Pages

Thursday, April 21, 2016

சாதிமல்லிப் பூச்சரமே

🎻 சாதிமல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப் பாச்சரமே 
🌴
பாரதியார் 🖊 பாரதிதாசன் 🖊 புலமைப்பித்தன்

வீடெல்லாம் இசையே; வீட்டில்

நெஞ்செலாம் மெருகே; நெஞ்ச 
ஏடெலாம் அறிவே; ஏட்டின்

எழுத்தெலாம் களிப்பே; அந்தக்
காடெலாம் ஆடும் கூத்தே;

காகங்கள் குருவி எல்லாம்
மாடெல்லாம் இவ்வா றானால்

மனிதர்க்கா கேட்க வேண்டும்? - பாவேந்தர் பாரதிதாசனின் குடும்ப விளக்கு என்ற படைப்பில் இருந்து மேற் கண்ட பாட்டு 📖
புலவர் புலமைப்பித்தன் இன்று மூன்றாவது தலைமுறைக்கும் பாட்டெழுதுகிறார். அவர் எழுதிய தமிழ் திரையிசைப் பாடல்களைத் தேடி நுகரும் போது தெரியும் அன்னார் எவ்வளவு தனித்துவம் மிக்கவர் என்பதை அறிந்து கொள்வார்.
குறிப்பாகத் தமிழ் மொழி வளத்தை மெட்டுகளில் கோத்துத் தரும் சிறப்பிலும், சாஸ்திரிய சங்கீதப் பாடல்களில் ஜதி போல அமையும் சொற் கட்டுகளும் புலமைப் பித்தனுக்கே உரித்தான முத்திரையோடு துலங்கும்.
சாஸ்திரிய இசையை அடிப்படையாகக் கொண்ட பாடல்களை மெட்டமைக்கும் போது புலமைப்பித்தனின் பெயரையும் இசைஞானி இளையராஜா எழுதி வைத்து விடுவாரோ என்று நினைப்பேன்.

புலவர் புலமைப் பித்தனுக்கு யாருக்குமே கிட்டாத  இன்னொரு சிறப்பு வாய்ப்பும் கிட்டியிருக்கிறது.
அது என்னவெனில் தன்னுடைய மூத்த குருவாகப் போற்றி வைத்திருக்கும் மகாகவி சுப்ரமணிய பாரதியாராகவும், அவர் வழியில் தமிழ் வழியாகச் சமூகப் போராளியாக விளங்கிய பாரதிதாசனாகவும் தன்னை உருவெடுத்துப் பாடல் எழுதியிருக்கிறார்.

பாரதி என்ற படத்தில் மு.மேத்தா "மயில் போல பொண்ணு ஒண்ணு" என்று எழுத, இன்னொரு பாட்டு புலமைப் பித்தனுக்குக் கிடைத்த வகையில் ஒரு மகா கவிஞனின் படத்தில் இப்படி இருவேறு பாடலாசியர்களைப் பாட்டெழுத வைத்தது புதுமை. 
அதிலும் இன்னொரு புதுமை, ஒரு தீவிர நாத்திகரை கடவுள் வாழ்த்துப் பாட அழைத்தது. இது குறித்து பாடலாசிரியர் புலமைப்பித்தனும் ஒருமுறை விகடன் பேட்டியில் சொல்லியிருக்கிறார். தன்னுடைய கொள்கையை விலத்தி இந்தல் பாடலை எழுத்த வைத்தது தன் குருநாதர் பாரதி மீது கொண்ட குருபக்தியின் வெளிப்பாடென.

தன் வாழ்ந்த சமூகத்தில் கடவுளின் பெயரால் நிகழ்த்தும் செயல்களைக் கண்டு அதை வெறுத்தார். ஆனாலும் கடவுளின் மீதான அன்பு எள்ளளவும் குறையவில்லை. அந்தச் சூழலுக்கு வருமாற்போல ஒரு பாட்டு. சிவனின் பெருமையை அவரின் அங்க இலட்சணத்தோடு இணைந்து வர்ணிக்கிறது. 

"எதிலும் இங்கு இருப்பான் யாரோ" என்று தொடங்கும் அந்தப் பாடலைக் கேட்டால் அச்சொட்டான பாரதியின் பிரதிபலிப்புத் தெரியும் வார்த்தைக் கட்டுகளில் புலமைப் புத்தனின் தமிழ் கையாளல்.
பாரதி ஒரு சமூகப்போராளிக்கான குரலை மது பாலகிருஷ்ணன் என்ற மென்மையான குரல் வளம் மிக்க பாடகரைப் பாட வைத்து, இசையையும் இன்னும் அடக்கமாகவே இருத்திப் பாடலை முன்னுறுத்தி உயர்த்திக் காட்டியிருக்கிறார் இசைஞானி இளையராஜா.

"அழகன்" படம் எனக்கு எப்போது பார்த்தாலும் ரசித்துப் பிடிக்கும் படங்களில் ஒன்று. மம்முட்டியில் இருந்து ஒவ்வொரு பாத்திர வார்ப்புருவும் இயக்குநர் 
கே.பாலசந்தரின் திறம் பட்ட இயக்கமும் அந்தப் படத்தை முத்திரைப் படமாக ஆக்கியிருக்கும். 
இந்தப் படத்தில் ஓட்டல் உரிமையாளர் அழகப்பன் என்ற மம்முட்டிக்கும் , நாட்டியமணி ப்ரியா ரஞ்சன் என்ற பானுப்பிரியாவுக்கும் நேசம் கனிந்து காதல் கனியாது இருக்கும் சூழல் அது. 
பாரதிதாசனின் குடும்ப விளக்கு என்ற காவியத்தைப் பற்றி எங்கள் தமிழ் வகுப்புப் பாடத்தில் பாலா மாஸ்டர் சிலாகித்த காலகட்டத்தில் இந்தப் படத்தின் ஒரு காட்சியும் குடும்ப விளக்கு காவியத்தை மையப்படுத்தி வருகிறது.

குடும்ப விளக்கில் இருக்கும் ஒரு பகுதியைப் பகிர்ந்து சிலாகிக்கிறார் அழகப்பன். அதை முன்னுறுத்திப் பாடல் பிறக்கிறது இப்படி
"சாதி மல்லிப் பூச்சரமே சங்கத் தமிழ்ப்பா சரமே" என்று நாயகன் பாட, அந்த நல்லிசைப் பாடலுக்கு அபிநயம் பிடித்து ஆடுகிறாள் நாயகி. 

சிந்து பைரவி படத்தின் சங்கீத மேதையிடம் தமிழ்ப் பாடலை மேடையில் அரங்கேற்ற வேண்டுகிறாள் அவர் மேல் அபிமானம் கொண்ட ரசிகை. துணைக்கு வருகிறது "பாரதியார் கவிதைகள்.

அழகன் படத்திலே நாட்டியப் பெண்ணின் பிரியத்துக்குரியவர் பாரதிதாசனை எடுத்து வருகிறார். பாடலோடு நடனமும் பிறக்கிறது.

இதுதான் இவ்விரண்டு படங்களையும் பிரசவித்த
இயக்குநர் சிகரம் கே.பாலசந்தரின் தனித்துவம் காட்டும் முத்திரை.

பாரதியாரின் நினைவு நாளில் அவர் எழுதாத ஆனால் அவர் எழுதியதாக உருவகித்துக் கொண்ட "எதிலும் இங்கு இருப்பான் யாரோ" பாடலைக் கொடுத்திருந்தேன்.
இன்று பாவேந்தர் பாரதிதாசனின் நினைவு நாளில் அவரின் நினைவு கூறும் "சாதி மல்லிப் பூச்சரமே" பாடலைப் பகிர்கிறேன்.
புலவர் புலமைப்பித்தன் இவ்விரண்டு பாடல்களையும் எழுதிய வகையில் தம் குருநாதர்களுக்கான காணிக்கையாக அமையட்டும்.

 http://www.youtube.com/watch?v=h_6i9f4du_8&sns=tw 


பாரதிதாசனின் குடும்ப விளக்கு நூலில் இருந்து இந்தப் பாடலுக்கு மூலமாக அமைந்து அணி செய்தவை 

பொதுத்தொண்டு செய்தோமா?

"மிதிபாகற் காய்கசக்கும்; எனினும் அந்த 

மேற்கசப்பின் உள்ளேயும் சுவைஇ ருக்கும்;
அதுபோலத் தானேடி! அதனாலென்ன?

அறிவிப்பாய் இளமானே" என்றான் அன்பன்;
அதிகாலை தொடங்கிநாம் இரவு மட்டும்

அடுக்கடுக்காய் நமதுநலம் சேர்ப்ப தல்லால்,
இதுவரைக்கும் பொதுநலத்துக் கென்ன செய்தோம்?

என்பதைநாம் நினைத்துப்பார்ப் பதுவு மில்லை.

 

தன்னலத்தால் என்ன நடக்கும்

"தமிழரென்று சொல்லிக்கொள் கின்றோம் நாமும்;

தமிழ்நாட்டின் முன்னேற்றம் விரும்பு கின்றோம்;
எமதென்று சொல்கின்றோம் நாடோ றுந்தான்;

எப்போது தமிழினுக்குக் கையா லான 
நமதுழைப்பை ஒருகாசைச் செலவு செய்தோம்?

நாமிதனை என்றேனும் வாழ்நாள் தன்னில்,
அமைவாகக் குந்திநினைத் தோமா? இல்லை;

அனைவருமிவ் வாறிருந்தால் எது நடக்கும்?"

பெரும்படியான தொண்டு செய்துள்ளோம்

கரும்படியின் சாறுநிகர் மொழியாள் இந்தக்

கனிந்தமொழி சொன்னவுடன் அவன்உ ரைப்பான்;
"வரும்படிவீ தப்படிநான் தரும்ப டிக்கு

வாக்களித்த படிகணக்கர் திங்கள் தோறும்
கரம்படி வீதித்தமிழர் கழகத் தார்கள்

கடைப்படியை மிதித்தவுடன் எண்ணி வைப்பார்
பெரும்படியாய்ச் செய்ததுண்டு; படிக்க ணக்கைப்

பேசிவிட்டாய் கண்டபடி" என்று சொல்ல.

 

தமிழ்நாடு தலைதூக்க உயிரையும் தருவேன்

"இழந்த பழம் புகழ் மீள வேண்டும் நாட்டில்

   எல்லோரும் தமிழர்களாய் வாழ வேண்டும்

வழிந்தொழுகும் சுவைத்தமிழே பெருக வேண்டும்

   மாற்றலர்கள் ஏமாற்றம் தொலைய வேண்டும்

விழுந்ததமிழ் நாடுதலை தூக்க என்றன்

   உயிர்தனையே வேண்டிடினும் தருவேன என்றான்.

"பழம்இடுவேன் சர்க்கரைப்பால் வார்ப்பேன் உங்கள்

   பண்பாடும் வாய்திறப்பீர் அத்தான என்றாள்

 

  

 



 

No comments:

Post a Comment