Pages

Thursday, May 28, 2015

உடையாத வெண்ணிலா உறங்காத பூங்குயில்

உடையாத வெண்ணிலா
உறங்காத பூங்குயில்
நனைகின்ற புல்வெளி
நனையாத பூவனம்
உதிர்கின்ற ஒரு முடி
களைகின்ற சிறு நகம்
ஸ்ருங்காரச் சீண்டல்கள்
சில்லென்ற ஊடல்கள்

ப்ரியம் ப்ரியம்
ப்ரியம் ப்ரியம்

மெல்பர்ன் நகரில் வாழ்ந்த 1996 ஆண்டு கால வாழ்க்கையை நினைப்புக்குக் கொண்டு வரும் பாட்டு.

பனிப் புகாருக்குள்ளால் வீட்டில் இருந்து கிட்டத்தட்ட இருபது நிமிடங்களைக் கடந்து நடந்து ரயில் நிலையம் போய் பல்கலைக் கழகம் போகும் ரயிலை எட்டிப் பிடிக்கப் போகும் அந்த நடை தூரத்தில்  வாக்மென்னை இடுப்பில் செருகிக் காதில் இயர் ஃபோனால் நிரப்பினால் காதுக்குள் குளிர் போகாது இசையால் நிரப்பிக் கொண்டிருக்கும். நடக்கும் வழியெல்லாம் நீரால் பரவிய தேசப்படம் போலக் குறுக்கு மறுக்காக வளர்ந்திருக்கும் மொட்டைப் புற்களுக்குத் தொப்பி போட்டல் போலப் பனித் துகள்கள் அந்தரத்தில் நிற்கும்.

ப்ரியம் ப்ரியம் ப்ரியம் ப்ரியம் என்று காதுக்குள் ஜெபித்துக் கொண்டிருக்கும் அந்தப் பாட்டு. தனியனாக நடை போட்டுக் கொண்டு போவேன் எதிர்காலம் தெரியாமல்.

இளையராஜா, ரஹ்மான் மட்டுமல்ல வித்யாசாகர், தேவா, சிற்பி என்று எல்லாரையுமே வஞ்சகமில்லாமல் கேட்டு ரசித்து மெச்சிய காலமது. போதாக்குறைக்கு கார்த்திக் ராஜா வேறு இந்தா வாறார் இந்தா வாறார் என்று ஆசை காட்டிக் கொண்டிருக்க ஒன்றிரண்டு படங்கள். அப்போதெல்லாம் இணையம் இல்லை அதனால் சண்டை போடாமல் எல்லார் கொடுத்த பாடல்களையும் ரசிக்க முடிந்தது எல்லோராலும்.

மெல்பர்ன் கரம்டவுன்ஸ் சிவா விஷ்ணு கோயில் தேருக்குப் போல ரயில் பிடித்து, பஸ் ஏறி ஒரு அந்தத்தில் இருந்து இன்னொரு அந்தம் வரையான அந்தத் தல யாத்திரை முடிந்து அந்தப் பக்கமாக இருந்த டாண்டினொங் MKS தமிழ்க்கடைக்கும் போகாமல் வீடு திரும்பினால் பொச்சம் தீராது. MKS இன் இசைத்தட்டு விற்கும் பகுதிக்குப் போனால் ஹரிஹரன் புத்தம் புது சீடியில் சிரித்துக் கொண்டிருந்தார். என்னுடைய அப்போதைய வருமானத்துக்கு அது பெரிய முதலீடு என்றாலும் ஒன்றே ஒன்று என்றிருந்த அந்த சீடியை விடக் கூடாது என்று என் ஆஸ்தியாக்கிக் கொண்டேன்.
பிரமிட் வெளியிட்ட இரட்டை சீடி ஸ்பெஷலில் குந்திக் கொண்டிருந்தது "உடையாத வெண்ணிலா உறங்காத பூங்குயில்"

அந்தக் காலகட்டத்தில் ஹரிஹரன் தான் இளைஞர்களின் காதலைப் பாடலின் வழியாக மொழி பெயர்த்துக் கொண்டிருந்தார். "மலர்களே மலர்களே இது என்ன கனவா" என்று ஹரிஹரன், சித்ரா ஜோடிக் குரல்கள் உருகிப்பாடி உருக்கியது போதாமல் "உடையாத வெண்ணிலா" வோடும் வந்து விட்டனர்.
பாடலின் வரிகள் எல்லாமே தமிழ் சினிமாப் பாடல்களுக்குண்டான நீளமில்லாது காற்றில் ஒவ்வொன்றாய் வெடித்துப் பறக்கும் பருத்திப்பூவைப் போலத் துண்டு துண்டாய் பேனாவுக்கு நோகாமல் எழுதியிருப்பார் கவிஞர் வைரமுத்து. 

இந்த மாதிரியான மெது இசைப் பாடல்களைக் கேட்கும் போதெல்லாம் வித்யாசாகரை இன்னமும் உயர்த்திப் பிடித்துக் கெளரவிக்காத பாவக்கணக்கைச் சேர்த்து வைத்திருக்கிறோமே என்ற குற்ற உணர்ச்சி மேலிடும்.

"ப்ரியம்" திரைப்படத்தின் விளம்பர வடிவமைப்புக் கூட எடுப்பாக இருக்கும்.
அருண்குமார் என்ற அருண் என்ற அருண் விஜய், மந்த்ரா நடிக்க பாண்டியன் என்ற இயக்குநர் இயக்கியிருந்தாலும் படத்தின் புதுமுகத் தயாரிப்பாளர் அசோக் சாம்ராஜ் தான் அப்போது பேசு பொருள் ஆக இருந்தார்.  பேசும்படம், ஜெமினி சினிமா தாண்டியும் அந்தக் காலத்துச் சஞ்சிகைகளின் முழுப்பக்க விளம்பரம் "ப்ரியம்" தான். படம் பெரிதாகப் போகவில்லை என்றாலும் சில காலத்துக்குப் பின் "கல்வெட்டு" என்ற பெயரில் முரளியை வைத்துத் தயாரிக்கும் படத்துக்கு விளம்பரம் கொடுத்தார். முரளி முகத்தில் இந்திய தேசியக் கொடி வரைந்திருக்கும். அந்தப் படம் வரவில்லை. பிறகு ஏதோ படத்திற்காக முரளி முகத்தில் தேசியக் கொடி ஒப்பனை போட்டார்.

என்னுடைய இசைக் களஞ்சியத்தில் இன்னும் நான் பேணிப் பாதுகாப்பது அந்த ஹரிஹரனின் இரட்டை இசைத்தட்டுகள் தான். இன்று வரை பிரமிட் நிறுவனம் அந்தக் காலத்தில் வழங்கிய துல்லியமான ஒலித்தரத்தில் இசைத் தட்டுகளைக் கொடுப்பார் யாருமில்லை என்று மெய்ப்பிக்க இது போன்ற இசைத்தட்டுகள் தான் சாட்சியம் பகிரும்.

அந்தி மஞ்சள் மாலை
ஆளில்லாத சாலை
தலைக்கு மேலே பூக்கும்
சாயங்கால மேகம்

ப்ரியம் ப்ரியம் ப்ரியம் ப்ரியம்

மீண்டும் கேட்கிறேன் தன் கூட்டுக்குள் சுருக்கிப் புதைந்து மறையும் நத்தை போலப் பாடலுக்குள் மறைந்து போகிறேன்.

 http://www.youtube.com/watch?v=pJoVFumXVps&sns=tw 

Tuesday, May 12, 2015

பாடல் தந்த சுகம் : கேக்குதடி கூக்கூ கூ

பாடல் தந்த சுகம் : கேக்குதடி கூக்கூ கூ

பாட்டுக்கு இளையராஜா பின்னணி இசைக்கு தேவா

கடலோரப் பின்னணியில் அமைந்த படங்களில், இளையராஜாவின் இசையமைக்க நடிகர் பிரபுவுக்குக் கிடைத்த இரண்டு படங்கள் சின்னவர் மற்றும் கட்டுமரக்காரன் இரண்டிலுமே அட்டகாசமான பாடல்கள். ஆனால் இந்தக் கூட்டணியில் வந்த மற்றைய படங்களோடு ஒப்பிடும் போது வசூல் ரீதியாகப் பெரிதும் ஈர்க்காத படங்களாயிற்று.

காலத்துக்குக் காலம் தமிழ் சினிமாவில் ஒரு தயாரிப்பாளர் சிறிது காலம் பரபரப்பாகப் பேசப்பட்டுப் பின்னர் காணாமல் போய்விடுவார். அந்த வரிசையில் 90களின் மத்தியில் பரபரப்பாகல் பேசப்பட்ட தயாரிப்பாளர் ஏ.ஜி.சுப்ரமணியம். இவரின் படங்கள் பெரு வெற்றி காணுதோ இல்லையோ அந்த நேரத்தில் நிறையப் படங்கள் ஏ.ஜி.எஸ் மூவீஸ் தயாரிப்பில் வந்து கொண்டிருந்தன.
அந்த வகையில் கட்டுமரக்காரன் படமும் சேர்ந்து கொண்டது.  ஆனால் படத் தயாரிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில் இளையராஜாவுக்கும், ஏ.ஜி.சுப்ரமணியத்துக்கும் இடையில் முறுகல் ஏற்படவே படத்தின் பின்னணி இசையை தேவா கவனித்துக் கொண்டார்.
இளையராஜா பாடல்களுக்கு இசையமைக்க, தேவா பின்னணி இசையமைத்த புதுமையான வரலாற்றில் இந்தப் படமும் சேர்ந்து கொண்டது.

பி.வாசு இயக்க பிரபு - குஷ்பு ஜோடியின் சின்னத்தம்பி அலை ஓயவும், குஷ்பு மாதிரியே ஒரு கதாநாயகி என்று அஞ்சலி என்ற நடிகையைக் கட்டுமரக்காரனில் ஜோடியாக்கியதும் இந்தப் படத்தின் ஒரு பின்னடைவு என்று சொல்லலாம்.

"கடலை விடக் காதல் ஆழமானது" என்று இந்தப் படத்துக்கு மகுட வாக்கிய விளம்பரம் கொடுத்திருந்தார்கள். தொண்ணூறுகளில் வந்த படங்களுக்கு இம்மாதிரி மகுட வாக்கிய விளம்பரம் கொடுப்பது அந்தக் காலப் பண்பு :-)
அப்போது வெளிவந்த "பொம்மை" சினிமா இதழின் பின் பக்க முழு விளம்பரமாக "கட்டுமரக்காரன்" படம் இருந்தது. பொம்மை புத்தகத்தை கொழும்பில் வாங்கிக் கொண்டு யாழ்ப்பாணம் போவதற்கு தாண்டிக்குளம் தமிழீழ விடுதலைப் புலிகள் சோதனைச் சாவடியில் நுழைந்த போது பொம்மை குப்பைக் கூடைக்குள் போனது. அப்போது சினிமாப் புத்தகங்கள் தமிழீழப் பகுதிக்குப் போகத் தடை இருந்த காலம்.


கவிஞர் வாலி முழுப் பாடல்களையும் எழுதும் பொறுப்பைக் கவனிக்க "வெற்றி வெற்றி என்று சொல்லும் கோவில் மணி" எஸ்.பி.பாலசுப்ரமணியம், சித்ரா பாட அந்தக் காலத்திலேயே ஹிட் அடித்த பாடல். 

நேற்று முன் தினம் ராஜா கோரஸ் க்விஸ் இல் இதே படத்தில் வந்த "கேக்குதடி கூக்கூ கூ" பாடலைப் போட்டிப் பாடலாகக் கொடுத்த பின்னர் தான் குறித்த பாடலின் காணொளிக் காட்சியை முதன் முதலில் பார்த்தேன் என்றால் நம்பத்தான் வேண்டும். கூட்டுக் குரல்களே பாடல்களைத் தொடக்கி வைக்க அவர்களோடு நாயகியும் சேர்ந்து பாட பின்னர் தனிக்குரலாய் எஸ்.ஜானகி நாயகிக்கும் மனோ நாயகனுக்குமாகப் பாடுகிறார்கள். இந்த மாதிரி அழகான இசை நுட்பம் பொருந்திய பாடல்களைக் காட்சிப்படுத்தும் போது மொக்கை போட்டு விடுவார்கள். ஆனால் இந்தப் பாடல் காட்சி பாடலின் திறனை நியாயம் செய்யுமாற் போலப் படமாக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்தப் படம் இன்னும் கவனிக்கப்படும் அளவுக்கு எடுக்கப்பட்டிருந்தால் பரவலாகப் பலரையும் எட்டி ரசிக்க வைத்திருக்கும் என்ற ஆதங்கமும் எழுகிறது.



Friday, May 1, 2015

அழகான நம் பாண்டி நாட்டினிலே


அழகான நம் பாண்டி நாட்டினிலே
கள்ளழகர் வந்து இறங்கும் 
வைகை ஆற்றினிலே

அழகான நம் பாண்டி நாட்டினிலே
கள்ளழகர் வந்து இறங்கும் 
வைகை ஆற்றினிலே

புத்தாண்டு சித்திரையில் ஊர் கூடும்
நல்ல பெளர்ணமியில் மீனாட்சி சீர் பாடும்

அழகான நம் பாண்டி நாட்டினிலே
ஏ ஹே ஹே ஏ ஹே ஹே

சோமனுக்கு மாலையிட்ட மீனாளே
ஓய் ஹோய் ஹோய்
இங்கு சகலருக்கும் தாயாக ஆனாளே 

சோமனுக்கு மாலையிட்ட மீனாளே 
இங்கு சகலருக்கும் தாயாக ஆனாளே

நம் விரும்பும் வாழ்வளிக்க தாய் இருக்கா அந்தத் தாய் போல நமைக் காக்க 
யார் இருக்கா......

அழகான நம் பாண்டி நாட்டினிலே 
ஏ ஹே ஹே ஏ ஹே ஹே

நீர் வளமும் நில வளமும்
பெருகி வரும்
ஒய் ஹொய் ஹொய்
தமிழ் நல்லிசையும் மெல்லிசையும்
பொங்கி வரும்

நீர் வளமும் நில வளமும்
பெருகி வரும் 
ஒய் ஹொய் ஒய் ஹொய்
தமிழ் நல்லிசையும் மெல்லிசையும்
பொங்கி வரும்

சீர் மதுரை மதுரை அம்மனவள் நிழலிருக்கும் இதிலே
யார் தயவும் யார் உறவும் 
இங்கே எதுக்கு.....

அழகான நம் பாண்டி நாட்டினிலே
கள்ளழகர் வந்து இறங்கும் 
வைகை ஆற்றினிலே
புத்தாண்டு சித்திரையில் ஊர் கூடும்
நல்ல பெளர்ணமியில் மீனாட்சி சீர் பாடும்

அழகான நம் பாண்டி நாட்டினிலே
ஏஹே ஹே ஹே
ஏஹே ஹே ஹே

http://soundcloud.com/yogashankiyan-senthamizhan/azhagana-nam-paandi-pudhupatti 

மதுரை மண் 
இளையராஜா இசையால் குடமுழுக்கு செய்யப்பட்டு அவர் தம் பாடல் காட்சியால் கோபுரம் எழுப்பப்பட்ட பூமி
🌻🌴🍄🌹🎵🎼☀️🎺
இப்படியாக ஒரு ட்விட் ஐ முன்னர் பகிர்ந்திருந்தேன். இப்படியான பாடலைக் கேட்கும் போது அது என் ட்விட்டை நியாயப்படுத்தும் போல முன்னிற்கும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் கள்ளழகர் திருவிழாவைக் கண்டு மெய்யுற வேண்டும் என்பது என்னுள் ஒட்டிக் கொண்டிருக்கும் ஆசை.

இப்போது அங்கே கள்ளழகர் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறார்.
இன்று காலை எழுந்ததுமே முதலில் கண்ணில் பட்டது நம்ம @umakrishh
பகிர்ந்த ட்விட்
 "கோபுரத்தை நிமிர்த்தியாச்சு.. @kanapraba மதுர மரிக்கொழுந்து வாசம் வருதா .. குளத்துப் படிகளைப் பார்த்ததும் :) "

அவர் பகிர்ந்திருந்த படங்களைத் தான் இங்கே பார்க்கிறீர்கள்.

புதுப்பட்டி பொன்னுத்தாயி படத்தில் இடம்பெற்ற "அழகான நம் பாண்டி நாட்டினிலே" இன்னும் அதிகம் வெளிச்சம் பட்டிருக்க வேண்டிய பாட்டு. 
இந்தப் படத்தில் வாலி மற்றும் புலமைப் பித்தன் ஆகியோர் எழுதியிருக்கிறார்கள். இந்தப் பாடலின் வரிகளை நோக்கும் போது வாலியின் முத்திரை இருக்குமாற் போலப் படுகின்று.

இசைஞானி இளையராஜா, அருண்மொழி குழுவினரோடு பாட, சூழ ஒலிக்கும் இசையில் பகட்டு இல்லை, வரிகள் பதியும் போது மெய்யுணர்வாகின்றது.

திருவிழா ஆர்.ஜெயசங்கர் நாதஸ்வரம் வலையப்பட்டி தவில் சக்கரவர்த்தி சுப்பிரமணியன் அவர்கள் தவில் வழங்கிச் சிறப்பித்த திரைப்படம் இது.

இப்போதுள்ள தொலைக்காட்சிகள் சித்திரைத் திருவிழாவைக் காட்சிப்படுத்தி ஒளிபரப்பும் போது இந்தப் பாடலைப் பின்னணியில் கொடுத்தால் இன்னும் மகத்துவமாக இருக்கும்.

"தமிழோடு இசை பாடல் மறந்தறியேன்" திருநாவுக்கரசர் பாடிய தேவாரம் தான் என் இசைத்தளத்தின் மகுட வாக்கியம். அந்தத் தேவார வரிகள் கொடுக்கும் அழுத்தத்தை கடந்த நூற்றாண்டில் வந்த "அழகான நம் பாண்டி நாட்டினிலே" பாடலும் பதிவு செய்து நெஞ்சில் இடம் பிடிக்கின்றது.