Pages

Sunday, April 26, 2026

Michael திரைப் பார்வை


 ஒவ்வொரு மனிதனும் வாழும் உலகம் வேறு, தான் வாழும் உலகம் வேறு. மைக்கேல் ஜாக்சனின் வாழ்வும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதைக் காட்டுகிறது அவரது சுயவரலாறு தாங்கிய Michael வெளி வந்திருக்கிறது.

இந்திய சினிமாவில் ஒரு இசைக் கலைஞன் தன் முன் எதிர்ப்படும் சவால்களை எல்லாம் முட்டி மோதிக் கடந்து சாதிப்பது போல ஏராளம் படங்களைக் கண்டிருப்போம்.

இங்கே நம் முன்னே வாழ்ந்து மடிந்த, இசையுலக சாம்ராஜ்யத்தில் கோலோச்சிய நாயகனின் கதையாக அது விரிகின்றது.

ஆரம்பத் துள்ளலோடு, இந்திய சினிமாவுக்கே உரித்தான நாயக அறிமுகம் கூட இங்கே நிகழ்த்தப்படுகிறது, மெல்ல மெல்ல அது அவனின் பால்யகாலம் நோக்கி நகர்த்தப்படுகிறது,

மைக்கேல் ஜாக்சன் என்ற இசைக் கலைஞனைத் தெரிந்த அளவுக்கு, அவர் வாழத்தலைப்பட உலகம், தான் வரித்துக் கொண்ட உலகம் எவ்வளவு குழந்தைத்தனமானது என்பதை ஆரம்பக் காட்சியில் இருந்து அவரின் புகழ் நிலை தொட்ட பருவம் வரை காட்டப்படுகிறது.

சார்லி சாப்ளின் படங்கள், Peter Pan கதைப் புத்தகங்கள் என்று சின்னச் சின்ன ஆசைகளோடு வாழும் அந்த இசைப் பேரரசனுக்கு செல்லப் பிராணிகளாக, குரங்குக் குட்டி, மலைப்பாம்பு, ஒட்டகச் சிவிங்கி, ஒட்டகம் என்று காட்டப்படும் போது நெகிழ்வும், சிரிப்பும் எழுகிறது. அதே சமயம் புகழ் என்ற மாய உலகில் அந்தக் கலைஞனின் அவதியை இன்னொரு பக்கம் காட்ட முனைகிறது திரைப்படம்.



மைக்கேல் ஜாக்சனின் இன்னொரு முகம் மனித நேயம், அது படத்தில் சில காட்சிகளின் வழியே வெளிப்படுகின்றது.

இந்த இடத்தில் இன்னொரு பக்கம் போய் விட்டு வருவோம்.

மைக்கேல் ஜாக்சன் கலந்து கொண்ட நிகழ்வில் முதன்முதலில் ரஹ்மானின் இசை நிகழ்வு இடம்பெற்றதை அண்மையில் ட்ரம்ஸ் வாத்தியக் கலைஞர் சிவமணி பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

அதன் பின்னணி இதுதான்.

1999 ஆம் ஆண்டில் MJ & Friends என்ற இசை நிகழ்வு கொசோவோ நாட்டுச் சிறுவர் நலனுக்காக நிகழ்த்தப்பட்டது. 

அந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் “ஏகம் சத்யம்” என்றதொரு இசைப் பாடலை அரங்கேற்றினார். அப்போது இருவருக்குமான சந்திப்பு நிகழவில்ல்லை. 

ஏ.ஆர்.ரஹ்மான் மைக்கேல் ஜாக்சனுடனான நேரடிச் சந்திப்பு Slumdog Millionaire  இற்காக ஆஸ்கார் பெற்றதன் பின்னரே நிகழ்ந்தது. தன் பிள்ளைகளை அறிமுகப்படுத்திப் பேசுமளவுக்கு மைக்கேல் ரஹ்மானுடன் நெருக்கமானார்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும், பாப் இசையின் மன்னன் மைக்கேல் ஜாக்சனுக்குமான கடைசி உரையாடலில் மைக்கேல் ஜாக்சன் ரஹ்மானிடம் வேண்டிக் கொண்டது,

“We are the world” பாணியில் ஒரு இசை ஆல்பத்தை வெளியிடுவோம் என்று.

அதை வெற்று வார்த்தைகளாக உதிர்க்காமல் எதிர்வரப் போகும் ஆல்பத்துக்கான ஒத்திகைகளிலும் அவர் இறங்கிவிட்டார்.

திடீரென்று வந்த அதிர்ச்சிச் செய்தியாக,  மைக்கேல் ஜாக்சனின் அகால மரணம் தன்னை வேதனையுறச் செய்தது என்று ஏ.ஆர்.ரஹ்மான் தன் இரங்கலை வெளிப்படுத்தியிருந்தார். 

இயக்குநர் ஷங்கர் வேண்டுகோளில் எந்திரன் படத்தில் மைக்கேல் ஜாக்சனைப் பாட வைக்க அணுகிய போதும் ரஹ்மானின் வேண்டுகோளை மைக்கேல் ஜாக்சன் ஏற்றிருந்தாராம்.

1983 இல் எதியோப்பியா நாடு எதிர் நோக்கிய கடும் பஞ்சத்தைப் போக்க “We are the world” என்ற இசை ஆல்பம் உருவாக்கத்தில் மைக்கேல் ஜாக்சன் , சக இசைக் கலைஞர் லயனல் ரிச்சி உடன் தன் பங்களிப்பை வழங்கியவர். அந்த ஆல்பம் அந்தக் காலத்தில் விற்பனையில் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Black & White என்ற மைக்கேல் ஜாக்சன் புகழஞ்சலி இசை நிகழ்வையும் ஏ.ஆர்.ரஹ்மான் சில வருடங்களுக்கு முன்னர் அளித்திருந்தார்.

பின்னாளில் The Wonderment Tour என்று ரஹ்மான் இசைப் பயணம் நிகழ்த்திய போது, மைக்கேல் ஜாக்சனின் This Is It  ஆவணப்படத்தை இயக்கிய, Kenny Ortega இந்த Wonderment என்ற சொற்பிரயோகம் மைக்கேல் ஜாக்சனுக்குப் பிடித்தமானதொன்று என்று சொல்லி ஆச்சரியப்படுத்தினாராம்.

இந்தியத் திரையிசையின் போக்கில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் வரவால் நிகழ்ந்த புத்திசையின் புதுப் பாய்ச்சல் ஒரு புறம், நடனப் புயல் பிரபுதேவா வின் வரவு நிகழ்த்திய நடன உத்தி என்று மைக்கேல் ஜாக்சனின் பிரதிபிம்பங்கள் போல இந்திய இசை உலகில் இரு பெரும் ஆளுமைகள் வெளிவந்தது காலம் எழுதிய தீர்ப்பு.

இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று பிரபுதேவாவை அடையாளப்படுத்தும் அளவுக்கு அது பலப்பட்டது.


இந்த மைக்கேல் ஜாக்சனின் படத்தைப் பார்த்த போது, பின்னணி இசையில் ரஹ்மானின் பங்களிப்பு இடம்பெற்றிருக்கலாமோ என்று தோன்றியது. அப்படி நிகழ்ந்திருந்தால் அது ஆத்மார்த்தமாகவும் அமைந்திருக்கும்.

மைக்கேல் ஜாக்சன் கதை இன்னொரு பாகமாக வரவிருக்கிறதாம்.

அப்படியே மைக்கேல் ஜாக்சனாகப் பிறந்திருக்கிறார்  Jaafar Jackson.

இவர் மைக்கேல் ஜாக்சனின் சகோதரர் Jermaine Jackson மகன். இந்தப் படத்தில் மெச்சத்தக்க விடயம் என்றால் இந்தப் பாத்திரத் தேர்வு தான். மைக்கேல் ஜாக்சனின் அந்தத் தினுசான குணாம்சத்தை அப்படியே பிறப்பெடுத்தது போலப் பிரதிபலிக்கிறார். 

இது மைக்கேல் ஜாக்சன் குறித்த ஆவணப்படமா இல்லை அவரின் சுய வரலாற்றுப் படமா என்பதில் ஏகப்பட்ட குழப்பம் நிகழ்கிறது.

தந்தை மகன் மோதல் என்பது அவரின் வாழ்வியலில் முக்கிய பங்காக இருந்தாலும் இந்தப் படத்தில் மைக்கேல் ஜாக்சன் என்ற இசை ஆளுமையின் பிறப்பெடுத்தல் இன்னும் ஆழ அகலமான திரைக்கதை அமைப்போடு வெளிப்பட்டிருக்கலாம். இதற்கு முன்னர் வெளிவந்த சுய வரலாற்றுப் படங்களில் இருக்கும் உணர்வோட்டம் இல்லாத வெறுமை தென்படுகிறது. 

சிறுவன் மைக்கேல் ஆக நடித்த பையனின் நடிப்பும், அவனின் தேடலும் சிறப்பான காட்சிகளாக அமைந்திருக்கின்றன.

"perfect pitch" என்று சிறுவன் மைக்கேல் ஐ வியக்கும் இசை நிறுவனத்தின் பெண்.
"we can change the world" என்ற இறுமாப்பு, தந்தையைப் பதவி நீக்கம் செய்யும் fax, MTV ஐக் கட்டுக்குள் கொண்டு வரும் காட்சிகள் என்று சினிமாத்தனமான அதிரடிகள் என்றாலும் ரசிக்க வைக்கின்றன.

இந்தியத் திரையிசையைத் தாண்டி, ஒரு மேற்குலக இசைக் கலைஞன் என்று நம் காலத்து எண்பதுகளில் பரவலாகக் கொண்டாடப்பட்ட நாயகன் மைக்கேல் ஜாக்சன். 

படம் பார்த்து முடித்த பின்னரும் மனதில் தேங்கி நிற்பது, தனக்காக ஒரு உலகத்தைக் கட்டியெழுப்பி வாழ்ந்த ஜாக்சன் தான். அவருக்காக இந்தப் படத்தைப் பார்க்கலாம்.

கானா பிரபா

26.04.2026


Thursday, April 23, 2026

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்

 


யானையக் கொண்டாங்க.. குதுரையைக் கொண்டாங்க.. நானும் ஊர்கோலம் போக.. இந்த இடம் வரும் போது அப்படியே யானையிலோ, குதிரையிலோ ஏற்றி விட்ட மிடுக்கு எழும். சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஆரம்ப காலத்தில் இரண்டு தத்துவார்த்தமான பாடல்கள் வந்த அளவுக்கு பின்னாளில் அவற்றுக்கு நிகராக வந்ததில்லை என்பேன். ஒன்று தனி மனிதனின் விரக்தி நிலையின் வெளிப்பாடு. அதுதான் “தப்புத்தாளங்கள்” படத்தில் வந்த “என்னடா பொல்லாத வாழ்க்கை”

https://www.youtube.com/watch?v=hgF474VravA https://www.youtube.com/watch?v=hgF474VravA காடாறு மாதம் அப்பா.. நாடாறு மாதம் அப்பா... ராஜாக்கள் கதை இது தான்ப்பா நம்ப நிலை தேவலை யப்பா முடிஞ்சா ஆடுற வரைக்கும் ஆடு இல்லை ஓடுற வரைக்கும் ஓடு இதுக்கு போய் அலட்டிக்கலாமா இப்படிப் போகும் அந்தப் பாட்டு. கவியரசு கண்ணதாசனின் அகராதியில் தத்துவார்த்தத்துக்குத் தனி இலக்கணம் இருக்கும். அப்படியிருக்க அவர் முத்திரை இல்லாமலா? இன்னொரு பக்கம் சமூகப் பார்வையை முன்னுறுத்தி எழுந்த ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லே https://www.youtube.com/watch?v=k4Szjiw9Ih0 இதை இப்படி ராமே ஆண்டாலும் ராவண ஆண்டாலும் மொழியாளுமை செய்திருப்பார் SPB. கங்கை அமரன் அவர்கள் கொடுத்த மிகச் சிறந்த தத்துவப் பாடல்களில் முதலிடத்தில் வைக்கலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக அவர் எழுதிய ஆரம்ப காலப் பாட்டு. பின்னாளில் “ஆணென்ன பெண்ணென்ன” கூட இந்தக் கூட்டணியில் விளைந்த அற்புதம். “முடிஞ்சா ஆடுற வரைக்கும் ஆடு இல்லை ஓடுற வரைக்கும் ஓடு…” என்று “என்னடா பொல்லாத வாழ்க்கை” பாடலில் கண்ணதாசன் கொடுத்தார். “கையிருக்கு உழைச்சுக் காட்டுறேன் மனசிருக்கு பொழச்சிப் பாக்குறேன்...” என்று கங்கையார் “ராமன் ஆண்டாலும்” பாடலில் தந்திருப்பார். கடவுள் மறுப்புக் கொள்கையைக் காட்டாமல் உனக்கு உதவி செய்யும் தெய்வத்தைத் தேடு என்று நீ கேட்டா கேட்டதை கொடுக்கற சாமியப் பாத்துக் கேளுங்கடா.. என்று பொட்டில் அடித்திருப்பார். இந்தப் பாடலை SPB பாடியிருந்தாலும் மலேசியா அண்ணனுக்கும் கச்சிதமாகப் பொருந்தும் தொனி இருக்கிறது. ஹேய் டே..ய், நந்தாண்டா என்று SPB வேறு முரட்டு ரஜினி ஆகி விடுவார். அந்த உதார்த்தனமான நடையும், நடனமும், தாரையை வெறியோடு அடித்து உருவேற்றும் ஆக்ரோஷமுமாக ரஜினியின் அந்த உழைப்புத்தான் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கான மூலதனம். இந்தப் பாடல் ஒன்றே போதும் அவர் நடிப்பின் இயல்பு கூற. இசைஞானி இளையராஜாவை என்னவென்று சொல்ல? “தோட்டம் கொண்ட ராசாவே சூடிக் கொண்ட ராசாத்தி” “ஆசையைக் காத்துல தூது விட்டு” வகையறா என்றாலும் இந்தப் பாடலில் இன்னும் மாசற்ற பூர்வகுடிகளின் இசை மொழி இருக்கும். பூர்வகுடிகள் சாமியைச் சுமந்து வரும் போது அம்மனோ பூமிக்கார் நமக்கு அம்மனோ பூமிக்கார் நமக்கு எல்லாம் நல்லதே நடக்கட்டுமே நல்லதே அம்மனோ கொடுக்கட்டுமே என்ற தமிழ் வார்த்தைகளை படுக இனத்தவர் பாடுமாற் போலக் குழைந்து கொடுத்திருப்பார். அதற்கேற்ப அந்த இசை நாதமும் பின்னணியில் இருக்கும். அந்தத் தொகையறா முடிந்து பாடலுக்குள் நுழைந்தால் எத்தனை வித பிறப்பெடுக்கும் அந்தப் பின்னணி இசை. தெம்மாங்கில் இருந்து துள்ளல் வரை கலந்து கட்டி அந்த இசைத் துள்ளல் இருக்கும். பாடல் அந்தத்தில் முடியும் போது அந்த இசை வெறித்தனம் நாட்டுப் பண் இசைஞர்களுக்கே உரிய பண்பு. தன் இசைப் படையணியோடு ஒரு ஊழித்தாண்டவத்தை நடத்தி விடுவார் ராஜா. பாடல் வந்து ஐம்பது வருடங்கள் கடந்தால் என்ன வரிகள் பொய்யாகுமா? இன்று மட்டுமல்ல நாளையும் கூட நீ கேட்டா கேட்டதை கொடுக்கற சாமியப் பாத்துக் கேளுங்கடா.. கானா பிரபா 22.04.2026

Sunday, April 12, 2026

❤️ ❤️❤️தமிழுக்கு வந்த ஆஷா போஸ்லே ❤️❤️❤️

எண்பதுகளின் இறுதிக் காற்பகுதியில் வட இந்தியாவில் கோலோச்சிய பாடகிகள் லதா மங்கேஷ்கர் மற்றும் ஆஷா போஸ்லே சகோதரிகள் இளையராஜா இசையில் தமிழில் தொடர்ச்சியாகச் சில படங்களில் பாடிச் சிறப்பித்தனர். இந்த இருவர் பாடிய படங்கள் வெளிவந்த ஆண்டுகளும் சம காலத்தில் அமைந்திருந்தன.

இளையராஜாவைத் தொடர்ந்து எஸ்.ஏ.ராஜ்குமார், R.D.பர்மன், ரஹ்மான், தேவா, வித்யாசாகர் ஆகியோருடன் இணைந்த பாடல்கள் மற்றும் தெலுங்கிலும் இளையராஜாவோடு இணைந்த இரண்டு பாடல்களுமாக இத்தொகுப்பைப் பகிர்கிறேன்.


🎙️கானா பிரபா கதைக்கிறேன்

https://youtu.be/QlqXGxli1cI?si=sjPK6ZBy6FfviEpn