Pages

Saturday, May 28, 2011

மானேஜர் மாதவன் இல்லாத அஞ்சலி அப்பார்ட்மெண்ட்ஸ்


ரயிலில் என் அலுவலகத்துக்குப் போகும் போதும், திரும்பி வரும் போதும் இன்னபிற வேலைகளைச் செய்யும் போதும் உலகவானொலிகளைக் காதுக்குள் ஒலிக்கவிடுவது என் வழக்கம். ஒவ்வொரு வானொலியிலும் இருந்து தேர்ந்தெடுத்த நிகழ்ச்சிகளைக் கேட்க ஏதுவாக வைத்திருக்கின்றேன். அப்படிச் சில மாதங்களுக்கு முன்னர் அறிமுகமானது தான் சென்னை ஹலோ எஃப் எம் இல் இடம்பெறும் "அஞ்சலி அப்பார்ட்மெண்ட்ஸ்". அந்த நிகழ்ச்சியை நான் தேர்ந்தெடுத்துக் கேட்கக் காரணமே அதில் வரும் குறு நாடக வடிவில் ஓடும் நகைச்சுவைப் பகுதிகள். ஒவ்வொரு பத்து நிமிட இடைவெளியில் வரும் அந்த நாடக அங்கத்தில் இடம்பெறுவது இதுதான்.

ஓரங்க நாடகமாக அரங்கேறும் அஞ்சலி அப்பாட்மெண்ட்ஸ் இன் மேனேஜர் மாதவன் ஒவ்வொரு அங்கத்திலும், அந்த அப்பார்ட்மெண்ட் செக்கரட்ரி பெண்ணோடு வம்பளத்து வசமாக மாட்டிக் கொள்ளுவார்.
ஒருமுறை அஞ்சலி அப்பார்ட்மெண்டில் இருக்கும் ப்ளாட் ஒன்றில் இருக்கும் மலையாளப் பெண்ணிடம் மலையாளம் கற்றுக் கொண்டு பேசுகிறேன் பேர்வழி என்று சொதப்புவதும், இன்னொரு முறை பொய் சொல்லித் தன் கிராமத்துக்குப் போக லீவு கேட்டு மாட்டிக் கொள்வதும், இன்னொரு சந்தர்ப்பத்த்தில் பக்கத்து ப்ளாட்களில் ஓசிச் சமையலை ருசி பார்க்க ஐடியா போட்டுக் குட்டு வாங்குவதும், பிறிதொருமுறை அப்பாட்மெண்டின் கணக்குப் புத்தகங்களைப் பழைய பேப்பருக்குப் போட்டு தப்புக் கணக்குப் போடுவதும் என்று இப்படியான அப்பார்ட்மெண்ட் சூழலை மையப்படுத்திய நகைச்சுவை ஓரங்க நாடகங்களாக அவை இருக்கும். ஒவ்வொரு அங்கம் முடிவில் மேனேஜர் மாதவன் எடுத்துக் கொண்ட சமாச்சாரத்தை அடியொற்றிய திரையிசைப்பாடல் ஒன்று முத்தாய்ப்பாய் முடிக்கும். ஒவ்வ்வொரு நிகழ்ச்சியிலும் பல அங்கங்கள் இருக்கும் இடையிடையிடையே பாடல்களோடு.

தனக்கே உரிய கிராமியம் கலந்த குரலில் நைச்சியமாகப் பேசி மற்றவரை நம்ப வைக்க இவர் பண்ணும் அட்டகாசங்களைக் கேட்டுச் சிரிக்காதவர் இல்லை என்பேன். மானேஜர் மாதவன் யார் என்றே தெரியாத நிலையில் அவருக்கென்ற கற்பனை உருவை மனதில் பதித்து இது நாள் வரை அவரைக் காதுக்குள் ரசித்து வந்தேன். ஆனால் இப்போது உண்மைத் தமிழன் அண்ணாச்சியின் இந்தப் பதிவைப் பார்த்ததும் உண்மையில் கலங்கிப் போனேன். நான் வானொலி நிகழ்ச்சி செய்துகொண்டிருக்கும் போதே நான் ஆத்மார்த்தமாக நேசித்த வானொலிக் கலைஞரின் இழப்பைக் கேட்பது இன்னொரு துயரம். இனி எனக்கான வானொலி நிகழ்ச்சிகளில் ஒன்று இல்லாமல் போகின்றது மானேஜர் மாதவன் என்ற பாத்திரம் யார் என்று தெரிகின்ற போது இனி அவர் இல்லை என்ற உண்மை வலிக்கின்றது. மானேஜர் மாதவன் என்ற கோபால் அண்ணனுக்கு என் ஆழ்ந்த அஞ்சலியைப் பதிவாக்குகிறேன்.

புகைப்படம் நன்றி: உண்மைத்தமிழன் வலைப்பதிவு

Tuesday, May 24, 2011

திரையிசையில் இணைகள்

கொஞ்ச நாளாகப் புதுப்பாடல் ஒன்று அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது. தலைமுதல் கால்வரை ராஜா ரத்தம் ஓடும் ஒருவனுக்கு புதுப்பாடல் ஒன்றை அவ்வளவு சீக்கிரம் ஏற்றுக்கொள்ள ஒவ்வாது எனக்கு. ஆனால் இப்படி அரிதாக ஒன்றோ இரண்டோ ஆட்கொண்டால் ஆசைதீரக் கேட்டுவிட்டுத் தான் மறுவேலை. அப்படியாக வந்து வாய்த்தது தான் தெய்வத்திருமகன் திரைப்படத்தில் இருந்து "விழிகளில் ஒரு வானவில்" என்ற பாடல். நா.முத்துக்குமாரின் கவிவரிகளில் பாடகி சைந்தவி பாடியிருக்கும் அருமையானது மென்சந்தம் அது. ஆர்ப்பாட்டமில்லாத இசை மெல்ல மெல்லப் பியானோவின் ஒற்றைச் சிறகுகளை வலித்துக் கொண்டே வரும் போதே மனசில் ஆக்கிரமிப்பை மெல்ல மெல்லக் கொண்டு வருகின்றது. பாடலை உன்னிப்பாகக் கேட்டால் சைந்தவியின் குரலைத் தான் முதலீடாகக் கொண்டு மற்ற எல்லாம் உபரியாகத் தான் பயணிக்கின்றன நா.முத்துக்குமாரின் வரிகளும் கூட. இந்தப் பாடலின் வரிகளை விட வலியதொரு படைப்பை முத்துக்குமார் கொடுக்கமுடியும் என்றாலும் இதுவே போதும் என்று நினைக்கத் தோன்றும் அப்போது தானே பாடகியின் குரலைச் சலனமில்லாமல் ரசிக்கமுடியுமே.
ஜி.வி.பிரகாஷ்குமார், சிக்குபுக்கு ரயில் விட்ட காலத்தில் இருந்து பார்த்து வளர்ந்த பையன், அவரின் அடுக்கடுக்கான வளர்ச்சி விகாரமில்லாமல் பரிணாமம் கொண்டு வருவதை எட்ட இருந்து ரசிக்கிறேன். கிரீடம் படத்தில் "விழியில் உன் விழியில்", மதராசப்பட்டணம் படத்தில் "பூக்கள் பூக்கும் தருணம்" என்று இந்தச் சின்ன மூர்த்தி சிறிது காரம் பெரிது.

"விழிகளில் ஒரு வானவில்" பாடலில் சைந்தவிக்கு மாற்றீடை ஷ்ரேயா கொசல் இல் இருந்து எல்லாப் புதுப்பாடகிகள் வரை பொருத்திப் பார்த்தும் சைந்தவி தான் கச்சிதமாக அமைகின்றார். மெல்லிய கிசுகிசுக்குரலில் காதுக்குள் உட்காரும் காதலியின் குரலாக வந்து விழும் சைந்தவி ஜி.வி.பிரகாஷ்குமாரின் விழிகளில் விழுந்து விட்ட நிரந்தர வானவில், இந்தப் பந்தம் திருமணத்தில் இணையவிருக்கின்றது என்பதும் பாடலை இன்னும் நெருக்கமாக இருத்திக் கேட்க முடிகின்றதோ என்னமோ


முதற்பாடலின் ஆக்கிரமிப்பில், திரையிசையில் ஜோடி சேர்ந்த நிஜத்திலும் கரம்பிடித்த இசை ஜோடிகளை மனதில் சுழலவிட்டேன். ஒரு பட்டியல் வந்தது.
ஏ.எம்.ராஜா என்ற பாடகரோடு மட்டும் ஜோடிக்குரலாக நின்றுவிடாமல் வாழ்க்கைத்துணையாகவும் வந்து வாய்த்த பிரபல பின்னணிப்பாடகி ஜிக்கி, ஏ.எம்.ராஜா இசையமைப்பாளராக வந்தபோதும் அவர் இசையில் பாடும் வரத்தைப் பெற்றிருக்கின்றார். அந்தப் பாடல்களை ஒரு பட்டியல் போடலாம். அப்படியொரு இனிமையான புகழ்பெற்ற பாட்டு கல்யாணப்பரிசு படத்தில் வரும் "துள்ளாத மனமும் துள்ளும்"



வி.குமார், மெல்லிசை மன்னர் காலத்தில் வந்த குறுநில மன்னர். இவரின் இசையமைப்பில் வந்த பாடல்கள் சொற்பம் என்றாலும் எல்லாமே கேட்கக் கேட்கச் சொர்க்கம். அப்படியொரு பாடல் தான் "இனங்களிலே என்ன இனம் பெண்ணினம்". வானொலி நிகழ்ச்சி செய்யும் போது நான் அதீத குஷியாக இருக்கிறேன் என்னும் சமயங்களில் வரும் பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்றாக இருக்கும். "நல்ல பெண்மணி" படத்தில் வரும் இந்தப் பாடலை கே.ஜே.ஜேசுதாசோடு இணைந்து பாடியிருப்பவர் வி.குமாரின் நிஜ வாழ்வின் ஜோடி பாடகி ஸ்வர்ணா. பாடகி ஸ்வர்ணா, ஜேசுதாஸ் தவிர எஸ்.பி.பாலசுப்ரமணியம் போன்ற பாடகர்களோடும் பாடியிருக்கின்றார். விசேஷமாகத் தன் கணவர் வி.குமாரின் இசையில் பல பாடல்களைப் பாடியிருக்கின்றார்.



இளையராஜாவின் சாயலைக் கொஞ்சம் கலந்து கொஞ்சமே இசையமைத்த இசையமைப்பாளர் பரணியின் படங்களில் "பார்வை ஒன்றே போதுமே" அவர் மீது ரசிகர்களின் பார்வையைப் படவைத்த படம். இந்தப் படம் கொடுத்த பெரும் புகழை வேறு எந்தப் படமும் அவருக்குக் கொடுக்கவில்லை. இத்தோடு செட்டில் ஆகிவிடலாம் என்றோ என்னவோ இதே படத்தில் பாடிய பாடகி சுமித்ராவை வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டுவிட்டார். இதோ அதிகம் அறியப்படாத அந்தப் பாடகி சுமித்ரா பாட்டை ஆரம்பிக்கத் தொடர்கிறார் கிருஷ்ணராஜ், பார்வை ஒன்றே போதுமே படத்திற்காக " நீ பார்த்துட்டுப் போனாலும்"



மேலே சொன்ன ஜோடிகளைத் தவிர, ஏ.ஆர்.ரஹ்மானின் கோரஸ் பாடகிகளில் ஒருவராக வலம்வந்த பெஃபிமணி இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவாவைக் கரம்பிடித்திருக்கின்றார்.

இதுவரை இசையமைப்பாளரின் இணைகள் பாடகிகளாக இனம் காணப்பட்ட பாடல்களைக் கொடுத்தேன். சற்று வித்யாசமாகத் தமிழ்திரையில் இரண்டு இசையமைப்பு ஜோடி வாழ்க்கையிலும் ஜோடி கட்டிய வகையில் ஃபைவ் ஸ்டார் படத்தில் இசையை வழங்கிய அனுராதா ஶ்ரீராம் அவரின் கணவர் பரசுராமோடு இணைந்து பரசுராம் ராதா என்று இசைமைத்திருந்தார்கள். அவர்களுக்கு முன்னமே இன்னொரு ஜோடி இருந்திருக்கின்றது அவர்கள் லதா - கண்ணன் என்று "60 நாள் 60 நிமிடம் எ" திரைப்படத்துக்கு இசையமைத்திருக்கின்றார்கள். அந்தப் படத்தின் பாடல்கள் அதிகம் பிரபலமாகவில்லை. இதோ அந்தப் பாடல்களைக் கேட்கும் தொடுப்பு

Monday, May 9, 2011

இயக்குனர் ஆர்.கே.செல்வமணி பேசுகிறார்

நான் இயங்கும் அவுஸ்திரேலியத் தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்காகச் சமீபத்தில் வானலையில் சந்தித்த மனிதர்களில் இயக்குனர் செல்வமணி மறக்கமுடியாதவர். பேட்டிக்கு அழைத்த கணமே எப்பவும் தயாரா இருக்கேன் என்று பண்பாகச் சொல்லிச் சொன்னது போல் பேட்டி நேரத்துக்குக் காத்திருந்தவர் அது நாள் வரை தன் மனதில் தேக்கியிருந்த நினைவுகளை வடிகாலாக்க இந்தப் பேட்டியைப் பயன்படுத்திக் கொண்டார். அந்த வகையில் என் ஊடக வாழ்வில் இன்னொரு மறக்கமுடியாத மனிதராகப் பதிந்து விட்டார் செல்வமணி. இது நாள் வரை நான் கேட்கவேண்டும் என்று நினைத்த எல்லாக் கேள்விகளையும் அவரிடம் முன்வைக்கக் கூடியதாக இருந்தது.


இந்தப் பேட்டிக்கான தொடர்பினை ஏற்படுத்தித் தந்த நண்பர் ரேகா ராகவனுக்கும் எனது இனிய நன்றியறிதல்கள்.

நேரடியாகக் கேட்க


Download பண்ணிக் கேட்க




கேள்வி- வணக்கம் செல்வமணி அவர்களே! ஆஸ்திரேலிய தமிழ் நேயர்கள் சார்பிலே உங்களை சந்திப்பதிலே மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.

பதில்- ரொம்ப நன்றி பிரபாகர். எனக்கும் வந்து உங்கள் மூலமாக ஆஸ்திரேலிய தமிழர்களோட பேசுறதுக்கு வாய்ப்புகள் கிடைச்சதுக்கு முதல்ல என்னோட நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோருக்கும் என்னுடைய வணக்கங்கள்.

கேள்வி- எண்பதுகளிலே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் தமிழ் சினிமாவிலே நுழைந்து சாதனைகள் படைத்த ஒரு காலகட்டத்திலே இயக்குநர் ஆபாவாணனைத் தொடர்ந்து உங்களுடைய வரவு பெருமளவிலே கவனிக்கப்பட்டது. ஆனால் அந்த வரவு என்பது இலகுவானதாக உங்களுக்கு அமையவில்லை. பெரும் போராட்டங்கள் சோதனைக்கு பிறகு தான் நீங்கள் ஒரு இயக்குநராக உங்களை நிலைநிறுத்த முடிந்தது என்பதைப் பற்றி அறிந்து கொண்டேன். அந்த ஆரம்பத்தைப் பற்றி சொல்லுங்களேன்?

பதில்- எல்லா ஆரம்பமுமே வந்து கஷ்டமானதாகவே இருக்கும். போராட்டத்திற்கப்புறம் தான் வந்து எந்த வெற்றியையும் அடைய முடியும். சினிமாத் துறையும் வந்து அதே மாதிரித் தான். ஏறக்குறைய வந்து சினிமாவில நமக்கு வந்து அளவற்ற புகழும் பெரும்பாலான பணமும் ஒரு நல்ல தொடர்பும் ஏற்பட்டால் இதில வந்து மற்ற துறையை விட இதில அதிகமான போராட்டம் இருக்கத் தான் செய்யும். ஏன்னா இதனோட வெற்றி வந்து நிறையப் பேரால விரும்பப்படுறதால போராட்டங்கள் எனக்கும் அதிகமாகத் தான் இருந்தது. ஆனால் அப்ப இயக்குநர் ஆபாவாணன் வந்து முதல்ல வந்து ஊமைவிழிகள் என்று ஒரு படத்தை எடுத்து அது வந்து இந்திய அளவில் மிகப் பிரமாண்டமாக பேசப்பட்டதுக்கு பிறகு தமிழ் சினிமாவில திரைப்படக் கல்லூரி மாணவர்களோட வரவும் அதனோட இருப்பும் வந்து கவனிக்கப்பட்டது. அந்தக் காலகட்டத்தில தான் 1988இல் தான் நான் வந்து உதவி இயக்குநராக வெளிவந்தேன். அப்பத் தான் வந்து திரைப்படக் கல்லூரியில என்னோட பட்டப்படிப்பை முடிச்சிட்டு அப்போ இயக்குநர் மணிவண்ணனின் உதவி இயக்குநராக இணைந்து கொண்டேன்.

கேள்வி- எந்த திரைப்டத்தில அவரோட வந்து இணைந்தீர்கள்?

பதில்- பாலைவன ரோஜாக்கள், விடிஞ்சா கல்யாணம் ரெண்டு படம் அப்ப வந்து அவரு இயக்கிட்டு இருந்தாரு. அப்ப அதில வந்து அவரோட உதவி இயக்குநராக சேர்ந்து பணிபுரியத் தொடங்கினேன். அப்ப வந்து உள்ளத்தில் நல்ல உள்ளம் என்ற படத்தில கூட அவரு இயக்குநராக இருந்தாரு. அந்தப் படத்தில வந்து திரு விஜயகாந்த் வந்து ஹீரோவாக நடிச்சாரு. அப்பத் தான் எனக்கும் விஜயகாந்த் சாருக்கும் ஒரு நல்ல நட்பு ஏற்பட்டிச்சு. அவர் என்னோட நட்புக்காக ஒரு வாய்ப்பளித்தாரு. ஒரு கதையை சொல்லச் சொன்னாரு. அவரே வந்து அப்ப ராவுத்தரும் அவரும் ரெண்டு பேரும் நண்பர்கள். அவங்களால தான் எனக்கு வந்து முதன்முதலில் வாய்ப்பு வந்திச்சு. அந்த வாய்ப்பு பற்றி
இப்ப நான் சொன்னால் ஒரு நாள் போயிடும். அந்த வாய்ப்பை எப்பிடி நான் பெற்றேன் என்டு சொன்னால் ஒரு நாள் போயிடும். அவ்வளவு கடினமான போராட்டத்தில தான் அந்த வாய்ப்பு எனக்கு கிடைச்சது.

கேள்வி- அதாவது அந்த புலன் விசாரணை திரைப்படத்தினுடைய கதையை நீங்கள் இப்ராகிம் ராவுத்தர் அவர்களிடம் கொடுக்கும் பொழுது அவருக்கும் அந்த நேரத்திலே விஜயகாந்த்அவர்களுக்கு மிகுந்த வேலைப்பளு இருந்த காரணத்தினால் நீங்கள் அதை ஒரு சித்திரக்கதை மாதிரியாக எழுதிக் கொடுத்ததாகக் கூட அறிந்தேன். அப்படியா?

பதில்- வேலைப்பளு அதிகமாக இருந்தது என்பது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் வந்து என் மேல இருந்த நம்பிக்கை வந்து குறைவாக இருந்தது என்பது தான் அதனோட முக்கியமான காரணம். ஏன்னா அப்ப வந்து விஜயகாந்த் சாருட்ட கதை சொல்ல வாறது வந்து ஆயிரக்கணக்கான பேரு. அந்த ஆயிரக்கணக்கான பேர்ல வந்து ஒருத்தரை தேர்ந்தெடுக்கிறது வந்து ரொம்ப கஷ்டமான காரியம். அப்ப எனக்கு வந்து எந்தவிதமான பின்புலமோ இல்லை. என்னைப் பார்க்கும் போது கூட என் மேல ஒரு நம்பிக்கை ஏற்படுற மாதிரி எந்த அமைப்பும் இல்லை. அப்ப வந்து என் மேல ஒரு பெரிய நம்பிக்கை இல்லை.
அப்ப நான் கதை சொல்லி அவங்களை ஒத்துக்க வைக்க முடியும் என்டுற நம்பிக்கை கூட எனக்கு போய்டுச்சு. அதுக்கப்புறம் ஒரு வருட போராட்டத்திற்கு பிறகு எல்லாரும் கதை சொல்றாங்கன்னு நாமளும் சொன்னா நல்லாயிருக்காது என்டு அடுத்த கட்டத்தில என்ன சொல்லலாம்னு யோசித்திட்டு தான் வந்து நான் வந்து அந்த சொல்லப்போற கதையை அப்படியே வந்து ஒரு காட்சிகளாக மாற்றி அந்த காட்சியை வந்து படங்களாக மாற்றி அந்தப் படத்தைவந்து வர்ணப்படமாக மாற்றி அதை போட்டோகிராப் பண்ணி ஒரு மாடல் தயார் பண்ணி அவங்களிட்ட கொடுத்தப்புறம் தான் அவங்களுக்கு என் மேல ஒரு நம்பிக்கை வந்தது. ஏன்னா முதலில நம்பிக்கை ஏற்படுறது தான் சினிமாவில வந்து ஒரு கஷ்டமான காரியம். அதைப் பண்ணிட்டமா அடுத்து வந்து நம்மட வேலை சீக்கிரமாக வந்து முடியும்.

கேள்வி- உண்மையை சொல்லப் போனால் இன்றைக்கு வந்து உங்களுக்கு பின்னால் வந்தவர்கள் பலர் வித்தியாசமான சினிமா என்று சொல்லும் பொழுது அதாவது செல்வமணி என்கிற இயக்குநருடைய பாணி என்பது அதாவது நடைமுறை வாழ்க்கையிலே அல்லது பரபரப்பான ஒரு செய்தியினை அப்படியே எடுத்து அதற்குப் பின்னால் ஒரு பெரும் திரைக்கதையை உருவாக்கி அவற்றை சினிமாவாக்குவது என்பது செல்வமணி அவர்கள் தமிழ் சினிமாவுக்கு அமைத்துக் கொடுத்த புதிய பாணி என்று நான் சொல்வேன் ஏனென்றால் புலன்விசாரணை என்ற திரைப்படம் வந்த பொழுது அப்படியே அந்த ஆட்டோ சங்கருடைய கதையை நீங்கள் ஒரு பகுதியாக எடுத்துக் கொண்டு அதற்கொரு நல்ல திரைக்கதையை அமைத்து அந்தப் படத்தை உருவாக்கியிருந்தீர்கள்.
அதற்குப் பின்னால் எத்தனையோ இளம் இயக்குநர்கள் அல்லது இப்பொழுது இருக்கின்ற
சங்கர் போன்ற இயக்குநர்கள் சமுதாயப் பிரச்சினைகளை வைத்து எடுக்கின்றார்கள். ஆனால் அவர்களுக்கெல்லாம் ஒரு முன்னோடியாக நீங்கள் எண்பதுகளின் இறுதியிலே வந்திருந்தீர்கள். இப்படியான ஒரு பாணியினை அன்றைய காலகட்டத்திலே குறிப்பாக தமிழ் சினிமா என்பது கிராமியம் சார்ந்த அல்லது நகரத்திலும் ஒரு பழகிப் போன கதையம்சம் என்ற ஓட்டத்தோடு இருந்த ரசிகனுக்கு இப்படியான ஒரு வித்தியாசமான ஒரு பாணியை அறிமுகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் எப்படி உங்களுக்கு வந்தது?

பதில்- நான் முதன்முதலாக இயக்குநராக வரணும் என்று முடிவெடுத்தப் பிறகு எனக்கு கூட வந்து வெற்றின்னா எல்லாருக்கும் வந்து நிரந்தரமான ஒன்றில்லை. என்னை விட சாதனை படைச்சவங்க ஶ்ரீதர் பாலசந்தர் பாரதிராஜா பாக்கியராஜ் இது மாதிரி ஒவ்வொரு காலகட்டத்திலையும் ஒவ்வொரு இயக்குநர்கள் சாதனை பண்ணிட்டே தான் இருக்காங்க. இதை மாதிரி ஆயிரக்கணக்கான ஏறக்குறைய ஐயாயிரம் இயக்குநர்கள்தமிழ் சினிமாவில இருக்காங்க. ஆனால் வந்து ஒரு ஐம்பது இயக்குநர்கள் தான் தமிழ் சினிமாவில வந்து இன்னைக்கும் வந்து நினைவில நிறுத்தப்படுறாங்க. அப்ப நான் முதல்ல படம் பண்ணனும் என்று நினைச்சவுடனேயே என்னோட முத்திரை வந்து இருக்கணும். படம் பண்றதே வெற்றி பெறுவதில இருக்கிறதை விட என்னோட முத்திரை வந்து இருக்கணும் என்டு நான் முடிவு பண்ணினேன்.
அப்ப எது மாதிரியான படங்களை வந்து நாம இயக்கலாம் என்டு இருக்கிறப்போ தான் பொதுவாக நிறைய விசயங்களை நாம தேர்ந்தெடுத்தோம். அப்ப வந்து நகர்ப்புறம் அது சம்பந்தமான திரைப்படங்களை வந்து அதாவது மத்திய தர வர்க்கத்திற்கான குடும்பத்திற்குன்டான கஷ்டங்கள் அதனுடைய கலாசார பிண்ணனி உறவுமுறை இதெல்லாம் வந்து திரு பாலசந்தர் அவரால சொல்லப்பட்டது. அதற்கப்புறம் யார் படம் பண்ணினாலும் இது பாலசந்தர் படம் மாதிரி இருக்குன்னு சொல்வாங்க. பாலசந்தர் படம் பண்ணினால் அது வேற யாரோ படம்ன்னு சொல்வாங்க. அப்புறம் காதல். காதல் படங்களை ஶ்ரீதர் படம் என்பாங்க. அதைப் போல வந்து பாரதிராஜா வந்து தமிழ் கிராமப்புற இல்லை தமிழ் நாட்டோட மண் வாசனையான படங்களை வந்து தேர்ந்தெடுத்து இல்ல அதற்கான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து அதை மாதிரியான படங்களை டைரக்ட் பண்ணுவாரு. அப்ப யார் படம் பண்ணினாலும் வந்து அது பாரதிராஜா படம் மாதிரியிருக்கு அப்பிடின்னு சொல்றது மாதிரியான ஒரு நிலையை உருவாக்கினாரு.
அப்ப நான் வந்து என்ன மாதிரியான படங்களை பண்ணலாம் அப்பிடின்னு நான் முடிவு பண்ணினாப்புறம் இல்ல நானே எனக்குள்ளே கேள்விகளை கேட்ட பொழுது அப்ப எது இதுவரைக்கும் தமிழ் சினிமாவில இல்ல இந்திய சினிமாவில இல்லாத ஒரு பாணியைக் கையாளணும். அதை வந்து தெரிவு செய்யணும்னா நிறைய ஏறக்குறைய ஒரு வருடமாக இருந்து யோசித்து வாழ்வியலில சமூகத்தில வந்து நாம கதைகளை உருவாக்கிறதை விட
சுற்றி நடக்கிற விசயங்களை நாம கதைகளாக மாற்றலாம். அது வந்து மக்களால பெரிதாக விரும்பப்படும். அப்பிடின்னு நான் முடிவு பண்ணினாப்புறம் தான் கதைகளை தேர்ந்தெடுத்தேன். நம்மளை சுற்றி நடக்கிற சிக்கல்கள் இல்லா நல்ல விஷயங்கள். கெட்ட விஷயங்கள். நல்ல விஷயங்களில இருந்து நல்லதை சொல்றது. கெட்ட விஷயங்களில இருந்து என்ன மாதிரி கெட்டது நடக்குது அதை எப்பிடி வந்து அதை எதிர்கொள்ளனும் என்ற விஷயத்தை வந்து சொல்றது. இது
மாதிரி தேர்ந்தெடுத்து நான் வந்து current affairs என்று சொல்றது ஒன்னு. அதை நான் வந்து தேர்ந்தெடுத்தேன்.

கேள்வி- உண்மையிலேயே அந்த புலன்விசாரணை என்பதின் அந்த திரைப்படத்தினுடைய வெற்றி வந்து ஒரு பரபரப்பான வெற்றி என்பது உங்களுக்கும் அல்லது எங்கள் மீதான நீங்கள் எடுத்துக் கொண்ட பாதையின் மீதான ஒரு நம்பிக்கையை ஒரு வலுவாக ஏற்படுத்தியிருக்கும் இல்லையா?
ஆமாம்

கேள்வி - அந்தப் படத்திற்கு பின்னர் உங்களுக்கு கிடைத்த ஒரு பெரும் பொறுப்பு அன்றைய காலகட்டத்திலே முன்னணி நட்சத்திரமாக இருக்க கூடிய விஜயகாந்த் அவர்களுடைய நூறாவது திரைப்படம் கேப்டன் பிரபாகரன். அந்தத் திரைப்படத்தை இயக்கக் கூடிய பெரும் வாய்ப்பு. அந்த வாய்ப்பு கிடைத்த அனுபவம். அதைப் பற்றி சொல்லுங்களேன்?

பதில்- தமிழ் சினிமாவில மட்டுமல்ல வாழ்க்கையில வந்தும் முதல் வெற்றி தான் ரொம்ப கஷ்டம். முதல்ல பண்ணனும்கிறது தான் ரொம்ப கஷ்டம். அதுக்குப் பிறகு அந்த வெற்றி நிறைய வாய்ப்புகளை உருவாக்கும். நிறைய பணத்தையும் உருவாக்கும். அதைப் போலவே வந்து அந்த புலன்விசாரணையின் வெற்றி தான் எனக்கு வந்து ரொம்ப கஷ்டமான ஒரு வேலையாக இருந்திச்சு. அதுக்கப்புறம் அந்த ஒரு வெற்றி வந்து உடனே மிகப் பெரிய ரசிகர்களைத் தந்தது. எந்த உச்ச நட்சத்திரமாக இருந்தாலும் வந்து அன்னைக்கு தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில இருக்கிற எல்லா நட்சத்திரமும் வந்து என்னோட படம் பண்ணனும் என்று விருப்பப்பட்டாங்க. அதைப் போல வந்து மாபெரும் வெற்றிப் படமாக மட்டும் அல்லாமல் ஒரு புதுசான ஒரு பாதையை அந்த படம் உருவாக்கிச்சு. அப்ப நிறையப் பேர் வந்து நிறைய இயக்குநர்கள் நிறைய நட்சத்திரங்கள் வந்து என்னோட படம் பண்ணணும்னு விருப்பப்பட்டாங்க. ஆனால் நான் வந்து விஜயகாந்த் சாருக்கு தான் முதல் உரிமை கொடுத்தேன். ஏன்னா அவர் தான் வந்து ஒருத்தருக்குமே தெரியாத செல்வமணியை தமிழ்நாட்டுக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் உலகத்தில இருக்கிற அனைத்து தமிழர்களுக்கும் வந்து கொண்டு போய் சேர்க்கிறதுக்கு ஒரு காரணியாக இருந்தாரு.

அதனால அவர் படத்தை டைரக்ட் பண்றதுன்னு நான் முடிவெடுத்தப் பிறகு அப்ப வந்து என்னோட ரெண்டாவது படமும் பேமஸ்ஸா இருந்தது. அதுக்குப் பிறகு வந்து நூறாவது படமாக பண்ணலாம் அப்பிடின்னு முடிவு அவர் வந்து பண்ணினதுக்கப்புறம் தான் நான் அந்தப் படத்தை செலக்ட் பண்ணி கேப்டன் பிரபாகரனை இயக்குவதற்கு வந்து அந்த நன்றியுணர்ச்சி தான் காரணமாக இருந்திச்சு. அன்றைக்கு வந்து பெரிய படம் பண்ணணும்னா அதுக்கு வந்து கூட்டாக இருந்தால் தான் பண்ணமுடியும் என்ற நிலை .இருந்தது தான் நான் கேப்டன் பிரபாகரனை உருவாவதற்கு டைரக்ட் பண்ணுறதுக்கு ஒரு காரணமாக இருந்திச்சு.

கேள்வி- பொதுவாக இந்த நூறாவது படம் என்பது பல நடிகர்களுக்கு பெரும் வெற்றியை கொடுக்கவில்லை. ஒரு சில நடிகர்களுக்குத் தான் ஒரு தனித்துவமான பெரும் வெற்றியை கொடுத்திருக்கிறது. அந்த வகையிலே விஜயகாந்த்திற்கு கிடைத்த அந்த படம் என்பது ஒரு பெரும் வெற்றிப் படமாகவும் அமைந்தது இல்லையா?

பதில்- ஆமாமாம். யாருக்குமே வந்து நூறாவது படம் வந்து வெற்றிப் படமாக அமைந்ததில்லை. தமிழ் நட்சத்திரத்திற்கு மட்டுமல்ல இந்தியாவில இருக்கிற எந்த ஆர்ட்டிஸ்க்குமே நூறாவது படம் வெற்றியை தந்ததில்லை. ஏன்னா நூறாவது படம் வந்து பெருசா எதிர்பார்க்கப்படறதால பெருசா வந்து அந்த எதிர்பார்ப்பிற்கு யாருமே ஈடுசெய்றேல்ல. குறிப்பாக சொல்லனும்னா எனக்கு தெரிஞ்சு எல்லா படங்களையும்; அப்பிடி சொல்லுற மாதிரி தான் இருந்திச்சு. எனக்கு தெரிஞ்சு எல்லா நட்சத்திரத்தோட யாரோட நூறாவது படமும் வெற்றிப் படமாக அமைஞ்சதில்லை. ஆனால் முதல் நூறாவது வெற்றிப் படமாக அமைந்ததன்னா எங்களோட காம்பினேசன்ல அமைந்த கேப்டன் பிரபாகரனை முழு உறுதியாக என்னால சொல்ல முடியும். அதுக்கு வந்து தமிழ் ரசிகர்களுக்கும் விஜயகாந்த் சாருக்கும் இப்ராகிம் ராவுத்தருக்கும் நன்றியை இந்த நேரத்தில சொல்றதுக்கு கடமைப்பட்டிருக்கேன்.

கேள்வி- உண்மையிலேயே எண்பதுகளிலே ஒரு தங்கப் புதையலாக இருந்தவர் இசைஞானி இளையராஜா. அதாவது அவரிடம் இருந்து ஒரு ஐந்து பாடல்களை எடுத்துக் கொண்டாலே அந்தப் பாடல்களைச் சுற்றி ஒரு திரைக்கதை அமைத்து பெரும் வெள்ளிவிழா கொண்டாடிய தமிழ் சினிமா உலகிலே அவரோடு இணைந்து நீங்கள் முதல் ரெண்டு படங்களிலே பணியாற்றிய போதும் கூட பாடல்கள் சிறப்பாக வந்தாலும் கூட அந்த முதல் படத்திலே மூன்று பாடல்கள் என்று நினைக்கிறேன். இரண்டாவது படத்திலே மூன்று பாடல்கள் என்று (இரண்டு படத்திலுமே இரண்டு பாடல்கள் தான் என்கிறார்) அதாவது காட்சியாக படமாக்கப்பட்டது இல்லையா?

பதில்- ஆமாம். அவரு கூட படம் பார்க்கிறதுக்கு முன்னாடி வந்து சொன்னாரு. செல்வமணி பாட்டே இல்லாமல் மியூசிக் பண்றதால என்ன லாபம் என்டாரு. வேற ஏதாச்சும் வைச்சு பண்ணலாமே என்று கேட்டார் நான் சொன்னேன், இந்தப் படத்திற்கு வந்து பாட்டு அவசியமில்லை சார், இந்தப் படத்திற்கு பின்னணி இசை தான் அற்புதமாக தேவைப்படுற விஷயம். அந்த இசையை வந்து சார் நீங்க சரியாக கொடுக்க முடியும் என்பது என்னுடைய நம்பிக்கை. அதனால வந்து நீங்க இந்த படத்திற்கு இசையமையுங்க என்று ஏறக்குறைய நான் வற்புறுத்தி தான் சம்மதிக்க வைச்சேன்.

கேள்வி- உண்மையை சொல்லப் போனால் இசைஞானி இளையராஜாவினுடைய இன்னுமொரு பரிமாணம் தமிழ் சினிமா மட்டுமன்றி இந்திய சினிமாவிலேயே பின்ணணி இசை என்பதற்கு தனி இலக்கணம் வகித்தவர் இசைஞானி இளையராஜா. அந்த பின்ணணி இசைக்கான ஒரு களத்தை இந்த இரண்டு படங்களையும் நீங்கள் கொடுத்து அதாவது அந்த படங்கள் வந்த பொழுது அதனுடைய பிரதிபலிப்பு எப்படி இருந்தது?
அதாவது அந்தப் படங்களை முழுமையாக நீங்கள் இயக்கிய பின்னர் அந்த பின்னணி இசையை கோர்த்த பொழுது அவர் தன்னுடைய கருத்தை வெளியிட்டு இருந்தாரா?

பதில்- ஆமாம். படம் பார்த்திட்டு வந்து அவர் சொன்னாரு. பாட்டில்லாம எடுக்கிறீயே ஏன்னா இளையராஜா பாட்டு இருந்திச்சுன்னா அதாவது இளையராஜா பாட்டு ஐந்திருந்திச்சுன்னா படம் ஓடிடும் நிலையில தான் தமிழ் சினிமா இருந்தது. அவர் கூட என்ன இது புதுசா ஒரு பையன் வந்திருக்கான் அவருக்கு கூட நம்பிக்கை இல்லாமல் தான் இருந்திருக்கும். படம் பார்த்திட்டு சொன்னாரு. செல்வமணி வந்து மிகப் பெரிய இயக்குநராக வர்றதுக்கான சாத்தியம் உன்னோட முதல் படத்திலேயே தெரியுது. வாழ்த்துக்கள். பாட்டில்லாட்டி இந்தப் படம் எப்பிடி இருக்கும்னு நினைச்சேன். இந்த ரெண்டு பாட்டில்லாட்டிக் கூட இந்தப் படம் ஓடக் கூடிய சாத்தியத்தை நீங்க ஏற்படுத்தியிருக்கீங்க என்று மனம் திறந்து அவர் பாராட்டினாரு.

கேள்வி- மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. அதன் பின்னர் அதிரடியாக இந்த இரண்டு படங்களிலையும் இருந்து விலகி முழுமையான புதுமுகம் என்று சொல்வதை விட பிரசாந்த் ஏற்கனவே அறிமுகமாகி இருந்தாலும் கூட ஒரு இளம் நாயகன். ரோஜா மற்றும் நாயகர்கள் அந்தப் படத்திலே ஒரு அறிமுகமாக வந்தவர்கள். இவர்களை வைத்து ஒரு இளமை ததும்புகின்ற ஒரு திரைப்படம் முழுமையான காதல் கதை. அந்தக் காதல் கதையோடு அனைத்தும் சூப்பர் ஹிட் பாடல்கள். இவற்றை வைத்து செம்பருத்தி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தீர்கள். இப்படி ஒரு அதாவது பெரும் நட்சத்திரத்தை வைத்து படம் பண்ணக் கூடிய அளவிற்கு உங்களுக்கு ஒரு வலிமையும் மற்றவர்களுக்கு உங்கள் மீது ஒரு நம்பிக்கையும் வந்த காலகட்டத்திலே இப்படி இளம் நடிகர்களை வைத்து ஒரு படம் பண்ண வேண்டும் என்ற அந்த நோக்கம் எப்படி வந்தது?

பதில்- நான் டைரக்டராக வர்றதுக்கு முன்னாடி வந்து அரவிந்தராஜ்ன்னு என்னோட சீனியர் அவர் வந்து பெரிய ஆர்ட்டிட்ஸை வைச்சு படம் பண்ணி அவர மாதிரி பல இயக்குநர்கள் சீனியர் ஆர்ட்டிட்ஸை வைச்சு படம் பண்ணி அப்புறமாக வந்து ஒரு காலகட்டத்திற்கு பிறகு மறைந்து போயிடுறாங்க அல்லது காணாமல் போயிடுறாங்க. இத நான் ஏன் சொல்றேன்னா
அவங்க வந்து பெரிய நட்சத்திரத்தை வைச்சுத் தான் பண்றாங்க. அப்ப அந்த வெற்றி வந்து ஏன் ஒரு நட்சத்திரத்தை மட்டும் போய் சேர்ந்திடுது ஏன் ஒரு இயக்குநரை போய் சேருவதில்லை. அப்ப வந்து ஒரு தோல்விப் படமோ இல்ல படங்கள் இல்லாத காலகட்டத்திலே அவங்க மறந்திடுறாங்க இல்லை மறக்கடிக்கப்படுறாங்க. அப்பிடிங்கிறது எனக்கு தெரிஞ்ச பிறகு தான் வந்து நான் ரெண்டாவது படம் கேப்டன் பிரபாகரன் பண்ண பிறகு அந்த படமும் மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைஞ்ச பிறகு ஏறக்குறைய எல்லாருமே என்னோட படம் பண்ணனும் என்றுஆசைப்பட்ட காலகட்டத்திலே
நான் வந்து எந்தப் படமும் இப்ப பண்ணக் கூடாது. அடுத்து நான் வந்து எந்த பிரபல நடிகர்களும் இல்லாம புதுமுகங்களோட படம் பண்ணனும். அப்பிடின்னு வந்து முடிவு பண்ணி நாம ஒரு வெற்றிப் படம் பண்ணும் போது ஐம்பது பர்சண்ட் நமக்கு வந்து சேரும். அதனால வந்து அப்பிடி பண்ண முடிவு பண்ணினேன்.
ஆனால் அதில கூட வந்து ஆபத்து கூட இருக்கு. ஒருவேளை வந்து அந்தப் படம் வெற்றிப் படமாக அமையலைன்னா அன்றைய காலகட்டத்திலே மறக்கடிக்கப்பட்டுக் கூட இருக்கு. இருந்தாலும் பரவாயில்லை. நம்மளால வெற்றி பெற முடியும்னு என்று சொல்லி அன்னைக்கு வந்து பிரசாந்த் புதிய நட்சத்திரமாக இருந்தாலும் கூட நான் அவரை வைச்சு படம் பண்ணும் போது அவர் படம் ஆரம்பிக்கக் கூட இல்லை. வைகாசி பொறந்தாச்சு படத்தில நடிச்சிட்டு இருக்காரு அது ரிலீஸாகக் கூட இல்ல. அவர் வந்து எனக்கொரு greeting அனுப்பி வைச்சாரு. அதில வந்து அழகான ஒரு குழந்தைத்தனமான முகம்
அவரிட்ட இருந்தது. அதனால வந்து அவரை choose பண்ணினன். அப்புறம் வந்து ரோஜாக்கு முதல்ல ஏறக்குறைய ஒரு இருபது இருபத்தைந்து ஹீரோயின்ஸை வைத்து shoot பண்ணினேன். ஷீட் பண்ணி அவங்க யாருமே சரியில்லாத போது தான் ஒரு பத்துப் பதினைஞ்சு நாள் ஷீட் பண்ணினாப்புறம் தான் ரோஜாவ வந்து செலக்ட் பண்ணினேன். அப்போ தேடி தான் அந்த படத்தை வந்து எல்லாருமே புதுசா வரணும்னு ஆரம்பிச்சு அந்தப் படம் வந்து ஒரு வெற்றிப் படமாக அமைஞ்சதால தான் இன்னைக்கு வந்து ஏறக்குறைய பதினைஞ்சு வருசமானாக் கூட தமிழ் சினிமாவில வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வந்தாக் கூட இன்னைக்கும் தமிழ் சினிமாவில் எனக்கு பேர் இருக்கிறதுக்கு காரணம் வந்து அன்னைக்கு எடுத்த முடிவு தான் ஒரு மிகப் பெரிய காரணம்.

கேள்வி- அந்தப் படத்திலே இசைஞானி இளையராஜா அவர்களுடைய பாடல்கள் தனித்துவமாக கவனிக்கப்பட்டதற்கு ஏதாவது ஒரு பின்னணி இருந்ததா?

பதில்- நிச்சயமாக. நிச்சயமாக இருந்தது. அவர் ஏற்கனவே வந்து செல்வமணி உனக்கு வந்து என்னோட வால்யூ தெரியலை. நீ வந்து பாட்டே இல்லாம படம் எடுத்தாய். இப்ப பாரு இந்தப் படத்திலே ஒன்பது பாடல் வைச்சிருக்கேன். இப்ப பாரு இளையராஜா இளையராஜா என்டு சொல்ல வைக்கிறேன்னு சொல்ல வைக்கிறேன்னு சொல்லி அவர் சொல்லிலே அதை ஒரு பாட்டாக வைச்சு சொன்னாரு. ஆனால் இளையராஜா வந்து உலகத்திலேயே மிகப் பெரிய இசையமைப்பாளர்னு ஏற்றுக்கிட்டேன்னா இந்த ஒன்பது பாடல்களையும் காலை 6.45க்கு போட்டு start பண்ணினோம்;. எட்டு மணிக்கு வேற படத்தோட டியூன்ஸ்ல அவரு இருந்தாரு. அங்க அவங்களுக்கு ஒன்பது மணிக்கு பணி ஆரம்பிக்கும். அதுக்கு முன்னாடி எனக்கு டியூன்ஸ் கரெக்ட் பண்ணிட்டு போகணும். இந்த ஒன்பது பாட்டும் குறைஞ்சபட்சம் ஒரு முக்கால் மணி நேரம் ஒரு மணிக்குள்ள கொடுத்திட்டு அவரு டிபன் சாப்பிட்டு வேலைக்கு போனாரு. இந்த உலகத்தை கலக்கிய இந்த ஒன்பது பாட்டுமே ஒரு முக்கால் மணி நேரத்தில தான் டியூன் செய்யப்பட்டதுன்னா மிகப் பெரிய என்னைப் பொறுத்தவரைக்கும் அது ஒரு உலக சாதனை தான்.

கேள்வி- கண்டிப்பாக. இப்போதெல்லாம் நாட்கணக்கில் எல்லாம் எடுக்கக் கூடிய பாடல் பதிவுகளென்பது...
இடையிலே குறுக்கிட்டு சொல்கிறார்...(நாட்கணக்கில் இல்ல வாரக்கணக்கில மாதக்கணக்கில இந்த கம்போஸ் வந்து அங்க போறாங்க இங்க போறாங்க வெளிநாடு போறாங்க ஊட்டி போறாங்க காஷ்மீர்
போறாங்க இல்ல தாய்லாந்து போறாங்க அமெரிக்கா போறாங்க எங்கேயும் போகாமல் பிரசாத் ரெக்காடிங் தியேட்டர்ல ஒரு சின்ன ரூம்ல எனக்கு வந்து ரெக்கார்ட் பண்ணிக் கொடுத்தாங்க.)

கேள்வி - நிச்சயமாக உண்மையிலே ஒரு சாதனை. அந்தப் படத்திற்கு பிறகு ஒரு சின்ன தேக்கம்.
பின்னர் மக்களாட்சி என்றொரு திரைப்படம். அந்த திரைப்படத்திலே வந்திருந்த கதாபாத்திரங்கள் எல்லாம் சமகாலத்திலே இருக்கக் கூடிய அரசியல்வாதிகள் அவர்களுடைய அந்த பரிமாணங்களாக இருந்தன. அந்தப் படம் ஒரு வெற்றிப் படமாக அமைந்தது உங்களுக்கு. ஆனால் அந்தப் படத்தை எடுத்ததன் மூலம் நீங்கள் பல சவால்களையும் சோதனைகளையும் சந்திருத்திருப்பீர்கள் என நினைக்கிறேன் அப்படியா?

பதில்- நிச்சயமாக. நிச்சயமாக வந்து ஒரு தமிழ்நாட்டிலே இல்ல இந்தியாவிலே வந்து ஒரு எழுதப்படாத சட்டம் இருக்கு. பொய்யை சொல்லி வாழலாம். உண்மையை சொல்லி வாழ முடியாது. இது தான் தமிழ்நாட்டினுடைய உலகத்திலையும் இருக்கலாம். ஆனால் இந்தியாவிலே கொஞ்சம் அதிகமாக இருக்கு. உண்மையைச் சொன்னால் யாருக்கும் பிடிக்காது. அப்ப நான் வந்து குற்றப்பிரிவு என்று எடுத்த பிறகு அது வந்து ஈழத் தமிழரை அவர்களோட மரணத்தை அந்த பின்ணணியை வைச்சு எடுத்தது தான் வந்து நான் பண்ணின தவறுன்னு நினைக்கிறேன். அது தவறு இல்ல. அது வந்து உண்மையை சொன்னதற்காக ஏற்பட்ட தவறு. பொய்யாக சொல்லி வாழ்ந்திட்டுப் போகலாம். உண்மையை சொல்ல முடியாது.
அப்புறமாக வந்து மக்களாட்சி வந்து ஏறக்குறைய தமிழ்நாட்டிலே நிலவின எல்லா உண்மைகளுக்கும் அது வந்து மிகப் பெரிய ஒரு வெளிச்சம் போட்டுக் காட்டிச்சு. அதனால என் சொந்த வாழ்க்கையில திரைப்படத்துறையிலே நிறைய சவால்களை நிறைய போராட்டங்களை எதிர்கொண்டேன். இருந்தாலும் நான் ஒரு படைப்பாளியாக வந்து அந்த
போராட்டங்களை எடுத்துக் கொண்டேன்.


கேள்வி- இந்த குற்றப்பத்திரிகை திரைப்படம் அந்த திரைப்படத்தை எடுத்து அதன் மூலம்
கிடைத்த சோதனைகளை அந்த திரைப்படத்தை எடுத்து அந்த திரைப்படத்தினுடைய வெளியீடு தாமதம் ஏற்பட்டது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு மேலாக. அப்படியான ஒரு சோதனைக்கு பின்னர் நீங்கள் உங்களுடைய பாணியினை மாற்றிக் கொண்டீர்களா? ஏனென்றால் இடையிலே சில படங்கள் வந்தன. ராஜஸ்தான் திரைப்படம் அது கூட நடைமுறைப் பிரச்சினை என்றாலும் கூட சில திரைப்படங்கள் வந்த பொழுது அந்த பாணி
என்பது செல்வமணி என்ற அந்த இயக்குநருடைய தனி முத்திரையாக இல்லாமல் போனதற்கு இப்படியான ஒரு படத்தினுடைய சோதனை கூட காரணமாக இருந்திருக்குமா?

பதில்- நிச்சயமாக இருந்திருக்கும். ஒரு குற்றப்பத்திரிகைக்கும் மக்களாட்சிக்கும் பின்னால் ஒரு உண்மை தெரிஞ்சுது. தமிழ்நாட்டிலே உண்மை சொல்லி வாழ முடியாது என்று தெரிஞ்சுது. அப்ப உண்மை சொல்றது வந்து கொஞ்சம் குறைச்சிட்டேன். ராஜஸ்தானில கூட ஒரு உண்மை இருக்கு. ஆனால் உண்மையை விட பொய்யும் கற்பனையுமாக கலந்து அந்த படம் பண்ணினதால வந்து என்னோட நான் தேர்ந்தெடுத்த பாதையில இருந்து நானே விலகிட்டேன். எது மேல வந்து உங்களுக்கு நம்பிக்கையும் வந்து ஆதிக்கமும் இருக்குமோ அதில படம் பண்ணினால் தான் வந்து உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களுக்கே நம்பிக்கையில்லாத ஒரு விசயத்தில வந்து படம் பண்ணும் போது வெற்றி வர்றதுக்கு கொஞ்சம் கஷ்டம். அதனால வந்து என்னோட வெற்றிக்கும் தோல்விக்கும் வந்து இது தான் முழுமையான காரணம் என்டு நான் நினைக்கிறேன்.

கேள்வி- இன்றைக்கு வந்து உங்களுடைய பாணியை அடியொற்றி பல இயக்குநர்கள் வெற்றியை கண்டிருக்கிறார்கள். கண்டுவருகிறார்கள். மீண்டும் அந்த செல்வமணியை நாம் எப்பொழுது பார்க்கப் போகின்றோம்?

பதில்- அதற்கான முயற்சியைத் தான் இப்ப வந்து எடுத்திட்டு இருக்கேன். புதிய படம் புதிய பாணியிலான இந்தப் படமும் வந்து புதிய பாணியான ஆறு மாசம் யோசிச்சு இப்ப
தொடங்க இருக்கிறேன். அது வந்து பெப்ரவரி மாத என்ட்டில வந்து மார்ச்சில சூட்டிங் போறதா பிளான் பண்ணியிருக்கோம். இந்தப் படம் வந்து தமிழ் சினிமாவில இன்னொரு வாசலைத் திறந்து விடும். நான் தான் வந்து தமிழ் சினிமாவில பிரமாண்டத்தோட வாசலை திறந்து வைச்ச ஒரு இயக்குநர். அதைப் போல இப்ப ஒரு வாசலைத் திறக்க இருக்கிறேன். இந்த வாசல் வந்து தமிழ் சினிமாவில வந்து இன்னொரு புதிய பரிமாணத்தை தமிழ் சினிமாவிற்கு திறந்து விடப் போகும் என்டு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. அந்த் படம் வந்து மிக விரைவிலே தொடங்க இருக்கிறேன். அது வந்து ஒரு short time பிலிமாகக் கூட இருக்கும் அந்த பிலிம்.


கேள்வி- அந்த வாய்ப்புக்காக அந்த படத்தை பார்க்கக் கூடிய ஓர் ஆவலோடு நானும் ஓர் ரசிகனாக இங்கே காத்திருக்கிகேன். நிறைவாக எமது ஈழத் தமிழர்களுடைய போராட்டங்கள் அவர்களுக்காக குரல் கொடுத்தவர் என்ற வகையிலே இன்னுமொரு பரிமாணம். செல்வமணி என்கின்ற ஒரு மனிதநேயமிக்க மனிதரை நாம் பார்க்கக் கூடியதாக இருந்தது. பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. இன்றைய நிலையிலே அரசியல் அனாதைகளாக இருக்கக் கூடிய இந்த ஈழத் தமிழினம் பற்றி உங்களுடைய பார்வை என்ன?

பதில்- இது வந்து ஒரு கடினமான கேள்வி. இன்றைய காலகட்டத்தில வந்து ஒரு கடினமான கேள்வி. இருந்தாலும் இப்ப வந்து ஒரு தமிழீழத்திலே பிறந்த ஒரு சக்தியாக இல்ல ஒரு மனிதனாக ஒரு தமிழனாக பதில் சொல்ல வேண்டிய ஒரு காலகட்டம் இருக்கு.
எந்த சுதந்திரமும் பிறரால் வாங்கிக் கொடுக்கபடுறது இல்ல. அதாவது இன்னைக்கு இருக்கிற தமிழ் ஈழத் தமிழருக்கு ஈழச் சகோதரர்களுக்கு நான் ஒரேயொரு உண்மையைத் தான் சொல்ல விரும்புறேன். அதாவது எந்த சுதந்திரமும் பிறரால் பெற்றுத் தரப்படுறது
இல்ல. அந்த பிறரை நம்பினதால தான் வந்த இழப்பு தான் சோதனை தான் சுதந்திரத்திற்கும் ஈழப் போராட்டத்திற்கும் வந்த பின்னடைவு. இன்னொருத்தரை நம்பும் போது அவங்களோட ஆளுமை கூட வந்து அவங்க உதவும் போது வந்து அவங்க என்ன நினைக்கிறாங்களோ அதே மாதிரிப் பண்ண வேண்டிய சூழ்நிலை. உலகத்தில பார்தீங்கன்னா எல்லாப் போராட்டமும் சிறிலங்காவில இருந்து இல்ல இந்தியாவில இருந்து
சுதந்திரத்தை அடைஞ்ச எல்லா நாடுகளுமே அந்த நாட்டு மக்களால அந்த நாட்டு சக்திகளால வந்து அந்த சுதந்திரம் அடையப்பட்டிருக்கு. இன்னைக்கு ஈழச் சுதந்திரம் வந்து பெரும்பாலும் வந்து அது இந்தியாவினை சார்ந்திருக்கிறதால அதனோட இந்தியாவினை சார்ந்திருக்கு. தோல்வியும் இந்தியாவினை சார்ந்ததாக அமைஞ்சிட்டுது. வெற்றியும் இந்தியாவை சார்ந்து அமையுறதால தோல்வியும் குரோதமும் இந்தியாவினை சார்ந்ததாக அமைஞ்சிட்டுது. அது தான் வந்து இன்னைக்கு இந்த ஈழச் சுதந்திரம் வந்து பின்னடைவை எதிர்நோக்கியதற்கு மிகப் பெரிய காரணம். இந்தியாவை நம்பியதால தான். இந்திய அரசாங்கத்திடம் இருந்து மாறுதலான சாத்வீகமானதை மட்டும் எடுத்துகிட்டு சுதந்திரத்தை இவங்களே வந்து எடுத்திருந்தால் இன்னைக்கு இந்த பின்னடைவு ஏற்பட்டிருக்காதுங்கிறது என்னுடைய கருத்து.
இன்னைக்கு அதை விட மிகப் பெரிய சோதனை, இப்ப வந்து அமெரிக்காவுக்கு போயிருந்து மற்ற நண்பர்களுடன் பேசும் பொழுது அன்னைக்கு வந்து ஏறக்குறைய நிறைய வெளிநாடுகளுக்கு போகும் போது எல்லா ஈழத் தமிழர்களுக்காக
பகுதி நேர வேலையாகவே வைச்சிட்டு இருப்பேன். அப்ப போகும் போது எனக்கு தெரிஞ்சது வந்து ஒரே தலைமை. ஒரே உணர்வு. ஒரே இலக்கு. ஈழத் தமிழர்களோட ஒரு பிரிவில தான் நான் அன்னைக்கு வந்து உட்கார்ந்தேன். ஆனால் இன்னைக்குப் போகும் போது ஒரு வெட்ககரமான ஒரு அவமானகரமான ஒரு உண்மையை நான் சந்திக்க வேண்டியிருந்தது. இப்ப போகும் போது நான் வந்து யாழ்ப்பாணத்தை தமிழனை நான் வந்து கிளிநொச்சி. நான் வந்து வவுனியா. நான் வந்து கொழும்பில இருக்கேன். இல்ல நான் இந்த ஜாதியில இருக்கேன். இப்ப இது தான் பின்னாடி இருக்கேயொழிய இந்த ஈழம் என்றதே பெரிய பகுதியா அதில வந்து பகுதி பகுதியாக வந்து என்னோட ஈழத் தமிழர்கள் பிரிஞ்சு நிற்கிறதைப் பார்க்கும் போது முள்ளிவாய்க்காலிலே ஏற்பட்ட வலியை விட மிகப் பெரிய வலியை வந்து நான் இப்ப அமெரிக்கா போய்ட்டு வந்த போது உண்மையாகவே அந்த வலியை உணர்ந்தேன். முள்ளிவாய்க்காலில தான் அன்னைக்கு மே 15, 17ல நடந்தது தான் என்னுடைய வாழ்க்கையில வந்து மிகப் பெரிய சோதனை அன்றைய நிகழ்வு தான்.
ஆனால் அந்த சோகத்தையும் மிஞ்சுகிற சோகமாக இன்னைக்கு வந்து உலக நாடுகளில இருக்கிற ஈழத்தமிழரை பார்க்கும் போது பல பகுதிகளாக பிரிந்து நிற்கிறார்கள். இப்பிடி இருந்தால் எப்ப ஒன்னு சேர்வார்கள். இவங்களை யார் சேர்ப்பாங்க? என்னைக்கு ஈழம் வந்து சுதந்திரமடையிறது? எப்பிடி ஈழத்தின் சுதந்திரத்தினை அடைவாங்க என்ட மிகப் பெரிய கேள்வி வந்து பயத்தை ஏற்படுத்துது. தயவுசெய்து உங்களுக்காக குரல் கொடுத்த
அதை விரும்பின உங்களுடைய உரிமையை நிலைநாட்ட போராடிய ஒரு சிறிய அணிலாக
ஒரு சிறிய சக்தியாக உங்கள் எல்லார்கிட்டேயும் கேட்கிற ஒரேயொரு விண்ணப்பம். ஒரு வேண்டுகோள். எதுவேணாலும் நீங்க வைச்சுக்கோங்க. தயவுசெய்து யாரும் ஜாதியால இனத்தால பகுதியால கூட பிரிஞ்சு போகாதீங்க, ஒரு இனமாக ஒன்று சேருங்க. அன்னைக்கு
தான் உங்களுக்கு சுதந்திரம்வந்து கதவைத் தட்டும் என்டு எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கு. தயவுசெய்து ஒன்று சேருங்கள். எங்கள் சுதந்திரத்தை நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள். மற்றவர்களை எதிர்பார்க்காதீர்கள். நீங்கள் போராடுங்கள். நீங்களே பெற்றுக் கொள்ளுங்கள்.

கேள்வி- செல்வமணி அவர்களே! அவை ஜீரணிக்க கஷ்டமானவை என்றாலும் கூட அவை தான் இப்பொழுது நாம் காணுகின்ற நிதர்சனங்களாக இருக்கின்றன. உண்மையிலே எமது காலத்தில் அவை நல்ல அறுவடைகளை சந்திக்காவிட்டாலும் கூட எமது மக்களின் உரிமைக்காகக் குரல் கொடுத்த உணர்வாளர்களிலே நீங்கள் மறக்க முடியாதவர். அந்தவகைளிலே நாம் என்றும் உங்களை எம் நெஞ்சிலே வைத்திருப்போம். உங்களுடைய திரையுலகம் என்ற அனுபவத்தில் இருந்து இன்னொரு பரிமாணமாக இந்த பேட்டி நிறைவு பெறுகின்றது. அந்தவகையிலே நேயர்கள் சார்பிலே நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பதில்- நன்றி. நான் கூட வந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கின்ற அனைத்து தமிழர்களுக்கும் குறிப்பாக ஈழத் தமிழர்களுக்கும் என்னுடைய வணக்கங்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன். நான் ஆஸ்திரேலியா வரும் சந்தர்ப்பம் அமையுமானால் எனக்கு நீங்கள் கொடுக்கக் கூடிய மிகப் பெரிய பரிசு ஒரே தமிழன். ஒரே பிரிவு. ஒரே ஈழம் என்டுற ஒரே சிந்தனையோட நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும் என்பது தான். அந்தப் பரிசினை நீங்கள் கொடுக்கும் பொழுது நான் மட்டற்ற மகிழ்ச்சியடைவேன். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்.