Pages

Thursday, February 28, 2008

சுஜாதாவை நான் வானலையில் சந்தித்த போது....!

எங்கள் கல்லூரி நூலகத்தில் செங்கை ஆழியானின் நாவல்களைத் தேடித் தேடி வாசித்துத் தின்று முடித்த கணமொன்றில் தென்பட்டது "பிரிவோம் சந்திப்போம்" பாகம் 1. அது தான் சுஜாதாவை எனக்கு அறிமுகப்படுத்திய முதல் புதினம். விறுவிறுவென்று வாசித்து முடித்த பின்னர் தான் அவரை அசை போடத்தொடங்கினேன். அட இது வித்தியாசமான ஒரு வாசிப்பு அனுபவமாக இருக்கிறதே என்று என்ற் வியந்தவாறே, பிரிவோம் சந்திப்போம் இரண்டிலிருந்து, விடாமல் சுஜாதாவை தொடர்ந்தேன். கரையெல்லாம் செண்பகப்பூ, அனிதா இளம் மனைவி, காகிதச் சங்கிலிகள், என் இனிய இயந்திரா, மீண்டும் ஜீனோ, கனவுத் தொழிற்சாலை, "ஆ" என்று கிட்டத்தட்ட முக்கால்வாசி நாவல்களை ஏப்பம் விட்டும் அடங்கவில்லை. இவரின் எழுத்துக்கள் வரும் சஞ்சிகைகளில், சினிமாப் பகுதிக்கு முன்னர் படிக்கும் பக்கங்கள் இவருடையதாக மாறி விட்டது.

சுஜாதாவின் "ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்", எஸ்.ராமகிருஷ்ணனின் கட்டுரைகள் போன்றவை தான் நனவிடை தோய்த்தலில் என்னை அதிகம் ஈடுபடுத்தி என் ஊர் நினைவுகளை எழுத வைத்தவை.

2002 ஆம் ஆண்டு "கன்னத்தில் முத்தமிட்டால்" படம் வந்த கையோடு நான் அப்போது பணிபுரிந்த வானொலிக்காக என் ஆதர்ஷ எழுத்தாளர் சுஜாதா அவர்களைப் பேட்டி காணத் தொடர்பு கொள்ள விழைத்தேன். எழுத்துலகில் உச்சத்தில் இருக்கும் இவர் நமக்கெல்லாம் பேட்டி கொடுப்பாரா என்ற அவநம்பிக்கை வேறு மனசின் ஓரத்தில் இருந்தது. ஆனால் நான் சற்றும் எதிர்பார்க்காத மனிதரைத் தனிப்பட்ட தொலைபேசி அழைப்பில் உணர்ந்தேன். வானொலிப் பேட்டிக்கு வந்து கலந்துகொண்டு கொட்டமடிக்கும் சில வித்துவச் செருக்குகளைக் கண்டிருக்கின்றேன். ஆனால் சுஜாதாவின் உரையாடல் என்னை அவர்பால் இன்னும் நேசிக்க வைத்தது.

தான் எழுத்துலகில் நிறைவேற்ற நினைக்கும் கனவு குறித்தும் சொல்கின்றார் இந்த ஒலிப்பதிவில்.ஈழத்தமிழர் பிரச்சனை குறித்துக் கேட்டபோது " நம்பிக்கையைத் தளர விடாதீர்கள்" என்ற அவரின் கூற்று இன்னும் மனசில் ஒலிக்கின்றது.

இயன்றவரை சாதாரணமான கேள்விகள் கொடுத்து வானொலி கேட்கும் அனைத்துத் தரப்பையும் திருப்திப்படுத்த முயன்றிருக்கின்றேன். காரணம் சுஜாதாவே ஒருமுறை சொன்னது போல் " நீங்க அவள் ஒரு தொடர்கதையில் நல்லா நடிச்சிருக்கீங்க" என்று அவரைப் பார்த்து யாரோ கேட்டது போல் கேட்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

போய் வாருங்கள் சுஜாதா!
மீண்டும் வானலையில் சந்திபோம்
உங்களோடு நேருக்கு நேராக.......


35 comments:

  1. I fell compeled to say that this is one of the very best blogs I've ever visited!

    Congrats!

    PALAVROSSAVRVS REX

    ReplyDelete
  2. கானா,
    சுஜாதா மறைவு சித்தாந்தங்களுக்கு அப்பாற்ப்பட்டு பார்க்கும் போதும் ,தமிழ் எழுத்துலகிற்கு இழப்பே, அவருக்கு எனது அஞ்சலி!

    தங்கள் அனுபவத்தை நன்றாக பகிர்ந்துள்ளீர்கள்.

    மேலும் இங்க mogul என்றப்பெயரில் முதல் பின்னூட்டத்தில் இருக்கும் சுட்டியை அழுத்தினால் வைரஸ் என்று எச்சரிக்கை வருகிறது, எனவே அந்த பின்னூட்டத்தினை நீக்கிவிடலாமே.

    ReplyDelete
  3. கானா பிரபா,
    இந்த ஒலித் துண்டுக்கு மிக்க நன்றி.

    அறிவியல்சார் தமிழ்ப்பத்திரிக்கை? அந்தத் தமிழ்த் துரோகத்தையும் செய்துவிட்டே சென்றிருக்கலாம்!

    ReplyDelete
  4. நானும் உங்களைப்போல் தான் பிரபா செங்கைஆழியானுக்கும் பின்னர் தான் சுஜாதாவைச் படித்தேன், ஏறக்குறைய 80%மான அவரது எழுத்துக்களைப் படித்திருக்கின்றேன். உங்கள் பேட்டிக்கு நன்றிகள். இவரது யாழ் நூலகம் எரிப்பு சம்பந்தமான ஒரு லட்சம் புத்தகங்கள் என்ற சிறுகதை வாசித்தீர்களா? நானும் எத்தனையோ காலமாகத்தேடுகின்றேன் ஆனால் இன்னமும் கிடைக்கவில்லை.

    ஒரு புகழ்பூத்த மனிதனுக்கு என் இதய அஞ்சலிகள், மரணம் எமக்கு பழகியதுதான் என்றாலும் சுஜாதாவும் இறந்துவிட்டார் என்பதை நம்பமுடியாமல் இருக்கின்றது.

    ReplyDelete
  5. // வவ்வால் said...
    கானா,
    சுஜாதா மறைவு சித்தாந்தங்களுக்கு அப்பாற்ப்பட்டு பார்க்கும் போதும் ,தமிழ் எழுத்துலகிற்கு இழப்பே, அவருக்கு எனது அஞ்சலி!

    தங்கள் அனுபவத்தை நன்றாக பகிர்ந்துள்ளீர்கள்.

    மேலும் இங்க mogul என்றப்பெயரில் முதல் பின்னூட்டத்தில் இருக்கும் சுட்டியை அழுத்தினால் வைரஸ் என்று எச்சரிக்கை வருகிறது, எனவே அந்த பின்னூட்டத்தினை நீக்கிவிடலாமே.//


    வணக்கம் நண்பா

    ஒரு படைப்பாளியின் எழுத்தை வாசித்த அந்த நேசத்தில் தான் இந்தப் பதிவை எழுதியிருந்தேன். கூடவே ஒலிப்பதிவையும் இட்டிருந்தேன். நீங்கள் குறிப்பிட்ட அந்தப் பின்னூட்டத்தை நீக்கி விட்டேன்.

    ReplyDelete
  6. //பினாத்தல் சுரேஷ் said...
    கானா பிரபா,
    இந்த ஒலித் துண்டுக்கு மிக்க நன்றி.

    அறிவியல்சார் தமிழ்ப்பத்திரிக்கை? அந்தத் தமிழ்த் துரோகத்தையும் செய்துவிட்டே சென்றிருக்கலாம்!//

    வருகைக்கு நன்றி சுரேஷ்

    உங்கள் ஆதங்கம் புரிகின்றது. என்ன சொல்வது....:(

    ReplyDelete
  7. //வந்தியத்தேவன் said...
    இவரது யாழ் நூலகம் எரிப்பு சம்பந்தமான ஒரு லட்சம் புத்தகங்கள் என்ற சிறுகதை வாசித்தீர்களா? நானும் எத்தனையோ காலமாகத்தேடுகின்றேன் ஆனால் இன்னமும் கிடைக்கவில்லை. //

    வணக்கம் வந்தியத் தேவன்

    நீங்கள் குறிப்பிட்ட அந்தச் சிறுகதை படிக்கவில்லை. அறிந்திருக்கின்றேன். இன்னொன்று சுனாமியில் கொல்லப்பட்ட பாலசுகுமாரின் புதல்வி அனாமிகாவை வைத்து ஒரு சிறுகதை எழுதியிருந்தார். படித்திருக்கின்றேன்.


    //ஒரு புகழ்பூத்த மனிதனுக்கு என் இதய அஞ்சலிகள், மரணம் எமக்கு பழகியதுதான் என்றாலும் சுஜாதாவும் இறந்துவிட்டார் என்பதை நம்பமுடியாமல் இருக்கின்றது.//

    உண்மையான வரிகள். எங்களோடு அவரது எழுத்துக்கள் மிக நெருக்கமாக இருந்ததால் தான் அவரின் இறப்பு இவ்வளவு வலியாக இருக்கின்றது.

    ReplyDelete
  8. கானாபிரபா,
    இந்த ஒலிப்பதிவுக்கு மிக்க நன்றிகள்.

    வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர் இன்று இல்லை என்ற உண்மை உறைக்க சில காலம் ஆகும்.

    ReplyDelete
  9. ஒலித் துண்டுக்கு மிக்க நன்றி.
    வாக்கு இயந்திரம் பற்றி விளக்க

    12 வருடங்களா? கொடுமையப்பா.!

    ReplyDelete
  10. /ஈழத்தமிழர் பிரச்சனை குறித்துக் கேட்டபோது " நம்பிக்கையைத் தளர விடாதீர்கள்" என்ற அவரின் கூற்று இன்னும் மனசில் ஒலிக்கின்றது./

    அப்படியா? தகவலுக்கு நன்றி.

    சிங்களத்தீவினுக்கோர் பாலம் அமைப்போம் என்பதும் நல்ல கதை - சிவத்தம்பி ஆகியோரை தமிழாராய்ச்ச்ச்ச்ச்ச்சி மகாநாட்டிலே ஜெயலலிதா ஜெயராம் பயங்கரவாதிகள் என்று அடைத்து வைத்ததின் பின்னாலே எழுதப்பட்ட கதை

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி வடுவூர் குமார்

    வாக்கணு இயந்திரத்தை அமுல்படுத்தும் போது நடந்த வேடிக்கையைக் கேட்டிருப்பீர்கள் தானே.

    வணக்கம் பெயரிலி அண்ணை

    சுஜாதா என்ற ஜனரஞ்சக எழுத்தாளனிடம் கேட்ட கேள்விக்கு அவர் கொடுத்த நம்பிக்கை தொனிக்கும் வார்த்தையை மட்டுமே எடுத்துக் கொண்டேன். எழுத்தாளன் என்ற எல்லையைக் கடந்த எழுத்துலக அரசியல்வாதிகளை நான் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஒலிப்பதிவை முழுதும் கேட்டால் அவர் எமக்கு என்ன சொல்ல வந்தார் என்பது புரியும். அவரது மரணத்துக்குப் பின்னான சர்ச்சை எதிலும் என்னை ஈடுபடுத்த நான் விரும்பவில்லை.

    ReplyDelete
  12. //வற்றாயிருப்பு சுந்தர் said...
    கானாபிரபா,
    இந்த ஒலிப்பதிவுக்கு மிக்க நன்றிகள்.

    வேறு என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர் இன்று இல்லை என்ற உண்மை உறைக்க சில காலம் ஆகும்.//

    வருகைக்கு நன்றி சுந்தர், இனி அவரின் எழுத்துக்கள் தான் அவரைப் பேச வைக்கும்.

    ReplyDelete
  13. /எழுத்தாளன் என்ற எல்லையைக் கடந்த எழுத்துலக அரசியல்வாதிகளை நான் ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஒலிப்பதிவை முழுதும் கேட்டால் அவர் எமக்கு என்ன சொல்ல வந்தார் என்பது புரியும்./

    நன்றி தம்பி பிரபா. இனித்தான் கேட்கப்போகிறேன்.


    / அவரது மரணத்துக்குப் பின்னான சர்ச்சை எதிலும் என்னை ஈடுபடுத்த நான் விரும்பவில்லை/

    நீங்கள் வழக்கமாகவே சர்ச்சைகளிலே உங்களை ஈடுபடுத்திக்கொள்ளாமல் அவதானமாகவிருப்பவர் என்றுதான் நான் உணர்ந்திருந்தேன்.

    ReplyDelete
  14. ;(
    ஒலித் துண்டுக்கு மிக்க நன்றி தல.

    ReplyDelete
  15. //-/பெயரிலி. said...
    நீங்கள் வழக்கமாகவே சர்ச்சைகளிலே உங்களை ஈடுபடுத்திக்கொள்ளாமல் அவதானமாகவிருப்பவர் என்றுதான் நான் உணர்ந்திருந்தேன்.//

    உண்மை தான், புரிதலுக்கு நன்றி அண்ணா

    //கோபிநாத் said...
    ;(
    ஒலித் துண்டுக்கு மிக்க நன்றி தல.//

    வருகைக்கு நன்றி தல

    ReplyDelete
  16. கானா பிரபா,
    ஒலிப்பதிவுக்கு மிக்க நன்றி!
    ஆனால் ஒலிப்பதிவில் பல தடங்கல்களும் ,கூடவே ஒரு ஆங்கில பேச்சும் கேட்கிறதே! எனக்கு மட்டும் தானா?

    ReplyDelete
  17. அவருக்கு எனது அஞ்சலிகள்

    //சுனாமியில் கொல்லப்பட்ட பாலசுகுமாரின் புதல்வி அனாமிகாவை வைத்து ஒரு சிறுகதை எழுதியிருந்தார். //

    நானும் படித்திருக்கிறேன்

    ReplyDelete
  18. வணக்கம் ஜோ

    பின்னால் வரும் ஆங்கில வானொலி, என் ஒலிப்பதிவின் போது ஏதோ கோளாறால் வந்துவிட்டது, இடையில் எப்படியான தடங்கல் இருக்கின்றது என்று தெரியவில்லை. மீண்டும் கேட்டு சரி செய்கின்றேன்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மாயா

    ReplyDelete
  19. பேட்டி முழுவதும் கேட்டேன். அவரது மரணம் மிகவும் வருத்தமளிக்கிறது :(

    ReplyDelete
  20. SUJATHAVIN PEDDI SUPERB. AVAR MARAINTHAVUDANEYE AVARAI NINAIKKA VAITHATHUKKU NANRIKAL PRABA ANNA. SUJATHAVIN EZHUTHUKKAL ENNAYUM KAVARNTHAVAI.

    DUSHY

    ReplyDelete
  21. பேட்டியில் ஈழத்ததமிழர்களுக்கான ஆதரவு என்பது உளவியல் ரீதியானதாகவே இருக்கும் வேறெதனையும் எதிர்பார்க்காதீர்கள் எனக்கூறியிருப்பது யதார்த்தமானது: தீர்க்கதரிசனமானது. அனாமிகாவையும் அனாமிகா பற்றிய சுஜாதாவின் சிறுகதையையும் இந்த இணைப்புக்களில் காணலாம்.
    http://desikann.blogspot.com/2005_02_28_desikann_archive.html
    http://desikann.blogspot.com/2005_02_07_desikann_archive.html

    ReplyDelete
  22. மிக்க நன்றி ஐயா... அவரது குரலை இப்போது தான் முதன்முறையாக கேட்கிறேன். இனி இந்த குரல் இல்லை என்று நினைக்கும் போது, கண்களில் நீர் முட்டுவதை தவிர்க்க முடியவில்லை....

    ReplyDelete
  23. நல்லதொரு நேர்காணல், பிரபா!

    அந்த கலைஞனுக்கு நமது அஞ்சலிகள்!

    ReplyDelete
  24. பொன்வண்டு, துஷி, கோகுலன், வசந்தகுமார், தென்றல்

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள்.

    ReplyDelete
  25. Prabhu,
    Thanks for Sujatha Sir's interview.
    Shall I embed the link in my blog.
    Plz let me know.

    crashonsen@gmail.com
    Senthil

    ReplyDelete
  26. வருகைக்கு நன்றி செந்தில், நீங்கள் தாராளமாகப் பயன்படுத்தலாம்.

    ReplyDelete
  27. பிரபா!
    சுஜாதாவை தேடி ஓடிப் படித்தேன் எனப் பொய் சொல்ல மனம் வரவில்லை. என் இளமையில் இவர் கதைகளையும் படிக்க முற்பட்டபோது ,இவர் உரையாடல்கள்
    எனக்குத் 'தந்தி' வாசித்தது போல் இருந்ததால் நிறுத்தி விட்டேன்.
    ஆனால் ஜெயகாந்தனைத் தேடிப் படித்தேன்.
    பின் 'அம்பலம்' தில், ஸ்ரீரங்கப் புரத்துத் தேவதைகள் எனக்கு மிகப் பிடித்தது.
    அத்துடன் திவ்விய பிரபந்தத் தொடர்
    ஆவலுடன் படித்தேன்.
    ஆனந்த விகடன் திறந்ததும்'கற்றதும் பெற்றதும்' படிக்கவைத்தவர்.
    அதனால் 'கடகத்துக்கு' விளக்கம்
    எழுதும் படி ஆகி...இப்போ தமிழ்மணத்துள் விழுந்தெழும்ப அங்கீகாரம் தந்தவர்.
    ஆனாலும் இவர் கதைகளென எல்லோரும் பாராட்டும் எதுவுமே
    நான் படிக்கவில்லை.
    ஆனால் இவருக்கு கடகமுட்பட 3 கடிதமனுப்பியுள்ளேன்.
    2 பதில் கிட்டியது. ஒன்றுக்கு இனி
    எப்போதும் பதில் வராது.
    நிற்க,
    தங்கள் வானொலி ஒலிப்பதிவுப் பதிவிலேயே அவர் குரல் முதல் முதல் கேட்டேன்.
    மிகப் பாராட்டத்தக்க பேட்டி!
    அதற்கு மிக்க நன்றி
    அவர் குரலிலும் ஒரு மென்மை கண்டேன்.
    பேட்டியில் ஈழம் பற்றிய அவர் கருத்தே...உண்மையானது.
    அவர் வெறும் போலிக் கூச்சல் போட விரும்பவில்லை.
    தவறு செய்யாத மனிதர் உண்டா??
    அவர் ஆத்மா சாந்தியடையட்டும்.

    ReplyDelete
  28. வருகைக்கு நன்றி யோகன் அண்ணா

    சுஜாதாவின் கதைகள் பல எதிர்கால விஞ்ஞானம் சார்ந்திருப்பது போல் அவரின் எழுத்து நடை கூட புதுமை படைத்தது. ஒவ்வொரு கதைகளையும் படிக்கும் போது அலுப்பே தெரியாது என்பதும் சிறப்பு.

    தன் மனவெளிப்பாட்டை வெளிப்படையாகவே பேட்டியில் சொல்லிவைத்தார்,

    ReplyDelete
  29. '1 lakh books' is available as a part of collection through www.writersujatha.com. This and other 25+ short stories are bundled together for $3 and can be paid through paypal

    ReplyDelete
  30. Sir,
    The link to tthe interview is no longer there. Request you to please provide the link
    Thanks

    ReplyDelete
  31. மாமனிதருக்கு அஞ்சலி.
    திரு சுஜாதா 3.5.80 இல் எழுதிய கடிதம் என்னிடம் இருக்கிறது. லாமினேட் செய்து வைத்திருக்கிறேன்.

    ReplyDelete
  32. சுஜாதா - இன்று அவர் நனைவு தினத்தில் அவருக்கு என் அஞ்சலி

    ReplyDelete
  33. இன்று அவர் நனைவு தினம். அவருக்கு எங்கள் அஞ்சலி

    ReplyDelete