Pages

Tuesday, November 8, 2011

தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்...

வழக்கம் போல வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக ரயில் பிடிக்கப் பாய்கின்றேன். இடைப்பட்ட நேரத்தில் மினி சூறாவளி சிட்னியைத் தாக்கியதன் விளைவு ரயில்கள் தாமதித்துத் தம் ஓட்டத்தைக் கவனிக்க, எனக்கோ இருக்கவே இருக்கிறது என்று ஐபாட் இற்குள் ஐக்கியமாகின்றேன். வழக்கமான இந்த நேரம் ஹலோ எஃப் எம் இன் RJ கே.கே தன் அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவின் பாடல்களை ஒலிபரப்பி அத்துணை நேரம் கனத்திருந்த வேலைக்களைப்பை மறக்கடிக்க வைப்பார். இன்று எடுத்த எடுப்பில் "தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்" பாடல் காதுக்குள் விழுந்த முதல் தேனாறாகப் பாய, இந்தப் பாடலை ரசித்தவாறே பயணிக்கிறேன்.

வழக்கமாக ஒரு படத்தின் ஒன்றிரண்டு பாடல்கள் கேட்ட மாத்திரத்திலேயே மனதில் ஒட்டிக்கொள்ளும் பின்னர் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும். ஒருகட்டத்தில் அந்தப் பாடல்கள் கேட்டுத் தித்தித்த கணத்தில் அதே படத்தில் அதுவரை கவனிக்கப்படாத இன்னொரு பாடலைக் கேட்டுப் பார்க்கலாமே என்று தோன்றும். அதுவரை சீண்டாதிருந்த பாடலின் வசீகரம் அடடா இதுநாள் வரை இதை விட்டுவைத்து விட்டேனே என்று எண்ணத் தோன்றும் அப்படி ஒரு வகையறா தான் இந்த "தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்".

அப்போது "கேளடி கண்மணி" படம் வரப்போகின்றது என்பதைக் கட்டியம் கூறும் விவித்பாரதி விளம்பரங்களில் மூச்சுவிடாமல் பாடிய எஸ்பிபியின் "மண்ணில் இந்தக் காதல் இன்றி"யும் அவ்வப்போது "நீ பாதி நான் பாதி" "கற்பூர பொம்மை ஒன்று" பாடல்களின் ஒரு சில வரிகளும் இடம்பெறும் ஆனால் "தென்றல் தான் திங்கள் தான்" பாட்டுக்கு எடுத்த மாத்திரத்தில் அறிவிப்பாளரும் அங்கீகாரம் கொடுக்கவில்லைப் போலும். நாளாக நாளாக "கேளடி கண்மணி" படத்தில் அதுவரை முன்னிலையில் இருந்த பாடல்களுக்கு நிகராக "தென்றல் தான் திங்கள் தான்" பாடலை உயர்த்திய பெருமை ஞாயிற்றுக்கிழமை நாலுமணி நேயர் விருப்பம் கேட்கும் சென்னைவானொலி நேயர்களைத் தான் சென்று சேரும். அப்படி உயர்ந்தது தான் இந்தப் பாடல், ரசிகமனங்களில்.


2006 ஆம் ஆண்டு, உலகின் கலையழகும் மிக்க கட்டிடங்களில் ஒன்றாகவும் அவுஸ்திரேலியாவின் அடையாளமாகவும் திகழும் ஒபரா ஹவுசில் முதன் முதலில் ஒரு தமிழ் இசை நிகழ்ச்சி. அதுவும் தமிழ்திரை இசை மட்டுமன்றி மலையாள தேசத்தின் நவீன இசைக்கடவுளாக ரசிகர்களால் உயர்த்தி நோக்கும் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் இசை நிகழ்வு. அரங்கம் கொள்ளாத கூட்டம். அங்கே எல்லோருக்கும் பரவலாகப் பிடித்த புகழ்பெற்ற பாடல்களைப் பாடிக் கைதட்டல் வாங்கிவிடலாம் என்ற சபலம் எந்தவொரு இசைக்கலைஞனுக்கும் வந்தால் வியப்பில்லை. ஆனால் அங்கே கே.ஜே.ஜேசுதாஸ் அனுபவித்துப் பாடியது "தென்றல் தான் திங்கள் தான் நாளும் சிந்தும்"


"தென்றல் தான் திங்கள் தான்" பாடலை ஓடவிடும் போதெல்லாம் பாடலோடு இழைத்திருக்கும் இசையும் வயலினும், புல்லாங்குழலும் கதை பேசிக்கொள்ளும் சங்கதிகளையும் கடந்து இன்னொரு திசைக்கு மெட்டு மாறும் கட்டம்
"காவேரி ஆற்றின் மீனிங்கே காதோடு மோதும் ஆனந்தம்" என்று நாயகன் பாட
"தீராத காதல் தேனிங்கே பாட்டோடு பாட்டாய் ஆரம்பம்" என்று அவள் ஒத்திசைக்க
இன்னொரு திசைக்குப் பயணிக்கும். எந்தவித உபத்திரமும் கொடுக்காமல் பாட்டு வளைந்து நெளிந்து ஓடக் கேட்கின்ற மனசும் அதற்கேற்பத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ளும். பாட்டுக்குப் பின்னணியில் ஒரே தாள லயத்தோடு ட்ரம்ஸ் இசை.
இதுவே இன்னொரு இசையமைப்பாளர் கையில் வாய்த்தால் அடுக்களையில் பாத்திரங்களை உருட்டிப் போடும் எலியின் செய்கை ஆகிவிடும்.
கே.ஜே.ஜேசுதாஸ், சித்ரா குரல்கள் எவ்வளவு கச்சிதமாகப் பொருந்திப் போகின்றன இந்தப் பாட்டுக்கு. அதுமட்டுமா, ராஜா கொடுத்த மெட்டுக்கு இட்டுக் கட்டிய பிறைசூடனும் காதல் சந்தம் பண்ணியிருக்கிறார்.
நான் இன்று இந்தப் பாடலைக் கேட்டு அனுபவித்த அளவுக்கு நீங்களும் கேட்கவேண்டும் என்ற ஆசையில் இதோ, எத்தனை முறை இன்று இந்தப் பாடலை நான் கேட்கப்போகின்றேன் என்று கணக்கில் வைக்கின்றேன் நீங்களும் உங்கள் பங்கிற்கு =>



12 comments:

  1. நல்லப்பாட்டு.. எனக்கும் அந்த மூச்சுவிடாமல் பாட்டை விட இது பிடிக்கும் :)

    ReplyDelete
  2. இப்பாட‌லின் பிக்ச‌ரைஸிங்கும் பார்க்க‌ பார்க்க‌ ச‌லிக்காது.

    இப்பாட‌லை ப‌ற்றி பிறைசூட‌ன் அவ‌ர்க‌ள் ப‌கிர்ந்துகொண்ட‌ சுவையான‌ த‌க‌வ‌ல் ஒன்று ,

    இப்பாட‌லின் மெட்டு ஓரிரு நாட்க‌ளுக்கு முன்பு கிடைக்க‌ பெற்றும் பிறைசூட‌ன் அவ‌ர்க‌ளுக்கு வார்த்தை சிக்காம‌ல் இருந்திருக்கிறார். பாட‌ல் ப‌திவிற்காக‌ இளைய‌ராஜாவிட‌மிருந்து அழைப்பு வ‌ந்த‌போதும் எழுதிவிட்டேன் என்று சொல்லி ஸ்டுடியோவிற்கு கிள‌ம்பினாராம். செல்லும் வ‌ழியில், தான் சென்ற‌ காரில் ப‌ழைய‌ திரைப்ப‌ட‌ பாட‌லான‌ "தென்ற‌ல் உற‌ங்கிய‌ போதும் திங்க‌ள் உற‌ங்கிய‌ போதும் க‌ண்க‌ள் உற‌ங்கிடுமா" பாட‌ல் ஒலித்துக் கொண்டிருந்த‌தை கேட்ட‌தும் அதிலிருந்து தென்ற‌ல் திங்க‌ள் என்ற‌ அந்த‌ ப‌ல்ல‌வியை பிடித்து ஸ்டுடியோவில் இற‌ங்கும்போது முழு பாட்டையும் எழுதிவிட்டாராம்.

    ReplyDelete
  3. இரண்டு நாட்கள் முன்புதான் கவிஞர் பிறைசூடன் தன் முதல் பாடலான இந்தப் பாடல் பற்றி சொன்னதை மனதோடு மனோ நிகழ்ச்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன். 'காவேரி ஆற்றின் மீனிங்கே காதோடு மோதும் ஆனந்தம்' என்ற வரி இலக்கிய உலகில் தன்னைப் பிரபலப்படுத்தி ஒரு கவிஞனாக ஏற்றுக் கொள்ளச் செய்தது என்று சொன்னார்.

    http://www.tubetamil.com/view_video.php?viewkey=7c786a1112eaff835d34

    மண்ணில் இந்தக் காதலன்றி, நீ பாதி நான் பாதி, கற்பூர பொம்மை ஒன்று போன்ற பாடல்கள் முன் உற்சாகம் அள்ளித் தரும் இந்தப் பாடல் எடுபடாமல் போய்விட்டதென்று எனக்கும் தோன்றும். அதேபோல் வாரணம் ஆயிரம் பாடலும்

    ReplyDelete
  4. நீ பாதி நான் பாதி கண்ணே தான் என் ஃபேவரைட்.. ஆனாலும் இதுவும் செம மெலோடிதான்

    ReplyDelete
  5. பாஸ் சூப்பர் பாட்டு,

    கானக்கந்தர்வன் குரலில் அருமையா இருக்கும். சமீபத்தில்தான் இந்தப் பாடலை வீடியோவில் பார்த்து கானகந்தர்வன் வலைப்பூவில் போடவேண்டும் என நினைத்திருந்தேன்.

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி முத்துலெட்சுமி ;)

    ReplyDelete
  7. நாடோடி இலக்கியன் , பாடல் பிறந்த சுவையான கதை இன்றுதான் அறிந்து கொண்டேன் மிக்க நன்றி

    ReplyDelete
  8. அருமையான பகிர்வு தல..!

    புது இயக்குனர்களுக்கு இசை தெய்வம் எப்போதும் ஒரு ஸ்பெசல் தான் ;-)

    ReplyDelete
  9. சூப்பர் பாடல் .. கேட்கும் போது புன்னகை மன்னனின் "காலம் காலமாக வந்த காதலுக்கு" பாடல் ஞாபகம் வருவதை என்னால் தவிர்க்க முடிவதில்லை. Rhythm தான் காரணம் என்று நினைக்கிறேன்..

    ReplyDelete
  10. கார்த்திக்

    'காவேரி ஆற்றின் மீனிங்கே காதோடு மோதும் ஆனந்தம்' எவ்வளவு இனிமையான் எளிமையான சந்தம்

    ராஜா இசையில் முன்னரும் பிறைசூடன் பாடல்கள் எழுதியிருக்கிறார்.

    ReplyDelete
  11. சி.பி.செந்தில்குமார், புதுகை பாஸ், தல கோபி, ஜே.கே


    மிக்க நன்றி தங்கள் வருகைக்கு

    ReplyDelete
  12. இந்தப் பதிவை பார்த்தவுடன் பாடலை மனதில் ஒருமுறை கேட்டேன். நான் ராஜாவின் பேஸ் பைத்தியம் முதலில் அதுதான் எனக்கு மனப்பாடம் ஆகும். இந்தப் பாடலில் சிந்தசைசர் பேஸ் (என்று நினைகின்றேன்) அற்புதமாக எழுதப்பட்டிருக்கும். ஹெட் போன்இல் "BassBoost" செட்டிங்கில் கேட்கவும்.

    ReplyDelete