Pages

Wednesday, June 29, 2016

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா

பரபரப்பான இன்றைய திரையிசைச் சூழலில் ஏகப்பட்ட இசையமைப்பாளர்கள், ஒரு இசையமைப்பாளர் அடுத்து என்ன தரப் போகிறார் என்று தொண்ணூறுகளின் இசை ரசிகர்கள் இன்று வரை ஒரு எதிர்பார்ப்போடு இருக்குமளவுக்கு ஒரு இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இன்னொருவர் வித்யாசாகர். பின்னவருக்கு அர்ஜூன், தரணி, கரு.பழனியப்பன் போன்றோரின் கூட்டணி வெகு சிறப்பாக அமைந்ததால் அவ்வப்போது வெளிக்கிளம்பி ஒரு அலை அடித்து விட்டு கேரள சினிமாப் பக்கம் போய் விடுவார். 
கார்த்திக் ராஜா நம்மாள், ராஜா வீட்டுப் பிள்ளை என்ற உரிமையோடு நேசிக்கும் தீவிர இளையராஜாவின் ரசிகர்களைத் தாண்டி கார்த்திக் ராஜாவின் அசாத்திய இசைத் திறனே இன்று வரை அவரை நம்பிக்கை நட்சத்திரமாக எண்ணும் பொதுவான இசை ரசிகர் வட்டமுண்டு.

ஒவ்வொரு இசையமைப்பாளரும் எத்தனையோ படங்களில் தமது சாகித்தியத்தைக் காட்டியிருந்தாலும் எல்லாவற்றையும் தாண்டி ஒரேயொரு படைப்பு அவரின் மிகச்சிறந்த முத்திரைப் படைப்பாக இருக்கும்.
ராஜாவைப் பொறுத்தவரை என்னளவில் தளபதி படத்தைச் சொல்லுவேன். ஆனால் இது ஒவ்வொரு ரசிகருக்கும் வேறுபட்டது. 
ஆனால் கார்த்திக் ராஜா கொடுத்ததில் பரவலான வாக்குகள் பெற்று முன்னணியில் இருப்பதென்னவோ கண்டிப்பாக "டும் டும் டும்" படப் பாடல்களாகத் தான் இருக்கும். மணிரத்னம் நிறுவனத் தயாரிப்பு, அவரின் உதவியாளர் அழகம் பெருமாள் இயக்குநராக அறிமுகமாகிறார். ஒரு யதார்த்தபூர்வமான கதையும், கதை மாந்தர்களும். பொருத்தமான நடிகர் தேர்வு இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய் கார்த்திக் ராஜாவின் இசை.
இது தான் இளையராஜா, ரஹ்மான் பாணியைத் தாண்டிய தனித்துவமான இசை என்று சொல்ல வைக்கும் இசை அடையாளம்.
இந்த மாதிரிக் கூட்டணி வாய்த்திருந்தால் கார்த்திக் ராஜா தொடர்ந்து பத்து வருடங்களைக் கட்டியாண்டிருப்பார் என்று நினைப்பதுண்டு.
இந்தப் படத்தின் ஒவ்வொரு பாடல்களைப் பற்றியும் சிலாகித்து எழுதலாம். 
"ரகசியமாய் ரகசியமாய் புன்னகைத்தாய் பொருளென்னவோ" இந்தப் பாடல் எவ்வளவு தூரம் ஆத்மார்த்தமாக உருவாக்கப்பட்டதோ அவ்வளவு நேர்த்தி பாடல் உருவாக்கத்திலும்.
https://youtu.be/crw0T0gKL-k

"உல்லாசம்" படம் அமிதாப் பச்சனின் ஏபிசிஎல் நிறுவனம் தயாரித்தது. விளம்பரப் பட இயக்குநர்கள்  ஜேடி - ஜெர்ரி இயக்கிய முதல் படம். கார்த்திக் ராஜாவுக்கு ஆரம்ப காலத்தில் கிட்டிய பெரிய வாய்ப்பு.  கவிஞர் பழநிபாரதியோடு பாடகர் அருண்மொழி, இளையராஜாவின் அண்ணன் மகன் பார்த்தி பாஸ்கர் ஆகியோரும் பாடல் எழுத படம்
 "கொஞ்சும் மஞ்சள் பூக்கள்" அப்போதைய ஹரிஹரன் & ஹரிணி வெற்றிக் கூட்டுக் குரல்கள். "முத்தே முத்தம்மா" ரகளையான துள்ளிசை கமல்ஹாசன், ஸ்வர்ணலதா. 
"யாரோ யார் யாரோ" என்ற சின்னப் பாட்டு இளையராஜா, பவதாரணி குரல்களோடு அந்தப் பாடல் வரிகளையொட்டிக் கொடுப்பாரே ஒரு இசை வெள்ளம் தாறுமாறு தான்.
இவையெல்லாம் தாண்டி அந்தப் பாட்டு, அதை நினைக்கும் போதே காற்றில் மிதக்க வைக்கிற ஆரம்ப இசை அதே தான் "வீசும் காற்றுக்கு பூவைத் தெரியாதா" https://youtu.be/GRIQyIfNhIY
பல்கலைக் கழகக் காலத்தில் கேட்ட பாட்டு "யாரவள் யாரவள்" என்ற அந்த கோரஸ் முத்தாய்ப்பும் உன்னிகிருஷ்ணன், ஹரிணியின் குரல்களுமாக அது தொண்ணூறுகளில் பல காதல் ஜோடிகளின் இதயத்துள் உச்சரித்துக் கொண்டிருந்த மந்திரப் பாட்டு.

"நாம் இருவர் நமக்கு இருவர்" சுந்தர்.C இயக்கி பிரபு தேவாவுக்குத் தாடியை மழித்தும் மழிக்காமலும் வித்தியாசம் காட்டிய (தலையில் அடித்துக் கொள்ளும் சுமைலி)
படம். நடிகை மீனாவின் மார்க்கெட் சரிந்து கொண்டிருந்த காலம், கவர்ச்சி காட்டினால் தான் அடுத்த சுற்று என்று ஈமூ கோழியாக்கி மோசம் செய்து அவரின் குடும்பக் குத்துவிளக்கு இமேஜ் ஐக் காலி செய்த படம். இப்படி இன்னோரன்ன பெருமைகள் (?) இருந்தாலும், அன்றைய இசை ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான பாடல் கிட்டிய வகையில் முந்திய பாவங்களை எல்லாம் மன்னிக்க வைத்தது. 
அதுதான் கார்த்திக் ராஜா கொடுத்த "இந்தச் சிரிப்பினை அங்கு பார்த்தேன்" ஹரிஹரன், விபா சர்மா குரல்களில் பாடல் மெட்டும் இசையும் அதகளம் தான்.
இதே படத்தில் வந்த "கட்டான பொண்ணு ரொமாண்டிக்கா" பாடலையும் நான் கேட்காது விட்டு வைக்கவில்லை. 
நாம் இருவர் நமக்கு இருவர்
படத்தின் பாடல்கள் https://youtu.be/7L_hjC1bvGc

எஸ்.பி.முத்துராமன் தயாரித்து இயக்கிய "பாண்டியன்" படத்தில் "பாண்டியனின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா" (மனோ, சித்ரா) பாடல் தான் கார்த்திக் ராஜா இசையமைத்து வெளிவந்த முதல் பாடல் என்பது இது நாள் வரை சொல்லப்படும் உண்மை. அதே காலகட்டத்தில் "பொன்னுமணி" படத்தில் "ஏய் வஞ்சிக் கொடி வந்ததடி" (இளையராஜா பாடியது) பாடலுக்கும்  இசையமைத்தார். "ஏ பாக்கு கொண்டா வெத்தல கொண்டா" என்ற பாடல் சக்கரைத் தேவன் படத்தில் ராஜா மெட்டுக்கு கார்த்திக் ராஜா இசைக்கோர்ப்பு என்று அறிய முடிகிறது.

இளையராஜாவுக்கு கார்த்திக் ராஜாவின் சாகித்தியம் மீது அபார நம்பிக்கை. அதற்கு இம்மாதிரியான வெளிப்படுத்தல்களும் காரணமாக இருக்கலாம். உழைப்பாளி உள்ளிட்ட படங்களுக்குக் கார்த்திக் ராஜாவே பின்னணி இசை. சாதாரண இசை ரசிகர்கள் நமக்கே கார்த்திக் ராஜா கொடுத்ததை வைத்து அவரின் இசைத்திறனை மதிப்பிடமுடிகின்றதென்றால் அருகில் இருந்து கவனித்துக் கொண்டிருக்கும் ராஜாவாவுக்கு எவ்வளவு மதிப்பீடு இருக்கும்.
இயக்குநர் விக்ரமன் இளையராஜாவோடு கூட்டுச் சேரவிருந்த "இனியெல்லாம் சுகமே" படத்தில் நீங்கள் கார்த்திக் ராஜாவைப் பயன்படுத்தலாமே என்று ராஜாவே கேட்டதாகத் தனது "நான் பேச நினைப்பதெல்லாம்" நூலில் விக்ரமன் குறிப்பிட்டிருந்தார். விக்ரமன் ராஜாவின் பரிந்துரையை ஏற்று அந்தப் படமும் வெளிவரக் கூட வாய்ப்பு இருந்திருக்குமேயானால் கண்டிப்பாக இன்னொரு இசைப் புதையல் கிட்டியிருக்கும்.

"மாணிக்கம்" திரைப்படமே கார்த்திக் ராஜாவை அதிகாரபூர்வமாக இசையமைப்பாளராக முன்னுறுத்தி வெளிவந்தது. டி.சிவா தயாரிக்க, ராஜ்கிரணைக் காலி பண்ணிய படம். 

ஆல்பம் திரைப்படம் கவிதாலயா தயாரிப்பு இயக்குநர் வசந்த பாலனின் முதல் படம் என்ற பேரிகையோடு வந்தாலும் வசூல் ரீதியாகக் கவனத்தை ஈர்க்காத படம். ஆனால் கார்த்திக் ராஜாவுக்கு இந்த ஆல்பமும் மறக்க முடியாத இசை ஆல்பம். "செல்லமே செல்லம் என்றாயடி" என்று ஷ்ரேயா கோசலைத் தமிழுக்குக் கூட்டி வந்த படம் இணைந்து பாடியவர் ஹரிஹரன். "காதல் வானொலி சேதி சொல்லுதே" (சுஜாதா, ஹரிஷ் ராகவேந்திரா) பாடல் தான் இந்தப் படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு. 
https://youtu.be/R4KElZlDhp4

பார்த்திபன் தனது முதல் படமான புதிய பாதை படத்தில் சந்திரபோஸ் உடன் ஜோடி சேரும் போதே நல்ல பாடல்களைத் தருவித்தவர்.
அவர் படங்களில் பாடல்கள் சோடை போகாது. கார்த்திக் ராஜாவுடன் சேர்ந்த குடைக்குள் மழை படத்தின் வணிகத் தோல்வி பாடல்களையும் இழுத்துத் தள்ளி விட்டது. "அடியே கிளியே" பாட்டு இளையராஜாவே பாடி இசையமைத்ததோ என்றெண்ணத் தோன்றும். அந்தப் பாடல் குறித்த என் சிலாகிப்பு http://www.twitlonger.com/show/n_1snavea

"உள்ளம் கொள்ளை போகுதே" படம் தான் சுந்தர்.C கார்த்திக்ராஜாவுக்கு முன்னதை விட இசை மரியாதை செய்த படம். கார்த்திக் குஷியாக சின்னச் சின்னப் பாடல்களைக் கொடுத்திருப்பார். "கவிதைகள் சொல்லவா" அருமையான முத்து.https://youtu.be/7Hmrvj-XaF0

"நதியோடு பேசும் தென்றல்" https://youtu.be/CAy5CjKBCJQ
பாட்டின் பிரம்மாண்டமான இசை எடுப்பு பாடல் காட்சியில் விஜய்காந்தும், குட்டி பொம்மையுமாகப் பொருந்தாது சறுக்கி அற்புதப் பாட்டைக் காட்சி வடிவத்தில் மோசம் செய்த படம் "அலெக்சாண்டர்"
பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் கேயார் இயக்க விஜய்காந்த் நடித்த படமது. 

இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா பற்றிப் பேசிக் கொண்டே போகலாம். ஆனால் ரயிலில் இருந்து இறங்க வேண்டுமே நான் :-) 
வேலைக்குப் போகும் ரயிலில் இன்று பிறந்த நாள் காணும் கார்த்திக் ராஜாவுக்கு வாழ்த்துகளோடு
ஒரு சிறப்புப் பகிர்வு இது. விட்ட குறை தொட்ட குறையை இன்னொரு பதிவாகத் தருகிறேன்.

Saturday, June 25, 2016

கவியரசு கண்ணதாசன் முழுப் பாடல்களும் எழுதிய "பகலில் ஓர் இரவு"


ஐ.வி.சசி மலையாள சினிமா உலகின் முக்கியமான நட்சத்திர இயக்குநராகத் திகழ்ந்தவர். அதே சமயம் இயக்குநர் பாஸில் அவர்களுக்கு முன்னோடியாகத் தமிழிலும் வெற்றிகரமான திரைப்படங்களை அளித்தவர். தன் திரை நாயகி சீமாவையே வாழ்க்கையிலும் நாயகி ஆக்கினார். கமல் நடித்து ஐ.வி.சசி இயக்கிய "குரு" படம் இலங்கையில் ஒரு வருடம் ஓடிய சிறப்பு மிகுந்தது. அதற்குப் பின் எந்த ஒரு படமும் அவ்வளவு பெரிய சாதனையை இலங்கைச் சினிமா அரங்கில் எட்டவில்லை.
அதே காலகட்டத்தில் ஐ.வி.சசி இயக்கிய படம்  "பகலில் ஓர் இரவு" இது குரு படத்துக்கு முந்தியது.

விஜய்குமார், ஶ்ரீதேவி,சீமா, ரவிகுமார் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்த இந்தப் படத்தை நான் முழுமையாகப் பார்க்காமல் தவிர்த்து வந்தேன். ஏனென்றால் அந்தப் படக் கதையே மனோவியாதியை மையப்படுத்தி, மர்மம் நிறைந்த காட்சிகளோடு படமாக்கப்பட்டதே காரணம். ஶ்ரீதேவியைக் குணப்படுத்த முனையும் காட்சி ஒன்றைப் பார்த்த பின் தான் இந்த முடிவு. எனக்கு இந்த மாதிரி மர்மக் கதை, பேய், பிசாசு என்றால் ஜூட் விட்டுவிடுவேன்.
ஆனால் பாடல்களை விட்டதில்லை.

"பகலில் ஓர் இரவு" திரைப்படத்தின் பாடல்கள் எல்லாமே தேனில் முக்கி எடுத்த பலாச் சுளைகளுக்கு நிகரானது. கவியரசர் கண்ணதாசன் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ் நாதன் கூட்டணி வெகு பிரசித்தமென்றால், பின்னர் வந்த இசைஞானி இளையராஜாவுக்குக் கண்ணதாசன் கொடுத்த பாடல்கள் இன்னொரு புது அனுபவம்.
பகலில் ஓர் இரவு திரைப்படத்தின் எல்லாப் பாடல்களையும் கண்ணதாசன் அவர்களே எழுதினார். அந்தக் காலத்து இலங்கை வானொலி வர்த்தக சேவையில் இந்தப் படத்தின் ஒரு பாடலைக் கூட மிச்சம் விடாமல் பிரபலமாக்கி விட்டிருந்தனர்.

"இளமை எனும் பூங்காற்று" பாடல் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்குக் கிடைத்த உச்ச பட்ச மெலடிப் பாடல்களில் தலையாயது. இந்தப் பாடலின் இசை வடிவமே பல நூறு பேரால் பல்வேறு வாத்தியங்களில் இன்னமும் வாசிக்கப்படும் மகத்துவம் நிறைந்தது. நான் நினைப்பேன் கே.ஜே.ஜேசுதாஸ் இற்கு "என் இனிய பொன் நிலாவே" எஸ்.பி.பி க்கு இந்தப் பாட்டு என்று ராஜா பங்கு பிரித்திருப்பாரோ என்று. ஆனால் இப்பேர்ப்பட்ட அழகு மிகுந்த பாடலை விரகதாபம் கொண்ட காட்சிக்குள் போட்டு விட்டாரே இயக்குநர் என்ற கோபம் இன்றும் உண்டு.
https://youtu.be/yej6UCRLvuk

"பொன்னாரம் பூவாரம்" பாடலை அந்தப் பாடல் காட்சியமைப்புக்காக அடிக்கடி YouTube இல் பார்ப்பேன். அந்தத் தேயிலைத் தோட்டங்களின் காட்சியமைப்பு நான் ஹட்டனில் இருந்த சிறு வயது நினைவுகளைத் தட்டியெழுப்பும். இளமையெனும் பூங்காற்று பாடல் காட்சியமைப்பில் செய்த பங்கத்தைத் துடைத்து எறிகிறது வண்ணக் கலவையால் எழில் கொஞ்சும் படப்பிடிப்பு.
https://youtu.be/bEfik-k7Mo4

ஜெயச்சந்திரன் பாடிய "கலையோ சிலையோ" கொஞ்சம் அடக்கி வாசிக்கப்பட்ட அற்புதமான சாஸ்திர சங்கீத ஆலாபனை. இந்தப் பாடலில் இவர் காட்டியிருக்கும் பாவத்தை அப்படியே அள்ளித் தரும் இளம் பாடகர் யாரேனும் இருக்கிறார்களா என்ன 
ஒவ்வொரு சொல்லும் ஜெயச்சந்திரன் நாவில் துள்ளிக் குதிக்குது.
https://youtu.be/Knlu4ygeJoE

அடுத்து வரும் இரண்டு பாடல்களும் கங்கை அமரன் எழுதியதோ என்று எண்ண வைக்கும் கங்கையின் பாணியில் கவியரசர் கை வண்ணம்.

"தோட்டம் கொண்ட ராசாவே" என்று இளையராஜாவும் ஜென்ஸியும் பாடும் போது "மச்சானை வச்சுக்கடி முந்தானை முடிச்சுல தான்" பாடல் ஒரு கரையால் போய்க் கொண்டிருக்கும்.
இந்தப் பாடல் வரிகளில் கிராமிய மணம் கங்கை அமரனை ஞாபகப்படுத்தும்.
"தோட்டம் கொண்ட ராசாவே" பாடலில் கொடுத்திருக்கும் ஏலா ஏலேலா ஏலேலேலாலா 
கோரஸ் குரல் பாட்டு முடிந்ததும் எதிரொலிக்கும்.
https://youtu.be/gcxleYbKGOk

"தாம்த தீம்த ஆடும் உள்ளம் பாடும் காவியம்" எஸ்.ஜானகி பாடும் பாட்டு இந்தப் படத்தின் இன்னொரு முத்து. பாடல் வரிகளில் எஸ்.ஜானகி கொடுக்கும் சிலிர்ப்புடன் கூடிய அந்த நளினம் தான் பாடலின் முக்கியமான ஆணி வேர்.
"தம்தன நம்தன தாளம் வரும்" என்ற பாடலும் சரி "தானத்தந்தம் தீனத்தத்தம் தைய" என்று இடையில் கோரஸோடு ஒலிக்கும் "பூத்தத்து பூந்தோப்பு பாத்துப் பாத்து" பாடலும் சரி கங்கை அமரன் வரிகளில் வரும் போது நினைத்துக் கொள்வேன் இந்த மெட்டுக்குப் பாட்டு வரிகள் மட்டுமல்ல ஜதிகளையும் அழகாகப் போடுவதில் கங்கை அமரன் சமர்த்தர் என்று. இங்கே கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கு முன்னாலும் அழகான மணியாரமாய் வந்து ஆலாபனை வெகு சிறப்பு.
https://youtu.be/_oyERh73WzI

கவியரசர் கண்ணதாசன் பாடல் வரிகளுக்கு இசைஞானி இளையராஜா கொடுத்த பாடல்கள் ஏராளமுண்டு. இங்கே நவீனம், சாஸ்திரிய சங்கீதம், தெம்மாங்கு என்று "பகலில் ஓர் இரவு"  பாடல்கள் மறக்க முடியாததொன்று.

Tuesday, June 21, 2016

பாடலாசிரியர் கங்கை அமரனின் புத்தகம்


"கங்கை அமரனின் திரையிசைப் பாடல்களை 1977 இல் இருந்து தொகுத்தால் பல திரவியங்கள் கிட்டும், நாட்டுப்புறத்தில் இருந்து நாகரிகம் வரை" என்றொரு ட்விட்டை நான்கு வருடங்களுக்கு முன்னர் பகிர்ந்திருந்தேன்.
என் போன்ற ரசிகர்களின் பல்லாண்டுக் கனவு இப்போது மெய்ப்படப் போகிறது என்பதை பாவலர் சிவா அவர்களின் பகிர்வில் இன்று அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
https://www.facebook.com/permalink.php?story_fbid=915970098513266&id=100003008540809

இன்னும் சொல்லப் போனால் கங்கை அமரன் அவர்கள் எழுதிய பாடல்களைச் சிலாகித்து ரசிக்கும் என் போன்ற ரசிகனுக்கு இந்த நூல் குறித்த எதிர்பார்ப்பு கங்கை அமரனை விட அதிகமாக இருக்கலாம்.

ஒரு திரைப்படப் பாடல் பிறக்கும் போது அதைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகளை அறியும் போது வெகு சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கும், குறித்த பாடல் படமாக்கப்படுவதை விட. 
இசையமைப்பாளர், பாடலாசிரியர், பாடகர் சில சமயம் நடிகர்/தயாரிப்பாளர் என்று ஒன்று சேர்ந்து குறித்த பாடலைத் தருவிக்கும் சுவையான பின்னணி. இதைத் தான் கங்கை அமரன் அவர்களின் நூலில் வழியாகப் பாடல் பிறந்த கதையாக அறிய வேண்டும் என்ற வேட்கை எனக்கு.

திரையிசைப் பாடலாசிரியர்களில் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் , கண்ணதாசன், வாலி, வைரமுத்து, மு.மேத்தா, முத்துலிங்கம் போன்றோர் தமது திரையிசைப் பாடல் திரட்டுகளை நூலாகக் கொணர்ந்திருக்கிறார்கள். இவர்களில் குறித்த பாடலை ஒட்டிய சம்பவ விபரிப்போடு கூடிய பாடல் பிறந்த கதைகளை கண்ணதாசன், வாலி, வைரமுத்து, மேத்தா, முத்துலிங்கம் ஆகியோர் அளவுக்கு மற்றையோர் செய்ததாக என் வாசிப்பனுபவத்தில் நினைவில்லை.
கண்ணதாசனும், வைரமுத்து இது குறித்துப் பல நூல்களை எழுதியிருக்கிறார்கள். 
முத்துலிங்கம் அவர்களின் பாடல் பிறந்த கதை நூலில் சில சம்பவப் பின்னணிகள் மிகைப்படுத்தப்பட்டதோ என்ற உணர்வு மேலோங்கும்.
கவிஞர் வாலியின் நானும் இந்த நூற்றாண்டும் அளவுக்கு அவரது ஆயிரம் பாடல்கள் பகிர்வு சிறப்பாக இருக்கவில்லை. அவசர கதியில் மற்றைய பாடலாசிரியரின் பாடலும் வாலி கணக்கில் சேர்க்கப்பட்டிருந்தது.
கவிஞர் வைரமுத்துவின் இதுவரை நான் வாழ்வியல் பகிர்வு உள்ளிட்ட நான்கு திரையிசைப் பாடல் புத்தகங்களை வாங்கி வைத்துள்ளேன். ஆனால் இறுதியாக வந்த ஆயிரம் பாடல்கள் தொகுதியில் ஒற்றை வரியில் ஆங்காங்கே கொடுத்த பாடல் பிறந்த கதையை முழுதும் தொட்டிருக்கலாமோ என்ற நப்பாசை எழுந்தது.
இதுவரை ஏறக்குறைய இருபது நூல்கள் திரையிசைப் பாடல்களும் அவற்றின் பின்னணியுமாக அமைந்த வகையில் சேமித்து வைத்திருக்கிறேன்.

இன்னும் பஞ்சு அருணாசலம், நா.காமராசன், பிறைசூடன், பொன்னடியான் ஆகியோர் கூடத் தமக்குக் கிட்டிய பாடல் வாய்ப்புகளை ஒட்டிய நூலை ஆக்கியளிக்கலாம் என்பது இன்னொரு தீரா ஆசை. 
வானம்பாடி (கலைஞர் டிவி), மனதோடு மனோ (ஜெயா டிவி) வழியாக பிறைசூடனும், மனதோடு மனோ வழியாக மேலும் சில பாடலாசிரியர்களும் இவ்வாறான பாடல் பிறந்த கதைகளைச் சொல்லியிருக்கிறார்கள். அதெல்லாம் "ஏட்டில் இல்லாதது என் கதையா" கணக்கில்.

"இந்த மின்மினிக்கு" என்று பல்லவியைக் கண்ணதாசன் கொடுக்க, சரணம் முழுதும் எழுதிய கங்கை அமரன்.  
 "எடுத்து வச்ச பாலும்" பாடலை வாலி எழுதி விட்டு மற்றைய பாடல்களை அமர் எழுதுவதால் இதுவும் கங்கை அமரன் பெயரிலேயே இருக்கட்டும் என்ற சேதியும், "சிந்திய வெண்மணி சிப்பியில் முத்தாச்சு" என்று விஞ்ஞானத்தைப் புதைத்த வரிகளை எழுதிய கங்கை அமரனும், தன் அண்ணன் பாவலர் வரதராசன் பெயரில் "மண்ணில் இந்தக் காதலின்றி" எழுதிய கங்கை அமரனும் என்று பாடல்கள் ஒவ்வொன்றுக்கும் சுய வரலாறுகள் உண்டு.

பாடலாசிரியர் கங்கை அமரனின் நூல் வெகு சிறப்பாக அமைந்து வெளி வர  என் வாழ்த்துகள்.

பாடலாசிரியர் கங்கை அமரனின் பாடல் வரிகளோடு அமைந்த பாடல்கள் குறித்து நான் எழுதிய சில இடுகைகள்.

புத்தம் புதுக்காலை என் சிலாகிப்பில்
http://www.radiospathy.com/2011/02/blog-post.html

புத்தம் புதுக் காலை பாடல் பிறந்த கதை

http://www.radiospathy.com/2014/11/blog-post_11.html

சிறு கூட்டுல 
http://www.radiospathy.com/2014/06/blog-post_7.html

மனதிலே ஒரு பாட்டு
http://www.twitlonger.com/show/n_1salis2

ராதா அழைக்கிறாள்
http://www.twitlonger.com/show/n_1so9rco

Thursday, June 16, 2016

பாடகி எஸ்.ஜானகி தானே எழுதிப் பாடிய "கண்ணா நீ எங்கே"

பாடகி எஸ்.ஜானகி தானே எழுதிப் பாடிய
🎻 கண்ணா நீ எங்கே வா வா நீ எங்கே 👧🏼🐇🍁

எண்பதுகளின் இலங்கை வானொலிப் பிரியர்கள் மறக்கவொண்ணாத பாடல்களில் ஒன்று "கண்ணா நீ எங்கே வா வா நீ எங்கே". 
ருசி கண்ட பூனை திரைப்படத்துக்காக பாடகி எஸ்.ஜானகி மழலைக் குரலாக மாறிப் பாடிய 
இந்தப் பாடல் அப்போது புதுமையாகப் பார்க்கப்பட்டு ரசிக்கப்பட்டது. பின்னாளில் இந்தப் பிரபல மழலைக் குரலில் எஸ்.ஜானகி "டாடி டாடி ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே" https://youtu.be/HNoIw28F5zg பாடலைப் பாடுகையில் இவர் குட்டிப் பையனாகவும், மலேசியா வாசுதேவன் தந்தையாக அமையும் வண்ணம் கங்கை அமரன் இசையில் மெளன கீதங்கள் திரைப்படத்துக்காக இசையமைக்கப்பட்டது.

"கண்ணா நீ எங்கே" பாடலுக்குப் பின்னால் பலரும் அறியாத செய்தி ஒன்றும் இருக்கிறது. இந்தப் பாடலைப் பாடியது மட்டுமன்றி எழுதியதும் எஸ்.ஜானகி தான் என்பதே அது.
பஞ்சு அருணாசலம் அவர்களின் தயாரிப்பில் வெளிவந்த "ருசி கண்ட பூனை" திரைப்படத்தை இயக்கியவர் அவரால் இயக்குநராக "கல்யாண ராமன்" திரைப்படத்தில் முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட ஜி.என்.ரங்கராஜன் அவர்கள்.
இந்தப் படத்தில் இன்னொரு புதுமை பி.சுசீலா, எஸ்.ஜானகி பெண் குரல்கள் தவிர்த்துப் 
 பின்னணி பாடிய ஆண்குரல் இசைஞானி இளையராஜா மட்டுமே. படத்தின் பின்னணி இசையிலும் இளையராஜாவின் ஆலாபனை சேர்க்கப்பட்டிருப்பது சிறப்பு.

முழு நேரப் பாடகரே கவிஞராக இருப்பது என்பது அந்தக் காலத்தில் புதுமையானதொரு விடயம். இன்றைய தனுஷ் காலத்தில் இதெல்லாம் பழகிப் போன சமாச்சாரம்.
ஆனால் பாடலின் காட்சித் திறன் அறிந்து பாடல் எழுதும் வல்லமை கொண்ட பாடகரைத் தமிழ்த் திரையுலகம் கண்டது புதுமை.
முன்னர் நண்டு திரைப்படத்துக்காக பாடகர் P.B.ஶ்ரீனிவாஸ் எழுதிய ஹிந்திப் பாட்டு அத்தகையது. அந்தப் பாடல் இது தான் https://youtu.be/yUI1FLexJrY

திரையுலகின் சகலகலாவல்லி என்று சிறப்பிக்கப்படும் பி.பானுமதி நடிகை, பாடகி, பாடலாசிரியை, இசையமைப்பாளர், கதாசிரியை, இயக்குநர்  என்ற பன்முகம் கொண்டவர். இந்தியாவின் முதல் பெண் திரைப்பட இயக்குநர் என்ற பெருமையைக் கொண்டவர்.

எஸ்.ஜானகி முன்னணிப் பாடகியாகப் பரவலான ரசிக நெஞ்சங்களைத் தனதாக்கிக் கொண்டவர், ஜீவ மரணப் போராட்ட, என்ற திரைப்படத்தின் இசையமைப்பாளராகவும் இயங்கியிருக்கிறார். 
ருசி கண்ட பூனை படத்தின் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் அவர்களே மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் இருக்கின்ற போது, அதே படத்தில் பஞ்சு அருணாசலம், கங்கை அமரன்  ஆகியோர் மற்றைய பாடல்களை எழுத "கண்ணா நீ எங்கே" பாடலை எஸ்.ஜானகி எழுதிப் பாடியது புதுமை என்பதற்கு இன்னொரு நியாயம் கற்பிக்கலாம், அது என்னவெனில் அந்தப் பாடல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் சூழல். 
படத்தைப் பார்த்தவர்களுக்கு பாடல் திரையில் வரும் பின்புலத்தை ஒட்டிய வரிகளைப் பொருத்திப் பார்த்துச் சிலாகிப்பர். கிருஷ்ண ஜெயந்தி காலத்தில் வானொலிகளில் இந்தப் பாடலை ஒலிபரப்புமளவுக்குப் பின்னாளில் போற்றப்பட்ட சிறப்பு மிகுந்தது.
சரி, இனிப் பாடல் வரிகளோடு எஸ்.ஜானகி தானே எழுதிப் பாடிய "கண்ணா நீ எங்கே வா வா நீ எங்கே" பாடலைக் கேட்டு ரசிப்போம்.

https://youtu.be/HFDzZBCT0OI

Saturday, June 4, 2016

முன்னணிப் பாடகர் S.P.பாலசுப்ரமணியமும் 50 இசையமைப்பாளர்களும்

இன்று தனது 70 வது பிறந்த தினத்தைக் கொண்டாடும் திரையிசைச் சிகரம் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கான சிறப்புப் பகிர்வு இது.
 திரையிசைப் பாடகராகப் பொன் விழா ஆண்டைத் தொட்ட பாடும் நிலா பாலுவுக்கான பகிர்வாகவே இதனை முதலில் கொடுக்க இருந்தேன். ஆனால் காலம் தள்ளிப் போய் இன்று தான் இந்தத் திருப்பணியைச் செய்து முடிக்க வாய்த்தது 😄

இந்திய மொழிகளில் எல்லாம் பாடிப் புகழ் பூத்த எஸ்.பி.பி அவர்கள் தமிழ்த் திரையிசையில் மட்டும் இணைந்து பணியாற்றிய ஐம்பது இசையமைப்பாளர்களைத் தொகுக்க எண்ணி, ஒவ்வொரு இசையமைப்பாளரின் இசையிலும் இவர் பாடிய முத்துகளைக் காலையில் இருந்து பட்டியலிட ஆரம்பித்தேன். எழுதிக் கொண்டிருக்கும் போதே எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் அளவுக்கு முன்னும் ஏன் எதிர்காலத்திலும் கூட இம்மட்டு இசையமைப்பாளர்களிடம் பாடும் வாய்ப்பு யாருக்கும் கிட்டியதா/கிட்டுமா என்பது ஐயமே என்ற பிரமிப்பும் ஏற்பட்டது.
இங்கே நான் கொடுத்த இசையமைப்பாளர்களைத் தாண்டி இன்னும் பல இசையமைப்பாளர்களிடம் பல்வேறு மொழிகளில் இவர் பாடியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ என் தொகுப்பில் ஒரு அவசரப் பிறந்த நாள் பொதி எங்கள் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களுக்கு.


1. ராகங்கள் பதினாறு - தில்லு முல்லு - மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் 
2. பூந்தேனில் கலந்து - ஏணிப் படிகள் - கே.வி.மகாதேவன்
3. சம்சாரம் என்பது வீணை - மயங்குகிறாள் ஒரு மாது - விஜய பாஸ்கர்
4. நந்தா என் நிலா - நந்தா என் நிலா - வி. தெட்சணாமூர்த்தி
5. தேன் சிந்துதே வானம் (எஸ்.ஜானகி) - பொண்ணுக்குத் தங்க மனசு - ஜி.கே.வெங்கடேஷ்
6. வாழ்வில் செளபாக்கியம் வந்தது (பி.சுசீலா) - தூண்டில் மீன் - வி.குமார்
7. அவள் ஒரு மேனகை - நட்சத்திரம் - சங்கர் & கணேஷ்
8. சங்கீத மேகம் - உதயகீதம் - இளையராஜா
9. நீல வான ஓடையில் - வாழ்வே மாயம் - கங்கை அமரன்
10. நீலக்குயில்கள் ரெண்டு - விடுதலை - சந்திரபோஸ்
11. வண்ணம் கொண்ட வெண்ணிலவே - சிகரம் - எஸ்.பி.பாலசுப்ரமணியம்
12. செம்பட்டுப் பூவே - புருஷ லட்சணம் - தேவா
13. தங்கத் தாமரை மலரே - மின்சாரக் கனவு - ஏ.ஆர்.ரகுமான்
14. மலரே மெளனமா (எஸ்.ஜானகி) - கர்ணா - வித்யாசாகர்
15. சல சல என ஓடும் (சித்ரா) - பொண்ணு பார்க்கப் போறேன் - பாக்யராஜ்
16. உன்னைப் பார்த்த பின்பு தான் - காதல் மன்னன் - பரத்வாஜ்
17. புத்தம் புது மலரே - அமராவதி - பாலபாரதி
18. வா வா எந்தன் நிலவே - சேரன் பாண்டியன் - செளந்தர்யன்
19. ஒரு பெண் மானை நான் பாட - மைதிலி என்னைக் காதலி - டி.ராஜேந்தர்
20. முன் பனியா - நந்தா - யுவன் ஷங்கர் ராஜா
21. கவிதைகள் சொல்லவா (சுஜாதா) - கார்த்திக் ராஜா - உள்ளம் கொள்ளை போகுதே
22. பார்த்த பார்வையில் - கெளரி மனோகரி - இனியவன்
23. கவிதைகள் - உயிரே உனக்காக - லஷ்மிகாந்த் & பியாரிலால் 
24. வாழும் வரை போராடு - பாடும் வானம்பாடி - பப்பி லகரி
25.  கண்ணுக்குள் நூறு நிலவா (சித்ரா & குழு) - வேதம் புதிது - தேவேந்திரன்
26. எந்தப் பெண்ணிலும் இல்லாத - கேப்டன் மகள் - அம்சலேகா
27. மாமாவே - தர்ம தேவதை - ரவீந்திரன்
28. சின்னச் சின்ன மேகம் - காற்றுக்கென்ன வேலி - சிவாஜி ராஜா
29. ஆகாயம் ஏனடி அழுகின்றது (எஸ்.ஜானகி) - ஒரு இனிய உதயம் - மனோஜ் கியான்
30. சாதி மல்லிப் பூச்சரமே - அழகன் - மரகதமணி
31. ஐய்யய்யோ நெஞ்சு (எஸ்.பி.பி.சரண், பிர்சாந்தினி)
  - ஆடுகளம் - ஜி.வி.பிரகாஷ்குமார் 
32. ஓ பொன்மாங்குயில் - மனசுக்குள் மத்தாப்பு - எஸ்.ஏ.ராஜ்குமார்
33. அன்பே ஒரு ஆசை கீதம் - பூவுக்குள் பூகம்பம் - சங்கீதராஜன் 
34. காதல் இல்லாதது (சித்ரா)  - மணி ரத்னம் - சிற்பி
35. உடலும் இந்த உயிரும் (சித்ரா) - நாளைய தீர்ப்பு - மணி மேகலை
36. உச்சி மீது - ஏழாவது மனிதன் - எல்.வைத்யநாதன்
37. ஆவாரம் பூவூ (பி.சுசீலா) - அச்சமில்லை அச்சமில்லை - வி.எஸ்.நரசிம்மன்
38. நதியா நதியா - பூ மழை பொழியுது - ஆர்.டி.பர்மன்
39. மழை தருமோ என் மேகம் (எஸ்.பி.சைலஜா) - மனிதரில் இத்தனை நிறங்களா - ஷியாம்
40. எங்கே போனாய் - ஜீவா - இம்மான்
41. மாலை வேளை (எஸ்.பி.சைலஜா) - சாமந்திப் பூ - மலேசியா வாசுதேவன்
42. சந்திரனே சூரியனே - அமரன் - ஆதித்யன்
43. யம்மா யம்மா - ஏழாம் அறிவு - ஹாரிஸ் ஜெயராஜ்
44. உடையோடு பிறக்கவில்லை ( சித்ரா) - நம்மவர் - மகேஷ்
45. நாடோடிப் பாட்டு பாட - ஹரிச்சந்திரா - ஆனந்த்
46. நான் என்னும் பொழுது - அழியாத கோலங்கள் - சலீல் செளத்ரி
47. சந்தோஷம் சந்தோஷம் - யுத் - மணி ஷர்மா
48. சங்கமத்தின் சங்கமே ராகமே - நாளைய மனிதன் - பிரேமி ஶ்ரீனி
49. காதல் போதை - முடிசூடா மன்னன் - சத்யம்
50. எங்கிருந்தோ வந்தான் - எங்கிருந்தோ வந்தான் - விஸ்வநாதன் & ராமமூர்த்தி

எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்கள் பாடிப் பணிபுரிந்த மேலும் பல இசையமைப்பாளர்கள்

Sagar Ravi பகிர்ந்தவை

1. ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான் - நான் அடிமை இல்லை - விஜய் ஆனந்த் 
2.கன்னித்தமிழோ கம்பன் கவியோ - அபிராமி - மனோரஞ்சன் 
3.பூவும் மலர்ந்திட தேனும் வடிந்திட - சுவர்ணமுகி - ஸ்வரராஜ் 
4.எந்தன் காதல் நாயகி - அம்மா பொண்ணு - ஏகாந்தன் 
5.இன்ப ராகங்கள் நெஞ்சுக்குள்ளே - ஹலோ ப்ரதர் - ராஜ் கோட்டி 
6.சிறகுள்ள நிலவே வா - இனிது இனிது காதல் இனிது - தேவி ஸ்ரீ பிரசாத் 
7.அவ கண்ண பார்த்தா ஐயோ அம்மா - சார்லி சாப்ளின் - பரணி 
8.ரோஜாப்பூ ஒன்று ராஜாவின் கை சேர - இரண்டாவது படம் - கண்ணன் 
9.என்ன அழகு எத்தனை அழகு - லவ் டுடே - சிவா ( நாடோடி இலக்கியனும் குறிப்பிட்டார்)
10.ரவிவர்மன் ஓவியமோ நான் தினம் பாடும் காவியமோ - புதுவயல் - அரவிந்த்
11.ஒரு வானமாய் ஒரு பூமியாய் - ஜனா - தினா 
12.நான் போகிறேன் மேலே மேலே - நாணயம் - ஜேம்ஸ் வசந்தன் (நண்பர் கார்த்திக் அருள் கூடக் குறிப்பிடுகின்றார்)
13.கனவுல பார்த்தன் நெனவுல பார்த்தேன் - பலம் - யுகேந்திரன்
14.தீந்தேனா தீ வடியும் தேனா - தலைமகன் - பால் J 
15.ஒரு துளி இருதுளி மழைத்துளி விழுந்தது - ஆச்சார்யா - ஸ்ரீகாந்த் தேவா 
16.மழை நின்றும் நிற்காது தூவானம் நம் வாழ்க்கை - தூவானம் - ஐசாக் தாமஸ்
17.ஞாபகம் இல்லையோ என் தோழி - ஞாபகங்கள் - ஜேம்ஸ் விக்
18.ரம்யா ரம்யா ரம்யா ரம்யா - தொட்டாசிணுங்கி - பிலிப் ஜெர்ரி
19. சந்தனப் பூவ சம்மதம் கேக்கப் போறேன் - ஓடங்கள் - சம்பத் செல்வம் 
20. ஒரு வரம் தருகிறாய் தாயே - கொல கொலையா முந்திரிக்கா - செல்வகணேஷ்

ஜி.ரா பரிந்துரை
1. வானில் வாழும் தேவதை (வாணி ஜெயராம்) - உருவங்கள் மாறலாம் - எஸ்.வி.ரமணன்

ரஜினி ராமச்சந்திரன் பரிந்துரை
1. வருவாயா வேல் முருகா (சரளா) - ஏன் - டி.ஆர்.பாப்பா