ் இடமிருந்து வெகு வித்தியாசமான பாடல்களை வாங்கியிருப்பார். அப்பேர்ப்பட்ட இயக்குநர் படமல்லவா?
நடிகர் கார்த்திக் ஐப் பாடகராக்கி “வெத்தல போட்ட ஷோக்குல நான்”, “முஸ்தபா முஸ்தபா” என்றும்
சாஸ்திரிய இசையின் முப்பெரும் பாடகிகளில் ஒருவராகக் கொள்ளப்படும் எம்.எல்.வசந்தகுமாரியின் புதல்வி, நடிகையாக அதுவரை பயணப்பட்டவர் துள்ளிசைப் பாடலாக “சண்ட பஜாரு மாமா கொஞ்சம் உஷாரு” என்று துள்ளிசைப் பாடலோடு வருகிறார். ட்ரிங் ட்ரிங் ட்ரிங் ட்ரிங் என்று தொடங்கும் அந்த ஆரம்ப அட்டகாசத்துக்காகவே வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பி மகிழ்ந்திருக்கிறேன் ஶ்ரீவித்யாவின் பாடலை. ஒரு பாடலை இன்னார் பாடினால் எப்படியிருக்கும் என்று மனம் ஒப்பிட்டுப் பார்த்திருக்கும் பல வேளை ஆனால் இங்கே கே.ஜே.ஜேசுதாஸ் உம் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உம் பாடும் “சந்திரனே சூரியனே நட்சத்திர நாயகனே” பாடல் இரண்டு வடிவமுமே இவ்விருவரின் தனித்தன்மைக்கேற்ப அமைந்திருக்கும். ஜேசுதாசின் குழைந்து தோயும் குரல் ஒரு பக்கம் என்றால் இன்னொரு புறம் விரக்தியும், நம்பிக்கையும் கலந்தவொரு தொனியில் 
வார்த்தைகளைத் தெறித்து விடும் பாங்கில் எஸ்.பி.பி கொடுத்திருப்பார். வசந்தமே அருகில் வா தொண்ணூறுகளின் மென் சோகப்பாடல்களில் தனித்துவமானது.
அமரன் என்ற இறுக்கமாக நகரும் படத்தில் பாடல்களின் புதுமை அப்போது இசை ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. “ரோஜா” பட வருகையின் போது ஏ.ஆர்.ரஹ்மான் கொண்டாடப்பட்ட போது அப்போது சற்று எரிச்சலாக இருந்தது. இந்த மாதிரிப் புதுமையான இசையை அமரன் படத்தில் பார்த்து விட்டோமே என்று. பல வருடங்களுக்குப் பின் தான் அறிந்து கொண்டேன் அமரன் படத்தில் ஆதித்யனின் இசையில் ஏ.ஆர்.ரஹ்மானின் கீ போர்ட் வாத்திய இசையும் துணை புரிந்ததென்று.

சந்திரரே சூரியரே மற்றும் முஸ்தபா பாடல்களுக்கு இசை விஸ்வகுரு. கவனத்துக்கு எடுத்து வந்த நண்பர் வெங்கடேஷ் இற்கு நன்றி.

“சின்னச் சின்ன கனவுகளே கண்ணா” 
https://youtu.be/paqAoGhAjBU
எவ்வளவு அற்புதமான மெல்லிசைப் பாடலிது. சித்ராவின் குரலில் “துறைமுகம்” படத்துக்காகப் போடப்பட்ட பாடல் “காதலர் கீதங்கள்” என்ற என்னுடைய இரவு நேர வானொலி நிகழ்ச்சிக்கு அதிகம் பயன்பட்டது. ஆதித்யனும் இயக்குநர் ராஜேஸ்வரும் மீண்டும் இணைந்த போது “துறைமுகம்” கிட்டியது. அருண்பாண்டியன் மற்றும் ஷோபனா போன்ற நட்சத்திரங்கள் இருந்தும் எடுபடாமல் போன படத்தை விட இந்தப் பாடல் இன்னொரு புகழ் பூத்த படத்தில் வந்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும் என்று நினைப்பேன்.
இதே போல் தொண்ணூறுகளில் புதுமுகங்களின் அலை அடித்த போது நெப்போலியன் குணச்சித்திர வேடத்தில் நடித்த “மின்மினிப் பூச்சிகள்” திரைப்படத்தில் வரும் “கண்மணிக்கு நெஞ்சில் என்ன சோகமோ” https://youtu.be/fb1mGsRfURc பாடலும் அரிய ரகம். ஆதித்யனைப் பெரிய அளவில் எடுத்துச் செல்ல அந்தப் படம் துணை நிற்கவில்லை.
P.B.ஶ்ரீனிவாஸ் அவர்களைத் தொண்ணூறுகளில் கூட்டி வந்து பாட வைத்த பெருமை ஆதித்யன் இசையில் “நாளைய செய்தி” திரைப்படத்தின் வழியாகக் கிட்டியது. P.B.ஶ்ரீனிவாஸ் உடன் சங்கீதா பாடிய “உயிரே உன்னை உலகம் மறந்து விடுமோ” 
https://youtu.be/awmhqQSGVUM
என்ற பாடல் தான் அது. பிரபு - குஷ்பு அலையடித்த போது இந்த ஜோடி “கலைஞன்” படத்தினை இயக்கிய G.B.விஜய் இயக்கத்தில் நடித்த பெயர் மட்டும் தங்கியது. இன்றும் இந்தப் பாடலை இன்ன படத்தில் தான் வந்தது என்று அறியாமலேயே ரசிக்கும் கூட்டமுண்டு.
தொண்ணூறுகளில் சின்னத் திரைத் தொலைக்காட்களில் நடனப் போட்டிகள் என்று வரும் போது “சக்கு சக்கு வத்திக்குச்சி பத்திக்குச்சு” 
https://youtu.be/v697hDz1tio பாடலும் இருக்க வேண்டும் என்றொரு எழுதப்படாத விதி இருந்ததோ என்னமோ ஆதித்யன் பாஷையில் “ஆட்டமா தேரோட்டமா” ஆக தொண்ணூறுகளின் ஆகச் சிறந்த துள்ளிசைகளில் ஒன்றாக அசுரன் திரைப்படத்தில் இடம் பிடித்தது.
“அழகோவியம் உயிரானது புவி மீதிலே நடமாடுது” https://youtu.be/QIVp0kqvo3c இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் ஆதித்யன் என்பதை நம்ப முடியாத அளவுக்கு வித்யாசாகர் தனமான இன்னிசையைக் கொட்டியிருப்பார். எஸ்.பி.பாலசுப்ரமணியம் இந்தப் பாடலுக்கு மிகப் பெரிய பலமாகவும் அமைந்தார். மிஸ்டர் மெட்ராஸ் இல் வித்யாசாகர் இசையில் எஸ்.பி.பி. பாடிய “பூங்காற்று வீசும் பொன்மாலை நேரம்” பாடலுக்கு அருகே இந்தப் பாடல் உட்கார்ந்து கொள்ளும். ரோஜா மலரே படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலுடன் “ஆனந்தம் வந்ததடி” https://youtu.be/DNpMyOGnLTU பாடலும் ஆதித்யனுக்குப் புகழ் கொடுத்தவை. சில ஆண்டுகளுக்கு முன் ரோஜா மலரே படத்தின் தயாரிப்பாளர் புதுப்படமொன்றின் விளம்பரத்தை இப்படி வைத்தார் “அழகோவியம் உயிரானது” பாடலை அளித்த தயாரிப்பு நிறுவனம் தரும் படம் இது என்று. ஒரு பாடலை முன்னுறுத்தி இன்னொரு படத்திற்கு விளம்பரம் செய்தது புதுமை அல்லவா?
அமரன் அளவுக்கு ஆதித்யனுக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்த படம் “சீவலப்பேரி பாண்டி”. ஜூனியர் விகடனில் செள பா எழுதிய பரபரப்புத் தொடர் பி.ஜி.ஶ்ரீகாந்த் தயாரிக்க பிரதாப் போத்தன் இயக்கத்தில் வெளியானது.
நெப்போலியனுக்கு அருவா நாயகன் பட்டமும் இதிலிருந்து ஒட்டிக் கொண்டது.
“கிழக்கு செவக்கையிலே கீரை அறுக்கையிலே” https://youtu.be/aonfZhg2wds பாடலும் “ஒயிலா பாடும் பாட்டுல ஆடுது ஆடு” https://youtu.be/I3jol6GfFSA பாடலும் அதிரி புதிரி ஹிட் அடித்த பாடல்கள். அரண்மனைக் கிளி அஹானாவுக்கு இரண்டாவது ஹிட் படமானது.
அமரன் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் கீபோர்ட் வாத்தியக் கலைஞராக இருந்தது போல சீவலப்பேரி பாண்டி படத்தின் கீபோர்ட் இசை ஹாரிஸ் ஜெயராஜ் வழங்கியிருந்தார்.
லக்கி மேன், மாமன் மகள் போன்ற தொண்ணூறுகளின் நகைச்சுவைச் சித்திரங்களுக்கும் ஆதித்யனே இசை.
தொண்ணூறுகள் Pop மற்றும் தனிப் பாடல்களில் உச்சம் கண்ட ஆண்டுகள். அந்த நேரம் சுரேஷ் பீட்டர்ஸ் இன் மின்னலே, மற்றும் ஏனைய இசைத் தொகுப்புகளான காதல் முதல் காதல் வரை, காதல் வேதம் போன்றவற்றோடு மால்குடி சுபாவின் வால்பாறை வட்டப்பாறை பாடல் எல்லாம் திரையிசைக்கு நிகராகக் கொண்டாடப்பட்டன. அப்போது காதல் நேரம் மற்றும் Pop பாடல்களின் வழியாகவும் தடம் பதித்தார் ஆதித்யன். பழைய பாடல்களை Re-mix வடிவம் கொடுத்து வெளியிட்டார். பின்னாளில் அவை திரையிசையிலும் பலர் பின்பற்ற வழி செய்தார்.
Sound Engineer ஆக இருந்து இசையமைப்பாளர் ஆகியவர் என்ற அந்தஸ்தோடு ஆதித்யன் தொண்ணூறுகளில் கொடுத்த இசை தமிழ்த் திரையிசை வரலாற்றில் ஒன்றாகப் பதியப்படும். உண்மையில் இன்று மேற்கத்தேயக் கலவையோடு அனிருத் போன்றோர் கொடுக்கும் பாடல்களுக்குச் சற்றும் சளைத்ததல்ல தொண்ணூறுகளில் ஆதித்யன் கொடுத்தவை. ஆதித்யனோடு வேலை செய்யக் கூடிய திறமையான இயக்குநர் கூட்டணி இன்னும் அதிகம் அமைந்திருக்கலாம். அவர் பின்னாளில் சமையல் நிகழ்ச்சிகளுக்கு வருவதைக் கூடத் தடுத்து இசையுலகில் தொடர்ந்து தக்க வைத்திருக்கும் அது.
ஆதித்யன் தன் இசை போலவே நவ நாகரிகமான தோற்றத்தில் தன்னைத் தயார்படுத்தியதும் அதுவரை திரையிசை உலகம் கண்டிராதது.
ஆதித்யன் கொடுத்த எந்தப் பாடல்களையும் தேடி ரசிக்கக் காரணம் குறித்த பாடலின் ஒலித்தரம் என்பது மிக முக்கியமாகக் குறிப்பிட வேண்டியது.
“ இருப்பதும் இறப்பதும் அந்த இயற்கையோட கையிலே
நான் மறைஞ்ச பின்னும் நிலைப்பது என் உயிர் எழுதும் கதையிலே” போய் வாருங்கள் ஆதித்யன்
கானா பிரபா
06.12.17

1 comment:

  1. றேடியோஸ்பதி
    வீடியோஸ்பதி மற்றும்
    சமூகவலைத்தளங்களினூடாக
    தாங்கள் சிலாகித்து விதந்துரைக்கும்
    பாடல்களை உடனுக்குடன் தரவிறக்கி சுவைப்பவனென்கிற வகையில்
    இவ்வகை படையல்களை தொடர்ந்தளிக்க வேண்டுகிறேன்!
    படைப்புகள் போற்றப்படுகிறவரை
    படைப்பாளனுக்கென்றும்
    மறைவில்லை!
    ஐயாவின் ஆன்மா இளைப்பாறட்டும்!!!


    ReplyDelete